நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 04, 2015

இளைய மகாமகம்

இன்று மாசிமகம்.

இந்த நன்னாள் - இளைய மகாமகம் என கோயில் நகரம் என குறிக்கப்படும் சிறப்புடன் கும்பகோணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


இந்த விழா ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கும்பேஸ்வரன் திருக்கோயிலில்  கடந்த 23/2 அன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று (3/3) வெகு சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது.

இன்று மகாமகத் திருக்குளத்தில் - மாசி மக தீர்த்தவாரி.



மூர்த்தி, தலம், தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்பு பெற்று விளங்குவது கும்பகோணம்.

இத்திருத்தலத்தின் பெருமைக்கெல்லாம் மூலகாரணம் -
ஸ்ரீ மங்களாம்பிகையுடன் உறையும் ஸ்ரீ கும்பேஸ்வர ஸ்வாமி.

மஹா பிரளயத்தின் போது நான் முகனிடம் ஈசன் வழங்கிய அமுத கும்பம் நிலை கொண்ட தலம்.

கிராத மூர்த்தியாகத் தோன்றிய சிவபெருமான் - பினாக வில்லில் தொடுத்த கணையால் அமுத கும்பம் சிதைந்து அதனுள்ளிருந்து அமிர்தம் நாலாபுறமும் வழிந்தது.

அமிர்தம் பரவியிருந்த மண்ணை - லிங்க வடிவமாகக் குழைத்த பெருமான், சிவசக்தி ரூபமாக அதனுள் கலந்தார்.

அமுத லிங்கமாகப் பொலிந்த ஸ்ரீ கும்பேஸ்வர மூர்த்தியைப் பணிந்த பிரம்மன் சிருஷ்டியைத் தொடங்கினார்.

மஹா பிரளயத்திற்குப் பின் - சிருஷ்டியை இங்கிருந்தே தொடங்கப்பட்டது.


ஈசன் தம்முடைய 36,000 கோடி மந்த்ரசக்திகளை அம்பிகைக்கு வழங்கிய தலம்.

அம்பிகையின் திருமேனியிலிருந்து 36,000 கோடி மந்திரங்கள் வெளிப்பட்டதாகவும் கூறுவர்.

அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை. ஸ்ரீமங்களேஸ்வரி எனவும் போற்றுவர்.

கும்பத்திலிருந்து வழிந்த அமுதம் திரண்டு நின்ற இடமே - மகாமகக் குளம்.

கங்கை, யமுனை, சிந்து, சரயு, காவிரி, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணை - எனும் ஒன்பது நதிகளும் - மக்கள் தம்மிடம் தொலைத்த பாவங்களை - மகாமகத் திருக்குளத்தில் மூழ்கித் தொலைத்ததாக ஐதீகம்.

நதிக்கன்னியர் ஒன்பது பேரும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கின்றனர்..


வியாழ வட்டம் எனப்படும் மகாமகம் இத்திருத்தலத்தின் சிறப்பு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை -
தேவ குருவாகிய ஸ்ரீ பிரகஸ்பதி சிம்ம ராசியில் இருக்க - கும்ப ராசியில்
மக நட்சத்திரத்தில் சூரியனுடன் நிறைநிலவாக சந்திரன் திகழும் நாள்
மகாமக நன்னாள் என குறிக்கப்படுகின்றது.

அந்நாளில் ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ கும்பேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் குருபெயர்ச்சியாகி - ஒரு ராசியில் விளங்க மாசி மாதத்தில் மக தீர்த்தவாரி நடைபெறும்.

அந்தவகையில் இந்த வருடம் - மாசி மக நன்னாள்..

தட்சப் பிரஜாபதியின் மகளாக தாட்சாயணி என வளர்ந்து பெருமானைக் கரம் பிடித்த - அம்பிகை தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றிய நாள் மாசி மகம்.


அடுத்த ஆண்டு (22/2/2016) நிகழ இருக்கும் மகாமகத்திற்கு முன்னதாக இன்று நிகழும் மாசி மகத்தையே - இளைய மகாமகம் என குறிக்கின்றனர்.

ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயிலின் பழைமையான ஐந்து தேர்களும் பழுதாகி 1988- ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓடாமல் இருந்தன. பக்தர்களின் பெருமுயற்சியால் ஐந்து தேர்களும் 2002 - ல் புதுப்பிக்கப்பட்டன.

அதன் பின் வருடாவருடம் சிறப்புடன் தேரோட்டமும் மகாமகக் திருக்குளக்கரையில் தீர்த்தவாரியும் சிறப்புடன் நிகழ்கின்றது.


மகாமகக் குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவை உடையது.
குளத்தினுள் ஒன்பது கிணறுகள் அமைந்துள்ளன.

மகாமகத்துக்கு முன்பாக குளத்திலுள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்ட நிலையில் கிணறுகளைக் காணலாம்.

சோழர்களுக்குப் பிறகு தஞ்சை விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்தது. 

அப்போது - தஞ்சையை ஆட்சி புரிந்த மன்னர் சேவப்ப நாயக்கர் (1532 - 1560). 

சேவப்ப நாயக்கரிடம் முதலமைச்சராக திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர்.

திருவண்ணாமலை, விருத்தாசலம், கும்பகோணம், பட்டீஸ்வரம் மற்றும் பல தலங்களில் திருப்பணிகள் பலவற்றைச் செய்தவர் -  கோவிந்த தீட்சிதர். 

அற நூல்களில் கூறப்பட்டுள்ள அனைத்து தர்மங்களையும் செய்தவராக கோவிந்த தீட்சிதர் போற்றப்படுகின்றார்.

இவரது சிறப்பான சேவைக்காக மன்னர் எடைக்கு எடை பொன் தந்து பாராட்டினார். 

தானமாகக் கிடைத்த பொன்னையும், பொருளையும் கொண்டு கி.பி.1542-ல் சாதாரணமாக இருந்த மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு சிவ சந்நிதிகளை முன்மண்டபங்களுடன் எழுப்பினார்.   

அத்துடன் படிக்கட்டுகளையும் புதிதாக நிர்மாணம் செய்தார்.

இன்று நாம் காணும் மகாமகத் திருக்குளத்தை வடிவமைத்தவர் - இவரே!..

கோவிந்த தீட்சிதரின் திருவடிவம் கும்பேஸ்வரன் திருக்கோயிலில் வடிக்கப்பட்டுள்ளது

மாசி மகம் - 1921
மாசிப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 23/2 அன்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

அன்றைய தினமே -
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ அபிமுகேஸ்வரன் திருக்கோயில்,
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்,
ஸ்ரீ கௌதமேஸ்வரர் திருக்கோயில் - மற்றும்
ஸ்ரீ பாணபுரேசர் திருக்கோயில்களிலும் திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

விழா நாட்களில் சேஷம், கமலம், பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம்,  கைலாசம், குதிரை -  என பல்வேறு வாகனங்களிலும் ஓலைச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெற்றது. 

நேற்று (3/3) காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து - அம்பிகையும் ஈசனும் வெள்ளி ரிஷப வாகனராக திருத்தேரில் எழுந்தருள ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஆரவாரத்துடன் வடம் பிடித்து திருத்தேர்களை இழுத்து நிலைப்படுத்தினர்.


இன்று பகல் 10.36 மணிக்கு மேல் 12.25க்குள் ரிஷப லக்னத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் மங்களாம்பிகையுடன் ஸ்ரீகும்பேஸ்வரர் வீற்றிருக்க மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது.

தீர்த்தவாரியின் போது அனைத்து சிவாலயங்களில் இருந்தும் வைணவ திருக் கோயில்களில் இருந்தும் உற்சவத்திருமேனிகள் வாகனங்களில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

அம்பிகையும் பெருமானும் வெள்ளி ரதத்தில் எழுந்தருள - நாளை மறு தினம் (6/3) விடையாற்றி நடைபெறுகின்றது. 

ஞானசம்பந்தப்பெருமானும் அப்பர் பெருமானும் அருணகிரிநாதரும் பாடிப் பரவிய திருத்தலம்.

புறந்தூய்மை நீரால் அமையும்!.. என்று அருள்பவர் வள்ளுவப்பெருந்தகை.

அந்த வகையில் அகந்தூய்மையும்
நீரால் - நீராடலால் அமையட்டும்.

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கையா யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாளுறையுங் குடமூக்கிலே!.. (5/22)
- : அப்பர் பெருமான் :-

திருச்சிற்றம்பலம்.
* * *

22 கருத்துகள்:

  1. கோவிந்த தீட்சிதரின் அரும்பெரும் தொன்டினை அறிந்தேன். பெரம்பலுர் மாவட்டம் குன்னம் எனும் ஊரில் உள்ள மகாமக குளமும் இதே சிறப்புக்குரியது என்று கேள்விப்பட்டேன். அதன் வரலாறு கும்பகோணம் குளத்துடன் தொடர்புடையது என்று. அருமையான, காலத்தின் கண் முகிழ்த்த பதிவு.வரும் மகாமகமும் அனைவருக்கும் நலம் விழைவிக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..

      தங்கள் கூறும் பெரம்பலூர் - குன்னம் பற்றி நான் அறிந்ததில்லை. கூடுதல் தகவல் தந்ததற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பழைய மகாமக குளம் படம், இப்போது உள்ள படம் , மற்றும் இளையமகாமக விவரங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று மாசி மக தரிசனம் செய்தாயிற்றா!..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..

      நீக்கு
  3. பழையதும், புதியதும் அருமையான படங்களுடன் விளக்கமான விடயங்கள் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. இளைய மகா மகம் குறித்தும், அடுத்த வருடம் வருகிற மகாமகத்தைப்பற்றியும் தேதியுடனும், மகாமகக் குளத்தின் வரலாற்றையும் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சென்ற வருடம் மாசி மகத்தன்று ஊரில் இருந்தேன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அடுத்த வருடம் உட்பட அனைத்து தகவல்களும் அருமை ஐயா... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருக.. வருக.. தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பழைய புதிய படங்களுடன் அருமையான பதிவு.
    நாளை 6 ஆம் தேதி என்னுடைய ப்ளாக் 3rd Anniversary அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் எனது வலைப்பூவுக்கு கண்டிப்பாக வருகை தாருங்கள். Advnce Thanks Sir

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அசோகா (அல்வா) எங்க ஊர் இனிப்பு அல்லவா!..
      கண்டிப்பாக வருவேன்..
      வருகை தந்து அழைத்தற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தங்களது பதிவைக் கண்டோம். நெகிழ்ச்சியுள்ளோம். 3.3.2015 அன்று கும்பகோணம் இளையமகாமகத்தையொட்டி நடைபெற்ற தேரோட்ட விழாவிற்கு நானும் என் மனைவியும் சென்றோம். கடந்த மகாமகத்திற்குப் பிறகு ஒரே நாளில் கும்பகோணத்தில் பல கோயில்களைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைந்தோம். தேரோட்டம் காணச்சென்றது பற்றிய எங்களது பதிவைக் காண எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன். வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் பதிவில் தேரோட்டம் தரிசனம் செய்து விட்டுத் தான் வருகின்றேன்..

      தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க்ழ் மகிழ்ச்சி..

      நீக்கு
  8. கடந்த மகா மகத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பிறகு நீர் மிகக் குறைவாய் இருந்த நேரம் என் பேரக் குழந்தைகளுடன் அந்த ஒன்பது கிணறுகளைக் கண்டு களித்த நினைவை மீட்டுவிட்டது இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வருகை தந்து - தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நல்ல படங்கள்.....

    தகவல்களுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      வலைச்சரத்தில் அறிமுக செய்தியினை -
      தளத்தில் அளித்தமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  11. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தமிழுக்குள் எம்மையும் இணைத்து அறிமுகம் செய்வித்த
      அன்பின் யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி...

      இன்றைய தொகுப்பில் தொடுக்கப்பட்ட - தமிழ் மலர்கள் அனைவருக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..