நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 11, 2017

நலமே சேர்க..

அவனது அடியலால் ஈங்கில்லை பிறிதொரு தஞ்சம்!..

தமிழகத்தில் டெங்கு எனும் காய்ச்சல் பரவியிருக்கின்றது..
நாளுக்குநாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஊட்டுகின்றது.. 

மக்களின் பிழையா.. ஆட்சி செய்வோரின் பிழையா?.

விவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன..
விடை தான் இன்னும் கிடைத்தபாடில்லை..
.
இந்த விஷக்காய்ச்சலால் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன..
அனைத்து தரப்பினரும் பரிதவித்து நிற்கின்றனர்.. 

இவ்வேளையில் மாநிலத்தின் நோய் நீங்கவேண்டும்..
அனைவரும் நோயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்..
அத்துடன் எல்லாரும் பூரண நலம் பெறவேண்டும்!..

- என்ற, பிரார்த்தனையுடன் சிறப்பானதொரு சிவாலய தரிசனம் இன்று..

அத்துடன் -
விஷம் விஷக் காய்ச்சல் இவற்றினால் ஏற்படும்
தீங்கினை மாற்றியருளும் திருப்பதிகமும் இன்றைய பதிவில்....

திருத்தலம் - திங்களூர்

ஸ்ரீ கயிலாய நாதர் 
ஸ்ரீ பெரியநாயகி அம்மன்
இறைவன் - ஸ்ரீ கயிலாய நாதர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹன்நாயகி, பெரியநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்..

திருவாக்கு அருளியோர்
திருநாவுக்கரசர், சுந்தரர்

- திருத்தலச் சிறப்புகள் -
சந்திரன் தன் குறை தீர தொழுது வணங்கிய திருத்தலம்..

பங்குனி உத்திர நாளில் காலையில் சூரியனும் 
பங்குனி நிறை நாளின் மாலையில் சந்திரனும்
கருவறையில் கதிர் பரப்பி வழிபடும் திருத்தலம்..

விடம் தீண்டி இறந்த சிறுவனை திருநாவுக்கரசர் 
மீண்டும் எழுப்பிய திருத்தலமும் - இதுதான்..

முகம் கண்டு அறியாமலேயே அப்பர் ஸ்வாமிகளின் மீது வாஞ்சை கொண்டு தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டு அப்பர் ஸ்வாமிகளின் பெயராலேயே பற்பல அறங்களைச் செய்து வந்தவர் - அப்பூதி அடிகள்...

நாளும் கோளும் கூடி வந்த வேளையில்- அப்பூதி அடிகளைத் தேடி வந்து சந்தித்தார் - அப்பர் ஸ்வாமிகள்..

அகமகிழ்ந்த அப்பூதி அடிகள் அன்புடன் அவருக்கு விருந்தளிக்க விழைந்தார்..

விருந்திற்காக வாழை இலை அரிந்த அவரது மகனை நாகம் தீண்டியது...
கடும் விஷத்தால் பாலகனின் உயிர் பறிபோனது..

அந்த துயரத்தை மறைத்து - அப்பர் ஸ்வாமிகளுக்கு விருந்தளிக்க முனைந்தனர் - அப்பூதியடிகளும் அவருடைய இல்லத்தரசியும்..

உண்மையை உணர்ந்த ஸ்வாமிகள் மனம் பதறியவராக -
திருப்பதிகம் பாடி - இறந்த மகன் மீண்டும் உயிர் பெற்று எழுமாறு செய்தார்..

அந்த அருஞ்செயல் நிகழ்ந்தது - திங்களூர் திருத்தலத்தில்...

அப்பர் ஸ்வாமிகள் அருளிய திருப்பதிகம் -
விடந்தீர்த்த திருப்பதிகம் எனப் புகழப்படுகின்றது...

இத்திருப்பதிகத்தினை 
முறையாகப் பாராயணம் செய்வோரை
விஷப் பூச்சிகளும் அவற்றால் 
நேரும் கொடிய நோய்களும் அணுகா..
- என்பது இறையன்பர்களின் நம்பிக்கை...


நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 18

விடந்தீர்த்த திருப்பதிகம்..

ஒன்று கொலாம்அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர்ஊர்வது தானே.. 

இரண்டு கொலாம் இமையோர் தொழுபாதம்
இரண்டு கொலாம் இலங்குங்குழை பெண்ணாண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான்மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே..

மூன்று கொலாம் அவர் கண்ணுதல் ஆவன
மூன்று கொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையதுவில் நாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே..

நாலு கொலாம் அவர்தம் முகம் ஆவன
நாலு கொலாம் சனனம் முதற் தோற்றம்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே..

அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம்  அவர் வெல்புலன் ஆவன
அஞ்சு கொலாம்  அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம்  ஆடின தாமே..

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே..

ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே..

எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர்சூடும் இனமலர்
எட்டு கொலாம் அவர் தோளிணை ஆவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே..

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
 ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம் தானே..

பத்து கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறுந் நெரிந் துக்கன
பத்து கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே..
* * *

இத்திருப்பதிகம் எண் அலங்காரமாக அமைந்துள்ளது..

திருப்பதிகத்தின் பத்து பாடல்களிலும் -
ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பயின்று வருகின்றன..

இத்திருத்தலம் சூரியனும் சந்திரனும் வழிபடுகின்ற பெருஞ்சிறப்பினை உடையது..

பங்குனி உத்திர நாளன்று 
சூரியன் உதயாதி நாழிகையில் 
தனது இளங்கதிர்களால் மூலத்தானத்தினுள்ளிருக்கும்
சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

தொடர்ந்து - பங்குனி மாத நிறைநிலா நாளன்று..
சந்திரன் கீழ் வானில் உதித்தெழும் வேளையில் -
தனது பொற்கதிர்களால் - மூலத்தானத்தினுள்ளிருக்கும்
சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

கிழக்கு நோக்கிய திருக்கோயில்.. 
ஆனாலும், கிழக்கு வாசலின் வழியாக திருக்கோயிலினுள் நுழைய முடியாது..

இத் திருக்கோயிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் கிடையாது..

ஏனெனில் - திருக்கோயிலின் வாசலிலேயே சந்திர புஷ்கரணி...

திருக்கோயிலுக்கு தெற்கு வாசலில் தான் ராஜகோபுரம்..

திருச்சுற்றில் விஷம் தீர்த்த விநாயர் சந்நிதி...

கிழக்கு நோக்கியவாறு -
அருள் பொழியும் ஐயன் ஸ்ரீ கயிலாய நாதன் சந்நிதி...

இத் திருச்சந்நிதியில் தான் -
அப்பூதி அடிகளின் மகன் மீண்டெழுவதற்காகத் 
திருப்பதிகம் பாடியருளினார் - அப்பர் ஸ்வாமிகள்...

விஷம் தீர்ந்த மகன் விளையாட்டுப் பிள்ளையாகத் துள்ளி எழுந்தது
இந்தச் சந்நிதியில் தான்..

தென்திசை நோக்கியவாறு 
பெரிய நாயகி - எனப் பேரருள் வழங்கும் பிரஹந்நாயகி...

மேலும் - திருச்சுற்றில் அழகே உருவாக
வள்ளி தேவசேனா சமேதரனாக திருக்குமரன்...

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் சண்டிகேஸ்வரியும்
ஸ்ரீ துர்கையும் எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீ வயிரவரும் விளங்குகின்றனர்...

மேலும் சிறப்புக்குரியதாக உள் மண்டபத்தில்
அப்பூதி அடிகளும் அவரது இல்லத்தரசி அருள்மொழி அம்மையார்.. 

இவர்களுடன் அவர்தம் மகன்களாகிய பெரிய திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு கூப்பிய கரங்களுடன் விளங்குகின்றனர்..

ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள்
உச்சிக் குடுமியுடன் உழவாரப் படை ஏந்திய திருக்கோலத்தினராகத் திகழும்
அப்பர் ஸ்வாமிகளின் கருணை ததும்பும் திருமுகத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..

திருவையாற்றில் இருந்து கிழக்காக
கும்பகோணம் செல்லும் சாலையில் திருப்பழனத்தை அடுத்து
4 கி.மீ. தொலைவில் உள்ளது - திங்களூர்..

பிரதான சாலையில் இருந்து வயல்வெளிகளின் ஊடாக ஒரு கி.மீ. தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்...

திருக்கோயில் வரை நல்ல சாலை வசதி உண்டு..
திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில்
ஆட்டோக்கள் இயங்குகின்றன..

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவு..

தஞ்சை நகர பேருந்து நிலையத்திலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் பேருந்துகள் திங்களூர் வழியாகச் செல்கின்றன..

திங்களூர் திருத்தலத்தை மனதாரத் தரிசித்து
தீவினை தீர வேண்டும் .. தீங்குகள் அகல வேண்டும்..
மக்களை வாட்டும் விஷக் காய்ச்சல் ஒழிய வேண்டும்..
நோயுற்றோர் நலம் பெற்று வாழ வேண்டும்...
- என, எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக் கொள்வோம்..


நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சின் உள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகின் நோக்கி நீஅருள் செய்வாயே!.. (4/76)
- திருநாவுக்கரசர் -

நீயன்றி யாருமில்லை வழிகாட்டு
இறைவா நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளிகாட்டு!..
- கவியரசர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

7 கருத்துகள்:

  1. அருமையான திருப்பதிகங்கள். அப்பூதி அடிகள் மகன் விஷத்திலிருந்து மீண்ட தலம் இதுதானா?

    பதிலளிநீக்கு
  2. நாட்டு நலனுக்கு வேண்டிய நல் விடயங்கள் நன்று நலமே விளையும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு.
    தேவையான நேரத்தில் தேவையான பதிவு.
    நிறையதடவை தரிசித்த தலம்.
    மக்கள் எல்லோரும்

    இறைவன் அருளால் நலமாக இருக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பதிகம் கண்டேன். திங்களூர் சென்றேன். உங்கள் பதிவு மூலமாக, நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நோய்கள் எல்லாம் ஆலய தரிசனம் மூலமும் பதிகங்கள் மூலவும் விலகுமானால்..............

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு ஐயா....
    அருமை.
    படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..