நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 23, 2015

சதயத்திருவிழா

இன்று ஐப்பசி சதயம்..

மறக்க ஒண்ணாத மகத்தான நாள்..

மாமன்னன் ராஜராஜ சோழன் இப்பூவுலகில் தோன்றிய திருநாள்..

பூமகள் பெருமை கொண்டு - ஆயிரத்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. 

தஞ்சையில் நேற்று சதயத் திருவிழா சிறப்புடன் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் சதயத் திருநாளில் கலந்து கொள்ளும் பேறு வாய்த்தது..

ஆனால் - இந்த ஆண்டு ..!?

ஐக்கிய அரபு அமீரகத்தில் - மகள் வீட்டில் இருக்கக் கூடியதாகி விட்டது..

ஆயினும், மனம்!..

அது மட்டும் தஞ்சை மாநகரில்!..

மகத்தான நந்தி மண்டபத்தில்!..
அருள்தரும் பெருவுடையாரின் திருச்சந்நிதியில்!..
மாபெரும் ராஜராஜேஸ்வரத்தின் திருச்சுற்றில்!..

சென்ற ஆண்டினைப் போல - இந்த ஆண்டு சதய விழாவினைக் காண இயலவில்லை.. எனினும்,

மாமன்னனை நினைவு கூரவில்லை எனில் மனம் ஆறாது..

எனவே, சென்ற ஆண்டு நான் எடுத்த சில படங்களும் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.


சோழப் பேரரசை மீண்டும் நிர்மாணித்து புலிக்கொடியை ஏற்றியவர் விஜயாலய சோழர்( கி.பி.848- 871).

ஆயினும்,

சோழப்பேரரசின் புலிக்கொடி மகோன்னதமாக கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்திடக் காரணமாக விளங்கியவன் - மாமன்னன் ராஜராஜ சோழன்.

ஐப்பசி சதய நட்சத்திரத்தில் (கி.பி.947) சுந்தர சோழருக்கும் {956 - 973} வானவன் மாதேவிக்கும் தோன்றிய அருந்தவப்புதல்வன்!..

தங்கத் தொட்டிலிலிட்டு - தாயும் தந்தையும் - சீராட்டிய போது, சூட்டி மகிழ்ந்த திருப்பெயர் - அருண்மொழிவர்மன்.

அருண்மொழியின் அன்புச் சகோதரன் - ஆதித்த கரிகாலன்.. மகத்தான வீரன்.

பாண்டிய நாட்டில் சோழப்பேரரசை நிறுவுதற்காக -  வீரபாண்டியனுடன் போர் செய்து அவன் தலையைக் கொய்தவன். 

அதன் காரணமாகவே பின்னாளில் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்தவன்..


அன்புச் சகோதரி - குந்தவை நாச்சியார்..
நுண்ணறிவிலும் கலைஞானத்திலும் மிகச்சிறந்து விளங்கிய வீர மங்கை. அருண்மொழி சிவபக்தியில் சிறந்து விளங்கிடக் காரணமானவர்களுள் குந்தவையும் ஒருவர்.

மற்றொருவர் - செம்பியன் மாதேவியார்.

மகா சிவபக்தராகிய கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசி. 
பெரிய பிராட்டியார் எனப் புகழப்பட்டவர். 

கண்டராதித்த சோழர் சிவநெறிச் செல்வர். 
தில்லை ஆடவல்லானைத் தொழுது நின்ற தூயவர். 

இவர் இயற்றிய திருப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

அதுவரையிலும் சுண்ணாம்புச் சாந்தும் செங்கல்லுமாக விளங்கிய சிவாலயங்களை - கருங்கற்களைக் கொண்டு கற்றளிகளாக மாற்றிய பெருமையை உடையவர் - கண்டராதித்த சோழர்.

கணவரின் காலத்திற்குப் பிறகு சிவப்பணி செம்மலாக விளங்கியவர் -   செம்பியன் மாதேவியார்.

இவரது திருப்பெயரால் - இன்றும் தஞ்சை மாவட்ட கடற்கரை ஓரத்தில் விளங்கி வரும் ஊர் - செம்பியன் மாதேவிப் பட்டினம்.

தன் கொழுந்தனாரின் பேரப்பிள்ளைகளான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி ஆகியோரின் மீது அளப்பரிய பாசமும் நேசமும் கொண்டு வளர்த்த பெருமைக்கு உரியவர் செம்பியன் மாதேவியார்.

சோழ தேசத்தின் திருக்கோயில்கள் பலவற்றிலும் திருப்பணிகளை மேற்கொண்ட இவரது - வளர்ப்பினால் தான்,

அரியணை ஏறியதும் வானளாவிய ஸ்ரீவிமானத்துடன் பிரம்மாண்டமாக தக்ஷிணமேருவை தஞ்சைத் தரணியில் எழுப்பினான் - ராஜராஜ சோழன்!..




தனது தந்தை சிவகதி எய்திய பிறகு - அரியணை ஏறாமல்,

கண்டராதித்த சோழர் - செம்பியன் மாதேவியார் ஆகியோரின் மகனும் தனது சித்தப்பாவும் ஆகிய உத்தம சோழனை சோழ மண்டலத்தின் மன்னனாக ஆக்கி அழகு பார்த்தவன் - ராஜராஜ சோழன்!..

இந்த உத்தம சோழனே மதுராந்தகன் எனப்பட்டவன்.
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மதுராந்தக ஏரி - இந்த மன்னனின் சாதனை!..



தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படுவது ராஜராஜ சோழன் - ஆட்சி செய்தகாலமே!..


சங்கு சக்ர ரேகைகளுடன் மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவன் - என மக்களால் கொண்டாடப்பட்ட - ராஜராஜ சோழன்,

குடஓலைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சோழ மண்டலத்தின் நிர்வாகத்தினை திறம்பட நடாத்தி -

மும்முடிச்சோழ மண்டலம் முழுமையையும் முறையாக அளந்து - நிலத்தின் தன்மைக்கேற்ப வரிவிதித்து - அதையும் கிராம சபைகளின் மூலமாக தணிக்கை செய்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவன்..



தனது ஆட்சியின் நிகழ்வுகளை மக்களும் எதிர்வரும் சந்ததியினரும்  அறியும் பொருட்டு  ஆக்கி வைத்த கல்வெட்டுகள் மாமன்னனின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கின்றன.. 


தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் ஓலைச்சுவடிகளாகக் கிடந்த -  திருப்பதிகங்களைப் பெரும் முயற்சியால் மீட்டு -

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தேவாரமாகத் தொகுத்தவன் - ராஜராஜ சோழன்!..

மூவர் அருளிய திருப்பதிகங்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மீட்டளித்த அதனால்தான், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன் - எனப் புகழ் கொண்டான்.

மும்முடிச்சோழன், ஜனநாதன், ஜயங்கொண்டான், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், நித்ய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் - என்பன மாமன்னன் ராஜராஜ சோழனின் சிறப்புப்பெயர்களுள் சில!..


சதய விழா - 2014 
மங்கலகரமாக நவராத்திரி வைபவங்கள் தொடர்ந்து நிகழ -
சதயத் திருவிழாவின் இரண்டாம் நாள் - இன்று..

திருக்கோயில் வளாகத்தில் விசாலமாக அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலில் மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

ஓதுவார்களின் திருமுறை அரங்கமும் அப்பர் சுவாமிகள் தேவார குழுவினரின் திருமுறை பாராயணங்களும் கருத்தரங்கமும் - எனத் தொடர்ந்து நிகழ்வுகள்..

மாலையில் பல்வேறு குழுவினரின் நாட்டியாஞ்சலி மற்றும் கலை நிகழ்ச்சிகள்.


நன்றி - தினமணி
இன்று காலையில் திருமுறை வலம். அதன்பின் -

ராஜராஜசோழனின் திருமேனிக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி. 

தொடர்ந்து -
நாற்பத்தெட்டு வகையான மங்கலத் திரவியப் பொருட்களால் ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் சிறப்பு மஹா அபிஷேகம் நிகழ்வுறும்...


அபிஷேகங்கள் நிறைவுற்றதும் சிறப்பான அலங்காரத்துடன் பெருந்தீப வழிபாடு.

மாலைப் பொழுதில் இன்னிசை நிகழ்வுகளும் நாட்டியாஞ்சலி மற்றும் கருத்தரங்கமும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

அந்தி மயங்கும் வேளையில் -
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து தரிசித்து மகிழும் வண்ணம் -

மங்கல இசையுடன் திருக்கயிலாய சிவகண வாத்யங்கள் முழங்க, 
சர்வம் சிவமயம் என - பாரம்பர்ய பறையொலி கூத்தொலி முழங்க,
கைவளை குலுங்க காரிகையர் நிகழ்த்தும் கோலாட்ட கும்மி ஒலி முழங்க - 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்ரீ ப்ரஹந்நாயகி சமேதரராக பெரிய ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருள்வார்.

சதய விழா - 2014 
சதய விழா - 2014 
ராஜராஜ சோழன் உலா
அச்சமயத்தில், எம்பெருமானின் திருக்கோலத்தைத் தரிசித்தவாறே -
ராஜராஜ சோழனும் ராஜவீதிகளில் வலம் வந்தருள்வார்.

திரு உலாவின் போது - நான்கு ராஜவீதிகளிலும் உள்ள திருக்கோயில்களின் சார்பாக - ஈசனும் அம்பிகையும் மாமன்னனும் வரவேற்கப்படுவர்.

ராஜவீதி நெடுகிலும் மாலைகள் சாற்றப்பட்டு மங்கல ஆரத்தி எடுப்பதுடன் - மாமன்னனுக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை செய்து மகிழ்வர்.

இன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

மாமன்னன் ராஜராஜசோழனின் பேர் சொல்லவும் நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்..

மாமன்னனின் சிறப்புகள் எத்தனை எத்தனையோ!..
மீண்டும் வெளியிடப்படவேண்டும்


ராஜராஜ சோழன் வழிநடத்திய கடற்படையின் துணையினைக் கொண்டே - பின்னாளில் ராஜேந்திர சோழன்  கடாரம், ஜாவா, சுமத்ரா -ஆகிய நாடுகளை வென்று புகழ்க் கொடியினை நாட்டினான்.

ராஜராஜனின் கடல் கடந்த போர்களாக ஈழத்தின் மீதும், முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளின் மீதும் தொடுக்கப்பட்ட போர்கள் குறிக்கப் படுகின்றன.

பெரும் சிவபக்தனாக விளங்கினாலும் வைணவ ஆலயங்களையும் புத்த விஹாரங்களையும் எழுப்பிய விவரத்தினை கல்வெட்டுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் கட்டிடக் கலைக்கும் பாரதத்தின் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது - 

தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெருவுடையார் திருக்கோயில்.

வானளாவி நிற்கும் இத்திருக்கோயில் மாமன்னனின் இருபத்தைந்தாம் ஆட்சி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின் கேரளத்தில் படை நடத்தி - காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி எனப்புகழ் கொண்டான். 

கொடுமை மிகுந்த சிங்களர்களிடமிருந்து ஈழ நாட்டைக் கைப்பற்றப்பட்டது. 

சிங்களரை அடக்கியதுடன் கன்னடத்தின் கங்கபாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் மேலைச் சாளுக்கியமும் வேங்கை நாடும் சோழப்பேரரசுக்கு உட்பட்டன. 



ஆண்டுக்கு ஆண்டு அத்தனையையும் பேசிக் கொண்டிருக்கின்றோம்..

அத்தனை சிறப்புகளுக்கும் ஒரே அடையாளத்துக்குள் பொதிந்து கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகளாக அணி கொண்டு விளங்கும் அந்த அடையாளம் -
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பொலிந்து விளங்கும்..

விண் கொண்ட பெருமை எல்லாவற்றையும் தமிழும் தமிழ் மண்ணும் கொண்டு நிற்கும் வண்ணம் செய்த பெருந்தகை - சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்..

பார் கொண்ட பெருமையெல்லாம் ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மாமன்னன்  
சீர் கொண்டு நின்றனன்!..
பெரும்பேர் கொண்டு நின்றனன்!.. 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  

திருவீதி கண்டருளும்  
சிவபாத சேகரனின் பெரும்புகழ் ஓங்குக!..
***

17 கருத்துகள்:

  1. சதய விழா பற்றிய சிறப்பான பகிர்வு. வெளியூரில் இருந்தாலும் மனம் என்னவோ தமிழகத்தில் தான்.....

    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான தகவல்கள் அழகிய படங்களுடன்! நன்றி அய்யா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நேரில் பார்ப்பதைவிட, அதிகமானவற்றைப் பார்த்தோம். அதிக செய்திகளை அறிந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சதயத் திருவிழா பற்றி அறிந்திருக்கவில்லை ஐயா!

    அற்புதமான பதிவும் அழகான படங்களும்!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சதய விழாவினை முன்னிட்டு செய்திகளை வாரி வழங்கியிருக்கிறீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் விழாவிற்குச் சென்றிருந்தீர்களா?..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சதய விழா பற்றி சிறப்பான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அனைத்தும் அழகு ஜி நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஆஹா சதய விழாவும்,,,, ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்,,,,
    தாங்கள் கொஞ்சம் நடையை எட்டிப்போட்டு இருந்தால் இந்த ஆண்டும் சதயவிழாவில் இங்கு இருந்து இருக்கலாம்.
    தாங்கள் பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சதயவிழாவுக்குச் சென்றீர்களா!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..