நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 01, 2015

நீள்புகழ் நெடும்பனை

இன்னும் சில தினங்களில் புதுக்கோட்டை மாநகரில் சீரும் சிறப்புடனும் நிகழ இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் போது -

தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் இலக்கியப் போட்டிகளால் ஐந்தாம் தமிழ் என்று புகழப்படும் கணினித் தமிழ் -  சிறப்பிக்கப்பட இருக்கின்றது..

இருந்தமிழே உன்னால் இருந்தேன் - வானோர் 
விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்!..

- என்றெல்லாம் புலவர் பெருமக்களால் சிறப்பிக்கப்பட்ட மூவாப்பெருந்தமிழ் எனும் முத்தமிழ் -

இன்றைக்கு ஐந்தாம் தமிழ் என - பீடும் பெருக்கும் கொண்டு விளங்குகின்றது..

பிரபஞ்சம் பிறந்த போதே தமிழும் பிறந்தது என்பார் - பாவேந்தர்..

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த 
தமிழொடும் பிறந்தோம் - நாங்கள்!..

வானத்தில் திங்களும் ஞாயிறும் விண்மீன்களும் மேகங்களும் பூமியில் கடலும் பிறந்த வேளையில் பிறந்த தமிழ்!.. - என்று சங்கநாதம் செய்கின்றார்..

ஓசையாய் ஒலியாய்ப் பொலிந்த தமிழை வடிவம் எனும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றபோது - அங்கே மாபெரும் துணையாய் நின்றவை - 

ஓலைகள்!..

பனை ஓலைகள்!..


அணிசெய் அரங்கினில் ஐந்தாம் தமிழென 
அழகுடன் அலர்ந்திருக்கும் அருந்தமிழ் 
அன்றைக்கு அவனியெலாம் ஆட்சிகொண்டு
அமர்ந்திருந்த அழகுஎன்ன ஓலைகளில்!..

அரசன் முதற்கொண்டு ஆண்டி வரை - அடி தொழுது
முரசு முழக்கி கவரிவீசிட  அன்னைத்தமிழ் பயணித்தாள் -
அவனி முழுதும் பனையோலை எனும் பல்லக்கில்!..
  
பனையும் அதன் ஓலையும் - இல்லையெனில்!..

நினைத்துப் பாருங்கள்!..

பல்வேறு பலன்களைத் தருவது - பனை!..

அடிவேரிலிருந்து நுனி மட்டை வரை - மக்கள் பணிக்கெனவே!..

ஆயிரமாயிரம் மக்களை நல்லபடியாக வாழ வைத்ததில் - வைப்பதில் - 
முன் நிற்பது பனை மரம்!..

அப்படிப்பட்ட பனைக்கு, ஒரே ஒரு எதிரி - மனிதன்!..

அவனே வெஞ்சினங்கொண்டு - வெட்டி வீழ்த்தி அழிக்கின்றான் - பனையை!..

தூர் எனும் அடிமரத்தில் பெரும்பாலும் சிறு சிறு புற்றுகள் அமைந்திருக்க - 

நெடுமரம் முழுவதும் சின்னஞ்சிறு பூச்சிகளின் குடியிருப்பு..

உயர உயரப் பறக்கும் பருந்துகளும் கழுகுகளும் -
பனை மட்டையில் உட்கார்ந்து கொண்டுதான் ஊரை வேடிக்கை பார்க்கின்றன.. 


தூக்கணாங்குருவிக் கூடுகள்
பனை மட்டைகளைப் பின்னிப் பிணைத்தவாறு கூடுகளைக் கட்டி - 
அவற்றுள் களிமண் உருண்டையில் மின்மினிப் பூச்சிகளைப் பதிந்து வைத்துக் குதுகலிப்பவை - தூக்கணாங்குருவிகள்!..

ஆண் என்றும் பெண் என்றும் விளங்குகின்ற பனை -
மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கின்றது..

ஓலைகள், மட்டைகள் - அளிக்கும் பயன்பாடுகள் ஏராளம்..

விசிறிகள், பாய்கள், கொட்டான் எனப்படும் சிறு கூடைகள் முதலானவை..

பனை ஓலை மற்றும் நார் கொண்டு செய்யப்பட்ட கூடைகள் கடக பெட்டிகள் என்று சொல்லப்படும். நெல் அளந்து சேமித்து வைப்பதற்கு ஏற்றவை.

சுளகு எனப்படும் முறங்களும் சிறப்பு பெற்றவை..

முதிர்ந்து விழுகின்ற பனை மரங்களை சப்பைகளாக அறுத்து வீடுகளுக்கு உத்தரமாக பயன்படுத்துவர்.. உறுதி வாய்ந்த பனஞ்சப்பைகள் பல்லாண்டு காலத்திற்கு சேதமின்றி இருக்கக்கூடியவை..




மட்டையிலிருந்து நார் எடுக்கப்படும் நார் மெத்தைகளுக்கும் கால்மிதிக்கும் ஆகின்றன..

பனை ஓலை வேயப்பட்ட குடிசைகளும் கொட்டகைகளும் கோடையில் குளுகுளு என்றிருக்கும்.. வெயிலின் தாக்கமே தெரியாது..

மட்டையிலிருந்து நார்,  வலுவான கூடைகள் என - 
பனை வழங்கிய அத்தனையுமே - சுற்றுச் சூழலை மாசு படுத்தாதவை..

மக்களின் வெப்பம் தவிர்த்து நலம் அளித்தவை - பனைமட்டை விசிறிகள்..

ஆனால் - இன்றைக்கு எண்ணற்ற பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவை மின் விசிறிகள்..

கோடைகாலத்தில் உடலுக்குக் குளிர்ச்சி தருவன - பதநீரும் நுங்கும்!..

கோடைகாலத்தில் விடியற்காலையில் அருந்தும் பதநீருக்கு ஈடு இனை இல்லை..

பெண் பனை பூத்து - பூங்கதிர் காய் பிடிக்கும் வேளையில் பூங்கதிரின் பக்கவாட்டுகளில் கீறி விட்டு நார் கொண்டு இறுகக் கட்டி பூங்கதிரை நெரித்து விடுவர்..

இந்நிலையில் பூங்கதிரிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கும். பூங்கதிரின் நுனியில் கலயத்தைக் கட்டி விட்டால் - பூங்கதிரில் இருந்து வழியும் பாலானது அதில் சேகரிக்கப்படும்..

காலையும் மாலையும் கதிர்களை நெரித்துத் தட்டி விட்டு கலயத்தில் சேர்ந்திருக்கும் பனம்பாலில் கைப்பக்குவமாக சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர்!..



கீறப்படாத பூங்கதிரின் பிஞ்சுகள் காயாகி முற்றினால் பனம்பழம். இதுதான் நுங்கு!..

பனம்பழத்தை மண்ணில் மேலோட்டமாக விதைத்து வைக்க ஓரிரு வாரத்தில் பனங்கிழங்கு முளை விட்டு வரும்!..

பதநீரும் நுங்கும் மகத்தான மருத்துவ சக்தியுடையவை..

இவற்றில் சுண்ணாம்புச் சத்து இரும்புச் சத்து மக்னீசியம் என மேலும் பல சத்துகள் மிகுந்திருக்கின்றன..

பதநீர் குடிப்பதால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் விருத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரை பாகு காய்ச்சி அச்சுகளில் வார்த்து எடுக்கப்படுவது - கருப்பட்டி..

ஆரோக்கியமான பனை ஆண்டொன்றிற்கு 150 லிட்டர் பதநீரும்
25 கிலோ கருப்பட்டியும் தருவதாக கணக்கிடப்பட்டுள்ளது..

சித்த வைத்திய  மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் சிறப்பிடம் பெற்றிருப்பது கருப்பட்டி..

ஜீனி என்று சொல்லப்படும் White Sugar - உயிர் குடிப்பது.. ஆனால்,
பனஞ்சர்க்கரையாகிய கருப்பட்டி - உயிர் கொடுப்பது..

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்..

கருப்பட்டியின் அடுத்த நிலை தான் பனங்கற்கண்டு!..


அந்தக் காலத்தில் -  கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களி செய்து பூப்பெய்திய இளங்கன்னியர்க்கு கொடுப்பார்கள்..

எதற்கு!..

உளுந்தங்களியினால் - கருப்பை பலப்படும்.. ரத்த சோகை ஏற்படாது.. ஆரோக்கியம் திகழும்.. பாலூட்டும் காலத்தில் பால் சுரக்கும்...

கருப்பட்டியின் பயன்பாட்டிலிருந்து நீங்கியதும் - ஏற்படுகின்ற விளைவுகள் யாருக்கும் புரியவில்லை..

இவ்வளவு தான் என்றில்லாமல் - எவ்வளவோ நன்மைகளை அளிப்பவை - நுங்கும் பதநீரும்!..

கோடை காலத்தில் அம்மை நோய் வராமல் தடுப்பதுடன் - நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றன..

மேலும் மேலும் பெருமைகளை உடைய பனை - கற்பக விருட்சம் எனப்படும்..

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வும் வளமும் அளித்தவை பனை மரங்கள்!..

இத்தகைய பனை மரங்களுக்கு எதிரிகள் மனிதன் மட்டுமே!..

சில கிராமங்களில் - காவல் தெய்வங்கள் பனை மரத்தில் இருப்பதாக மரபு..

வருடாந்திர விழாக்கள் அனைத்தும் பனை மரத்திற்கோ அல்லது அருகிலுள்ள விக்ரகத்திற்கோ நிகழ்வுறும்..

புதுக்கோட்டை அருகிலுள்ள - திருவரங்குளம் பொற்பனைக்கோட்டை ஸ்ரீமுனீஸ்வர ஸ்வாமி வழிபாடு குறிப்பிடத்தக்கது..

இதனால் பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன் சிறப்பிக்கப்படுவதாகவும் ஆகின்றது..

ஆனால் - நவநாகரிகம் மலிந்து விட்ட இந்த காலத்தில் மக்களின் மனங்கள் மாறிப் போய்விட்டன..

சில திரைப்படங்கள் -  பனை மரங்களில் முட்டி மோதி வேரோடு பெயர்த்து எறிவதை இயல்பாகக் காட்டுகின்றன..

நல்லனவற்றை ஆதரிக்காவிட்டாலும் - அவற்றை அழிப்பதில் முனைப்புடன் விளங்குகின்றனர்..

பனையின் அழிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மக்கட்பணி செய்யும் பனை காக்கப்பட வேண்டியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை..

இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஐந்து கோடி பனை மரங்கள் இருந்ததாகவும் அதில் பாதிக்கு மேல் தென்மாவட்டங்களில் இருந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆனால் - இன்றைக்கு பனை மரங்கள் அருகி வருகின்ற ஒன்றாகி விட்டன..

நாகரிக மாயையில் மூழ்கிக் கிடப்பவர்கள் -
பனை தரும் நன்மைகளை அறியமாட்டாதவர்களாக -

பதநீர், நுங்கு, கருப்பட்டி என்றாலே ஏளனமாகப் பார்க்கின்றனர்..

பனை மரத்தைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் காணக் கிடைக்கின்றது..

இறையியலில் - சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி வடிவாக - திருக்கரத்தில் ஓலைச்சுவடியுடன் விளங்குகின்றார்..

அவ்வண்ணமே - கலைவாணியும் திருக்கரம் தன்னில் ஓலைச்சுவடியுடன் விளங்குகின்றாள்..

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனின் சகோதரனாகிய பலராமன் பனைக் கொடி உடையவனாக குறிக்கப்படுகின்றான்..

எதற்கும் கலங்காத மனத்தினரைக் குறிக்கும் போது -
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!.. - என்று குறிப்பது வழக்கம்..

அடுத்தடுத்து கஷ்டங்களுக்கு ஆளாகும் போது -
பனை ஏறி விழுந்தவனை கிடா வந்து மிதித்தாற்போல!.. - என்றுரைப்பர்


வாழைக்கு நித்தமும் பராமரிப்பு அவசியம்..

தென்னைக்கு மாதம் இருமுறை கவனிப்பு அவசியம்..

பனைக்கு அவ்வாறெல்லாம் தனி கவனிப்பு ஏதும் அவசியம் இல்லை..

காலத்தினால் பெய்யும் மழை நீரை எடுத்துக் கொண்டு பலன் தருகின்றது..

எனவே தான் -

தன்னலங்கருதாது உழைப்பவரை - பனைக்கு நிகராகப் புகழ்வர்..

மூவேந்தர்களுள்
பாண்டியரின் மாலை - வேம்பு
சோழர்களின் மாலை - ஆத்தி
சேரர்களுக்கு உரியது - பனம்பூ மாலை..

தமிழகத்தின் சிறப்பு அடையாளமாகத் திகழ்வது  பனை ..

பனங்குலை மங்கலத்தின் அடையாளம்..

கல்யாண வீடுகளிலும் திருவிழாப் பந்தல்களிலும் பனங்குலைகளைக் காணலாம்.

ஆயினும் - பனையைக் காப்பதற்கு நாம் தவறி விட்டோம்..

பனையின் பெயருடன் இன்றும் ஊர்கள் விளங்குகின்றன..

நமது உள்ளங்கை பனை மட்டையின் அடையாளம்..

பனை போல - நாமும் இந்த கையால் ஊருக்கு நல்லன செய்தல் வேண்டும் என்பது தெளிவு!..


ஆங்கிலத்தில் - Palm என்றே, உள்ளங்கை குறிக்கப்படுகின்றது..

மக்கட்குலம் அதையெல்லாம் உணர்ந்து கொண்டாற்போலில்லை..

தென்மாவட்டங்களில் -
ஒரு பெருங்குலத்தார்க்கு வாழ்வும் வளமும் என்று ஆனது பனை!..

வறண்ட நிலங்களில் வளர்வது போலவே - வளமான பூமியிலும் நின்று வளரும் தன்மையுடையது பனை..

சில பனை மரங்கள் அருகில் இருந்தால் குளத்திற்குத் தனி அழகு..

குன்றிமணிக் கொடி - வெகு இயல்பாக பனைமரத்தைச் சுற்றிப் படர்ந்து வளரும்.. ஆனாலும் -


மக்களே மண்ணுக்கு எதிரியாகி நிற்கின்றனர்.. என்ன செய்வது!?..

தமிழகத்தில் பனைக்கு என தனி வாரியம் இருந்தும் -
பனை அழிக்கப்படுவதைத் தடுக்க இயலவில்லை..

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.. (0104)

- என்று பனையின் பெருமையை வள்ளுவப்பெருமான் குறிப்பிடுகின்றார்..

பனையைக் காப்போம்..
பயன் யாவும் பெறுவோம்!..

வாழ்க நலம்..  
* * *

நீள்புகழ் நெடும்பனை 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(பயன் தரும் மரங்களைக் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  
* * *

26 கருத்துகள்:

  1. பிறகு வருவேன் ஜி கொஞ்சம் பிஸி

    பதிலளிநீக்கு
  2. ஆம்மாடியோ பனைக் குறித்து எத்துனை விடயங்கள்,,,
    தங்கள் பதிவுகள் மூலம் நான் நிறைய தெரிந்துக்கொண்டேன்.
    தாங்கள் சொல்வது உண்மை, தானாக வளர்ந்து தன்னுடைய எல்லாவற்றையும் மனிதனுக்கு அளிக்கும் பனையைக் கால நாகரீகம் கருதி கவனிப்பார் இல்லை தான்,,, எவ்வளவு நன்மைகளை நாம் இழந்துக்கொண்டு இருக்கிறோம்,
    அருமையான பகிர்வு,
    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பனை தெய்வ மரம்.. எத்தனையோ குடும்பங்களை வாழவைக்கின்றது..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஐயா.. தமிழீழத்தின் சிறப்பெனச் சாற்றிய கற்பகதரு பற்றி
    அருமையான பதிவு!
    அன்று நம் தலைவன் ஆளுக்கொரு பனை மரம் வளருங்கள் என்றது
    என் மனத்திரையில் வந்து போயிற்று!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தமிழகத்திலும் தமிழீழத்திலும் மக்களின் வாழ்வாதாரமான மரங்களுள் பனை மரமும் ஒன்று....

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஒரு பதிவிற்காக
    இத்துனை உழைப்பு
    இத்தனைத் தேடலா
    தங்களின் அயரா தேடல்
    வியக்க வைக்கிறது ஐயா
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முன்பு சொன்னபடி நேற்றுதான் கடைசிநாள்.. இரவுக்குள் ஒரு பதிவு வெளியிட முயன்றேன்.. இணையம் ஒத்துழைக்கவில்லை.. மிகுந்த வேதனையுடன் இரவு வேலைக்குச் சென்று விட்டேன்..

      கால அவகாசம் கிடைக்காதா என இரவு முழுதும் எண்ணிக் கொண்டிருந்தேன்,,

      காலையில் வந்து கணினியைத் திறந்தால் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு எனத் தகவல்..

      ஆவலுடன் - பதிவைத் தொடர்ந்த போது - விசைப் பலகையில் பிழையாகி எல்லாம் அழிந்தே போய் விட்டன..

      மிகுந்த வருத்தமாகி விட்டது..

      அந்த பதிவின் கருத்தை விட்டு விட்டு பலருக்கும் வாழ்வளிக்கும் பனையைப் பற்றி எழுதி பதிவிட்டேன்..

      சற்றும் ஓய்வில்லை.. உறக்கமில்லை..

      இதோ - அடுத்து இரவு வேலைக்குப் புறப்பட்டு விட்டேன்..

      தங்களைப் போன்றோரின் நல்வாழ்த்துகள் என்றும் துணையிருக்கும்..

      வாழ்க நலம்!..

      நீக்கு
  5. தென் மாவட்டங்களுக்கு அண்மையில் சென்றபோது ஒரு நண்பர் கூறினார், நாம் பனையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம் என்று. நல்ல விழிப்புணர்வுப் பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள். பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வருடந்தோறும் திருச்செந்தூர், உவரி, திருநெல்வேலி செல்லும் போதெல்லாம் - பனை மரங்களின் எண்ணிக்கை குறைவதைக் கண்டு நானும் மனம் வருந்தியிருக்கின்றேன்..

      மக்களே மண்ணுக்கு எதிரியாகிப் போனார்கள்..

      காலம் அனைவரையும் திருத்தட்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      விழா சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  7. அன்பின் ஜி
    அற்புதமான வியடங்கள் தங்களின் தேடல் எவ்வளவு உயர்ந்த அறிய சங்கதிகளை அறியத் தந்து இருக்கின்றது இவையெல்லாம் தெரிந்தவையே என்றாலும் கூட தங்களது விரிவான விடயங்கள் கண்டு மலைத்தேன்.

    ஊரின் பெயர்களுடன் பனை
    ஆம் ஜி உத்திரகோசமங்கைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் பனையடியேந்தல் சிறு வயதில் ஞானி ஸ்ரீபூவு உடன் அந்த ஊரிலிருந்து வரும் பதநீரை தினம் குடித்து வளந்தவன் நான் பழைய நினைவுகளும் அந்த பதநீர் கொண்டு வரும் வள்ளி என்ற அம்மாவையும் இன்று நினைக்க வைத்து விட்டீர்கள் அவர்கள் இந்நேரம் இறந்திருக்கலாம்

    இந்தப்பதிவு வெற்றி பெற வேண்டும் 80 எமது ஆசை வெற்றி உமதே
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      உண்மைதான்.. தாங்கள் சொல்வது போல பதநீர் குடித்ததும் நுங்கு வண்டி ஓட்டியதும் ஆகிய நினைவுகளுடன் தான் இந்தப் பதிவை எழுதினேன்..

      தங்களுடைய மலரும் நினைவுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டன..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. உங்களின் இந்த பதிவினைக் கண்டதும் பழைய நினைவுகள் உருண்டோடி வந்தன. ஒவ்வொரு வாய்க்கால் மேட்டிலும் ஒரு பனைக் குடும்பம் இருக்கும். முன்பு போல் பனை மரங்கள் இப்போது அதிகம் இல்லை. இருப்பவற்றையும் அழித்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      குடும்பங்கள் பலவற்றை வாழ வைத்த பனை -
      மனிதரின் செயலால் - தன் குடும்பத்தை இழந்து விட்டது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் ஐயா! பனை பற்றி இவ்வளவு தகவல்களா! ஒவ்வொரு வரியும் அருமை சிறப்பு!
    மதுவை ஒழித்து பனையின் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நீண்ட காலமாக போராடிவருகிறோம்! இந்த அரசு தலைசாய்க்க மறுக்கிறது!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கடந்த 45 ஆண்டுகளில் எந்த அரசு தான் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தது?..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. /களிமண் உருண்டையில் மின்மினிப் பூச்சிகளைப் பதித்து குதூகலிப்பவை தூக்கணாங்குருவிகள்/ இது கற்பனை இல்லையே. விரிவான பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      மின்மினிப் பூச்சிகளைப் பற்றிய செய்தி கற்பனையல்ல.. நானே - கண்டிருக்கின்றேன்.. தூக்கணாங்குருவி கூடு அமைக்கும் சூழலின் தன்மையைப் பொறுத்தது அது..

      குளத்தின் ஓரமாக வளர்ந்திருக்கும் பனை மரங்களில் கட்டப்படும் கூடுகளில் மிளகு அளவில் களிமண் துணுக்குகளைக் கண்டிருக்கின்றேன்..
      தூக்கணாங்குருவி கூடுகள் மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. பனை மரத்தைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். இதுவும் அழிவிலிருந்து தப்பவில்லை என்கிறபோது வேதனை தான் மிஞ்சுகிறது. ந்ல்லதொரு கட்டுரைக்குப் பாராட்டுக்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      பனை மரத்தைப் பற்றி சொன்னது கொஞ்சமே!..
      இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்..

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. தமிழகத்தின் மாநிலமரமான பனை பற்றி அறியாத செய்திகளுடன் அதன் சிறப்புகளை எடுத்தியம்பும் அருமையானதொரு பதிவு. அறியாமையால் எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்துகொண்டுவருகிறோம்.. நல்லதொரு விழிப்புணர்வைத் தரும் கட்டுரைக்குப் பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு..

      தங்களுடைய முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..

      பனை நமக்குச் சொந்தமான மரம்.. எத்தனை எத்தனை பலன்களை அளிக்கின்றது.. ஆனாலும் நாம் அதன் மேல் பாசம் கொள்ளவில்லை..

      இயற்கை நம்மை மன்னிக்குமா - தெரியவில்லை..

      தங்கள் இனிய கருத்துரைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  13. அனைத்து தகவல்களும் அருமை ஐயா! அறிந்தவை சில அறியாதவை சில என்று....

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..