நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
திங்கட்கிழமை
சென்ற ஞாயிறன்று - காலை ஏழு மணியளவில் தஞ்சையில் இருந்து
சாரளபள்ளி - நாகர்கோயில் அதிவேக விரைவு ரயில் மூலம் மதியம் திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து வ்ண்டி மாறி மதியம் 2:30 மணியளவில் திருச்செந்தூர் கோயிலைச் சென்றடைந்தோம்...
கைத்தலபேசிகளை ஒப்படைப்பது போன்ற சம்பிரதாயங்களுக்குப் பின் ,
மாலையில் கடலில் இறங்கினோம்...
என்னால் கடலில் (அலை வேகத்துடன்) நிற்க முடியவில்லை.. புரோக்ஷணம் செய்து கொண்டேன்... மனைவியும் மகனும் நீராடினர்..
கடலில் நீராடி விட்டு நாழிக் கிணறு தீர்த்தம்...
தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் விசைத் தெளிப்பு முறை (sprinkler) புதிதாய் அறிமுகம்..
அங்கிருந்து கரையேறி உடை மாற்றிக் கொண்டு ஆதார் அட்டையைக் காட்டி விட்டு மூத்தோர் வரிசையில் நின்றோம்... திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் என்றாலும் கோயிலுக்குள் நெரிசல் இல்லை..
அடுத்த இருபது நிமிடங்களில் முருகன் அருளால் நெரிசல் இன்றி மணியடி மண்டபத்தில் வைத்து ஸ்வாமி தரிசனம் கிடைத்தது...
மணியடி மண்டபம் என்பது கருவறையின் வாசல்..
ஸ்வாமிக்குத் தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது..
இதனை எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் அவனது திருவருள்..
உள்வலம் வந்து ஸ்ரீ வள்ளி நாச்சியாரையும் ஸ்ரீ தேவ குஞ்சரியையும் தரிசனம் செய்து கொண்டு வெளித்திருச்சுற்றில் ஸ்ரீ மகா கணபதியையும் வட புறத்தில் ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளையும் தரிசனம் செய்து விட்டு கொடிமர நம ஸ்காரம் செய்து கொண்டோம்...
இரவு கோயில் நடை வெளியில் உறக்கம்...
அதிகாலையில் எழுந்து குளித்தபின் மீண்டும் சந்நிதியில் முருக தரிசனம் செய்து - நல்லருள் புரிவாய் முருகா - என்ற வேண்டுதலுடன் உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி கோயில் நோக்கிப் புறப்பட்டோம்...
இந்த வருடமும் வள்ளிக் குகை அடைத்துக் கிடந்தது..
மேலும் கோயிலில் இருந்து சற்று தூரம் மூவர் அதிஷ்டான தரிசனம் செய்வதற்கும்
ஐயா வைகுண்டர் கடலில் இருந்து மீண்டு வந்த அவதாரப் பதியை தரிசனம் செய்வதற்கும் -
முழங்காலைப் பிடித்திருக்கின்ற வலி விடவில்லை...
மிச்சமிருந்த மின்சக்தியைக் கொண்டு ஒரே ஒரு படம் மட்டும் எடுத்தேன்...
ஐயன் அருளால்
அடுத்த ஆண்டு எல்லாம் குறைவற நடக்கும் ...
கோயிலில் இருந்த இரண்டு நாளும் திருக்கோயிலின் அன்னப்பிரசாதம்...
வேறென்ன வேண்டும்!..
வாழ்க நலம்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..