நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 12, 2015

அன்புக் கரங்கள்

மாலைப் பொழுது..

எங்கும் இருள் கவியத் தொடங்கும் நேரம்..

திருநெல்வேலியில் இருந்து அந்தப் பேருந்து புறப்படுகின்றது..

பேருந்தினுள் நிற்பதற்கு இடமில்லை..
நெரிசல்.. நெரிசல் அன்றி வேறு ஏதுமில்லை..


அவரவர் கவலை அவரவருக்கும்..

ஆகையினால்,

இவர்களைக் கவனிக்கவோ - இவர்களைக் குறித்துக் கவலைப்படுவதற்கோ யாருக்கும் நேரமில்லை..

இவர்கள் என்றால் - யார்!?..

ரமேஷ் - அனிதா - தம்பதியர்.. மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்கள்..
அவர் தம்முடன் - அன்பு மகன்.. சர்வேஷ்.. ஏழு மாதக் குழந்தை..

திருச்செந்தூரில் முடிகாணிக்கை செலுத்தி விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்..

பேருந்தினர் நடத்துனர் கூட அவர்களிடம் கட்டணத்தை வசூலிப்பதில் தான் அக்கறை காட்டினாரே - தவிர,

பேருந்தின் படிக்கட்டில் - கைக்குழந்தையுடன் பயணித்த அவலத்தினைக் கண்டு கொள்ளவில்லை..

அவருக்கான கைப்பை நிறைந்து விட்டது.. அது போதும்!..

யார் எக்கேடு கெட்டால் என்ன!?..

கோவில்பட்டியைத் தாண்டி - சாத்தூரை நெருங்கும் முன்பாக - வச்சக்காரப் பட்டிக்கு அருகில் பேருந்து வந்தபோது -

படிக்கட்டில் அமர்ந்து பயணித்த தாய் - வீறிட்டு அலறினாள்..

அவசர கதியாக பேருந்து நிறுத்தப்பட்டது..

அந்த இளம் பெண்ணிடமிருந்து கண்ணீருடன் கதறலும் வெளிப்பட்டது..

கையில் இருந்த பிள்ளை தவறி விழுந்து விட்டது.

ஆனால், எங்கேயென்று தெரியவில்லை..

அரைகுறை தூக்கத்திலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.

தூக்கம் கலைந்து விட்ட கடுப்பில் ஆளுக்கு ஆள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்..

வச்சக்காரப் பட்டி காவல் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டது..

அப்போது இரவு மணி 11.30..

வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தினர்  - விருதுநகர் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கொடுக்க -

அங்கொரு - இன்ப அதிர்ச்சி!..

நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஏழு மாத ஆண்குழந்தை சாத்தூர் தனியார் மருத்துவமனையில் பத்திரமாக உள்ளது.. நேரில் வந்து அடையாளம் காணவும்..

என்று அங்கிருந்து மறுமொழி வந்தது..

பதறியடித்துக் கொண்டு சாத்தூருக்கு ஓடிய பெற்றோர்,  அங்கே - மருத்துவமனையில் கண்டது - தங்கள் குழந்தையைத் தான்!..

ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து உருண்டு விழுந்த பிள்ளை உயிருடன்!..

வழிந்த கண்ணீருடன் - மருத்துவர்களுக்கு நன்றி கூறியபோது - அவர்கள் கைகாட்டினர் -

இவர் தான் உங்கள் பிள்ளையைக் காப்பாற்றியவர்!.. என்று..

அங்கே -

நான் என்ன பெரிதாகச் செய்து விட்டேன்!.. - எனும் அடக்கத்துடன் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார்..


அவர் பெயர் - ராஜா..

இருபத்தேழு வயதுடையவர்..

சிவகாசியைச் சேர்ந்தவர்..

நள்ளிரவில், நான்கு வழிச்சாலையில் தனது வேனை ஓட்டிக் கொண்டு வந்தபோது -

சின்ன ஓடைக்காரப்பட்டி விலக்கு எனும் இடத்தில் - குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டார் ராஜா..

பதற்றத்துடன் ஓடித் தூக்கினார்.. நல்லவேளை.. சிறு காயங்கள் மட்டுமே..

இனியும் தாமதிக்க நேரமில்லை - என்று குழந்தையை அருகிலிருந்த சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு - காவல் துறைக்கு தகவல் கூறினார்..

திரு. ராஜா அவர்களின் மனிதாபிமானம் மிக்க செயலுக்கு -
ரமேஷ் - அனிதா தம்பதியரின் கண்ணீர்த் துளிகளே காணிக்கையாகின..

ஊடகங்களில் இச்செய்தி வெளியானதும் திரு. ராஜா அவர்களைப் பாராட்டி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துரைகள் குவிகின்றன..

அத்துடன், கவனமற்ற பெற்றோர் எனவும் பொறுப்பற்ற நடத்துனர் எனவும் கண்டனங்களும் எழுந்திருக்கின்றன..

காலப்போக்கில் அவைகள் எல்லாம் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை..

விபத்திலிருந்து மீண்ட குழந்தையை வாழ்த்துவோம்.. அதேவேளையில்,

மனித நேயத்துடன் குழந்தையைக் காத்த திரு. ராஜா அவர்களையும் மனதார வாழ்த்துவோம்..

நன்றி - தினமலர்..

* * *  

மும்பை..

அந்த தம்பதியரை தனது டாக்ஸியிலிருந்து இறக்கி விட்டான் - அந்த ஆள்..

பரிதவித்தனர் - பாவப்பட்ட தம்பதியர்..

காரணம் - அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி..

எந்த நேரமும் பிரசவிக்கலாம்..
அவர்களின் பயணமே மருத்துவமனையை நோக்கித் தான்..

சாலை ஓரத்தில் நிர்க்கதியாக நின்றிருந்த வேளையில் -
அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலியும் வந்து விட்டது..

வலி தாளாது கதறி அழுதாள்.. கண்ணீர் வடித்தாள்..

பரபரப்பான வீதியில் மறைவிடம் தேடி அலைந்தன விழிகள்..

அடைக்கலம் தேடி அலைந்த விழிகளில் -
அந்தப் பிள்ளையார் கோயில் தென்பட்டது..

விநாயகரை நோக்கி - வேதனையுடன் நீண்டன கரங்கள்..

அடைக்கலம் தாராயோ.. ஆதரவு அருளாயோ!..

விழிகள் கண்ணீர்ப் பூக்களை உதிர்த்தன..

இன்னும் சில விநாடிகள்.. சில விநாடிகளே!..

எந்த விநாடியிலும் பிரசவம் சம்பவிக்கலாம்..

சமயத்தில் காப்பாய் - சர்வேஸ்வரா!..

வேதனையில் வீறிட்ட - இளம் பெண்ணின் கதறல் -
அங்கே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பெண்களின் காதுகளில் விழுந்தது.

நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்டனர்..

ஓடோடி வந்து - கர்ப்பிணிப் பெண்ணைத் தாங்கிக் கொண்டனர்..

அப்படியே, கைகளில் ஏந்திக் கொண்டு சென்ற இடம் - பிள்ளையார் கோயில்!..

சரசர. என்று, கையில் கிடைத்த துணிகளைக் கொண்டு மறைப்பு கட்டப்பட்டது..

அடுத்த நொடியில் - புதிய ஜீவன் ஒன்று உலகைக் கண்டு வீறிட்டது..

அங்கிருந்தோர் அனைவரின் முகத்திலும் ஆனந்தம்..

கொப்பூழ் கொடியைப் பிரித்து - துணியில் ஏந்தினர்..

இதோ பாரம்மா.. உன் மகனை!..

தாயிடம் சேயைக் காட்டினர்..

தகப்பனை அழைத்து அவனிடமும் மழலையைக் காட்டினர்..

ஆனந்தக் கண்ணீர் வழிந்தது - அந்தத் தம்பதியரின் கண்களில்..

அவர்கள் -


இலியாஸ் ஷேக் - நூர்ஜஹான்!..

அவர்களின் கண்ணீரைத் துடைத்து - இனிப்பு ஊட்டினர் அங்கிருந்தோர்..

அல்லாவாக இருந்தால் என்ன.. ஆனைமுகனாக இருந்தால் என்ன!..
அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு வேறுபாடே கிடையாது!..
நல்லபடியாக பிள்ளை பிறந்ததே... அதுவே எல்லாருக்கும்  மகிழ்ச்சி..

அங்கிருந்தோர் ஆறுதல் கூறிய வேளையில் - நூர்ஜஹான் கூறினாள்..

கணேஷ்!.. என்னையும் என் மகனையும் காப்பாற்றியவர்..
அவர் பெயரையே - என் மகனுக்கு பெயர் வைத்து விட்டேன்!..

நன்றி - தினமணி..

* * *

மேற்குறித்த சம்பவங்கள் - சென்ற வாரத்தில் நிகழ்ந்தவை!..

நதிகள் பிறக்குமிடம் பலவாகும்..
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்!..

இறைவனின் தத்துவம் கடலைப் போன்றது!..
-: ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் :-

வாழ்க நலம்!..
* * *

13 கருத்துகள்:

  1. அன்பின் ஜி காலையில் தொலைபேசியில் தங்களுடன் பேசிய விடயங்கள் இப்பொழுது பதிவாய் விவரித்த விதம் அருமை திரு. ராஜா அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்

    இலியாஸ் ஷேக் - நூர்ஜஹான் தம்பதிகள் கணேசுடன் நீடூழி வாழ வாழ்த்துவோம்

    ஐயாம் வெயிட்டிங் ஃபார் அபுதாபி சரவணபவ நமஹ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களின் வருகையும் கருத்துரையும் உற்சாகம் அளிக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பத்திரிக்கைச் செய்திகளின் பகிர்வுக்கு நன்றி. மனிதம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. ஒரு மாறுதலுக்கு ஆன்மிகச் செயலே மனித நேயத்தில் தான் என்று நிரூபிக்கும் பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மனிதம்..... இது தான் தேவை. மதம் தேவையில்லை!

    செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      மனிதம்.. அது ஒன்றுதான் மக்களுக்குத் தேவை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான நேர்மறைச் செய்திகள்! மனிதம் இன்னும் வாழ்கின்றது என்று சொல்லும் செய்திகள். மனிதம் என்றாலே...அன்பே சிவம்! எதிர்பாரா அன்பு! சேவை! இரு குழந்தைகளும் நீடுழி வாழ இறைவனை வேண்டுவோம். அந்தக் குழந்தையைக் காப்பாற்றிய திருமிகு ராஜா அவர்களைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம்! அவருடைய நல் மனதிற்கு இறைவன் எல்லாம் அருள வேண்டி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> அன்பே சிவம் .. <<<
      சரியாகச் சொன்னீர்கள்.. நல்ல மனங்களுக்கு என்றுமே ஈசனின் திருவருள் துணையுண்டு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்,
    மனிதம் இன்னும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கு,,,,,,,,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..
      மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது..

      அன்பின் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்கள்..
      வாழ்க நலம்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..