நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 16, 2016

மார்கழிப் பூக்கள் 01

தமிழமுதம்



அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. (0001)
* * * 
ஔவையார் அருளிய
நல்வழி

பாலும்தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..
-: பெரியாழ்வார் :-

மாதங்களில் நான் மார்கழி!..

- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு மங்கலகரமானவை மார்கழியின் நாட்கள்..

மார்கழியின் முதல் விடியலிலிருந்து தேவர்களுக்கு வைகறைப் பொழுது..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!..  

தெருக்கள் தோறும் இல்லங்களின் தலைவாசலில் எழில் மிகும் கோலங்கள்!.. 

வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஏன்!.. இதற்கு முன் வாசலில் கோலங்கள் இட்டதில்லையா?..
அவற்றில் பூக்களையும் அகல் விளக்குகளையும் வைத்ததில்லையா?.. 

அதற்கு முன் வாசலில்
கோலமிட்டு பூக்களையும் விளக்குகளையும் வைத்தார்கள் தான்!..

பிறகு!?..

இந்த மார்கழி முழுதும் பொருள் பொதிந்த கோலங்கள்..

அப்படி என்றால்?..

கோலத்தின் நடுவே பசுஞ்சாண உருண்டையில் பூசணிப் பூ ஒன்றை வைப்பார்கள்!.. 

அதன் பொருள் - இந்த வீட்டில் பூ ஒன்று பூவை என்று பூத்திருக்கின்றது!.. 
கன்னி ஒருத்தி இருக்கின்றாள் என்பதை இலை மறைவு காயாக உணர்த்துவதாகும்!..

அந்தக் காலத்தில் கன்னிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை..

இன்று அப்படி இல்லை.. என்றாலும் -
மார்கழிக் கோலங்களுக்கு மகத்துவம் அதிகம்..  


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

நல்ல மனங்களின் உள்ளிருந்து தோன்றும் ஒளியால்!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த 
கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி...

மீண்டும் - 
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகிய தெய்வப் பனுவல்களின் திருப்பாடல் பதிவுகளை வழங்குவதற்குப் பெரும்பேறு பெற்றேன்..

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..
* * *

அருளமுதம் 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை

திருப்பாடல் - 01
* * *

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
 ***

சிவ தரிசனம்
பஞ்ச சபைகள்

முதலாவது திருச்சபை

கனகசபை
தில்லை திருச்சிற்றம்பலம்


இறைவன் - ஆனந்தக்கூத்தன்
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை


தீர்த்தனைச் சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப் 
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக்கொடியேன் மறந்துய்வனோ..(5/2) 
- திருநாவுக்கரசர் - 

அங்கே அரங்கம்!..
வைணவத்தில் கோயில் எனில் - திருஅரங்கம்..
அரிதுயில் கோலத்தில் அரங்க நாதன்.. 

இங்கே அம்பலம்!..
சைவத்தில் கோயில் எனில் - தில்லைத் திருச்சிற்றம்பலம்..
ஆனந்தக் கூத்தனாக அம்பலவாணன்..

ஐயன் அம்பிகையுடன் 
ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தும் திருத்தலம்...

பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் திருத்தலம்..

- பாடிப் பரவியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்..
மற்றும் பல உத்தம அடியார்கள்..
* * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
* * *


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 01


போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள்மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!.. 
* * *

தேவி தரிசனம்

திருக்கடவூர்
ஸ்ரீ அபிராமவல்லி


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!.. (001) 
- அபிராமி பட்டர் -  
* * *

இன்று முதல் நமது தளத்தில் - 
ஐந்தாவது ஆண்டாக 
மார்கழிப் பதிவுகள் தொடர்கின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

7 கருத்துகள்:

  1. மார்கழி மாதம் என்றாலேயே நினைவுக்கு வருவது திருப்பாவையும் திருவெம்பாவையும்தானே

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதத்தில் திருப்பாவை... உங்கள் பதிவு மூலம் பக்தியில் திளைப்பதும் சுகம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..