நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 21, 2017

சப்தமங்கை 1

திருக்கயிலாய மாமலை...

பொன்னந்தி வேளையில் மாலைக் கதிரவனின் கதிர்களால் 
தங்கமயமாக தக..தகத்துக் கொண்டிருந்தது - 


ஐயனின் அருகிருந்தாள் - அம்பிகை..

நாம் ஆனந்தமாக விளையாடி எத்தனை நாட்களாகின்றன!..

மின்னல் கீற்றுப் போல அம்பிகையின் உள்மனதில் ஆவல் தோன்றி மறைந்தது...

அவ்வளவுதான்.. 
ஈசன் எம்பெருமானின் திருமுகத்தில் மந்தகாசம் அரும்பிற்று...

ஈசனுக்குத் தன்னை ஒளித்து விளையாடினாள் அம்பிகை..
அந்த விளையாட்டு வினையாகப் போகின்றது என்பதை அறியாமல்!...

விளையாட்டு நன்றாகப் போய்க்கொண்டிருந்த பொழுதில் -
என்னைக் கண்டு பிடி!.. - என, தன்னை ஒளித்து விளையாடினான் - ஈசன்...

அம்பிகை சிவ தரிசனம் பெறுவதில் சிக்கலுற்றாள்..

ஈசன் எம்பெருமானைக் காணாமல் தவித்தாள்.. கலங்கினாள்..

அம்பிகையின் தவிப்பைக் கண்டு அயர்ந்த எம்பெருமான் -
முன்னொரு சமயம் எம்மை வணங்கிய தலங்கள் ஏழிலும் எம்மைக் கண்டுணர்வாய்!.. - எனத் திருவாய் மொழிந்தான்...

இதைத்தான் அம்பிகையின் திருவுள்ளமும் விரும்பியது போலும்!..

ஈசன் எம்பெருமான் குறித்தருளிய ஏழு திருத்தலங்களும் அம்பிகையின் நெஞ்சகத்தில் தாமரைப் பூக்களாக மலர்ந்தன..

அந்தத் திருத்தலங்கள் ஏழும் - 
மகிஷாசுரனை வீழ்த்துதற்கு எழுந்தபோது வழிபடப்பட்டவை.....

மகிஷனின் மீது கொண்ட கடுங்கோபத்துடன் எழுந்த அம்பிகை தன்னுள் ஒருங்கிணைந்திருந்த ஏழு சக்திகளையும் வெளிப்படுத்தினாள்..

அந்த சக்திகள் -
ஸ்ரீபிராமி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவைஷ்ணவி,
ஸ்ரீவராஹி, ஸ்ரீமாகேந்திரி, ஸ்ரீசாமுண்டி - என, ஏழு ரூபங்களாக நின்றன..

இந்தத் திருமேனிகளுடன் ஈசனை ஏழு தலங்களில் வழிபட்டாள் - அம்பிகை..

அதனைத் தொடர்ந்து எல்லா வல்லமைகளையும் பெற்று
ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக திருக்கோலம் கொண்டு நின்றருளினள்..

பல்வேறு நாடகங்களுக்குப் பின்னர் -
மகிஷாசுரனை வதம் செய்து அவனது தலையின் மீது
திருவடி பதித்து நின்றனள் - என்பது திருக்குறிப்பு..

அப்படியாகிய திருத்தலங்கள் ஏழிலும் வழிபடவேண்டும் என்ற பேராவலுடன் உலகாளும் அன்னை உமா மகேஸ்வரி முன் நடந்தாள்...

சப்த மங்கை தரிசனம் - 1
 சக்ரமங்கை...

ஸ்ரீபிராம்மி வழிபட்ட திருத்தலம்..


சப்த மங்கையருள் முதலிடத்தில் இருப்பவளாகிய ஸ்ரீ பிராமியின் திருக்கோலங்கொண்டு சிவபெருமானை வழிபட்ட தலம் சக்ரமங்கை..

இத்தலத்தில் அம்பிகை சிவபூஜை செய்தபோது
தனது நெற்றிக் கண்ணைக் காட்டியருளினன் - என்பது ஆன்றோர் வாக்கு...

ஸ்ரீ தேவநாயகி அம்பாள்- பக்தர்களைக் காப்பதற்கென்று
வலத் திருவடியினை முன் வைத்த நிலையில்
நின்ற திருக்கோலத்தில் திகழ்கின்றாள்..

சிவ ஸ்தலங்களில் வழிபாடு செய்து வந்த
அநவித்யநாதர் - அனவிக்ஞை எனும் தம்பதியர்க்கு
இந்த சக்கராப்பள்ளி தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை எனும் வடிவில் அம்பிகை தரிசனம் அளித்தனள் என்பது திருக்குறிப்பு..

சலந்தரனை அழித்த சக்ராயுதத்தினை சிவபெருமான் ஏந்தியிருந்தார்..

அதனைத் தாம் பெற வேண்டும்!.. - என, ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு ஆவல்..

அதன் பொருட்டு இத்தலத்தில் வழிபட்டு நின்று சிவபெருமானிடமிருந்து சக்ராயுதத்தினைப் பெற்றனர் என்பதும் தலபுராணம்...

சக்ரவாகப் பறவை சிவபூஜை செய்த திருத்தலம் என்பதாகவும் சொல்லப்படுகின்றது..

ஐந்தலை நாகம் குடையாய் விரிந்திருக்க -
ஆல மரத்தின் கீழாக சனகாதி முனிவருடன்
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி திகழ்வது சிறப்பான திருக்கோலம்..

செங்கல் கட்டுமானமாக இருந்த திருக்கோயிலை
கற்றளியாக எழுப்பியவர் செம்பியன் மாதேவியார்..

செம்பியன் மாதேவியார் சிவபூஜை செய்யும் காட்சி
தெற்குச் சுற்றில் புடைப்புச் சிற்பமாக விளங்குகின்றது..

இந்த சக்கராப்பள்ளியைத் தொடர்ந்து மற்றுள்ள ஆறு ஊர்களிலும் பங்குனி மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து சப்த ஸ்தானத் திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..



இறைவன் - ஸ்ரீசக்ரவாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தேவநாயகி
தீர்த்தம் - குடமுருட்டி
தலமரம் - வில்வம்

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே..(3/27) 
- திருஞானசம்பந்தர் -
***
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருமூலஸ்தானத்துடன் கூடிய திருக்கோயில் தரைமட்டத்திற்குக் கீழாக இரண்டடி பள்ளத்தில் திகழ்கின்றது..

சூரிய பூஜை நிகழ்வதாகவே இவ்வாறு விளங்குகின்றது என்பது தெளிவு..

பங்குனி மாதத்தின் சங்கடஹரசதுர்த்தி அன்று காலையில் 
சூரியனது கதிர்கள் மூலஸ்தானத்தில் விளங்கும் 
சிவலிங்கத்தைத் தழுவி விளங்குகின்றது...

தேவாரப் பதிகம் பெற்ற தலங்களில் காவிரிக்குத் தெற்கே பதினேழாவது திருத்தலம்..

ஞானசம்பந்தப்பெருமான் திருப்பதிகம் அருளியுள்ளார்...

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் ஐயம்பேட்டையை அடுத்து விளங்குவது - சக்கராப்பள்ளி..

அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகள் மற்றும் தஞ்சை நகரப் பேருந்துகள் அனைத்தும் சக்கராப்பள்ளியில் நின்று செல்கின்றன..

சக்கராப்பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவுகளை
கீழுள்ள இணைப்புகளின் வழியே காணலாம்..


* * *

சப்த மங்கை தரிசனம் - 2
 அரிமங்கை...

ஸ்ரீமாகேஸ்வரி வழிபட்ட திருத்தலம்..

ஸ்ரீ மாகேஸ்வரி
சக்கராப்பள்ளி சப்த ஸ்தானத்தின் இரண்டாவது திருத்தலம் அரிமங்கை..

இத்திருத்தலத்தில் தான் - சப்த மங்கையருள்
இரண்டாவதாக விளங்கும் ஸ்ரீ மாகேஸ்வரி சிவபூஜை செய்தனள்..

அம்பிகை இத்தலத்தில் ஈசனின் திருமுடியில் திகழும்
கங்கையைக் கண்டாள் என்பது தலபுராணம்..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி இங்கு தவமிருந்தாள் என்பதும் இத்தலத்தின் பெருமை..

ஒருமுறை வைகுந்தத்திலிருந்து
ஸ்ரீ ஹரிபரந்தாமனைப் பிரிந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி
சிவபெருமானின் தரிசனம் வேண்டி அருந்தவம் செய்தனள்...

மாதவனும் மஹாலக்ஷ்மியைத் தேடி வந்து கோபம் தணிவித்தான்..

அச்சமயம் ஈசனும் அம்பிகையரும் மஹாலக்ஷ்மிக்கும் மாதவனுக்கும் திருக்காட்சி நல்கினர் - என்பது திருக்குறிப்பு...

பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் விளங்கும் சிறுமாக்கநல்லூர் - அருகிலேயே உள்ளது...


இறைவன் - ஸ்ரீ ஹரிமுக்தீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை
தீர்த்தம் - சத்தியகங்கை

சக்கராப்பள்ளியைத் தொடர்ந்து வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்க்கு 
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
பெதும்பை எனும் வடிவில் அம்பிகை தரிசனம் அளித்தனள்..

சக்கராப்பள்ளியில் இருந்து தெற்காகச் செல்லும் கிராம சாலையில் இரண்டு கி.மீ., சென்றால் அரியமங்கை திருக்கோயிலை அடையலாம்...

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டை கோயிலடி நிறுத்தத்திலிருந்து சிறுமாக்கநல்லூர் வழியாக ஆட்டோவிலும் வரலாம்..

அரியமங்கை சின்னஞ்சிறிய கிராமம்..
நேரடியாக பேருந்து வசதி எதுவும் கிடையாது...

வழிபடுவதற்குரிய பொருட்களை -
ஐயம்பேட்டையில் வாங்கிக் கொள்வது நலம்..

ஸ்ரீ துர்காபரமேஸ்வரி - பட்டீஸ்வரம்
இன்று முதல் நாடெங்கும் கோலாகலமாக நவராத்திரிப் பெருவிழா ஆரம்பம்..

நவராத்திரி நாட்களுள் முதல் மூன்று நாட்களும்
ஸ்ரீ துர்காபரமேஸ்வரிக்கு உரியவை..

நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டுமென அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...

ஓம் 
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் 
* * * 

16 கருத்துகள்:

  1. சிறிய கிராமத்தில் உள்ள கோயிலைக்குறித்து எவ்வளவு தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது ஜி.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      குடத்துள் இட்ட விளக்காக இன்னும் எவ்வளவோ செய்திகள்..
      அத்தனையையும் அறிந்து கொள்ள காலம் போதாது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சப்தமங்கை தரிசனம் 2 ம் தலங்களின் சிறப்பையும் அறிந்தோம். இவ்வுலகை ஆளும் அன்னை அனைவரையும் காத்தருளட்டும்! இன்பம் பொங்கட்டும்! நவராத்திரித்திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான தகவல்கள்....

      சப்தமங்கை பற்றிய தகவல்கள் எல்லாம் புதிது எனக்கு...அறிந்துக் கொண்டேன்...


      நீக்கு
    2. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கோவில்களுக்குப் போகும்போது தல புராணங்களைக் கேட்டு வாங்கிப் படிப்பது வழக்கம் ஆனால் என்னதான் படித்தாலும் உங்கள் எழுத்துப் போல வராதுஎன நினைக்கிறேன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகின்றேன்..
      எல்லாவற்றுக்கும் பெரியோர்களுடைய ஆசிகள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பட்டீஸ்வரத் தாயின் படம் மனதைக் கொள்ளைகொண்டது.

    சக்கராப்பள்ளித் தலத்தை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    "இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்" என்பதுபோல, அந்த அந்தத் தலத்திலேயே நமக்கு ஒரு வாழ்வுக்குத் தேவையானவைகள் இருக்கின்றன. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> இருப்பிடம் வைகுந்தம்.. வேங்கடம் <<<

      சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..

      ஆனாலும், ஒவ்வொரு ஊருக்கும் மகத்துவம் இருக்கின்றது..

      நம்முடைய ஊர் சிவ க்ஷேத்ரமாகவோ திவ்ய தேசமாகவோ இருந்தாலும் - அடுத்தொரு திருத்தலத்திற்குச் சென்று தரிசிக்கும்போது புதியதொரு மகிழ்ச்சியைப் பெற முடிகின்றது என்பது உண்மை..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..