நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 04, 2013

குபேர யாகம்

தஞ்சை மாநகரிலிருந்து - கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் உடனாகிய ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (3/11-ஞாயிறு) மாலை வெகு சிறப்புடன் ஸ்ரீமஹா குபேர யாகம் நிகழ்ந்தது.


மிகப் பழைமை வாய்ந்த இத்திருக்கோயில் மேற்கு நோக்கிய திருத்தலம். 

பராசர முனிவரும் , ரோமரிஷியும், வசிஷ்டரும், கோரக்க சித்தரும், கொங்கண சித்தரும், சிவவாக்கிய சித்தரும் வழிபட்ட திருத்தலம். 

பின்னாளில்,

அருள்தரு கருவூரார்
சித்தர் கருவூராரும், மகான் சதாசிவப்ரமேந்திரரும், ஸ்ரீ ராகவேந்திரரும் - திருப்பதங்கள் பதிய நடந்த திருத்தலம் - தஞ்சபுரி.

அத்துடன், செல்வ செழிப்பினை நல்கும் ஸ்ரீ குபேரன் வணங்கி வழிபட்டு தன் இன்னல்கள் தீரப்பெற்ற - திருத்தலம். அதனால் இத் திருத்தலத்திற்கு, அளகாபுரி எனவும் ஒரு பெயர் உண்டு.

தஞ்சபுரி என்றும் அளகாபுரி என்றும் இங்கே குறிப்பிடப்படும் திருத்தலமே - இன்றைய நாளில், தஞ்சாவூர் என அழைக்கப்படுகின்றது.

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்
இங்கே குறிப்பிடப்படும் -  ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் -  கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து - திருவையாறு, திருக் காட்டுப்பள்ளி, ஐயம்பேட்டை - ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் கோயிலின் அருகில் நின்று செல்லுகின்றன.

அரியலூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து தஞ்சைக்கு வருபவர்கள் - வெண்ணாற்றுப் பாலத்தைக் கடந்து (அரை கி.மீ. தொலைவில்) தஞ்சை மாமணிக் கோயில்கள் எனப்படும் பெருமாள் கோயில்களைக் கண்ணாரக் கண்டு வணங்கியபடி - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.


சிவபெருமானை வணங்கி வரங்களைப் பெற்ற இராவணன், ஆணவங் கொண்டு,

வடதிசைக்கு அதிபதியாக - சங்கநிதி, பத்மநிதி மற்றும் புஷ்பக விமானம் இவற்றுடன் விளங்கிய குபேரனிடமிருந்து - அவற்றை அபகரித்துக் கொண்டான். அத்துடன் இல்லாமல் அவனது நகரான அளகாபுரியில் இருந்தும் குபேரனை விரட்டியடித்து விட்டான்.

இத்தனைக்கும், குபேரன் - இராவணனின் சகோதரன். 

இதனால் மனம் வருந்திய குபேரனைக் கண்டு இரங்கிய மாமுனிவர்கள் சிவவழிபாடு செய்யும்படி அறிவுறுத்தி வழிகாட்டினர். அதன் பல தலங்களுக்கும் குபேரன் சென்று ஈசனை வழிபட்டான். 

அப்படி வழிபட்டு வருங்கால் -  பராசர முனிவரின் துயரம் தீர்த்ததும் - தஞ்சகன் எனும் கொடியவனிடம் இருந்து மீள வேண்டி தேவர்கள் இறைவனைத் தஞ்சம் அடைந்ததும் ஆகிய, 

பராசர க்ஷேத்திரம் என வழங்கப்பட்ட தஞ்சபுரிக்கு வந்தடைந்தான். 

கருணையே வடிவான ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகையையும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வர ஸ்வாமியையும் கண்ணாரக் கண்டு வணங்கினான். நாளும் நறுமலர் கொண்டு வழிபட்டு மெய்யுருகி நின்றான்.

காலம் கனிந்தது. 

தஞ்சபுரீஸ்வரராகிய எம்பெருமானும் ஆனந்தவல்லியாகிய அம்பிகையும் குபேரனின் தவங்கண்டு மனம் இரங்கி ப்ரத்யட்சமாகினர்.


அந்த அளவில் -  குபேரன் அனுபவித்து வந்த துன்பங்கள் எல்லாம்,  தவிடு பொடியாகின. அனைத்துப் பெருமைகளும் குபேரனுக்கு அருளப்பட்டன. 

ஈசனின் முன்னிலையில் - யட்சர்களுக்குத் தலைவனாகவும், வடதிசைக்கு அதிபதியாகவும்  மீண்டும் முடி சூட்டப்பட்டான்.  இத்தனையும் நிகழ்ந்தது - துலா மாதமாகிய ஐப்பசியின் அமாவாசை தினத்தில் என்பது ஐதீகம். 

வாழும் உலகில் பொன் பொருள் மீது நாட்டம் இல்லாதார் யார்!.. 

இருப்பவரும் நாட, இல்லாதவரும் தேட - செல்வமோ ஓரிடத்தில் நில்லாது உருண்டோடிக் கொண்டிருக்கின்றது!.. 

மஹாலக்ஷ்மியின் திருவருள் பெருக்கினால் - குபேரனைப் போல் வாழ எல்லாருக்குமே ஆசைதான்!..

ஆனால் - நிலவுலகில் நில்லாத செல்வம்  - யாரிடத்தில் நின்று நிலைக்கும்?..

சாம கானம் பாடி - இறைவனை மகிழ்வித்து மகத்தான வரம் பல பெற்று வந்த-  ராவணன்  நிலைகெட்டழியக் காரணம் அவன் கொண்ட பெண்ணாசை!..

நிலமகளின் மகனாகத் தோன்றியும் - நிலைத்து வாழ முடியாமல் - அவள் கையாலேயே வதம் செய்யப்பட்டு, நரகாசுரன் மண்ணில் விழக் காரணம் - அவன் கொண்ட மண்ணாசை!..

ஆசைகளை வென்றவரிடத்தில் தான்  - ஐஸ்வர்யம் நின்று நிலைக்கும்!..

குபேரன் வீழ்ந்ததைக் கண்டு சிரித்து மகிழ்ந்த இராவணன் - குபேரன் மீண்டும் எழுந்தபோது சிந்திக்க மறந்தான்!.. 

நேர்மையான வழியில் சென்றும் - ஒருவன் பொன்னையும் பொருளையும் இழக்க நேர்ந்தால் - அவனை ஈசனே முன்வந்து கை கொடுத்து தூக்கி விடுவான் என்பதே  - ஸ்ரீ குபேரன் வ்ரலாற்றில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள்!.. 

தகாத வழியில் பொருளைச் சேர்த்து உயர்ந்த நிலையில் இருப்பவரை - இன்றைய உலகம் காண்கின்றது. ஆயினும் தரமற்ற செல்வம் - தலை குனிய வைத்து விடும் என்பதே சத்தியம்.


தன்னலம் பேராசை - எனும் குணங்களை வதம் செய்து விட்டால் - குபேரனே - நேரில் வந்து நம்முடய நல்விருப்பங்களை நிறைவேற்றி அருள்வார்.

குபேர யாகம் செய்தால் அல்லது யாகத்தைத் தரிசித்தால் - வற்றாத செல்வ வளத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு அமாவாசையிலும்  குபேர யாகமும் அபிஷேகமும் ஆராதனையும் சிறப்பாக நடைபெறுகின்றது. எனினும் ஐப்பசி அமாவாசையன்று நிகழும் மஹா குபேர யாகம் விசேஷமானது.

இந்த அடிப்படையில் நேற்று தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடத்தப்பெற்ற மஹா குபேர யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை - இங்கு பதிவிட்டுள்ளேன்!..

ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ கல்யாணமுருகன்
வலஞ்சுழித்து எழும் யாக அக்னி
ஸ்ரீ கலசம்

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் சந்நிதி

ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீ குபேரன்
கற்பூர ஆரத்தி
மூன்றாண்டுகளுக்குப் பின் - இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது.

நமது அன்பர்கள் அனைவரது நலத்திற்கும் வளத்திற்கும் மனதார வேண்டிக் கொண்டேன்.

மனம் நிறைவாக இருந்தது.

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமா ய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

சங்கநிதி, பத்மநிதி சகித, 
ஸ்ரீ சித்ரலேகா சமேத ஸ்ரீ குபேர மூர்த்தியின் 
திருவருள் பெற்று அனைவரும் 
நல் வாழ்வு வாழ்வோமாக!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. அழகான படங்கள், அருமையான விளக்கங்கள்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. தஞ்சைவாசியாக இருந்ந்தாலும் இந்தக்கோவிலுக்கு சென்றதில்லை.

    குபேர யாகம் நடத்த நிகழ்ச்சியை கண்முன்னே காண்பது போன்று இருந்தது.

    அடுத்த முறை வரும்பொழுது செல்லவேண்டும்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. மீண்டும் மீண்டும் இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புத்
    தகளுக்குக் கிட்டிட வேண்டும் என்று வாழ்த்தி வணகுகின்றேன் ஐயா .
    மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. சிறந்த பதிவு. இக்கோயில் தஞ்சையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
    பகிர்வுக்கு மிக்க நன்றி.
    நடராஜன் பரமசிவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      திருக்கோயிலுக்குச் செல்லும் வழியினை - இந்தப் பதிவில், மீண்டும் விவரமாகக் குறித்துள்ளேன்.

      நீக்கு
  5. சிறந்த பதிவு. இக்கோயில் தஞ்சையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?
    பகிர்வுக்கு மிக்க நன்றி.
    நடராஜன் பரமசிவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      பதிவில் குறித்தபடி - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரரைத் தரிசிக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.

      நீக்கு
  6. சிறப்பான யாகப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தாங்கள் வருகை தந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..