நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 27, 2018

மலையும் நதியும்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்!...
- என்று வியந்து நோக்கும் கவியரசர்,

(அந்தத் ) தென்றலோடு உடன் பிறந்தாள்!.. - என்று
செந்தமிழ்க் கன்னியை அடையாளங்காட்டுகின்றார்...

இவருக்கு முன்னோடியாகிய
மகாகவி என்ன சொல்கிறார்..

தமிழ் கண்டதோர்
வைகை பொருணை நதி!... - என்கிறார்...

மகாகவியின் திருவாக்கின்படி -
செந்தமிழாள் தனக்கு இளைய சகோதரிகளாக
வைகையையும் பொருணை எனும் தாமிரபரணியையும் கண்டாள்...

இப்படி 

பொதிகையுடன் தென்றலும்
தென்றலுடன் தமிழும்
தமிழுடன் பொருணையும் - 
இரண்டறக் கலந்து
நம்முடைய ஊனிலும் உணர்விலும்
உயிரிலும் ஓடித் திரிந்தால்!?..

எப்படியிருக்கும்?...

அந்த சுகானுபவத்தைச் சொல்லுதற்கு வார்த்தைகளே இல்லை!..

அதனை அவரவரும் அவரவர்க்கு ஏற்றார் போல
அனுபவித்து உணர்தல் வேண்டும்!..

அதுவன்றி அளவிட்டு உரைப்பதற்கு ஆகாது!..

இத்தகைய சூழலில் நமக்கு இருக்கக் கிடைத்தது -
சில மணி நேரம் மட்டுமே...


மூர்த்தி, தலம், தீர்த்தம் - என்றுரைப்பர் ஆன்றோர்...

அப்படிப் பொருந்தியுள்ள தலங்கள் ஏராளம்... எனினும்,
ஒரு சில தலங்கள் மட்டுமே இன்னும் இயற்கை எழில் மாறாமல் திகழ்கின்றன...

அவற்றுள் ஒன்றுதான் -
காரையாறு - ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்...

ஆன்மீகத்துக்கு ஆன்மீகம்..
ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்...

இதற்கு மேல் என்ன வேண்டும்!..

ஆன்மீகம் - அதைப் பற்றி யோசிப்பவர்களுக்கு
இருக்கவே இருக்கிறது - ஆரோக்கியம்!...

ஆரோக்கியம் அனைவருக்கும் வேண்டும் தானே!...

அதற்காகவாவது அங்கே செல்லவேண்டும்...
அந்த அமைதியில் அழகில் ஆழ்ந்திருக்க வேண்டும்!..

கீழுள்ள மூன்று படங்களும் 
திருக்கோயில் தளத்திலிருந்து பெறப்பட்டவை

ஸ்ரீ கசமாடஸ்வாமி - தேவியுடன்
மணி விழுங்கி மரம் - ஸ்ரீ பேச்சியம்மன் - பூதகணம்

விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம்
திறக்கப்பட்டு விடுகின்றது ஐயனின் சந்நிதி..

அதன்பின் ஆறு மணிக்கு உஷத்கால பூஜை..
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு உச்சி காலம்...

அத்துடன் நடை அடைக்கப்பட்டு
மறுபடி நடை திறக்கப்படும் நேரம் மாலை 4.30..

மாலை ஐந்து மணியளவில் சாயரட்சை..
பின்னர் ஒன்பது மணிக்கு அர்த்தஜாம பூஜைகள்..
அந்த அளவில் நடை அடைக்கப்படுகின்றது...

திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு
குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன...

ஐயனின் சந்நிதி
பாபநாசத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் - ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயில்..
மலைமேல் செல்வதற்கு ஆட்டோக்களும் மினி வேன்களும் கிடைக்கின்றன..

காரையாறு அணை நோக்கிச் செல்லும் சாலை நன்றாகவே உள்ளது..


மலையேற்றத்தில் - வனத்துறை அலுவலகத்தில்
பதிவு செய்தபின் மேற்கொண்டு மேலே செல்லவேண்டும்...

நான்கு கி.மீ தொலைவில் இடப்பக்கமாகப் பிரியும்
கரடு முரடாகப் பிரியும் சாலையில் பயணித்தால்
பாபநாசம் நீர் மின் நிலையத்தைக் கடந்து அகத்தியர் கோயில்..
மற்றும் அகத்தியர் அருவி..

அங்கிருந்து மேலே 2. கி.மீ., தொலைவில்
தபஸ்வினி கிருஷ்ணவேணி அம்மாள் மடம் அமைந்துள்ளது...

அதற்கும் அப்பால் கல்யாண தீர்த்தம்...

நாங்கள் அகத்தியர் கோயில் சென்றதோடு சரி...
மற்றொரு சமயம் தான் கல்யாண தீர்த்தம் தரிசனம் செய்ய வேண்டும்...

ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலை நோக்கிச் செல்லும் வழி
புலிகள் வாழும் சரணாலயத்தின் அடர்ந்த காட்டு வழி...

ஆனாலும், சிங்கவால் குரங்குகள் தான் அங்குமிங்கும் ஓடித் திரிகின்றன...
புலிகள் எல்லாம் களக்காடு முண்டந்துறை பகுதியில் தான்..

மின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பு வரையிலும் சாலை நன்றாக உள்ளது..
அதன்பின் கரடுமுடராக இருக்கின்றது.....

அந்தப் பகுதியில் எல்லாம் அங்குள்ள பிள்ளைகள்
கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்...

சாலையின் வலது ஓரத்தில் அளவில் பெரியதாக
ஸ்ரீ வனபேச்சியம்மன் ஆலயம்...

திரும்பி வரும்போது தரிசிக்கலாம் என்று எண்ணியது பிழையாகி விட்டது...
நேரம் கடந்து விட்டதால் திருநடை அடைத்து விட்டார்கள்...

கண்ட இடத்திலும் வாகனத்தை நிறுத்தக் கூடாது - என்பதனால்
விறுவிறு.. - என்று ஓடிக் கொண்டிருந்தது ஆட்டோ...

எனவே, வழிநடை அழகையெல்லாம் படமாக்க முடியவில்லை..

சேர்வலாறு
செல்லும் வழியில் சேர்வலாறு...
காட்டின் உள்பக்கமாக தாமிரபரணியுடன் கைகோர்த்துக் கொள்கிறது...

ஏதோ ஒரு மழையினால் பாலம் ஆற்றோடு போய்விட்டபடியால்
குறுக்கே இரும்புப் பாலம் போடப்பட்டிருக்கிறது...

பச்சைப் பசுமையான மரங்களின் ஊடாக
பயணிக்கையில் சிலுசிலு என்றிருக்க -

பிரதான சாலையின் இடப்பக்கமாகப் பிரிந்த சிறிய சாலையில்
2. கி.மீ., தொலைவில் ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்...

பிரதான சாலையில் மேற்கொண்டு ஐந்து கி.மீ., பயணம் செய்தால்
காரையாறு அணைக்கட்டு.. பாபநாசம் நீர்த்தேக்கம்...

நீர்தேக்கத்தில் படகில் பயணித்து அக்கரைக்குச் சென்றால்
அங்கே தான் பாண தீர்த்தம் அருவி.. வான தீர்த்தம் என்றும் சொல்கின்றனர்...

தாமிரபரணியின் முதல் அருவி இதுதான்...

மிகவும் ஆபத்தான இடம்... எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.. இத்தகைய வெள்ளப்பெருக்கினால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்கின்றனர்...

அதனால், இப்போது பாதுகாப்பு கருதி படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது...

மறுமுறை பாபநாசம் செல்லும்போது
காரையாறு அணைக்கும் சென்று வரவேண்டும் என்பது ஆசை...

கீழுள்ள படங்கள் 
ஸ்ரீ ஐயனார் திருக்கோயிலைச் சுற்றியுள்ள பசுமைக் கோலங்கள்..





ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலின்
நான்கு திசைகளிலும் காடும் மலையும் தான்...

இவற்றுக்கு அடி நாதமாக தாமிரபரணியின் சலசலப்பு!...

மீண்டும் மீண்டும் இங்கே வரவேண்டும்!..
- என மனம் விரும்புதற்கு என்ன காரணம் எனில் -
இங்குள்ள இயற்கை அழகு..

இதற்கெல்லாம் மேலாக
ஸ்ரீ சொரிமுத்து ஐயனின் அருள் மழை!...

ஆம்.. அது ஒன்றே காரணம்...


அருள் தரும் ஐயன் அருகிருக்க - வேறெதையோ தேடி அலைகிறார்கள்..

இந்த அளவில் -
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலைச் 
சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பதிவில்!...

ஐயனார் கோயிலின் அழகும்
அங்கே தவழும் தாமிரபரணியின் எழிலும்
கண்ணுக்குள்ளேயே திகழ்கின்றன....

மனமும் உடலும் ஆரோக்கியமாய் இருப்பதாக உணர்வு..
இதற்கு மேல் வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்!..

பொதிகையும் தாமிரபரணியும்
இறைவனின் கொடை..

இறைவனே இயற்கை எனில் 
இயற்கையே நமக்குக் கொடை!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
ஃஃஃ 

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய படங்கள் எடுத்த விதமும் அழகு. பதிவின் விளக்கம் அருமை.

    அடுத்தமுறை வள்ளியூர் செல்லும்போது சென்று வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங். படங்கள் கேமிராவில் எடுக்கப்பட்டதா? அலைபேசியிலா? இந்த முறை படங்களை பெரிதாக வெளியிட்டிருப்பமைக்கு நன்றிகள். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பொதிகை மலைக்கு இரண்டு திரைப்பாடல்கள் ரெஃபர் செய்தீர்கள். நன்று. வைகைக்கும் தாமிரபரணிக்கும் திரைப்பாடல் ஒன்றாவது சொல்லி இருக்கக் கூடாதோ....!!!!

    :)))

    பதிலளிநீக்கு
  4. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோவிலைப் பார்க்க எனக்கு எப்போது வாய்க்குமோ? அய்யனார் எப்போது அருள்பாலிப்பாரோ...

    பதிலளிநீக்கு
  5. தாமிரபரணி வைகை அளவு மோசமில்லை போல... கொஞ்சம் தண்ணீர் கண்ணில் படுகிறது.

    பதிலளிநீக்கு
  6. மிக அழகான இயற்கைச் சூழ்நிலை. இன்னமும் மாசுபடாமல் இருப்பதற்கு அந்தச் சொரிமுத்து ஐயனார் தான் காரணம்! அருமையான படங்கள். தகவல்களும் நன்று. இங்கெல்லாம் போகாமல் வந்துட்டோமேனு இருக்கு! ஆனால் அப்போவும் இதே கெடுபிடிதான். அகத்தியர் அருவியைக் காண மேலே போனால் இறங்கும்போது நேரம் ஆயிடும்னு விடலை! :) ஆனாலும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றி உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. தி/கீதா மூலமே கிருஷ்ணவேணி அம்மாள் பற்றியும் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. தாமிரவருணி ஆறு அழகு. அங்கு குளித்தீர்களோ?

    பதிலளிநீக்கு
  9. உங்கள் இடுகையைக் கண்டு நெல்லையில் ஒரு சுற்றுலா செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெத நெல்லைல சுற்றுலா போணும்னு நினைச்சீங்கனா சொல்லுங்க. நான் உங்களுக்கு ஐட்னெரி போட்டுத் தரேன். கன்னியாகுமரி போறவங்க இருந்தாலும் எங்கிட்ட கேளுங்க, சொல்றேன். எல்லாமே இயற்கை சார்ந்த இடங்கள்தான்..

      கீதா

      நீக்கு
  10. அழகான படங்கள். இயற்கை அழகில் திளைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். எத்தனை அழகு இயற்கை.... அப்பகுதிக்குச் செல்லும் ஆவல் உண்டு. நேரம் கைகூட வேண்டும்.

    விடுபட்ட பதிவுகளை ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பொதிகை பதிவு.
    பொதிகைமலை சாரல் காற்று பாடசொல்லும்.

    படங்கள் எல்லாம் மிக அழகு.
    இயற்கை அழகை ரசித்து சொரிமுத்து ஐய்யனாரை தொழுது அருள்பெற வேண்டும்.

    வாய்ப்பு கிடைத்தால் போக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. கிட்டத்தட்ட சபரிமலைக்குச் சென்றுவந்ததுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா அண்ணா என்னை ரொம்பவே ஏங்க வைத்துவிட்டீர்கள்! பின்னே...எனக்கு மிகவும் பிடித்த இடம். நீங்கள் போட்டிருக்கும் படங்கள் எல்லாம் ...நான் அந்தத் தண்ணீரில் உருண்டு குதித்து, விளையாடிக் குளித்த தருணங்கள் நினைவுக்கு வந்தது. எனக்கு இந்தப் பகுதியே மிகவும் பிடித்த பகுதி. அது போன்று குற்றாலம் அதற்கும் மேலே ட்ரெக் பண்ணிச் செல்ல வேண்டிய செண்பகா தேவி.

    காரையார் அணைக்கட்டுக்கும் மேலே சேர்வலார் அணை மின்வாரியம் இருக்கிறது. அங்குதான் ஆத்மா படத்தில் வரும் கோயில் செட் ஆற்றின் பாறையின் மீது செட் போடப்பட்டு அந்தக் கோயில் படம் பிடிக்கப்பட்டது. அதில் குருக்களாக வரும் பையனும் அங்கு குருக்களாக இருந்தவர் எங்கள் ஊர் குடும்ப நண்பர் வீட்டு அக்காவின் பையன் தான். அந்த அக்கா கணவர் மின்வாரியத்தில் வேலையில் இருந்ததால் சேர்வலாறு அங்குதான் இருந்தார். அப்பர் லோயர் உண்டு.

    கோதையாரிலிருந்து கூட அங்கு செல்லலாம் விஞ்ச் உண்டு என்று சொல்லுவார். மாஞ்சோலை அருகில் வரும் அப்பர் கோதையார்.

    படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்!!! நாங்களும் வன அம்மன் கோயிலை மிஸ் செய்தோம். வரும் போது மூடிவிடுவார்கள். அதுவும் நாங்கள் பாண/வான தீர்த்தம் போய் வந்தால் திறந்திருக்காதே..இப்ப போட் இல்லை என்றால் வான தீர்த்தம் போக முடியாதே...ஒரு வேளை அணைக்கட்டில் தண்ணீர் குறைவாக இருந்ததோ? தண்ணீ வரவு குறைவு என்றால் போட் விட மாட்டார்கள். தரை தட்டும் என்று. டாமில் தண்ணீர் கூடினால் திறந்து விடுவார்கள் அகத்தியர் ஃபால்ஸ் கொட்டும். அந்தச் சமயத்தில் அறிவிப்பு வரும். தண்ணீர் திறக்கப்படும் என்று விசில் அடித்து சொல்லுவார்கள். அப்போது விலகி நின்று விட்டு முதல் கொட்டல் முடிந்ததும் சென்று குளித்தால் அந்த ஃபோர்ஸ் செமையா இருக்கும்...

    ரசித்தோம் அண்ணா....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. செல்ல வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  15. அருமையான படங்கள். அழகான இடங்கள். செல்லும் வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..