நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 21, 2015

ஆனந்த நவராத்திரி

அனைவருக்கும் அன்பின் நல் வாழ்த்துகள்!..

மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் -

வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மியையும்
கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும்
- உள்ளன்புடன் வணங்கி வழிபாடுகள் செய்து மகிழ்ந்தோம்.

இன்று ஒன்பதாம் நாள் - நவராத்திரியின் சிகரம் எனத் திகழும் நாள்..

சரஸ்வதி பூஜை!..

நன்றி - கேசவ் வெங்கட்ராகவன்
நல்லோர் தம் இதயத் தாமரைகளில்,
நலந்தரும் நாமகள்  என  வீற்றிருக்கும்
நற்றமிழ்ச் செல்வியின் பாதக் கமலங்களை
நம்தலை மேல்சூடிக் கொள்ளும் நன்னாள்!..

சரஸ்வதி பூஜை என்பது சுவடிகளுக்கும் எழுது பொருட்களுக்கும் நம்முடன் இயங்கும் சாதனங்களுக்கும் பூவும் பொட்டும் வைக்கும் நாள் மட்டுமல்ல!..

கற்ற கல்வியை அதன் மூலம் பெற்ற நலத்தை - நன்மையை மேம்படுத்திக் கொள்ளும் நாள்!..

ஞானமாகிய கல்வியை நல்லருட் செல்வமாக மாற்றிக் கொள்ளும் நாள்!..


செம்மையுறக் கற்ற கல்வியே பெருஞ்செல்வம்!..

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றயவை..

- என்பது வள்ளுவர் வாக்கு..

மூடத்தனத்தையும் மூர்க்கத்தனத்தையும் முற்றாகத் தொலைத்து விட்டு
நல்லறிவின் துணை கொண்டு வித்தாக விளைவாக முளைத்து எழவேண்டிய நாள்..

கல்விக்கு அதிபதியாகிய கலைமகளைத் துதிக்கும் முன் ஒரு சிந்தனை..

நாம் என்ன கற்றோம்!?..

கற்றதெல்லாம் கற்பதெல்லாம் கல்வியா!?..

படித்ததெல்லாம் - படிப்பதெல்லாம் படிப்பா!..

இல்லை!..

படிதல் இல்லாத எதுவும் படிப்பே அல்ல!..

தன் முடி படியவில்லயே!.. என வருந்துவோர் மத்தியில்,

தன் மனம் படிய வில்லையே!,, - எனக் கலங்குவோர் எத்தனை பேர்!..

படிதல் இல்லாத கடற்கரை வெளியிலும்
படிதல் இல்லாத பாலைவனப் பரப்பிலும்

பசுமையைக் காண்பதென்பது அரிது!..

மணல் ஆனாலும் அதற்கும் பொருளுண்டு!..

படிதலுடைய ஆற்று மணல் தான் வண்டல் என்றாகின்றது..

மணலை வண்டல் என்றாக்கும் பெருமைக்குரியது - ஆறு!..

ஆதலினால் தான்,  செல்லும் வழியையும் ஆறு  - என்றது அருந்தமிழ்!..

ஒருவரை வழிப்படுத்துவதையும்
ஒருவருக்கு வழிகாட்டுவதையும்

ஆற்றுப்படுத்துதல் - என்று அடையாளங்காட்டும்..

நெறி பிறழாதிருத்தல் என்பதுவே - நல்ல கல்வி!..

கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!..

- என்றுரைப்பார் வள்ளுவப்பெருந்தகை..

கற்பனவும் இனி அமையும்!.. - என்று குறித்தருள்வார் மாணிக்கவாசகப் பெருமான்..

ஞானமும் கல்வியும் நம சிவாயவே!.. - என அடையாளங்காட்டுவார்..

ஆன்றோர்கள் காட்டிய நல்வழியினை உணர்ந்து,
அந்த வழியில் செம்மையுற நாமும் நடந்து - பிறரையும் அழைத்துச் செல்வதே
கற்ற கல்விக்கு அடையாளம்!..

அவ்வண்ணம் ஆகும்போது -

அன்னை கலைவாணி நம்முடனே வருவாள்!.. - என்பது சான்றோர் வாக்கு..

அந்த நிலையை அருள வேண்டும் என அன்னையைப் பணிந்து நிற்போம்!..

நாளை, பத்தாம் நாள்  - விஜயதசமி.


அநீதியை எதிர்த்து  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள். ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.

அத்துடன் ஆணவமும் அகந்தையும் அடியோடு அழிந்தன. 

மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும் அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

அன்னை போர்க்கோலத்தில் இருந்து மீண்டு சாந்த ஸ்வரூபிணியாக மங்களம் விளங்க திருக்கோலம் கொண்டருளினாள்.

ஸ்ரீதுர்கா தேவியை - மோடி - என,   அப்பர் ஸ்வாமிகள் குறித்தருள்கின்றார்.

விரதம் இருந்து மகிஷனை வென்ற மகேஸ்வரி -
எம்பெருமானின் திருமார்பில் சாய்ந்து உவகை கொண்டநாள்  - விஜயதசமி!..

 

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி.

அதுபோல ஆயுதங்களுக்கும் உண்டு அன்னையின் சிறப்பு !..

எனவே,  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும் வணங்கி மகிழ்ந்தனர்.

விமலையின் வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.

இந்நாள் - நல்லனவற்றை மேற்கொள்ளவும் புதிய வணிகம் ஆரம்பிக்கவும் உகந்த நாளாக விளங்குகின்றது.

விஜய தசமி - குழந்தைகளின் கல்வி தொடக்கத்துக்கு சிறப்பான நாள் என குறிக்கப்படுகின்றது.

சிவபெருமான் - அகத்திய மகரிஷிக்கு  தமிழ் இலக்கணத்தை உபதேசித்த தலம்  - கும்பகோணத்தை அடுத்துள்ள இன்னம்பூர்.

இங்கே எம்பெருமான் ஸ்ரீ நித்யகல்யாணி அம்பிகையுடன் ஸ்ரீ எழுத்தறிவித்த நாதராக வீற்றிருக்கின்றார்.   இத்திருக்கோயிலிலும் -

திருஆரூர் - பூந்தோட்டத்தை அடுத்துள்ள கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவி திருக்கோயிலிலும் அட்சராப்பியாச வழிபாடுகள் சிறப்பாக நிகழ்கின்றன.


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்!.. 

அருளாளராகிய மகான்  ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா அவர்களும் (15 அக்டோபர் 1918)


மதுரை  ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் அவர்களும் (1932) சித்தி அடைந்த நாள் - விஜய தசமி!..

எல்லாவற்றையும் விட - விஜயதசமியன்று ,
நெஞ்சாரத் தன்னை வழிபட்டவர்களின் இல்லம் தேடி,
அன்னை பராசக்தி வருகின்றாள் - என்பது ஐதீகம்..

அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!.. 

அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!.. 
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!.. 


ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..

படிக நிறமும் பவளச்செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி..
-: கம்பர் - சரஸ்வதி அந்தாதி :-

என் தந்தையின் நினைவாக!..
வெள்ளைக் கமலத்திலே அவள் 
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்..

வாணியைச் சரண்புகுந்தேன் அருள்
வாக்களிப்பாள் எனத்திடம் மிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்!..
-: மகாகவி பாரதியார் :-

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி 
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா.. 

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
ஓம் ஸரஸ்வத்யை நம:
* * *

19 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி
    காலையிலிருந்தே தங்களது பதிவை எதிர் பார்த்தேன் இன்றைய ஆயுத பூஜைக்காக... பதிவு வழக்கம்போலவே விடயங்கள் நன்று தங்களுக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      மடி கணினியில் கொஞ்சம் பிரச்னை..

      தாங்கள் எதிர்பார்த்திருந்தமைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் சார். உங்கள் தளத்தில் ( join this site ) ஏன் இணைய முடியவில்லை ? விபரம் கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவுக்கு ''இந்தத் தளத்தில் இணைக'' அதன் பக்கத்தில் சிறிய அளவில் இருக்கும் சிவப்பு கட்டத்தை சொடுக்கி அதன் வழியே மீண்டும் கடவு எண் கொடுத்து உள் நுழையவும் - கில்லர்ஜி

      நீக்கு
    2. நீங்கள் சொன்ன மாதிரி தான் நிறைய தடவை பண்ணி பார்த்து விட்டு தான் கேட்டேன். சிறிது நேரம் கழித்து திரும்பி வருக என்று வருகிறது சகோ.

      நீக்கு
    3. அன்புடையீர்..

      இந்தப் பிரச்னை சில மாதங்களாகவே இருக்கின்றது.. சரி செய்வதற்குத் தெரியவில்லை.. கில்லர் ஜி அவர்கள் சொன்னவாறு செய்தால் சில சமயங்களில் இணைப்பு கிடைக்கின்றது.. விரைவில் சரி செய்து விடுகின்றேன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கேசவ் தளத்தில் சரஸ்வதி ஓவியம் கண்டேன். நன்றி. நவராத்திரிக்கு அருமையான, பொருத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்....

      கேசவ் அவர்களின் ஓவியங்கள் மனதைக் கவர்கின்றன..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நவராத்திரி ஆயுத பூஜை என்றால் எனக்கு எச் ஏ எல் லில் நான் பயிற்சி முடிந்த போது வந்த ஆயுத பூஜைதான் நினைவுக்கு வரும் கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்கும் போய் இருக்கிறேன் விஜய தசமி அன்று ஈடுபடும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      மேலதிக செய்திகளுக்கும் அன்பான வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான விரிவான தகவல்களுடன் அழகு படங்களுடன் அருமை அய்யா!!!
    இனிய விஜய தசமி வாழ்த்துக்கள் அய்யா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் -
      வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மிகச் சிறப்பான பதிவு ஐயா!

    அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சிறப்பான தகவல்கள்...

    உங்களுக்கும் விழாக்கால வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா அப்போ பதிவுக்கு விடுமுறையில்லையோ, நான் தான் பதிவுக்கும் என்று இருந்துவிட்டேனோ,,,,,,,
    இணையப்பக்கம் ஒரு நாள் வரவில்லையென்றால் என்ன நடக்கிறது...
    தங்கள் அன்பின் வருகைக் காண ஆவலுடன்
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வெளியூருக்குச் சென்றிருக்கின்றீர்கள் என்று நினத்திருந்தேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..