நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 07, 2016

ஊராண்ட ராசாத்தி

அக்கா... அக்கா!...

வாம்மா.. தாமரை!...

என்னக்கா... இந்த மாதிரி ஆகிப்போச்சு..

நாம.. என்னம்மா செய்யமுடியும்?..
நம்ம கையில என்ன இருக்கு?.. கண்ணைத் துடைச்சுக்க!..

என்னைச் சொல்றீங்க.. அக்கா.. உங்க கண்ணும் கலங்கித் தானே கெடக்கு?..


தாங்க முடியலடா.. தங்கம்.. அவங்க மேல குறைபாடுகள் அப்படி..ன்னு..
இருந்தாலும் இந்த ரெண்டு மூனு வருஷமா அவங்களோட செயல்பாடுகள் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது...  என்ன செய்யிறது.. அவங்க வாங்கிக்கிட்டு வந்த வரம் அவ்வளவுதான்!..

அத்தை ரெண்டு நாளா சுருண்டு கெடக்காங்க..

ஏன்டா?.. என்ன ஆச்சு?..

நிகழ்ச்சியை எல்லாம் டீவி..யில பார்த்தாங்களா...
அப்படியே திகைச்சு போய்ட்டாங்க..

ஊருமில்லே.. உறவுமில்லே...
ஒருமனுசன் கூடயில்லே..
நீருமில்லே.. பூவுமில்லே..
நின்னெரிய விளக்குமில்லே..
ஊராண்ட ராசாத்தி
நாடாண்ட ராசாத்தி.. 
ஒக்காந்து அழக்கூட 
ஒருநாதி உனக்குஇல்லே...

- ந்னு ஒரே அழுகை.. மாமா.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.. அத்தை கேக்கவேயில்லை.. நல்ல விளக்கு ஏத்தி வெச்சி பக்கத்தில ஒரு சொம்பு..ல  தண்ணி வெச்சிருக்காங்க... தாகம் எடுத்து வந்தா குடிக்கட்டு..ன்னு!..

அவங்கள்லாம் அந்தக் காலத்து மனுசங்க.. இப்படித் தான் செய்வாங்க.. உனக்கு ஒரு சேதி சொல்றேன் கேளு.. நாங்க பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல இருந்தோமே... அப்ப நடந்தது இந்த சம்பவம்..

என்னக்கா...

அந்த ஊர்ல வயசான சாமியார் ஒருத்தர் தங்கியிருந்தார்.. பிள்ளையார் கோயில்ல தான் இருப்பு.. திடீர்..ன்னு ஒரு நாள் இறந்து போய்ட்டார்...
ஊர்க்காரங்க அவரை அனாதை.. பரதேசி..ன்னு பார்க்கலை... நீர்மாலை வரைக்கும் எடுத்து எல்லா சடங்குகளையும் செஞ்சி மயானத்துக்கு அனுப்பி வெச்சாங்க... அதுக்கெல்லாம் ஒரு பக்குவமான மனசு பண்பாடு இதெல்லாம் வேணும்..


அக்கா.. அந்த பொண்ணு.. அதான் அவங்க அண்ணன் மகள்.. பாவம்... அக்கா.. பரிதவிச்சு நின்னாங்க.. அவங்க குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சினையோ.. நமக்குத் தெரியாது.. உயிரோட இருக்கிறப்போ அவங்களை பார்க்கவும் விடலை... கடைசி நேரத்தில கூட இருந்து ஒரு காரியம் செய்யவும் விடலை.. அங்கே யாருமே மனுசங்க இல்லாம போயிட்டாங்க...

ஆமாம்மா.. நானும் பார்த்தேன்.. போலி அழுகை அழுது அழுது மனசெல்லாம் வறண்டு போயிடுச்சு... என்ன ஜென்மங்களோ?...

பெண்ணு..ன்னா பேயும் இரங்கும்..ன்னு சொல்லுவாங்க... ஆனா பெண்ணே பெண்ணுக்கு இரக்கம் காட்டலை.. பார்த்தீங்களா.. ஆயிரந்தான் பகையா இருந்தாலும் அங்கே நடந்தது அநீதி தான்.. நமக்கெல்லாம் இந்த மாதிரி செய்ய மனசு வருமா.. அக்கா!..

மயானத்துல.. கடைசியா கூப்புடுவாங்களாம்.. முகம் பார்க்குறவங்க வந்து பார்த்துக்குங்க!.. அப்படின்னு.. இவங்களுக்கு அதுக்குக் கூட கொடுப்பினை இல்லாம போயிடுச்சு... ஆனா.. இந்த மாதிரி உறவைக் கெடுத்த பாவம் எல்லாம் சும்மா விடாது.. கண்ணு முன்னால எத்தனையோ பார்த்தாச்சு...

கடைசி குடிமகன் தொட்டு ஜனாதிபதி வரைக்கும்.. அடடா.. எதுக்காக மக்கள் முதல்வர்..ன்னு சொன்னாங்களோ.. தெரியாது.. உண்மையிலயே மக்கள் முதல்வர் நான் தான் ..ன்னு நிரூபிச்சிட்டுப் போயிட்டாங்க...


ராணுவ விமானத்தில் மேதகு ஜனாதிபதி

ஆமாங்க்கா... ஜனாதிபதி அவங்க வந்த விமானம் கோளாறானதும் திரும்பிப் போய்ட்டு நாலு மணி நேரம் கழிச்சு தனி விமானத்தில.. வசதிக் குறைச்சலா இருந்தாலும் வயசான காலத்தில அதைப் பொறுத்துக்கிட்டு டில்லி..ல இருந்து வந்து அஞ்சலி செஞ்ச நம்ம ஜனாதிபதி அவங்கள பாராட்டியே தீரணும்...

அதெல்லாம் பண்பாடு..ம்மா.. ரத்தத்தில ஊறி வந்தது... கிராமங்கள்...ல போட்டோ வெச்சி மாலை மரியாதை செஞ்சி அழுது புலம்பியிருக்காங்க... ஆனா இங்கே.. கடைசி வினாடியில - ஆத்திரம் தாங்காம ஒரு அழுகை கூட வெடிச்சி கிளம்பல... ஒரு சொட்டு கண்ணீரைக் காணோம்!.. சாதாரண ஜனங்க தான் கண்ணீரும் கம்பலையுமா!..

நாளைக்கு அவங்களுக்காக அவங்க அழவேணுமே!.. அதுக்காக மிச்சம் வெச்சிக்கிடாங்களோ என்னமோ?..



என்னமோ.. தாமரை... ஏழைகளுக்காக நெறைய திட்டங்கள்.. ஆனாலும் அதுக்குள்ளேயும் சில ஓநாய்கள் புகுந்து கொள்ளையடிச்சாங்க... குடி கெடுத்த குடியை மட்டும் ஒழிச்சிட்டுப் போயிருந்தாங்க..ன்னா..

அதான்.. படிப்படியா குறைக்க.. நடவடிக்கை எடுத்தாங்களே!..

காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகள்..ல அவங்களோட நடவடிக்கை மிகப் பெரிய விஷயம்.. ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத விஷயம்...

ஆனா.. தாமிரபரணி தண்ணியை..

அதுல எல்லாம் நிறைய அரசியல் இருக்குடா தங்கம்.. வெளிப்படையா பேச முடியாது...


என்னமோ... அக்கா... எதிரணியில இருக்குறவங்க கூட கலங்கிப் போய்ட்டாங்க...

இந்த அஞ்சு வருஷத்துல தமிழ் நாட்டு நிறைய செய்தாலும் தஞ்சாவூருக்கு நெறையவே செஞ்சிருக்காங்க... அதையெல்லாம் நினைக்கறப்போ மனசு இன்னும் கிடந்து துடிக்குது...

தஞ்சாவூர்ல.. உலகத் தமிழ் மாநாடு நடத்தினது.. 
அப்போ புதுசா பேருந்து நிலையம் கட்டுனது..
புதுசா மேம்பாலம் கட்டுனது..
புறவழிச்சாலை போட்டது.. இதெல்லாம் தானே!..

அதெல்லாம் பழசு.. சமீபத்தில,
மருத்துவக் கல்லூரியை விரிவாக்கம் செஞ்சது..
ஒரத்தநாடு விவசாயக் கல்லூரி, கால்நடைக் கல்லூரி..
தஞ்சயில வேளாண் ஆய்வு மையம்..
பேராவூரணி..ல கலைக்கல்லூரி..
செங்கிப்பட்டி..ல பொறியியல் கல்லூரி..
திருவையாறு...ல தொழிற்பயிற்சி நிலையம்..

இதெல்லாம் செய்யவேண்டிய கடமை தானே அக்கா!..

கடமைதான்.. ஆனா, முன்னால இருந்தவங்க செய்யலையே!..
பெரிய கோயிலுக்கு புதுசா தேர் செஞ்சு கொடுத்தது..
தஞ்சாவூரை மாநகராட்சி..ன்னு அறிவிச்சது..
புதுசா ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகம்..
நெருக்கடி தீரட்டும்..ன்னு புதுசா மேம்பாலம்..
அப்படின்னு நெறைய செஞ்சிருக்காங்க...

அக்கா... போன வாரம் பார்த்தேன்.. பழைய பேருந்து நிலையத்தில... பாலுட்டும் தாய்மார்களுக்கு..ன்னு பாதுகாப்பு அறையெல்லாம் கட்டுனாங்கள்..ல!..

ஆமா!..

அதெல்லாம் பராமரிப்பு இல்லாம பாழாய்ப் போய் கெடக்கு அக்கா.. கண்ட கண்ட நோட்டீஸ் எல்லாம் ஒட்டி அசிங்கப்படுத்தி வெச்சிருக்கானுங்க... உள்ளே குப்பை கூளமாக் கெடக்கு...

எவ்வளவோ நல்லது செஞ்சாலும் அதைக் கெடுக்குறது..ன்னு ஒரு கும்பல் இருக்கு... நாட்டுக்கு நல்ல அரசு அமைஞ்சாலும் நல்ல வேலைக்காரங்க அமையறது குதிரைக் கொம்பாகிப் போச்சு...

நீங்க சொல்றது சரிதான்.. அக்கா..


என்னமோ.. தாமரை.. மரணம் தான் மனுஷனைக் காட்டும்.. அப்படி.. ன்னு சொல்லுவாங்க... அது மறுபடியும் உண்மையாகி இருக்கு...

பாருங்க அக்கா.. இன்னைக்கு காலைல துக்ளக் சோ.. அவங்களும் காலமாகிட்டாங்க.. கொஞ்ச நாளா அவரும் உடல் நலமில்லாம இருந்தார்...

துக்ளக் சோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி
ஆமாம் தாமரை.. வருத்தமாத் தான் இருக்கு.. துக்ளக் சோ அவங்களுக்கு ஆத்மார்த்த நண்பர் அல்லவா..  நல்ல நட்பு...  

சரிங்க.. அக்கா.. நான் புறப்படுறேன்.. அத்தை எப்படி இருக்காங்களோ.. வெள்ளிக்கிழமை அன்னைக்கு வீரபத்ரகாளி கோயிலுக்கு போகலாம்...ன்னு இருக்கோம்...

அந்தக் கோயில் வடக்கு வாசல் அகழிக்கு அந்தப் பக்கமா..ல்ல இருக்கு!..

ஆமாங்..க்கா!.. விசேஷமான கோயிலாம்... போய் விளக்கேற்றி கும்பிட்டுட்டு வரலாம்..ன்னு!..

நானும் வர்றேன்.. தாமரை... அவங்களோட ஆத்மா. சாந்தியடையட்டும்..ன்னு விளக்கேற்றி வைப்போம்!..

சரிங்க.. அக்கா!..
***


உறவென்று இருந்திருந்தால் 
ஒன்றிரண்டு.. உடனிருக்க
அவர்களுக்குத் தான் அம்மா!.. 

உடனிருக்க உறவுமில்லை
அதனாலும் குறைவுமில்லை..
ஆயிரமாய் லட்சங்களாய்
அருகிருக்கும் பிள்ளைகளாய்!..

வையம் உன்னைப் பாராட்ட
வங்கம் உன்னைத் தாலாட்ட..
நிம்மதியாய்க் கண்ணுறங்கு..

நெஞ்செல்லாம் எமக்காகத்
துயிலாமல் தவித்தவளே..
இனியேனும் நிம்மதியாய்..
கண்ணுறங்கு.. கண்ணுறங்கு!..

எங்கள்.... 
கண்ணுக்குள் கண்ணுறங்கு!..

என்றும் நீ வாழ்க.. 
அம்மா!..  
***

17 கருத்துகள்:

  1. தலைப்புத்தேர்வும்,
    ஆத்மார்த்தமான பதிவும்,
    பதிவிலுள்ள விஷயங்களும்,
    அதை இருவரின் சம்பாஷணையாகச் சொல்லியுள்ள வித்யாசமான முறையும், மிக அபூர்வமான படத் தேர்வுகளும்,
    இறுதியில் சொல்லியுள்ள வரிகளும்

    மிகவும் அருமை.

    பாராட்டுகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மனதில் பட்டதைச் சொல்லி இருக்கிறீர்கள். தஞ்சாவூர்க்காரரான நீங்கள் அவர் தஞ்சைக்கு கொணர்ந்த வளர்ச்சிப் பணிகளை சுட்டிக் காட்டியது இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி..
    தங்கள் வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  4. ஒரு மாஃபியாக் கூட்டத்தின் பிடியில் அறிந்தோ அறியாமலோ சிக்கி இருந்தார் என்று செய்திகள் கசிகின்றன.

    பதிலளிநீக்கு
  5. எமது ஆழ்ந்த இரங்கல்,,,,,

    பதிலளிநீக்கு
  6. எமது ஆழ்ந்த இரங்கல்,,,,,

    பதிலளிநீக்கு
  7. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா....
    அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    பதிலளிநீக்கு
  8. நேர்மையான கருத்துக்கள். அரசியல் சகதியில் சிக்காமல், உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளீர்கள். நினைக்க நினைக்க வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..