நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருஆனைக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருஆனைக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

ஸ்ரீஜம்புகேஸ்வரர்

நாவல் மரங்கள் அடர்ந்து விளங்கும் அழகான வனம்!.. 

அம்பிகை - காவிரி நீரை சிவலிங்கமாகத் திரட்டி வழிபட்ட புண்ணிய தலம்!..

ஸ்ரீஜம்புகேஸ்வரம்!..


''ஓம்'' எனும் மந்த்ரத்தின் அதிர்வினை அன்றி, அந்த வனத்தினுள் வேறு எந்த ஒலியும்  இல்லை.

உலர்ந்த இலைகளும் சருகுகளாய் - ஓசையின்றி உதிர -  சின்னஞ்சிறு பறவைகள் கண்களால் பேசிக் களித்துக் கொண்டிருந்தன!.. 

நான்முகனின் தவத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என!..
 
அதோ.. அந்த நாவல் மரத்தின் கீழ் - சிவபூஜை செய்து கொண்டிருக்கும் நான்முகனின் பிழை தீரும் நேரமும் வந்தது!.. 

பெரும் ஜோதிப் பிழம்பு - தன்னை சுற்றிச் சூழ்வதை உணர்ந்த நான்முகன் மெல்ல கண் விழித்தார். 

அழகு பொங்கித் ததும்பும் பருவ வயதினராக, இளந்தம்பதியராக - சர்வேஸ்வரனும் தேவியும் புன்னகையுடன் தன் எதிரே திகழ்வதைக் கண்டு நான்முகனின் கண்கள் கசிந்தன!..


பெண்ணின் நல்லாளொடு தன் பொருட்டு - எழுந்தருளிய பெருமானைப் போற்றி வணங்கினார்.  

''..என் பிழை பொறுத்தருளிய பெருமானே!.. இன்னும் என் மீது ஐயமா?.. திசைக்கு ஒன்றென முகம்  இருந்தும் என் சிந்தை திருகலானது. அதனால் மனம் கருகலானது. அந்தப் பிழை தீர வேண்டும் என நான் இழைத்த தவம் கண்டு இரங்கி வந்த எம்பெருமானே!.. இன்னும் என் மீது சந்தேகமா?.. ''

''..பூங்கணை தொடுத்த மன்மதன் பொடியாகிப் போனதை அறிந்தும் பிழை புரிவேனா?..''

''..கருத்தழிந்த கண்களின் காமக் கசடறுத்து என்னைக் கரையேற்ற வந்த கருணைக் கடலே - இனியும் நான் காமுறுவேனா?..''

''..படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்லறிவை எனக்குப் புகட்டிய ஞானமூர்த்தி!.. இனியும் பிழை செய்வேனோ!.. பிழை செய்தால்  - நானும் நன்றாய் உய்வேனோ!..''

''..இனியும் என்னைச் சோதிக்காமல் - தேவனும் தேவியும் - திவ்ய மங்கள திருக்கோலத்தினைக் காட்டியருள்வீராக!..''

- என,  அழுது தொழுது - அகம் கசிந்து நின்றார். அந்த அளவில் - 


அம்பிகை ரூபமாக வந்த ஸ்வாமியும் ஐயனின் ரூபமாக வந்த அம்பிகையும் - நான்முகனின் மனம் குளிரும்படி திருக்காட்சி நல்கினர்.

திலோத்தமையின் அழகைக் கண்டு - இமைப்பொழுது நிலை மறந்த நான்முகனின் மனம் - வனாந்தரத்தில் வாடி வதங்கி தனித்துக் கிடந்த போது பக்குவம் அடைந்ததா!.. அல்லது மேலும் பாழ்பட்டுப் போனதா!.. என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவே - ஐயனும் அம்பிகையும் இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினர்.

''உள்ளத்தால் உள்ளலும் தீதே!..'' - என்பதை உணராத நான்முகனின்  பிழை - உலகோர்க்குப் பாடமாக அமைந்தது.

அதன் பின்  -  ஈசனுக்கும் அம்பிகைக்கும் பெருந்திருவிழா ஒன்றினை நடத்தி - பிரம்மன் பேறு பெற்றார்.


இன்றும் திருஆனைக்காவில் - பிரம்மோத்சவ பெருந்திருவிழாவில் - ஐயனும் அம்பிகையும் - பிரம்ம தீர்த்தக் கரையினில் - பிரம்மனுக்கு  காட்சி தரும் வேளையில் மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை. 

மேலும் அம்பிகை - நித்ய கன்னியாக, ஈசனின் முன் அமர்ந்து போகத்திற்கும் யோகத்திற்கும் விளக்கம் கேட்ட தலம் ஆனதால் - இத்திருத்தலத்தில் திருக்கல்யாண வைபவம் கிடையாது. 

திருஆனைக்கா - ஞான க்ஷேத்திரம் ஆனபடியால் தான் - யானை, சிலந்தி என - சிந்திப்போர் எவரானாலும் அவர் சிந்தையுள்  ஜோதியாக -  சிவம் திகழ்ந்தது.

தலவிருட்சம் நாவல் மரம். பிரம்ம தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , சம்பு தீர்த்தம் , ராம தீர்த்தம் , ஸ்ரீமத் தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சோம தீர்த்தம் - என நவதீர்த்தங்கள்.  ஆடி மற்றும் தை  மாதங்களில் - என இரண்டு முறை தெப்ப உற்சவம் நிகழ்கின்றது.


வைகாசியில் வசந்தவிழா. ஆடியில் ஆடிப்பூரமும்  சூர்ய தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நிகழும். புரட்டாசியில் நவராத்திரி. தை மாதம் ராம தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் பெளர்ணமியில் நவ தீர்த்தங்களில் தீர்த்தவாரியும் நிகழும். மாசியில் தேர்த் திருவிழா. பங்குனியில் பிரம்மோற்சவம்.

ஒரு முறை உறையூர் சோழ மன்னர் காவிரியில் நீராடும் போது - அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரத்ன மாலை கழுத்திலிருந்து நழுவி நீரில் விழுந்தது. அதிர்ச்சி அடைந்த மன்னர் - ''இஃது இறைவர்க்கு ஆகுக!..'' என்றார்.  

இதன்பின் சில தினங்கள் கழித்து திருஆனைக்கா சென்றார் மன்னர். சந்நிதியில் சிவதரிசனம் செய்த போது மன்னருக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் மேலிட்டது!.. 


ஏனெனில் - அன்று நீராடும் போது தவறி விழுந்த ரத்ன மாலையுடன்  ஸ்ரீஜம்புகேஸ்வரன்!.. 

வேந்தன் நடந்தவற்றைக் கூறி விவரம் கேட்டார்.  சிவாச்சார்யர்கள் கூறினர் - ''..காவிரி நீரை  அபிஷேகம் செய்த போது குடத்து நீருடன்  - ஈசனின் திருமேனியில் விழுந்தது!..'' - என்பதை.

மன்னன் நீராடும் போது கழன்று விழுந்த ரத்ன மாலையினை திருமஞ்சன குடத்து  நீரின்  -  மூலமாக ஈசன் ஏற்றுக் கொண்டருளியதை   - 

திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் தேவாரத்தில் பாடியருள்கின்றனர். 

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத் 
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான் 
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர் 
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதமேதும் இல்லையே!.. (3/53) 

- என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.


தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடிவிழுத்து 
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே 
ஆரங் கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதியை நாளும் 
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே!.. (7/75) 

-என்பது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம்.

சிலந்தியும் ஆனைக்காவிற் திருநிழற்பந்தர் செய்து 
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் 
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் 
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டானாரே!.. (4/49)

- என்று, கோசெங்கட்சோழர்  பிறந்த வரலாற்றினை அப்பர் ஸ்வாமிகள் குறுக்கை வீரட்டானத் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தமது பக்தியால் சிவநேயச்செல்வராக உயர்ந்த கோச்செங்கட் சோழருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.

கெளரிசங்கர் எனப்படும் கல்யாணத் திருக்கோலத்தினை ஸ்தாபித்து  அகத்திய மாமுனிவர் தமது துணைவியராகிய லோபாமுத்ரையுடன்  வழிபட்டுள்ளார்.  அகத்தியர் தாம் வழிபட அமைத்ததே அகத்திய தீர்த்தம். திருச்சுற்றில் - அகத்தியர் லோபாமுத்ரை விளங்குகின்றர். 

ஸ்ரீ குபேரலிங்கம்
வெளிப் பிரகாரத்தில் கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகில் விளங்கும் குபேர லிங்கம் நான்காம் பிரகாரத்தில் பசுபதீஸ்வர பஞ்சமுகலிங்கம், மூன்றாம் பிரகாரத்தில் ஏகபாத திரிமூர்த்தி, 

இரண்டாம் பிரகாரத்தில் சிவகாமசுந்தரி, ஜுரஹர தேவர், பைரவர், கோசெங்கட்சோழர் முதல் பிரகாரத்தில் சுப்ரமண்யர், மஹாலக்ஷ்மி, ஹரிஹரசுதன், கல்யாணசுந்தரர், சஹஸ்ரலிங்கம் - என தரிசிக்க வேண்டிய திருமேனிகள்.

இறைவன் சித்தராக எழுந்து திருநீற்றினைக் கூலியாகக் கொடுத்து எழுப்பிய  மதில் - திருக்கோயிலின் வெளிப்புறத்தில் திருநீறிட்டான் மதில்  என விளங்குகின்றது. திருநீறிட்டான் மதிலைக் குறிப்பிட்டு,

ஆலைச்சாறு கொதித்து வயற்றலை 
பாயச் சாலி தழைத்திர தித்த அமுதாகத் 
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி - உறைவேலா 

ஆழித்தேர் மறுகிற்பயில் மெய்த்திரு 
நீறிட்டான்மதிள் சுற்றிய பொற்றிரு 
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே!.. 

- என்று ஆனைக்காவின் முருகனை அருணகிரிநாதர் போற்றுகின்றார்.

திருஆனைக்கா!.. 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலம். மாணிக்கவாசகரும் திருஅம்மானையில் திருஆனைக்கா அண்ணலைப் போற்றுகின்றார். 

ஆதிசங்கரர், ஐயடிகள் காடவர்கோன், கந்தபுராணம் அருளிய கச்சியப்பர், கவி காளமேகம் மற்றும் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - என இத்தலத்தைப் போற்றிய புண்ணியர் பலர்.

ஸ்ரீமூலஸ்தானம்
வருண திசையான மேற்கு நோக்கிய திருக்கோயில். ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கருவறை சற்று பள்ளமாக விளங்குகின்றது. கருவறையினுள் செல்ல தென்புறத்தில் - சிறு வாசல் ஒன்று உள்ளது. தலை வணங்கி குனிந்து தான் உள்ளே செல்ல முடியும்

சந்நிதியின்  வாசல் நவ துவாரங்களை உடைய கல் சாளரத்தினால் அடைக்கப் பட்டுள்ளது. இந்த துவாரங்களின் வழியே தான் சிவ தரிசனம்!.. 


கருணையின் ஊற்றென விளங்கும் ஈசன் - காவிரி ஊற்றின் மத்தியில் சிவலிங்கம் எனத் திகழ்கின்றார்!..

கோடி கோடி - விளக்குகளாலும் விளக்க முடியாத, இயலாத - விரி பெருஞ்சுடர் என விளங்குகின்றது - சிவலிங்கம்!..

அன்பெனும் அகல் விளக்கினால் அறியப்படும் அப்பு லிங்கம்!..
சரணடைந்தார் நெஞ்சில் சந்தனமாய் மணக்கும்  ஜம்பு லிங்கம்!..

காவிரியின் பெருமைகள் பேசப்படும் துலா மாதத்தில் - 
காவிரி நீரின் மத்தியில் உறையும் கருணாசாகரம் ஆகிய 

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புகேஸ்வர பெருமானை,  
நாம் சிந்திக்கப் பெற்றது - நம் முன்னோர் செய்த தவப்பயன்!.. 

காவிரிசூழ் தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் 
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..

என்று - அப்பர் பெருமான் நமக்கு வழிகாட்டும் வண்ணம்,

காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

வெள்ளி, அக்டோபர் 25, 2013

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி

அன்னை - அவளே அதைச் செய்தாள்!..

அருவுருவம் எனத் திகழும் சிவலிங்கத்திற்கு - உருவம் என்று ஒன்றில்லாத - நீரினால் வடிவம் கொடுத்தாள்.

திருஆனைக்காவில் - இன்று நாம் தொழும் சிவலிங்க ஸ்வரூபம் ஆதியில் நீர் வடிவில் திகழ்ந்தது. அதனைத் தான் அம்பிகை நாளும் வழிபட்டு வந்தாள்.

ஏன்?..

திருக்கயிலாயத்தில் ஒருநாள் - ஏகாந்த வேளை!..

''தான் அருகிருந்தும் - ஈசன் யோகத்தில் ஆழ்ந்திருப்பது ஏன்!..'' - என அன்னை ஆச்சர்யமுற்றாள்.

''..போகத்தையும் யோகத்தையும் - விளக்கியருள வேண்டும்!..'' - என ஐயனிடமே விண்ணப்பித்துக் கொண்டாள். 

ஐயன் புன்னகையுடன் - ''..பூவுலகில் - காவிரிக் கரையில், சம்பு முனிவன் தவமிருக்கும் நாவல் வனத்தில் விடை கிடைக்கும்!..'' - என அருளினார்.

அதன்படி பூவுலகுக்கு வந்த அன்னை, தான் வழிபட வேண்டி - தன் வளைக்கரத்தால் - தண்ணீரைக் கொண்டு சிவலிங்கம் ஸ்தாபித்தாள். 

அதற்கும் முன் ஒரு சம்பவம்!.. சம்பு எனப்பட்ட மகாமுனிவர் ஒருவருக்கு ஈஸ்வர ப்ரசாதமாக நாவற்பழம் கிடைத்தது. அதனை அப்படியே முனிவர் உட்கொண்டு விட்டார். நாவற்பழத்தின் கொட்டையைக் கூட,  வெளியே உமிழ வில்லை. 

அது அப்போதே முளைத்து முனிவரின் சிரசின் மீது வெளிப்பட்டது. அதனை உணர்ந்த முனிவர் ஈசனைப் பணிவுடன் வேண்டிக் கொண்டார். ''..ஸ்வாமி!.. இப்போது யான் செய்ய வேண்டுவது யாது?..'' - என. 

''..பின்னொரு சமயத்தில் அம்பிகை, உன் நிழலில் தவம் மேற்கொள்ள வரும் போது சிவசக்தி அனுக்ரகம் பெற்று முக்தி எய்துக!..''  - என ஈசன் அருளினார். 


அதன்படியே - ஜம்பு முனிவர்  - அம்பிகையின் வரவை எண்ணி - பூமியில் நாவல் மரமாக வேரூன்றி நின்றார்.  அந்த நாவல் மரத்தின் நிழலில் தான் அம்பிகை லிங்க ப்ரதிஷ்டை செய்து - தவமிருந்தாள். 

காலங்கள் கடந்தன. நாளும் கோளும் நற்பொழுதாயிருந்த வேளையில் - எம்பெருமான் ரிஷபாரூடராக ப்ரத்யக்ஷமானார். திருக்கயிலையில் அன்றொருநாள் - அம்பிகையின் மனதில் எழுந்த ஐயங்களுக்கு விளக்கம் அளித்தார். 

ஈசன் குருஸ்தானமாக வீற்றிருக்க அம்பிகை சிஷ்யையாக இருந்த புண்ணிய பூமிதான் - பின்னாளில்  ஜம்புகேஸ்வரம் என்று  வழங்கப்பட்டது.

இறைவன் ஜம்புகேஸ்வரர் எனப்பட்டார்.

இத்திருத்தலத்தில் - யானையும் சிலந்தியும் ஈசனை உணர்ந்து வழிபட  - யானைக்கு முக்தி கிடைத்தது. சிலந்தி கோபமுற்று வீராவேசத்துடன் யானையைத் தாக்கியதால் - பின்னும் ஒரு பிறவி - மாமன்னனாக -

சோழர் தம் குலத்தில் - கோச்செங்கணான் எனத் தோன்றி - யானை ஏற முடியாதபடிக்கு எழுபத்தெட்டு மாடக்கோயில்களைக் கட்டி - என்றென்றும் அழியா முக்தி ஆனந்தமாக  - சிவனடியார் திருக்கூட்டத்துள் ஒருவராக நிலை பெற்றது.


திருஆனைக்கா - சக்தி பீடங்கள் ஒன்று!.. வராகி பீடமாகத் திகழ்கின்றது. அகிலாண்டேஸ்வரிக்கு தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ஸ்வரூபிணி எனவும் திருப்பெயர்கள் வழங்குகின்றன.

அம்பிகை  - நீரைத் திரட்டி வழிபட்டதால் - பஞ்சபூதங்களுள் - நீருக்கு உரிய க்ஷேத்திரமாகியது திருஆனைக்கா!..

குரு வடிவாக விளங்கிய ஈசனிடம் , அம்பிகை - போக, யோக நிலைகளுக்கு விளக்கம் கேட்டுத் தெளிந்ததனால் - ஞானக்ஷேத்திரம்!..

''..தவறிழைத்தாய்!..'' - என அகலிகைக்கு சாபம் கொடுத்தார் கெளதம மகரிஷி. அப்படி சாபம் கொடுத்த - பாவம் நீங்கிட வழிபட்ட திருத்தலம் திருஆனைக்கா!.

ஒரு சமயம் ஏதேதோ காரணங்களால் அம்பிகை - உக்ரமாகிவிட - பக்தர்களால் எளிதில் அணுக இயலாமற்போனது. அப்போது  விஜயம் செய்த ஸ்ரீஆதிசங்கரர் அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் கணபதியை பிரதிஷ்டை செய்து சாந்தப் படுத்தினார். அத்துடன் -

அம்பாளின் உக்ரத்தை தாடங்கம் எனப்படும் காதணிகளில் அடக்கி  - அவற்றை அம்பிகைக்கே  அணிவித்தார்.
ஜம்புகேஸ்வரருக்கு -  உச்சிகால பூஜையை - அம்பாள் நிகழ்த்துவதாக ஐதீகம்.


அதன்படி, உலக நாயகியாகிய அம்பிகை - ஈசனை வழிபட்டதனை உணர்த்தும் முகமாக - அம்பாள் சந்நிதியிலிருந்து சிவாச்சார்யார் புடவை தரித்து முடி சூடி, பூஜைப் பொருட்களுடன் மேள தாளங்கள் முழங்க மூன்றாவது திருச்சுற்று வழியாக வலம் வந்து ஸ்வாமி சந்நிதிக்குச் சென்று அபிஷேக ஆராதனை, கோபூஜை ஆகியவற்றை செய்கின்றார்.


பஞ்சப் பிரகாரத் திருக்கோயில் எனப்படும் திருஆனைக்காவில் - அம்பிகை  நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவளாகத் திகழ்கின்றாள். ஐந்தாவது பிரகாரத்தில் - ஜம்புகேஸ்வரர் - மேற்கு நோக்கியவராக அருள்பாலிக்கின்றார்.

1311ல் முகலாயர் படையெடுத்து திருஅரங்கத்தைச் சேதப்படுத்தும் முன்பு வரை - பங்குனித் திருவிழாவில் அரங்கன் திருஆனைக்காவுக்கு எழுந்தருளி - திருக்கோயிலின் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து - இளநீர் அமுது செய்து, ஜம்பு தீர்த்தக்கரை மண்டபத்தில் சேவை சாதிப்பது வழக்கம் என்றும்,

பின்னர் - 1371ல் விஜய நகர அரசின் இரண்டாம் குமார கம்பணன் காலத்தில் பெருமாள் திருவரங்கம் - திரும்பிய பிறகு - பழையபடி பெருமாள் சேவையை நடத்தும் போது கலவரம் விளைந்து உயிர் சேதம் ஏற்பட்டதுடன் அந்த வைபவம் நின்று போயிற்று எனவும்  -

ஸ்ரீரங்கசரித்திரம் (நன்றி http://srirangacharithram.blogspot.com) தெரிவிக்கின்றது.

ஸ்வாமி சந்நிதியிலிருந்து அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் ஸ்ரீமஹா லக்ஷ்மியும், அம்பாள் சந்நிதி பிரகாரத்தில் ஸ்ரீசரஸ்வதியும் குடிகொண்டு அருள்கின்றனர்.


திருஅரங்கத்தில் மடைப்பள்ளியில் பணி செய்த வரதனை தனது - தாம்பூல உச்சிஷ்டத்தினால்- கவி காளமேகம் என புலவனாக ஆக்கினவள் - அன்னை!..

திருச்சியை ஆட்சி செய்த விஜய ரங்க சொக்கநாத நாயக்கரிடம் பெருங் கணக்கராகப் பணி செய்து வந்தவர் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவர்  மனதினுள் - ஸ்படிகம் போல ஒளிர்ந்தவள் - அகிலாண்டேஸ்வரி!..

காலையில் லக்ஷ்மி , உச்சிப்பொழுதில் ஸ்வயம்பிரகாசினி,  மாலையில் சரஸ்வதி - என விளங்குகின்றாள்.

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநர் - உறை பேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்றதாய் உமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி - அருள்பாலா!.. 

- என்று திருஆனைக்கா திருக்கோயிலில் உறையும் முருகனைப் போற்றி அருணகிரி நாதர் புகழ்கின்றார்.


பொன்னே வருக மூவுலகும் பூத்தாய் வருக நாயேனைப் 
புரந்தாய் வருக வழுதியர்கோன் புதல்வீ வருக முகிற்கிளைய 
மின்னே வருக மெய்ஞான விளக்கே வருக மறைநான்கின் 
விரிவே வருக பேரின்ப விளைவே வருக மிகுங்கருணை
அன்னே வருக அகநெகுவார்க்கு அணியே வருக அலர்மடவார்க் 
கரசே வருக உரைப்பருஞ்சீர் அம்மே வருக அழற்கரத்து 
மன்னேருடலம் பகிர்ந்த இளமயிலே வருக வருகவே 
மத மாதங்க வனத்து மடமானே வருக வருகவே!..

- என்று மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், பிள்ளைத்தமிழ் பாடி - அன்னை அகிலாண்டேஸ்வரியை  அழைக்கின்றார்.

அன்னையின் பேரும் புகழும் இம்மட்டோ!.. அவளைக் குறித்து பேசவும் எழுதவும் இந்த ஒரு ஜன்மம்  போதாது என்பது தான் உண்மை!..

காவிரியின் பெருமைகள் பேசப்படும்  - துலா மாதத்தில்,

காவிரியின் புகழ் விளங்கும் - திருஆனைக்கா பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் - நாம் பேசத் துணிந்தது -

அங்கே அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நமக்களித்த பெருங்கருணை!..

இந்தப் பூவுலகில் - எங்கிருந்த போதும் 
கருணாசாகரியான அம்பாளின் கழலடிகளைச் 
சிந்தித்தவாறு

காவிரியில் நீராடி கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

புதன், அக்டோபர் 23, 2013

திரு ஆனைக்கா

அண்ட பகிரண்டமும் ஒரு கணம் அசைவற்று நின்றது.

தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.


கண்ணிமைக்கும் பொழுதுக்குள் கயிலாய மாமலையிலிருந்து அம்மையும் அப்பனும் - பிரம்ம லோகத்திற்கு எழுந்தருள - 

நான்முகன் - நாணித் தலை கவிழ்ந்து நின்றார்.

எம்பெருமானையும் பிராட்டியையும் ஏறெடுத்து நோக்கவும், இயலாமல் நான்முகனின் கரங்கள் மட்டும் குவிந்தன. 

ஈசன் திருவாய் மலர்ந்தருளினார்.

''..வெண் நாவற்காட்டில் எம்மைக் கண்டு தொழ - வினை தீரும்!..''


அம்மட்டில்  - ஈசனையும் இறைவியையும் தொழுது வணங்கிய பிரம்மன்  -  வெண் நாவல் மரங்கள் அடர்ந்த வனம் எங்கே எனத் தேடிக் கொண்டு பூமிக்கு வந்தார். எளிதில் அவரால் கண்டறிய முடியவில்லை!.. காரணம்   - கருத்தில் கொண்ட காமம் கண்ணில் இருந்து போகாததால்!.. 

சுந்தன் உபசுந்தன் என அசுர சகோதரர்கள் இருவர். இவ்விருவரும் - ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அழியவேண்டும் என்பது அவர்கள் கேட்டு வாங்கிய வரம்.

இதற்காக - தேவதச்சன் ஆகிய விஸ்வகர்மாவைக் கொண்டு - உலகில் உள்ள அழகு எல்லாவற்றில் இருந்தும் எள் முனையளவு எடுத்து ஒரு பெண்ணுருவாக ஆக்கி, 

அந்த பதுமைக்கு உயிர் கொடுத்து - திலோத்தமை எனப் பெயரும் சூட்டிய வேளையில் -

''இத்தனை அழகா!..'' என மதிமயங்கிய பாவம் -  பிரம்மனைப் பற்றிக் கொண்டது. 

அதன் பொருட்டு தான் - முன் சொன்ன எல்லாமும்!..

மதி மயங்கிக் கருத்தழிந்த நான்முகன் - இப்போது கதி கலங்கி நின்றார். 

எங்கே பழியும் பாவமும் தீராமலேயே போய் விடுமோ!.. 


நினைத்தபோதே - கண்ணீர் - ஆறாகப் பெருகி வழிந்தது. அந்த தன்னிரக்கத்தில் - தகாத எண்ணங்கள் கரைந்தோட - அங்கே - வெண் நாவல் மரத்தடியில்   அழகான  சிவலிங்கம் ஜோதி வடிவாக வெளிப்பட்டது.

பாய்ந்தோடிச் சென்று அடி பணிந்து - வணங்கிய பிரம்மன் - தவத்தில் ஆழ்ந்தார்.  அப்போது நான்முகனுக்கு விளங்கியது - இத்திருத்தலத்தில் முன்பே,


ஞான உபதேசம் வேண்டி அம்பிகை  - காவிரி நீரை லிங்க வடிவில் திரட்டி ஈசனை வழிபட்டிருக்கின்றாள் என்பதும், அச்சமயத்தில் - ஜம்பு முனிவர் நாவல் மரமாகி அம்பிகைக்கு நிழலாக இருந்தார் என்பதும் விளங்கியது.

இப்படி  - அம்பிகை நீரை சிவலிங்க வடிவாகத் திரட்டி வழிபட்ட திருத்தலம் - ஜலகண்டேஸ்வரம் எனவும்,  ஜம்பு எனப்படும் நாவல் மரங்கள் சூழ்ந்த வனம் ஆனதால் ஜம்புகேஸ்வரம் எனவும் வழங்கப் பெற்றது. 

பின்னொரு சமயம்  - இத்திருத்தலத்துக்கு மேலும் ஒரு சிறப்பான திருப்பெயர் கிடைத்தது. அது -

திருஆனைக்கா!..

ஆதியில் - நல்வினையால் உந்தப்பட்ட சிலந்தி ஒன்று - தான் வசித்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கத்தைக் கண்டு உணர்ந்தது. தன் வினையாக,  சிவலிங்கத்தின் மீது  - மரத்தின் சருகுகள் விழாமல் இருக்கட்டும் என்று - விறு விறு என ஒரு வலையைப் பின்னியது.


திருப்பணி முடிந்ததும் ஓர் ஓரத்தில் இருந்தபடி, இறைவடிவத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த வேளையில் - அதே வனத்தில், 

வேறொரு புறம் வாழ்ந்து வந்த யானை ஒன்றும், நல்வினையால் உந்தப்பட்டு - இந்த வழி வந்தது. நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கத்தைக் கண்டு உணர்ந்தது.


தன் வினையாக, விறு விறு என ஓடிப் போய், காவிரி நீரை துதிக்கையால் உறிஞ்சிக் கொண்டு வந்து  - இறைவன் திருமேனியில் பீய்ச்சியடித்தது.

அபிஷேகத் திருமேனி ஜொலித்தது!. யானைக்கு பெருமிதம் தாங்க முடிய வில்லை. அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டிக் கொண்டபோது - அந்த வலை - சிலந்தி வலை கண்ணில் பட்டது. சிலந்தி செய்த வேலையால், சில சருகுகளும் - வலையில் சிக்கி ஊடாடிக் கொண்டிருந்தன.

''..அழகான எம்பெருமானின் மேல்  - இதென்ன... அலங்கோலமாக!..''

துதிக்கையை நீட்டி - வலையைப் பிய்த்து எறிந்தது. அதன்பின் ஓர் ஓரமாக நின்று - பெருமானையே பார்த்துக் கொண்டிருந்தது.

இப்போது - சிலந்திக்கு சீற்றம் என்றால் சீற்றம்!.. அப்படி ஒரு சீற்றம்!..

''..அவனாக வந்தான்!.. எச்சில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தான். சரி என்று பார்த்தால் - என் வலையையும் பிய்த்துப் போட்டு விட்டான் - தடியன்!..'' என்று முணுமுணுத்துக் கொண்டு  -  மீண்டும் பின்னியது வலையை.


நின்றபடியே - சிவ தியானம் செய்த யானை, அப்படியே தூங்கி - திடுக்கிட்டு விழித்தபோது - மறுபடியும் பெருமானின் மேலாக வலை!.. அதில் இரண்டு சருகுகள்!..

''..டேய்!.. என்னடா.. நடக்குது - இங்கே!..'' - பெருங்குரலெடுத்து சத்தமிட்டதில் மற்ற விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தன. ஆனால் சிலந்தியோ -  யாதும் அறியாத மகானுபாவனாக அமர்ந்திருந்தது.


தன் முயற்சியில் மனம் தளராத யானை மறுபடியும் வலையை அழிக்க, அதே போல சிலந்தியும் வலையை அமைக்க - அடுத்த சில தினங்களில், அங்கே பெரும் பிரச்னை மூண்டது. 

தன் வலையை அழிக்க முற்பட்ட யானையின் துதிக்கையினுள் புகுந்தது  சிலந்தி. துதிக்கையினுள் சிலந்தியின் ஊடுருவலால் நிலை குலைந்த யானை நிலை குலைந்தது. பெரும் பிளிறலுடன் துதிக்கையை தரையில் அறைந்தவாறு வீழ்ந்தது. 

பெருமானின் திருவருளினால் யானை முக்தி நிலையினை அடைந்தது. அதே வேளையில், நிலத்தில் அறையப்பட்டதால் - துதிக்கையின் உள்ளேயே - தன்னுயிர் துறந்தது சிலந்தி. 

பூத உடலை நீத்ததும் யானைக்கும் சிலந்திக்கும் நல்லறிவு பிறந்தது. உட்கிடக்கையை உணராமல்  - ஒருவருக்கொருவர் பகை கொண்டு நின்றதை நினைத்து வெட்கின. சிலந்தி தனக்கும் முக்தி நல்குமாறு வேண்டியது. 

எம்பெருமான் - புன்னகைத்தார். அந்த அளவில் - ஒளி வடிவாக விளங்கிய சிலந்தியின் உயிர் -

உறையூர் - சோழன் அரண்மனையில், பட்டத்தரசியின் கருவில் சென்று கலந்தது.


நிறைமாத கர்ப்பிணியான சோழமாதேவியின் - உடல் நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தாதி சொன்னாள் - ''..இன்னும் சிறு பொழுதில் பேறு நிகழலாம்!..''  - என்று.

அப்போது  - வானியலைக் கணித்த வல்லுநன் கூறினான்.

''..இப்போது குழந்தை பிறந்தால் - வையகம் போற்ற வாழ்வான். ஆனால், இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால்!..'' -

''..பிறந்தால்!..''

''..வானகமும் போற்ற வாழ்வாங்கு வாழ்ந்து சிவ சாயுஜ்யம் பெறுவான்!..''

மாதரசியாகிய சோழமாதேவி  கூறினாள். 

''..எனில் - என் கால்கள் இரண்டையும் தூக்கிக் கட்டி விடுங்கள். இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கட்டும் - என் குழந்தை!..''

மன்னர் பதறினார் - ''..தேவி!.. வேண்டாம் இந்த விஷப்பரிட்சை!..''

''..என் மகனைச் சான்றோன் எனக் கேட்டு நான் பெரிதும் உவக்க வேண்டும்!..''

அதன்படி  - சோழமாதேவியின் கால்கள் தூக்கிக் கட்டப்பட்டன. பிரளயம் ஏற்படுவது போல் பெருத்த வேதனை. அதை -  பிள்ளைக்காகப் பொறுத்துக் கொண்டாள் - அந்தப் புண்ணியவதி.

ஒரு நாழிகைப் போது கழிந்தது - கயிறுகள்  அறுக்கப்பட்டது தான்  - தாமதம்!..

வீறிட்டுக் கொண்டு வந்து விழுந்த பாலகனை -  பட்டுத் துணி விரிக்கப்பட்ட தங்கத் தாம்பாளத்தில் ஏந்தினர். தாயிடம் காட்டினர். குழந்தையை வாரித் தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டாள். உச்சி முகர்ந்தாள்.


ஞானமும் முற்பிறவி நினைவும் கொண்டதாகப் பிறந்த பிள்ளை - தாய் முகத்தைப் பார்த்தது. எத்தனை எத்தனை பிறவிகளோ!.. ஒன்று பட்டு விளங்கிய உயிர்கள் கலந்து இன்புற்றன. 

மகனின் கண்களைப் பார்த்தாள். 

மேலதிக நேரம், கர்ப்பத்தினுள் பனிக்குடத்து நீரில் மூழ்கி மூச்சடைத்துக் கிடந்ததால் - கண்கள் - சிவந்திருந்தன. 

''..மகனே!.. செங்கண்ணா!..'' என்றாள். குழந்தை வீறிட்டு அழுவதற்குள் - மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்றாள்.

அந்தப் பாலகனே - பின்னாளில் கோ செங்கணான் - எனப்பட்டான். 

சிவசிந்தனையில் திளைத்த மாமன்னன் கோ செங்கணான் - பூர்வ ஜன்ம நினைவுகளுடன் - யானை ஏற முடியாதபடிக்கு திருக்கோயில்களைக் கட்டி மகிழ்ந்தான்.

தேவாரத்தில் பல இடங்களிலும் சிலந்தி - மன்னனாகப் பிறந்த அரிய வரலாறு பேசப்படுகின்றது. 

''..பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் 
பெருங்கோயில் எழுபதினோடு எட்டு!..''-

என்று திருநாவுக்கரசு சுவாமிகள் புகழ்வது  - மாமன்னன் கோ செங்கணான் எழுப்பிய மாடக் கோயில்களையே!..

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் 
கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே! (4/49) 

சோழமாதேவி விரும்பியவாறு - சான்றோராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கினில் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல், 

சமயம் வளர்த்த சான்றோர்களுள் ஒருவராக நாயன்மார் வரிசையில் வைத்துப் போற்றப்பட்டார் - கோ செங்கட்சோழர்.


இத்தனையும் நிகழ்ந்தது - திருஆனைக்காவில்!.. காவிரிக் கரையில்!..

திருஆனைக்கா - பஞ்ச பூதத் திருத்தலங்களுள் - நீர் நின்று விளங்கும் திருத்தலம்.

துலா மாதத்தில் -  காவிரியின் பெருமைகள் புகழ்ந்து பேசப்படுகின்றன.

திருஆனைக்கா  க்ஷேத்திரத்தில் - அம்பிகை - அகிலாண்டேஸ்வரியாக எழுந்தருளி - தன் திருக்கரங்களால்,

திரட்டிய சிவலிங்கத் திருமேனி - காவிரியின் நீர்!..

கருவறையில் - கருணையின் ஊற்று என - சிவலிங்கத்தைச் சுற்றிலும் பெருகித் திகழ்வது காவிரியின் நீர்!.. 

காவிரி சூழ் தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் 
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..

என்று,
அப்பர் பெருமான் - திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்!.. 

நாமும் அவ்வாறே,
காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..