நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2019

வெள்ளி மலர் 4


ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்!..

ஆகா... அப்படியே. சூலமங்கலம் அவங்க பாடுற மாதிரியே இருக்கு!...
- உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தாள் தாமரை...

வாம்மா... தாமரை.. வா!...
மாமா அத்தை எல்லாரும் எப்படியிருக்காங்க?...

நல்லா இருக்காங்க அக்கா...
நீங்க , அத்தான் பிள்ளைகள் எல்லாரும் எப்படி?..

எல்லாரும் சுகம் தான் தாமரை!.... இன்னிக்கு நாலாவது வெள்ளி...
எந்தக் கோயிலுக்குப் போறதா இருக்கீங்க!?..


ஸ்ரீ வடபத்ர காளியம்மன் - தஞ்சை 
ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சை 
பத்து மணிக்கு மேல - வடபத்ர காளி கோயிலுக்குப் போய்ட்டு
அப்படியே கோடியம்மன் கோயில்!...
மாமா வேனுக்குச் சொல்லியிருக்காங்க!... நீங்க அக்கா!?..

காலைல ராஜவீதி - முருகனுக்குப் பால்குடம்...
மத்தியானமா அன்னதானம்... சாயங்காலம் சந்தனக்காப்பு...
நீங்க சாமிமலையில... இருந்து நேரா இங்க வந்துடுங்க!...

அக்கா... ஆடி வெள்ளி அம்பாளுக்கு உரியது..ன்னு சொல்றாங்க!...
ஆனா - முருகன் கோயில்கள்...லயும் சிறப்பா இருக்கே.. எதனால?...

ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்....
இந்த வரியிலயே அர்த்தம் இருக்குதே!...

வானவர் மகிழும்படிக்கு
வடிவேல் முருகன் ஏன் வரணும்?...

தேவர்களைச் சிறை மீட்பதற்காகவும்
அவங்களைப் பல மாதிரியும் துன்பப்படுத்திய
சூரபத்மனைத் தண்டிக்கிறதுக்காகவும்!...

அக்கா!... தேவர்கள் ஏன் சிறைப்படணும்?..

இறைவனை அவமதித்து தட்சன் யாகம் நடத்தினான்..
தட்சன் கூப்பிட்டான்..ங்கிறதுக்காக - அங்கே போன -
தேவர்கள் எல்லாரும் தட்சனுக்கு ஜே!... போட்டாங்க...
அவிர்பாகம் வாங்குனாங்க... அதனால!...

அது தான் அப்போதே ஈசனுக்குக் கோபம் வந்துடுச்சே!..
வீரபத்ர சாமியா பத்ரகாளியோட வந்து
யாகசாலையை நிர்மூலம் செஞ்சாரே!...
தேவர்களையும் வெளுத்துக் கட்டினாரே!..

ஸ்ரீ வீரபத்ரரா வந்தது தலைக்கனம் பிடிச்ச
தட்சனைத் தண்டிக்கிறதுக்கு!..

அந்த நேரத்துல வந்துருக்கிறது யாரு..ன்னு புரியாம
வீரபத்ரரோட சண்டை போட்டாங்க தேவர்கள்...


ஸ்ரீ வீரபத்ரர் - ஆவுடையார்கோயில் 
அதற்காக அடித்து நொறுக்கப்பட்டார்கள்... ஆனாலும்
சிவபெருமானைப் புறம் வைத்த தட்சனைப் பெரிதாக மதித்து
அந்த யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் தொக்கி நிற்கிறதே!...

ஈசனைப் புறம் வைத்து தட்சன் ஏன் யாகம் செய்யணும் அக்கா?...

ஈசனுக்கே சக்தியளிக்கும் சக்தி தான்
தன்மகளாக வளர்கிறாள் என்பதை
உணர்ந்து கொண்ட தட்சனுக்கு
தானே பெரியவன்!.. - என்று தலைக்கனம்!..

அதனல சிவபெருமான் என்னைக் கும்பிட்டு நிக்கணும்... இல்லேன்னா..
தாட்சாயணியை கல்யாணம் செஞ்சு வைக்க முடியாது... - ன்னு
ஒரே ஆர்ப்பாட்டம்....

அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத ஈஸ்வரன்
அம்பிகைய தன்னோட அழைச்சுக்கிட்டுப் போய்ட்டார்..
அது பொறுக்காத தட்சன் தகாத சொற்களால் வசை பாடி
சிவ அபராதத்தைத் தேடிக் கொண்டான்...

அதன் பின் பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு
மகளையும் மருமகனையும் அழைத்து மரியாதை செய்வதற்காக
திருக்கயிலாயத்துக்குச் சென்றான்...

ஆனால் -
சிவத்துரோகம் செய்தவன் இந்தப் பக்கமே வரக்கூடாது..
- என்று அங்கிருந்த சிவகணங்கள் - திருப்பி அனுப்பிட்டாங்க...

தட்சனின் ஆணவமும் தகாத வார்த்தைகளுமே
இதுக்கெல்லாம் காரணம்!...

இப்படியான தட்சன் கொடுத்த
அவிர் பாகத்தை வாங்கிக் கொண்டதாலேயே
தேவர்கள் குற்றவாளி ஆனார்கள்...

அதனால தான் சூரபத்மனிடம் சிக்கி வதைபட்டது....

முருகனாலேயே இந்த்ராணியின் மாங்கல்யம் காக்கப்பட்டது...



இந்த்ராணி மங்கல்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள் கூர்... 
 - அப்படின்னு அருணகிரி நாதர் பாடுகிறார்...

அதனால தான் மங்கலகரமான வெள்ளிக் கிழமைகள்...ல
அம்பாளையும் ஆறுமுகனையும் கோலாகலமாக கும்பிடுகிறோம்!...

முருகனைப் பாடும்போது
எப்படி மஹாவிஷ்ணுவையும் இணைத்துப் பாடுறாரோ...
அதே மாதிரி அம்பாளையும் சேர்த்துப் பாடுகிறார் அருணகிரி நாதர்..

வேல் விருத்தம் பாடும்போது
பதினெட்டு திருக்கோலத்தைச் சொல்றார்...

இந்த திருப்பாட்டு ரொம்பவும் விசேஷமானது..ன்னு 
வாரியார் ஸ்வாமி சொல்லியிருக்காங்க!...

வெங்காள கண்டர்கைச் சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாதெனக் கருதியே
சங்க்ராம நீசயித்தருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்..


ஸ்ரீ வராஹி அம்மன் - தஞ்சை 
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கௌரி காமாக்ஷி சைவ
சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரயம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!...

நீயும் இதைப் பாராயணம் பண்ணு தாமரை!...

சரிங்க அக்கா!... அப்புறம் இன்னைக்கு என்ன காணொளி?...

நீயே பாரேன்.. உனக்கே புரியும்!...


ஆகா.. அருமை.. அருமை...
சரிங்க .. அக்கா... கோயிலுக்குப் புறப்படணும்!..

சரிம்மா தாமரை...
நாடும் வீடும் நல்லாயிருக்கணும்..ன்னு
அம்பாள் சந்நிதியில விளக்கேத்தி வைடா செல்லம்!..

நாடும் வீடும் வளர்ந்திடுக..
நலந்தரும் தீபங்கள் ஒளிர்ந்திடுக...

வாழ்க நலம்
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. தாமரையின் உரையாடல் அருமை ஜி
    ஜெ... தகப்பன் தட்சன் ஆனவக்காரனாகத்தானே இருக்க வேண்டும்.

    ஜெயலலிதாவால் இயலாததும் உண்டோ...

    (என்ன இவன் மீசையை முறுக்குகிறான் ரசித்த வசனம் ஜி)

    அழகர்கோவில் மலையடிவாரத்திலிருந்து.... கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. ஆடி நாலாம் வெள்ளியில் சிறப்பான பகிர்வு.

    காணொளி ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான பகிர்வு. தட்சன், நாரதர் பேச்சும் அருமை. காணொளி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆவுடையார் கோயில் வீர பத்ரரையும் தரிசனம் செய்து கொண்டேன். வடபத்ர காளியைப் பார்க்கையில் திருவக்கரை வக்ரகாளியம்மன் நினைவில் வந்தாள். பல ஆண்டுகள் முன்னர் திருவக்கரை போனது. இந்த வடபத்ரகாளியைப் பார்த்ததில்லை. கோடியம்மனையும் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      நீங்கள் ஒருமுறை தஞ்சைக்கு வரவேண்டும்..
      முடிந்தவரை எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டவேண்டும்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வெள்ளிக்கிழமைகளில் முருகன் வழிபாட்டையும் வேல் விருத்தம் பற்றிய குறிப்பும் புதிது. வாராஹி தரிசனமும், முருகன் தரிசனமும் கிடைத்தது. இந்த்ராணியின் மாங்கல்யம் காக்கப்பட்ட தகவலும் படித்திருக்கிறேன். அது குறித்து முன்னர் எப்போவோ எழுதின நினைவு! :) சுட்டி கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எங்கள் ப்ளாகில் இருந்து தான் இங்கே வந்தேன். முதல்லே தெரியலையோ என்னமோ! இப்போ நல்லாவே தெரியுது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ ..
      சில நாட்களாக எபியில் தாமதமாக Publish ஆகின்றது..

      நீக்கு
  6. உரையாடல் சிறப்பு...

    காணொளி : ஆணவம் எப்படியெல்லாம் உருவாகிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதிவு மிக அருமை.
    தாமரை வந்து உரையாடலை ஆரம்பித்து வைத்து கதைகள் மலர்ந்தது.
    அருமையான காணொளி. அழகான படங்கள்.
    எல்லா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து வந்த நிறைவு.
    ஆவுடையார் கோவில் வீரபத்திரர் தரிசனம் மந்துக்கு மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அம்பாளையும் முருகனையும் வழிபடுவது தொடர்பான முக்கியத்துவத்தினை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கதைகளும், விளக்கங்களும் உரையாடல் வழி அழகாய் ஆடிவெள்ளி மலர் மலர்ந்திருக்கிறது. ஆடி வெள்ளியில் முருகனின் சிறப்பும் அறிந்து கொண்டோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. குட்மார்னிங்.

    சென்ற வாரம் வெள்ளிக்கிழமை என் பாஸ் கங்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வெள்ளிக்கிழமை நேற்றா?...
      எனக்கும் ஒரு ஆசை.. பால்குடம் எடுக்க வேண்டும் என்று... பார்க்கலாம்!.

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. காணொளிகண்டேன்...நாரதர் உசுப்பேத்தி உசுப்பேத்தியே தட்சனை ஒரு வழி செய்து விட்டார்! அந்த ஒருகாட்சியிலேயே... கணத்திலேயே தட்சன் திருந்தி இருக்க வேண்டாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தட்சனை மட்டுமல்ல..

      இவ்வுலகம் இன்றைய நாளிலும் பலரை இப்படி உசுப்பேற்றியே ஒருவழி செய்து விடுகின்றது...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ரெங்காராவ் போன்ற நடிகர்கள் இனி அறிவார்களா? படிப்படியாக அகந்தை ஏறும் அவர் உணர்வுகள்... குரலில் எக்காளம், எகத்தாளம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *இனி வருவார்களா என்று வரவேண்டும்!

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..

      அந்தக் கதையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ஹிரண்யனாக வரும்போது ஹிரண்யனே அசந்து விடுவான்..

      அவருடைய குரலும் தோரணையும் மறக்க முடியாதவை...

      இதுமாதிரியான படங்களை இனி எவரும் எடுக்கப் போவதில்லை..
      இனிமேல் யாரும் இப்படி நடிக்கப் போவதுமில்லை!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..