நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 17, 2016

தஞ்சையில் திருத்தேர்

நெஞ்சம் நிறைந்த தஞ்சையில் சித்திரைத் திருவிழா..

கடந்த ஏப்ரல் நான்காம் நாள் திங்களன்று, தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் மங்கலகரமாக நிகழ்ந்தது.


அதிகாலையில் - ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளினார்.
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ந்தது.

திருவிழாவில் தினமும் காலையில் ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதி எழுந்தருளினார்.

இரண்டாம் திருநாளன்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமான் மூன்றாம் நாளன்று மூஷிக வாகனத்தில் வலம் வந்தருளினார்.

நான்காம் திருநாள் காலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு நடைபெற்றது.
அன்று மாலை - ஸ்ரீசுப்ரமணியர் மேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

ஐந்தாம் திருநாள் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய - சுப்ரமணியர்
மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.


ஆறாம் திருநாள் காலை வள்ளி மணவாளனுக்கு சந்தனக்காப்பு வைபவம்.
மாலையில் சைவ சமயாச்சார்யார் நால்வர் திருவீதி உலா..

தொடர்ந்து நாளும் மூலஸ்தானத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும், வெண்ணெய்த் தாழி, பல்லக்கில் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.

ஏழாம் திருநாளன்று ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருச்சுற்றில் வலம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்..


எட்டாம் திருநாளன்று ஸ்ரீ தியாகராஜர் யதாஸ்தான பிரவேசம்..
காலையில் பல்லக்கில் எழுந்தருளிய சந்திரசேகரர் -
மாலையில் - சந்திர பிரபையில் திருவீதி வலம் வந்தருளினார்.

மேலும் அன்றைய தினம் திருத்தேர் அலங்கரிப்புக்காக பந்தற்கால் நடப்பட்டது..


ஒன்பதாம் திருநாளன்று அஷ்ட திக்கு துவஜாரோகணம் நிகழ்ந்தது. 
அன்று இரவு ஸ்வாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருள செங்கோல் வைபவம்.

பதினோராம் திருநாளன்று காலையில் பூப்பல்லக்கு.
மாலையில் பூத வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி எழுந்தருளினர்..

சிறிய ரிஷப வாகனம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, 
மான் வாகனம், மயில் வாகனம் சிம்ம வாகனம், பூத வாகனம், 
வெள்ளி யானை வாகனம், பெரிய ரிஷப வாகனம், முத்துப் பல்லக்கு - 

- என, திருவீதி உலா சிறப்பாக நிகழ்வுற்ற வேளையில் -


சித்திரைத் திருவிழாவின் பதினைந்தாம் நாள் மகா ரதம்..
ஏப்ரல் 18 திங்களன்று காலை மகத்தான தேரோட்டம் நிகழ இருக்கின்றது.

விடியற்காலை 5.30 மணியளவில் ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் சோமாஸ்கந்த மூர்த்தியாக மூலஸ்தானத்திலிருந்து திருத்தேருக்கு எழுந்தருள்கின்றார்..


மகா தீப ஆராதனைக்குப் பின் - காலை ஆறு மணிக்கு மேல் 7.30 மணிக்கு உள்ளாக திருத்தேர் வடம் பிடிக்கப்படுகின்றது..



தேரடியிலிருந்து புறப்படும் திருத்தேர் - 
ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக - 
கீழ்க்குறிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படுகின்றது.

மேல ராஜவீதியில் -

1) ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் (உக்கடை அம்பாள் பள்ளி அருகில்)
2) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் 
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
3) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில்

ஆகிய இடங்களிலும்,


வடக்கு ராஜவீதியில் -

4) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில்
5) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
6) ஸ்ரீ குருகுல ஆஞ்சநேயர் திருக்கோயில் (FCI அருகில்)

ஆகிய இடங்களிலும் தேர் நின்று செல்லும்.


தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -

7) ஸ்ரீமாரியம்மன் கோயில் (கொடிமரத்து மூலை)
8) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்)
9) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில்
10) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும்


தெற்கு ராஜவீதியில் -

11) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
12) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர் திருக்கோயில்
13) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
14) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும் திருத்தேர் நிறுத்தப்படும்.

தேரோட்டத்தில் முன்னதாக ஸ்ரீ விநாயகப் பெருமானும் ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமானும் அலங்கார சப்பரங்களில் எழுந்தருள்வர்..

மகாரதத்தினை அடுத்து அம்பிகை திருநிலைநாயகியாக எழுந்தருள
தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வார்..

தேரோட்டத்தின் நிறைவில் திருத்தேர் மேலராஜவீதி தேரடியில் நிலை நிறுத்தப்படும்.

ஸ்ரீ தியாகராஜப் பெருமான்
தேரோட்டத்திற்குப் பிறகு - தொடரும் திருவிழாவின் -
பதினாறாம் திருநாளான 19/4 அன்று காலையில் முத்துப் பல்லக்கு.
மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.

பதினேழாம் திருநாளான 20/4 அன்று ஸ்ரீ தியாகராஜர் தோரணப் பந்தல் தரிசனம்..


பதினெட்டாம் திருநாளான (21/4) அன்று ஸ்ரீ தியாகராஜர் ருத்ரபாத மூர்த்தியாக யதாஸ்தான பிரவேசம்.

அதைத் தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரியுடன் திருவீதியுலா.

மதியம் ஸ்ரீ சந்திர சேகரர் திருச்சுற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல்.

அன்று மாலையில் - துவஜ அவரோகணம்.

ஸ்ரீ பிரகதீஸ்வரர் பிரஹந்நாயகியுடன் பெரிய ரிஷபத்தில் எழுந்தருள -
பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அத்துடன் மங்கலகரமாக சித்திரைத் திருவிழா நிறைவடைகின்றது.

இன்றைய பதிவில் சென்ற ஆண்டு நிகழ்ந்த தேரோட்ட வைபவத்தின் படங்கள் அலங்கரிக்கின்றன..

ஊர்கூடித் தேர் இழுத்தல் - நமது பண்பாடு..
தொன்று தொட்டு வரும் கலாச்சாரம்..

தஞ்சையில் நிகழும் தேர்த் திருவிழாவினைக் காண 
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..

மகிழ்ச்சியும் பக்திப் பெருக்கும் ததும்பும் தருணம் - இது..

என் இருகண்ணிலும் நிறுத்தி 
எப்போதும் நினைத்திருப்பது 
தஞ்சையம்பதியைத்தான்!.. 
பெரியகோயிலைத் தான்!..

எங்கிருந்த போதும் - அம்மையப்பனின் அருகிருப்பதாக உணர்வு!..

ஆடிவரும் அழகுத் தேரினை அருகிருந்து காணும் நாள் எந்நாளோ!..
அன்புமிகும் அம்மையப்பன் அருள்புரிவர் - அந்நாளை!..

சிந்தை எல்லாம் சிவமாகி செழிக்க
ஓம் நம சிவாய சிவாய நம ஓம். 
* * * 

9 கருத்துகள்:

  1. தஞ்சை கோவில் தேர்திருவிழா, சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் அழைப்பு அருமை.
    படங்கள் போன வருடம் எடுத்தவையா? தேர்திருவிழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி. முன்பு வருடம் ஒரு முறை தஞ்சை கோவிலை தரிசனம் செய்து விடுவோம். மீண்டும் எப்போது கிடைக்கும் தெரியாது.

    ஓம் நம சிவாயா
    சிவாயா நம ஓம்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி பிரமிகத்தக்க நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் தங்களது திருப்பணி தொடரட்டும் வாழ்த நலம்.

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை தேர்திருவிழாவை கண்டதில்லை. இப்போது கண்ட மகிழ்ச்சி. சித்திரை திருவிழா முன்பு கண்டிருக்கிறேன். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. ஆகா
    தங்களின் ஆன்மிக உணர்வு போற்றுதலுக்கு உரியது ஐயா
    குவைத்தில் இருந்தபோதிலும்
    மனம் தஞ்சையினைச் சுற்றியே வட்டமிடுவது புரிகிறது

    பதிலளிநீக்கு
  5. இப்போது தஞ்சையில் இருப்பதால் இன்றெல்லாம் நிறைய பேர் தேரோட்டத்தைப்பற்றியே பேசிக்கொன்டிருந்ததை காண முடிந்தது.
    புகைப்ப‌டங்கள் யாவும் அருமை!

    பதிலளிநீக்கு
  6. பதிவை விட புகைப்படங்களே
    கண்ணைக் கவர்கிறது...

    பதிலளிநீக்கு
  7. தஞ்சை திருத்தேர் . ஹப்பா எவ்வளவு இடங்களில் நின்று செல்கிறது தேர்...இதுவரை கண்டதில்லை. பெரிய தேர்த்திருவிழா போல இருக்கிறது. தங்கள் பதிவின்மூலம் பல அறிந்து கொண்டோம் ஐயா...மிக்க நன்றி. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை ,,,,,

    இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து தொட்டு வந்தோம்,,,

    அருமையாக இருந்தது,,

    தங்கள் பதிவில் பார்த்து மிக அழகு,,

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை ,,,,,

    இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து தொட்டு வந்தோம்,,,

    அருமையாக இருந்தது,,

    தங்கள் பதிவில் பார்த்து மிக அழகு,,

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..