நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 02, 2014

மார்கழிப் பனியில் - 18

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.
திருப்பாசுரம் - 18. 


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் 
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் 
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் 
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச் 
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்


ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 3 - 4


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். - 3

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். - 4

ஆலய தரிசனம்

சுவாமிமலை

 
பீடம் - ஸ்ரீசிவ பீடம்
கட்டுமலையில் மூலவர் - ஸ்ரீசுவாமிநாதப் பெருமான்
அறுபதாம் திருப்படியின் மேல் - ஸ்ரீ நேத்ரவிநாயகர்  
அடிவாரத்தில் - ஸ்ரீ மீனாட்சி உடனாய ஸ்ரீசுந்தரேசர்
தலவிருட்சம் - நெல்லி
தீர்த்தம் - காவிரி, வஜ்ரதீர்த்தம்
 
பிரமன் அறியாத  பிரணவ மந்திரத்தின் உட்பொருளை - நீ அறிவாயோ!.- எனக் கேட்ட தந்தைக்கு,

தனயன்  - குருவாக அமர்ந்து சிவபெருமானின் திருச்செவியினில் பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்கம்  அளித்த திருத்தலம்.

சிவகுரு, குமரகுரு, பரமகுரு,  குருகுகன், ஸ்கந்தகுரு - என்பதெல்லாம் சுவாமிநாதப் பெருமானின் சிறப்புப் பெயர்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடு. 

திருஏரகம் , குரு மலை - என்றெல்லாம் புகழப்படும் தலம்.

இந்த முருகப்பெருமான் அபிஷேக அலங்காரச் சிறப்புடையவர். 

விபூதி அபிஷேகம் செய்யும் போதும்  சந்தன அபிஷேகம் செய்யும் போதும் விளங்கும் கம்பீரத்தினை விவரிக்க வார்த்தைகளே இல்லை!.. 

சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒருவரே என்பதாக - 

கருவறையில்,    பீடம் ஆவுடையாக - அதன்மேல்  சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாக எழுந்தருளியிருக்கின்றார்.  

முருகப் பெருமான் - சுவாமி நாதனாக வலது திருக்கரத்தில் தண்டாயுதம் ஏந்தி  இடது திருக்கரத்தை தொடையில் வைத்தபடி  குரு வடிவாக,  நின்ற திருக் கோலத்தில் கம்பீரமாக ஆறடி உயரத்துடன் விளங்குகின்றார்.   

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப் பெற்ற வஜ்ர வேலுடன் திகழ்கின்றார். 

குரு வாரமாகிய வியாழக் கிழமைகளில் - பேராயிரம் உடைய தங்கப்பூ மாலை சாற்றிய திருக்கோலம் .

இங்கு, மூலவருக்கு முன் - மயிலுக்கு பதிலாக -  யானை வாகனம். இந்திரன் தன் காணிக்கையாக அளித்த யானை என்பது ஐதீகம். 


மலைகள் இல்லாத தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலை திருக்கோயில் - கட்டுமலையாகத் திகழ்கின்றது.

இக்கோயிலின் மேல் தளத்தை அடைய அறுபது படிக்கட்டுகள் உள்ளன.  தமிழ் வருடங்கள் அறுபதும் முருகப்பெருமானின் திருக்கோயிலின் படிகள் என விளங்குவதாக ஐதீகம். 

தமிழ் புத்தாண்டு தினத்தன்று  இந்த படிகளில் திருவிளக்கேற்றி  தேங்காய், பழம் வைத்து திருப்புகழ் பாடி பூஜை செய்வார்கள் . இந்த திருப்படி பூஜை இத்தலத்தில் விசேஷமானது. 


தஞ்சை வட்டார மக்கள் தங்கள் இல்லத்தின் திருமணத்தையும் -  குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல், வித்யாரம் செய்வித்தல் - ஆகிய சுப நிகழ்வுகளையும்  திருக்கோயிலில் நிகழ்த்துவதை பாக்யமாகக் கருதுகின்றனர். 

சுவாமிக்கு சந்தன காப்பு , பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம் , பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் - ஆகியவை இங்கே  முக்கிய நேர்த்தி கடன்கள்.

அகத்தியர், நக்கீரர், அருணகிரிநாதர், நவவீரர்கள், சண்டேசர் - திருச்சுற்றில் விளங்குகின்றனர்.

மேற்கு முகமாக பால சாஸ்தாவும் நாகராஜனும் திகழ்கின்றனர்.


மாதந்தோறும் விசேஷங்கள் எனினும் - கார்த்திகை மாதம் பத்து நாட்கள் நிகழும் திருக்கார்த்திகைத் திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா. 

தஞ்சை - குடந்தை நெடுஞ்சாலையில் - திருவலஞ்சுழி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வடக்கே - ஒன்றரை கி,மீ தொலைவு. 

குடந்தையில் இருந்து செல்வதற்கு - நகரப் பேருந்துகள் இயங்குகின்றன.

திருமுருகாற்றுப் படையினில் நக்கீரர் புகழ்ந்த திருத்தலம். 

அருணகிரி நாதர் 38 திருப்பாடல்களால்  - ஸ்ரீசுவாமிநாதனைப் புகழ்கின்றார்.

பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய - குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய - மணவாளா
காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு - மருகோனே
காலன் எனையணு காமல்உனதிரு காலில் வழிபட - அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் வகையுறு -சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரும் - இளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனில் - உறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல - பெருமாளே!..

சிவாய திருச்சிற்றம்பலம்

8 கருத்துகள்:

  1. சுவாமி மலையின் பெருமை அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. சுவாமிமலை சிறப்புகள் மிகவும் அருமை ஐயா... மிகவும் விசேசமான தளம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. திருப்பாவை மட்டும் அன்றி,
    திருவெம்பாவையுமே நீ பாடிடுக
    என என்னைப் பணித்தாரோ பரமசிவன்

    பனித்த தொரு கண்களுடன்
    பரமனை இனி பாடுவேன்.

    உங்கள் வலைக்கு வந்தது இன்று அவன் செயல்.

    சுப்பு தாத்தா.

    www.menakasury.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. https://www.youtube.com/watch?v=rv7__7LC-Ts
    subbu thatha sings here.

    பதிலளிநீக்கு
  5. சுவாமி மலை சிறப்புக்களை அறியத் தந்தீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. திருப்பாவை, திருவெம்பாவையுடன் திருத்தல வரலாறும் மிக அருமை ஐயா!

    அழகிய படங்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. திருப்பாவை + திருவெம்பாவை + ஸ்வாமிமலை என எல்லாமே வழக்கம்போல அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான தலம் பற்றிய தகவல்களும் பாசுரங்களும் என பதிவு மிக அருமை.....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..