நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 17, 2013

திருக்கார்த்திகை

தட்சிணாயணத்தின் ஐந்தாவது மாதம். கால கதியில் எட்டாவது மாதம்.

அடியும் முடியும் அறிய இயலாத அகண்ட ஜோதிப் பிழம்பாக - எல்லாம் வல்ல பரம் பொருளாகிய சிவபெருமான் விளங்கியது கார்த்திகையில் என்று சைவ சமயம் போற்றிப் புகழ்கின்றது.  


முழுநிலவும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்து வரும் நாளே திருக்கார்த்திகைத் திருநாள்.

இந்த புண்ணிய நாளில் - முழுநிலவு உதித்து எழும் வேளையில், தத்தம் இல்லங்களில்  - ஒளிமயமான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆராதிப்பது தமிழர்களின் வழக்கம்.

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (Tks. wikipedia)
இறைவன் ஒளி மயமானவன். ஒளி மயமான இறைவனை ஒளி கொண்டு வணங்குவது எல்லா மங்கலங்களையும் தரவல்லது என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். 


இன்று அதிகாலையில் திரு அண்ணாமலையில் - மகா பரணி தீபம்  ஏற்றப் பட்ட நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கின்றது. 


லட்சோபலட்சம் பக்தர்கள் குழுமியிருக்க - இன்று ஒரு பொழுது மட்டுமே - அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து ஆனந்த நடனத்துடன்  காட்சியளிப்பார்.

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!..

- என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுவதும் அதனால் தானே!.. 

ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கட்டி எழுப்பிய மாமன்னர்கள் - அத்திருக்கோயில்களில் தீபங்கள் நின்றெரிய பற்பல கட்டளைகளையும் செவ்வனே செய்திருக்கின்றனர் எனில் அதன் சிறப்பு தான் என்னே!..


எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் திருக்கோயில்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தின் தலைவாசலிலும் - வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிப்பதும் மங்கல மரபாகும். 

கிராமங்களில் - வீட்டின் தலைவாசலில் தீபம் ஏற்றுவதோடு நில்லாமல் மாட்டுத் தொழுவத்திலும், பின்புறம் உள்ள குப்பை மேடு அல்லது உரக்குழியிலும் தீபம் ஏற்றி வைப்பார்கள். 

நாகரிகம் முற்றிப் போனதால் - நகரங்களில் கட்டப்படும் நவீன வீடுகளில் - தலைவாசல் நிலையின் இருபுறமும் மாடப் பிறைகள் கூட அமைக்கப்படுவது இல்லை.


திருக்கார்த்திகை தீப ஆராதனையானது - அனைத்து மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். பொதுவாக வீட்டில் விளக்கேற்றுவதற்கு சில சிறப்பான நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நடந்தாலே - துன்பங்களின் தாக்கம் குறையும் என்பது திருவாக்கு!..

பூஜை அறையில் அல்லது மாடத்தில் - தெய்வத் திரு வுருவங்கள் இருந்தாலும் சரி!.. அழகிய சித்திரங்கள் இருந்தாலும் சரி!.. நடுநாயகமாக ஒரு விளக்கு இருக்க வேண்டியது அவசியம். 

எவர்சில்வர் மற்றும் பீங்கான் - விளக்குகளைத் தவிர்க்கவும்.

விளக்கினைச் சுத்தம் செய்து - சந்தனம், குங்குமம், பூச்சரம் சூட்டி - கிழக்கு முகமாக வைத்து நல்லெண்ணெய் நிரப்பி, வெள்ளைத் திரியை இட்டு சுடர் ஏற்ற வேண்டும். சுடர் ஏற்றிய பின் - அணையாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


பூஜை நேரத்தில் இந்த சுடரில் இருந்து வேறு எதையும் ஏற்றக் கூடாது. கற்பூரம் ஏற்றுவதானால் கூட வேறு ஒரு விளக்கில் இருந்து தான் ஏற்றவேண்டும். 

ஏனெனில்  - நடுநாயக விளக்கு மூலஸ்தான மூர்த்திக்கு ஒப்பானது. 

திருவிளக்கின் பிரதான சுடர் கிழக்கு முகமாக ஜொலிக்கும் போது நாம் வடக்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.


சூரியோதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்திலும் (4.30 - 6.00) அந்தி மாலையில் நித்ய பிரதோஷ வேளையிலும் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.  இவ்வேளையில் தீபமேற்றினால் லக்ஷ்மி கடாட்க்ஷம் கிட்டும் என்பது ஐதீகம். 

ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும்,  அந்தி மயங்கும் மாலை வேளையில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். 

விளக்கை குளிர்விக்கும் போது எக்காரணம் கொண்டும் வாயால் ஊதக் கூடாது. கையை விசிறி போல் வீசி - அணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்க வேண்டும். அல்லது தூண்டும் குச்சி கொண்டு திரியை எண்ணெய்யில் அழுத்தி குளிர்விக்க வேண்டும். 


வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் முன்  விளக்கின் எட்டு இடத்தில் திலகம் சூட்ட  வேண்டும் என்பது மரபு. அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. திருவிளக்கினை - தீபலக்ஷ்மி என்று போற்றுவதே நமது பாரம்பர்யம். 

எனவே ஆதிலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி , வித்யா லக்ஷ்மி , தன லக்ஷ்மி , தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி , வீர லக்ஷ்மி , விஜய லக்ஷ்மி  - என தியானித்து திலகம் இடவேண்டும். இதனால், வீட்டில் அல்லல் அகன்று ஐஸ்வர்யம் பெருகும். 

எட்டு திலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களுடன் சூரியன், சந்திரன் மற்றும் ஆத்மா என்பனவற்றைக் குறிப்பவை - என்றும் கூறுவர். 

தற்போது  வெளியிடப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் என்பனவற்றில் -

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு என்ன பலன்?
எந்த எந்த திசைக்கு - என்ன என்ன பலன்?
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய எண்ணெய்!

என்றெல்லாம் எழுதப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஓரமாக ஒதுக்கித் தள்ளுங்கள். 

விளக்கிற்கு - பசு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இம்மூன்று மட்டுமே உகந்தவை.


தீபங்களின் ஒளி - மனதில் சஞ்சலத்தை நீக்கும். தீப ஒளியினைக் கூர்ந்து நோக்கி - பின் அதை அப்படியே நெற்றியில் தியானிக்க - அற்புதமான காட்சிகளைத் தரிசிக்கலாம்.

சுபம் கரோதி கல்யாணம் ஆயுர் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே..

மங்கலகரமான சுபகாரியங்கள் தடையின்றி நடக்கவும், உடல் நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும், புத்தியில் இருக்கும் இருள் விலகவும் ஜோதி வடிவான தீபலட்சுமியே!.. - உன்னைத் துதிக்கிறேன்!.. 

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகி சிந்தை இடுதிரியா - என்புருகி 
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு 
ஞானத்தமிழ் புரிந்த நான்!.. 

- என்பது பூதத்தாழ்வார் அருளிய திருப்பாசுரம்.


''தீப மங்கல ஜோதி நமோ நம!..'' - என்று அருணகிரி நாதர் முருகனைப் புகழ்கின்றார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு!.. 

- என்பது ஐயன் திருவள்ளுவப் பெருமானின் திருவாக்கு.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..

- என்பது வள்ளலார் ஸ்வாமிகளின் அருள் வாக்கு.


பன்னிரு திருமுறைகளில் எம்பெருமானை ஜோதிவடிவாகக் கண்டு தொழும் திருப்பாடல்கள் ஏராளம்.

அவற்றுள்  ஒன்றாக - திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தின்  இனிய பாடல்!..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..

விளக்கேற்றுவோம்!..
இல்லத்திலும் உள்ளத்திலும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள் ஐயா... இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
      அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  3. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
      அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  4. அழகான படங்களுடன் மன நிறைவான பகிர்வு. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
      அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. அழகான படங்களுடன் அருமையான பதிவு.
    கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!..
      அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  6. ஜோதி மயமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வரவு கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..