நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

தை வெள்ளி - 04

ஸ்ரீதுர்கை, பட்டீஸ்வரம்.
சக்தி வழிபாடு என்பது நம் மண்ணில் வேரூன்றிய ஒன்று. சக்தி என்பவள் எல்லாவற்றையும்  கடந்த மகாசக்தியாக, பராசக்தியாக போற்றப்படுவள். அவளே பக்தி, ஞானம்,அமைதி, கோபம்,  பசி, தாகம், இன்பம், துன்பம், ஒளி, இருள் - என எல்லாவற்றிலும் விரவி நிற்பதாக - எல்லா படைப்புகளிலும் தாயாக நின்று அன்புடன் அரவணைத்துக் காப்பதாக சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர். 

பராசக்தி தத்துவம் பன்னெடுங்காலமாக பாரதத்தில் நிலைத்துள்ள ஒன்று. ''சக்தி இல்லையேல் சிவம் இல்லை -  சிவம் இல்லையேல்  சக்தி இல்லை'' என்று இணைத்து  ஆணையும் பெண்ணையும் சரிபாதியாக நிலை நிறுத்தியதே அதன் உச்சம்.

காஞ்சியில் காமாட்சி, மதுரையில் மீனாட்சி, காசியில் விசாலாட்சி, குமரியில் கன்னி, தில்லையில் சிவகாம சுந்தரி - என  எங்கெங்கும் அம்பிகை கொலு வீற்றிருக்கின்றாள்.
ஸ்ரீவடபத்ரகாளி, தஞ்சை.
ஒரு புறம் கோபாக்னி வீச கொடுமைகளை வேரறுக்கும் மகாகாளி எனில் மறுபுறம் சிம்ம வாஹினியாய் சீறிச் சினந்து சிறுமைகளைச் சிதறடிக்கும் ஸ்ரீதுர்க்கை என அம்பிகை நம்முடன் துணைக்கு வருகின்றாள்.

இவற்றையும் தாண்டி - மற்றொரு அம்சமாக - தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும்   எதிரொலிக்கும் திருப்பெயர் - மாரியம்மன். 

தமிழகத்தில் மாரியம்மன் திருக்கோயில் இல்லாத ஊரும் உண்டோ!.....

சமயபுரத்தில், தஞ்சையில், மதுரையில், திருவேற்காட்டில், திண்டுக்கல்லில், காரைக்குடியில், பட்டுக்கோட்டையில், பன்னாரியில், பெரியபாளையத்தில், சேலத்தில், ஈரோட்டில், மருவத்தூரில் - திசையெங்கும் அன்னை மாரியின் திருக்கோயில்கள்.
ஸ்ரீமாரியம்மன், புன்னைநல்லூர், தஞ்சை.
மக்களின் பிணிகளைப் போக்குவதில் அவளுக்கு ஈடு இணை கிடையாது. நோயுற்ற மக்கள் மாரியம்மனின் திருக்கோயில்களில் தங்கி - நலம் பெறுவது இன்றளவும் கண்கூடு. வேப்பிலையும் மஞ்சளும் எலுமிச்சையும் அவளுடைய புனித அடையாளங்கள்.

வழக்கமான திருவிழாக்கள் ஒருபுறம் இருந்தாலும் - கிராமங்களிலும், நகரங்களிலும் - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் மாரியம்மனுக்கு சிறப்பாக, அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள் - தை வெள்ளிக் கிழமை.

இயன்றவரை திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கி வழிபட்டாலும் , நாம் குடியிருக்கும் வீடு விளங்க - வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு  வருவதாகும். 

தினமும் காலை, மாலை வேளைகளில் திருவிளக்கில் நல்லெண்ணெய்  ஊற்றி  சுத்தமான வெள்ளை நூல் இழைகளால் திரியிட்டு தீபமேற்றி - சிவப்பு நிற மலர்களைச் சூட்டி,  "பாயஸன்ன ப்ரியை"   - என அன்புடன் அழைக்கப் படும் அன்னைக்கு, பால் பாயசத்துடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக சமர்ப்பித்து மஹிஷாசுரமர்த்தனி ஸ்தோத்திரம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி - என இயன்றவரை தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.

செவ்வாய், வெள்ளி - இரு தினங்களும் அம்பிகை வழிபாட்டுக்கு ஏற்றவை. பிரத்யேக பிரார்த்தனை எனில் ஞாயிறு உகந்தது.

ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகளில் திருக்கோயில்கள் தோறும் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. கன்னியரும் சுமங்கலிகளும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் திருவிளக்கினை அம்பிகையாக வணங்கி குங்குமம் மலர்களால் தாமே அர்ச்சனை செய்து பெரும்பேறு எய்துகின்றனர்.

அம்பிகை - '' நம் வாழ்வின் துன்ப இருளை அகற்றி, இன்ப ஒளியினைப் பெருக்கும் திருவிளக்காகி  சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றாள் '' - என்பதே திருவிளக்கு பூஜையின் தத்துவம். 

"அம்பிகையைச்  சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்..." என்பது மகாகவி பாரதியாரின் திருவாக்கு.

"முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..." என்கின்றார் அபிராமி பட்டர்.

'' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ''

'' எல்லா உயிர்களிலும் சக்தி வடிவாக நிறைந்திருக்கின்ற தேவி அவளுக்கு எங்கள் வணக்கம்...'' - என்று பணிந்து புகழ்வது தேவி மஹாத்மியம்.

அம்பிகையைச் சரணடைவோம்!... அதிக நலம் பெறுவோம்!...
திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..