நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை
நிகழும் தமிழ் மாதத்தின் (ஆடி 31 )
கடைசி ஞாயிறன்று (16/8/26) தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை அறு படை வீடுகளாகப் பாவித்து அந்த கோயில்களுக்கு பக்தர்கள் நடைபயணமாக சென்று தரிசனம் செய்த நிகழ்வில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு நல்ல முறையில் தரிசனம் செய்தோம் ..
இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..
இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படங்களுடன் பதிவிட்டு சென்ற ஞாயிறன்று முன்னோட்டமும் சொல்லி இருக்கின்றேன்..
காலை ஏழரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் வாசலில்
தரிசனம்... கோயிலின் உள்ளே எல்லாம
செல்லவில்லை... காலையிலேயே பெருந்திரளான வெளியூர் மக்கள்..
தொடர்ந்து -
முதலாவதாக வாசல் மேல (அலங்கம்)..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயிலில் வள்ளி தேவகுஞ்சரியுடன் கூடிய திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்..
இக்கோயிலில் ஆறு படை வீடுகளின் திருமேனிகளும் விளங்குகின்றன...
கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்.. இரண்டு கோயில்களிலும் மகிழ்வான தரிசனம்...
இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..
மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..
மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன் கூடிய திருக்கோலம்..
நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி..
மேற்கு நோக்கிய கோயில் ..
ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு சுப்ரமணிய ஸ்வாமி ...
இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன் கூடிய திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்... இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..
ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன் திருக்கோயில்..
மாலை ஐந்து மணியளவில் இக்கோயிலை அடைந்தோம்...
இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன் கூடிய திருக் கோலம்..
கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...
இந்த ஆறு கோயில்களில் மேல அலங்கம் கோயிலைத் தவிர்த்து ஏனைய கோயில்கள் அனைத்திலும் திருச்சுற்றில் சிவ சக்தி சந்நிதிகள் குறிப்பிடத்தக்கவை..
இதன் பின்னும்
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்...
அங்கே -
நடைபயணமாக வந்திருக்கும் பக்தர்களுக்கு திருஷ்டி கழித்து தோஷ நிவர்த்தி செய்யப்படும் என்பது புதிய செய்தி..
நாங்கள் பூச்சந்தை ஸ்ரீ முருகன் திருக்கோயிலுடன் நடைபயணத்தை நிறைவு செய்து கொண்டோம்..
கல்யாணத் திருக்கோலம் கொண்டு சந்திர பிரபையில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் -
நடைபயணமாக வருகின்ற பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் அரோகரா முழக்கமிட்டு வரவேற்று மகிழ்ந்தனர்..
வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்கினர்...
பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயத்தின் சார்பிலும் ராஜராஜ சமய சங்கத்தினர்
சார்பிலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டது..
விழா ஒருங்கிணைப்பினர் நவமணி மண்டபத்தில் மதிய உணவு
அளித்தனர்..
நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டேன்..
ஐந்தாவது கோயிலில்
நடை பயணமாக வந்தோர்க்கு -
கேசரி, வடை, பால் என, முருகனடியார்கள் வழங்கி மகிழ்ந்தனர்..
ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என வைபவமாக இருந்தது...
கைத்தலபேசியில் மின் சக்தி குறைவானதால் விரிவாக படங்கள் எடுக்க முடியவில்லை..
வழியில் மேலராஜ வீதியில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோயில், காமாக்ஷி அம்மன் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், கொடி மரத்து மூலை மாரியம்மன், கீழவாசலில் யோக நரசிம்மர் கோயில் வெள்ளைப் பிள்ளையார் கோயில் என தரிசனம்..
கொங்கணேஸ்வரர் , ஐயன் குள விஸ்வநாதர் , விஜய ராமர் , மூலை ஆஞ்சநேயர், கொடி மரத்து மூலை மாரியம்மன் - கோயில்களில் திருப்பணி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது..
இடையில் குறிச்சித் தெரு முருகன் கோயிலில் ஒருமணி நேர ஓய்வு மட்டுமே...
இந்த அளவில் -
முழங்கால் வலியுடன் ஏறத்தாழ எட்டு கிமீ தொலைவைக் கடந்ததே அற்புதம்..
நலம் யாவும் முருகன் செயல்..
வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்
முருகா முருகா
***





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..