நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 21, 2018

பாபநாச தரிசனம் 1

ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது
தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல்
திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுகின்றது...

உலகின் சமநிலை கெடுகின்றது.. அச்சமயத்தில் -

எல்லம் வல்ல எம்பெருமான் - கும்பம் ஒன்றிலிருந்து
முனிவர் ஒருவரைத் தோற்றுவிக்கின்றார்...


அவர் தான் கும்பமுனி என்று புகழப்படும் அகத்தியர் பெருமான்..

அகத்தியனே... உடனடியாகத் தென்பகுதிக்குச் சென்று வையகத்தைச் சமப்படுத்துவாயாக!..

இறைவனிடமிருந்து கட்டளை ...

இதனால் முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்த 
அவர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஒருவர் சமம் என்றாகின்றது... 

ஆனால், அகத்தியரோ மிகவும் வருந்துகின்றார்...

எல்லா ஜீவராசிகளும் தங்களது திருமண வைபவத்தைக் காண இங்கே காத்துக் கிடக்கும் போது நான் ஒருவன் மட்டும் அந்த பாக்கியத்தை இழந்தேனே... ஏன் ஸ்வாமி!?.. - என்று பரிதவிக்கின்றார்...

அம்மையும் அப்பனும் புன்னகைக்கின்றனர்...

அகத்தியனே.. அகிலம் முழுதும் எம்மைத் தேடி வருகின்றது..
ஆனால், நாங்கள் உன்னைத் தேடி வருவோம்.. அஞ்சற்க!..

- என்று, அகத்திய முனிவரை ஆற்றுப்படுத்துகின்றனர்...

அதன்படி அமைதியடைந்த அகத்தியரும்,

உலகம் சமநிலை பெறவேண்டும்..
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!..

என்று வேண்டிக்கொண்டு - தென்பகுதிக்கு வருகின்றார்...

தமிழ் கூறும் நல்லுலகின் பொதிகை மலைக்கு வந்தபோதே
வடகோடு தனது பழைய நிலையை அடைகின்றது...

இறைவனின் திருக்கல்யாணமும் இனிதே நிறைவேறுகின்றது...

அவ்வண்ணமாக - தாமிரபரணி நதிக்கரையில்
அம்மையப்பனின் திருக்கல்யாண தரிசனத்தை எண்ணிவாறு
தவத்தில் அமர்ந்து விடுகின்றார் - அகத்தியர்...

இறைவனும் தானளித்த வாக்கின்படி
அகத்திய முனிவரைத் தேடிவந்து
திருக்கல்யாண தரிசனத்தை நல்குகின்றார்...

மேலும்,
எங்கெல்லாம் அம்மையப்பனை அகத்தியர் நினைக்கின்றாரோ
அங்கெல்லாம் அவருக்கு திருமணத் திருக்காட்சி அளிப்பதாக
கூடுதல் வரத்தையும் வழங்குகின்றார்....

இப்படியாக நம்பொருட்டு அகத்தியர் திருக்கல்யாண தரிசனம் பெற்ற
திருத்தலங்களுள் தலையாயது - பாபநாசம்...

தாமிரபரணிக் கரையில் சூரிய உதயம்
நெல்லை மாவட்டத்திலுள்ள
நவ கயிலாய திருத்தலங்களுள் முதன்மையானது...

பொதிகையிலிருந்து பொங்கிப் பெருகி வரும் தாமிரபரணி
இங்கு தான் சமநிலையை அடைகின்றாளாம்...


மதுரையிலிருந்து இரவு 11.15 மணியளவில் புறப்பட்ட புனலூர் பாசஞ்சர்
பின்னிரவு மூன்று மணியளவில் திருநெல்வேலியை அடைந்தது....

ஜங்ஷனை விட்டு வெளியே வந்ததும் ஆளுக்கொரு காஃபி...

வழியில் ஸ்ரீ கொடிமாடஸ்வாமியை வணங்கி விட்டு
புதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்...

விடியற்காலையில் அங்கிருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் பயணித்து
6.30 மணியளவில் பாபநாசம் திருக்கோயிலை அடைந்தோம்...



காணும் இடம் எங்கும் மக்களை விட
அதிக எண்ணிக்கையில் சிங்கவால் குரங்குகள்...

அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு -
பெரியவர்களையும் குழந்தைகளையும் பரவசப்படுத்தின..

எண்ணிக்கையில் அதிகமிருந்தும் மக்களுக்கு
எவ்வித தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

சாலையின் தென்புறமாக திருக்கோயில்...

திருக்கோயிலுக்கு எதிரில் நூறடி சரிவில்
தமிழகத்தின் ஜீவநதியாகிய தாமிரபரணி...

தண்ணீர் அதிகமில்லை எனினும் இழுவை அதிகம்...
கலங்கலாகத்தான் ஓடிக்கொண்டிருந்தாள் தாமிரபரணி...

கடைசிப் படியில் இருந்தவாறே தீர்த்தத்தைத்
தொட்டு வணங்கி ஒருவாய் பருகி வினை நீங்கப் பெற்றோம்..

பாறைகளின் ஊடாக மெல்ல நடந்து சென்று
ஆட்கள் குளிக்கும் பள்ளத்தில் இறங்கி தீர்த்தமாடினோம்...

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் சென்றபோது
தண்ணீர் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..


அப்போது நீரினுள் மூழ்கி - பார்வைக்குத் தென்படாதிருந்த 
பாறைச் சிற்பங்கள் - இப்போது மிகத் தெளிவாக...



ஈரத்துடன் கரையேறி கைத்தொலைபேசியை
எடுத்துக் கொண்டு வந்து அத்தனையையும் கவர்ந்தாயிற்று...

என்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டீங்களா!..
முக்கியமாகச் சொல்லவேண்டுமென்றால்
நமது ஜனங்கள் சற்றும் பொறுப்பின்றி இருப்பது...

ஆங்காங்கே எண்ணெய் தேய்த்துக் கொண்டு
பாறைகளை ஆபத்துக்குள்ளாக்குவது...

பழைய துணிகளை அங்கேயே கழற்றிப் போடுவது...
அலட்சியத்துடன் புழங்கி பிறத்தியாரை இன்னலுக்குள்ளாக்குவது..

இவர்கள் திருந்துவதற்கு இன்னும் எத்தனை காலமோ!?..

இறைவனை நினைந்த வண்ணமாக நீராடி முடித்து
உடை மாற்றிக் கொண்டு திருக்கோயில் தரிசனம்...

திருத்தலம் - பாபநாசம்


இறைவன் - ஸ்ரீ பாபவிநாசநாதர்..
அம்பிகை - உலகநாயகி

தீர்த்தம் - தாமிரபரணி
தல விருட்சம் - முக்கிளா

ராஜகோபுரம் கடந்து நந்தி மண்டபம்... திருக்கொடி மரம்..
சித்திரை விசுவுக்காக கொடியேற்றம் ஆகியிருந்தது...


திருமூலத்தானத்துள் - ஸ்ரீ பாபவிநாச நாதர்..

எத்தனை எத்தனையோ ஜன்மங்களில் செய்த
பழிகளும் பாவங்களும் தொலைந்ததாக உணர்வு...

அதற்கு மேல் என்ன சொல்வது!..

ஈசனை வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டோம்...

இத்தலம் திருக்கல்யாண க்ஷேத்திரம் ஆகையால்
ஐயனின் சந்நிதிக்கு வடபுறமாக கிழக்கு நோக்கியவாறு
அன்னை உலகநாயகியின் சந்நிதி...

ஒருசேர வலம் வந்து அம்பிகையின் சந்நிதிக்கு
எதிரில் உள்ள கல்லுரலில் வாங்கிச் சென்றிருந்த
மஞ்சளை இட்டு இடித்து காணிக்கை செலுத்தினோம்...

உள்திருச்சுற்றில்
அம்மையும் அப்பனும் ரிஷபவாகனராக அகத்தியருக்கு
கல்யாண தரிசனம் நல்கும் திருக்காட்சி..

குள்ள பூதம் ஒன்று வெண்கொற்றக்குடையுடன் சேவை செய்கின்றது..
பெருஞ்சிற்பமாக கண்நிறைந்து விளங்குகின்றது...

வெளித் திருச்சுற்றில் கோயில் மரமான முக்கிளா..
வேதங்கள் இங்கே ஈசனை வணங்கியதாக ஐதீகம்..



மரத்தின் வேர்பகுதியில் ஈசனுடன் அகத்தியரும் அருள்பாலிக்கின்றார்..
மரத்திற்குக் கீழே - நிலவறையில் மற்றொரு லிங்கமும் இருக்கின்றதாம்..

திருக்கோயில் மிகப் பழைமையானது என்றாலும்
இத்தலத்திற்கான தேவாரத் திருப்பதிகம் கிடைக்கவில்லை..

ஆயினும்,
அப்பர் பெருமான் தமது க்ஷேத்திரக்கோவையில் (6/70)
மஞ்சார் பொதியின் மலை - என்றும்
பாவநாசத் திருப்பதிகத்தில் (4/15)
பொதியின் மேய புராணன் - என்றும்,
தமது திருவாக்கினால் குறித்தருள்கின்றார்..

கோயிலுக்குள் படம் எடுக்க அனுமதியில்லை..
இருப்பினும் வெளித் திருச்சுற்றில் சில படங்கள்...

கொடி மரத்தடியில் விழுந்து வணங்கி
விடை பெற்றுக் கொண்டோம்...


மதிலின் மேலிருந்த பூதம் கவனத்தை ஈர்த்தது...

எல்லாரும் நல்லபடியாக சிவதரிசனம் செய்து விட்டு
நலமுடன் வீட்டுக்கு சென்று சேரவேண்டும்!.. - என்பது போல பாவனை...

திருக்கோயில் தரிசனம் நல்லபடியாக முடிந்ததும்
அங்கே அருகிலேயே காலை உணவு....

அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டோம் -
அருள்மிகு சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலை நோக்கி!...


வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங் ஸார்... சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பதிவு. இதோ தரிசனத்துக்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அகத்தியர் அப்போதே சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடி இருக்கிறார் பாருங்கள்!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்..
      உண்மைதான்.. சீர்காழியார் அவர்கள் சாகாவரம் பெற்றவராயிற்றே...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. முக்கிளா என்றொரு விருட்சமா? என்னவென்று பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்..
      அவசியம் சென்று பாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மஞ்சள் இடித்து காணிக்கை - என்ன பலன் / என்ன விசேஷம் இந்த வகைக் காணிக்கையில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      மஞ்சள் இடித்துக் கொடுப்பது விசேஷம்.. இந்த மஞ்சள் தூளில் தான் அம்பாள் திருமுழுக்கு கொள்வாளாம்.. மற்றபடி இந்த காணிக்கையால் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்..

      மங்கல காரியங்கள், ஆரோக்கியம் மற்றும் எல்லாமே...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி
    இன்றைய காலை தரிசனங்கள் இனிதானது.

    பொது இடங்களை எப்படி பராமரிப்பது என்பது இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      கோயிலையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கக் கூட மனம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பாபநாச தரிசனமும் பாறைச் சிற்பங்களும் கவர்ந்தன.

    வேதநாயகன் தரிசனம் ஆச்சு. ஆதிரை நாயகன் அர்த்தம் பார்க்கணும்.

    பதிவு எப்போதும்போல் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரை நாயகன் எனில்
      ஆதிரை நட்சத்திரத்திற்கு உரியவன்..

      நன்றி.. மகிழ்ச்சி...

      நீக்கு
    2. திரு ஆதிரை என்று கொண்டாடுவது அந்த நட்சத்திரத்தில்தானே நெல்லை ஆதிரை நாயகன் அதனால்தான்...டக்கென்று கண்ணில் படவும் சொல்லிவிட்டேன்...அண்ணாவும் சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
  7. நான் வெகுநாளாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை உங்கள் பதிவில் கண்டேன்.அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவசியம் ஒருமுறை சென்று வாருங்கள்...

      மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  8. நாங்க போனப்போ இந்த மஞ்சள் இடிக்கும் விஷயம் பற்றித் தெரியாது. ஆனால் கோயிலிலேயே குருக்கள் மஞ்சளைக் கொடுத்து இடித்து எடுத்துப் போகச் சொன்னார். அருமையான கோயில்! சுற்றுப்புறமும் அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்த சூழ்நிலை. நாங்க போனப்போ தாமிரபரணி பொங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே இறங்கலை! மேலும் மதியம் பதினோரு மணிக்குப் போனோம். அங்கே தான் குருக்கள் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும்னு போகச் சொன்னார். ஆனால் நாங்க மேலே வேறே செல்ல வேண்டி இருந்ததால் போகலை! மேலேயும் போய்ப் பார்த்துட்டுச் சித்திர சபையும் பார்த்துட்டுத் திருக்குற்றாலம் முக்கிய அருவி, மேலே ஐந்தருவி எல்லாம் போனோம். அதற்கும் மேலே போக வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. மாலை நேரம் ஆகிவிட்டபடியால் கீழே இறங்கச் சொல்லிட்டாங்க. அங்கிருந்து இலஞ்சி வந்து முருகனைத் தரிசித்தோம். இன்னொரு மலையான திருமலைக்குப் போக முடியவில்லை. வண்டி ஓட்டுநரே வேண்டாம் இருட்டி விட்டது என்று சொல்லி விட்டார். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,

      பாபநாசம் சென்று வருவது மனதிற்கும் உடலுக்கும் நல்லது...

      மேலதிக தகவல்களுடன் கருத்துரை... மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பாபநாசம் கோவில் போய் பல வ்ருடங்கள் ஆகி விட்டது.
    உங்கள் பதிவின் மூலம் மீண்டும் தரிசனம்.

    படங்கள் எல்லாம் மிக அழகு.
    கோபுர தரிசனம் கிடைத்தது கோடி புண்ணியம் தான்.
    அடுத்து ஐய்யனாரை தரிசிக்க வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நான் நினைத்தேன் -
      நீங்கள் இத்திருக்கோயிலைத் தரிசித்திருப்பீர்கள்.. - என..

      தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. சிறப்பான தரிசனம்...

    அழகிய படங்களுடன்..

    பதிலளிநீக்கு
  11. துளசி: அழகான படங்கள் கோயில் தரிசனம் நீராடல், விளக்கங்கள் என்று சிறப்பான பதிவு. சென்றதில்லை. பார்க்க வேண்டிய இடம். மிக்க நன்றி ஐயா.

    கீதா: ஆஹா! அண்ணா நான் மிகவும் விரும்பும் இடம். பல முறை சென்ற இடம். கோயில் அழகு என்றால் அதன் அருகில் ஓடுகிறாளே அந்த தாமிரபரணி...ஆஹா என்ன அழகு ஒயிலாக பொங்கி என்று பல ரூபங்களில் ஓடுவாள். பாறைகளில் ஏறி நடந்து ஆங்காங்கே விழும் சிறு அருவியில் குளிப்பதுண்டு. அந்த சுகம் சொல்லி மாளாது. ஆனால் நம் மக்கள் விவரம் கெட்டவர்கள் சுற்றுப் புறத்தைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருப்பதையும் காணலாம். நாங்கள் அப்படியே மேலேயும் சென்றோம். அதற்கு முன் அகத்தியர் அருவி...அங்கு குளியல் உண்டு. அப்புறம் மேலே பாணதீர்த்தம். போட்டில் சென்று கொஞ்சம் நடந்து அந்த அருவியில் குளியல் என்று அங்கு சென்றாலே இயற்கையோடு விளையாட்டுதான்!!! அது ஒரு காலம்!! அண்ணா உங்கள் பதிவு பல நினைவுகளைக் கொண்டு வந்து போட்டது!!! படங்கள் எல்லாம் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
  12. அந்தப் பாடல் சீர்காழியின் கணீர்க்குரலில் செமையான பாடல். உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்

    சிங்கக் குரங்கார்/தாடிக் குரங்கார் என்றும் நாங்கள் சொல்வதுண்டு செம அழகா இருக்கார்.

    பாறைச் சிற்பம் என்ன அழகு! ரசித்தேன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சிறுவயதில் பாபநாசம் சிவன் பாடல் என்று வானொலியில் கேட்டதின் விளைவு இந்த தல யாத்திரை குறித்த பதிவு காண திருவருள் கூட்டியது.திருச்சிற்றம்பலம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..