நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 25, 2017

சப்தமங்கை 2

சப்த மங்கையர் வழிபட்ட தலங்களைப் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன..

இதன் தொடர்புடைய பதிவுகளைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்..


சப்த மங்கை தரிசனம் - 3
 சூலமங்கை


ஸ்ரீ கௌமாரி வழிபட்ட திருத்தலம்..


ஏழு தலங்களுள் இரண்டினைத் தரிசித்த மகிழ்வு - அம்பிகைக்கு..

அந்த மகிழ்ச்சியுடன் -  மூன்றாவது தலத்தை நோக்கி நடந்தாள்..

அந்தத் தலம் - சூலமங்கை..

மகிஷாசுர வதத்திற்கு முன்பாக - இத்தலத்தில்
கௌமாரியாக வழிபாடு செய்தது அவளுடைய நினைவில் மலர்ந்தது..

மீண்டும் தான் விரும்பியபடி சிவ தரிசனம் பெற வேண்டி
அம்பிகை தானும் தவத்தில் ஆழ்ந்தாள்..

அவள் எண்ணமும் இனிதே நிறைவேறியது..

ஐயன் தனது - திரிசூலத்துடன் திருக்கோலம் காட்டியருளினான்..


இறைவன் - ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அலங்காரவல்லி

இத்திருக்கோயிலில் ஈசனின் திரிசூலம் - தேவரூபம் பெற்று எழில்மேவும் அழகான சிற்பமாக அஸ்திரதேவர் என்று விளங்குகின்றது..


முருகப் பெருமானுள் நிறைந்திருக்கும் சக்தியே - கௌமாரி..
இவளும் மயில் வாகனத்தினையும் சக்தி ஆயுதங்களையும் உடையவள்..

தேவி புராணங்கள் இந்தத் திருக்கோலத்தினை 
ஸ்கந்த மாதா என்றும் ஸ்கந்த ஜனனி என்றும் புகழ்கின்றன...

சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்க்கு 
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
மங்கை வடிவினளாக அம்பிகை தரிசனம் அளித்தனள்..

ஸ்ரீ ஸ்கந்தமாதா
முருகனைப் பெற்றெடுத்த கௌமாரி எனும் திருக்கோலத்தில்
அம்பிகை உறையும் இந்தத் தலத்தில் தான் -

முருகன் திருப்பாடல்களைப் பாடுதற்கு!.. 
- என, இரண்டு கானக்குயில்கள் தோன்றின..

கால காலத்திற்கும் அழியாத பக்திப் பாடல்களைப் பாடி வைத்த
அந்தக் குயில்களின் பெயர்கள் - ராஜலக்ஷ்மி, ஜயலக்ஷ்மி..


இவர்கள் பாடிய பிறகுதான் கந்த சஷ்டிக் கவசம் - 
தமிழர் தம் மூச்சோடும் பேச்சோடும் இணைந்தது என்றால் மிகையல்ல..

கானக் குயில்களாகிய சூலமங்கலம் சகோதரிகளை 
தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றைக்கும் மறவாது என்பது சத்தியம்..


சூலமங்கை எனப்பட்ட இத்திருத்தலம்
இன்றைக்கு சூலமங்கலம் என்று வழங்கப்படுகின்றது..

சப்த ஸ்தானத்தின் இரண்டாவது ஊரான -
அரியமங்கையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் சூலமங்கலம்...

குறுக்கு வழியான அது மிகச் சாதாரணமான கிராம சாலை..

ஆயினும் -
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டை புறவழிச் சாலையில் இருந்து சூலமங்கலம் செல்வதற்கான சாலை பிரிகின்றது..

இந்தச் சாலையில் அறிவிப்புப் பலகை உள்ளது..
அருகில் மின் வாரிய அலுவலம் உள்ளதும் அடையாளம்..

சூலமங்கலம் பிரிவு சாலையின் அருகாக
நகரப் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்கின்றன..

ஆனால்,
சூலமங்கலத்திற்கு நேரடியான பேருந்து வசதி ஏதும் இல்லை...
முன்பு மினி பஸ்கள் இயங்கியதாக நினைவு..
இப்போது எப்படி என்று தெரியவில்லை...

ஐயம்பேட்டையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள
சூலமங்கலமும் மிகச் சிறிய கிராமம் தான்..

வழிபாட்டுக்கான பொருட்களை ஐயம்பேட்டை கடைத்தெருவில் வாங்கிக் கொள்வது நலம்...

எல்லாவற்றுக்கும் மேலாக -
தஞ்சை கும்பகோணம் இருப்புப் பாதை வழியில்
பசுபதி கோயில் எனும் ஸ்டேஷனில் இருந்து மிக அருகாக உள்ளது சூலமங்கலம் கிராமம்..

பசுபதி கோயில் ஸ்டேஷனில் எல்லா பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன..

பசுபதி கோயில் ஸ்டேஷனில் இறங்கியும் சூலமங்கலத்திற்குச் செல்லலாம்..

சக்கராப்பள்ளி சப்த ஸ்தானத்தில் -
சூலமங்கலத்திற்கு அடுத்த தலம் - நந்திமங்கை..

திருவிழா காலத்தில் சூலமங்கலத்திலிருந்து நந்திமங்கைக்கு
வயற்காட்டுப் பாதை வழியாகத் தான் சப்த ஸ்தான பல்லக்கு செல்லும்...

ஆனால், நாம் சாலை வழியாகப் பயணிப்போம் ..வாருங்கள்!..
* * *

சப்த மங்கை தரிசனம் - 4
 நந்திமங்கை...



ஸ்ரீ வைஷ்ணவி வழிபட்ட திருத்தலம்..

திருத்தலங்களுள் ஏழில் - மூன்று தலங்களைத் தரிசித்து விட்டாள் அம்பிகை..

இந்த நானிலம் உய்யும் பொருட்டு
தனது திருவடித் தாமரைகளைத் தரையில் பதித்து
நான்காவதாக வந்து சேர்ந்த திருத்தலம் -

நந்திமங்கை..

மகிஷாசுர வதத்திற்கு முன்பாக - 
வைஷ்ணவியாக வழிபாடு செய்தது - இத்தலத்தில் தான்!..


இறைவன் - ஸ்ரீ ஜம்புலிங்கேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அகிலாண்டநாயகி
தல விருட்சம் - வெள்ளெருக்கு

நந்தியம்பெருமான் சிவபூஜை செய்த திருத்தலம் - நந்திமங்கை..

சிவசந்நிதியில் - தரிசனம் பெற வேண்டி
அம்பிகை தானும் தவத்தில் ஆழ்ந்தாள்..

அவள் எண்ணமும் இனிதே நிறைவேறியது..

ஈசன் எம்பெருமானும் ஆடல் அழகனாகத் தோன்றி
தனது திருவடித் தாமரைகளைக் காட்டியருளினான்..


சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
மடந்தை எனும் கன்னிகையாகத் தரிசனம் கண்டனர்..

ஆதியில் நந்திமங்கை எனப்பட்ட இத்திருத்தலம்
இன்றைக்கு நல்லிச்சேரி என்று வழங்கப்படுகின்றது..

தஞ்சை - குடந்தை சாலையில் 12 கி.மீ தூரத்தில் உள்ளது நல்லிச்சேரி..

பிரதான சாலையில் இறங்கி நோக்கினால்
கிழக்காகத் தெரியும் ஊரும் கோயிலும்...

பேருந்து நிறுத்தத்தில் கோயிலைக் குறித்த வண்ணம் அலங்கார வளைவு..
வளைவினைக் கடந்து உட்புறமாக 2. கி.மீ., செல்லவேண்டும்...

வளைவின் அருகில் காவல் தெய்வமாக ஸ்ரீமுனீஸ்வரன் சந்நிதி..

நந்திமங்கை மேற்கு நோக்கிய திருக்கோயில் ஆகும்..

பங்குனி மாதத்தின் சங்கரஹர சதுர்த்தியன்று காலையில் 
சக்கராப்பள்ளி ஸ்ரீசக்ரவாகேஸ்வர ஸ்வாமியை
தனது கதிர்களால் வழிபடும் சூரியன் 
அன்றைய தினத்தின் மாலைப் பொழுதில்
நல்லிச் சேரியில் ஸ்ரீ ஜம்புகேஸ்வர ஸ்வாமியை 
வழிபடுகின்றான் என்பது சிறப்பு...

சிவாலயத்தில் எதிர்புறமாக சற்று தூரத்தில் மயானம் அமைந்துள்ளது..

நல்லிச்சேரியில் ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகிலேயே 
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலும் அமைந்துள்ளது..

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் 12 கி.மீ., தொலைவில் 
சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ளது நல்லிச்சேரி..

அனைத்து நகரப் பேருந்துகளும் நல்லிச்சேரி கொயில் வளைவின் அருகில் நின்று செல்கின்றன..

ஆனாலும் - நல்லிச்சேரிக்கு உள்ளே பேருந்துகள் செல்வதில்லை...
ஆட்டோ வசதிகளும் கிடையாது..

நல்ல தார்ச்சாலை.. 
சுற்றிலும் அழகான நன்செய் வயல்கள்... இயற்கையான காற்று..

பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லலாம்.. 
அல்லது வாகனத்தில் செல்லலாம்..

அரியமங்கை சூலமங்கலம் போலவே 
நல்லிச்சேரியும் சிறு கிராமம் தான்..

பூஜைக்கான பொருட்களை முன்னதாகவே 
வாங்கிக் கொண்டு செல்வது நலம்..
* * *

நலந்தரும் நவராத்திரி வைபவத்தில் - தற்போது
ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு உரிய நாட்கள்..

ஸ்ரீ அலர்மேல்மங்கை
எங்கெங்கும் சிறப்பாக ஆராதனைகள் நடைபெறுகின்றன..

நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்!.. 
- என, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...

ஓம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் 
* * * 

10 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய படங்களும், விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அறிந்து கொண்டேன். சூலமங்கலம் சகோதரிகளில் இரண்டாமவர் மிகச் சமீபத்தில்தான் காலமானார். கந்தர் சஷ்டி கவசத்துக்கு அந்த இசை அவர்களாலேயே அமைக்கப்பட்டது. அது சம்பந்தமான உரிமை கோரல் வழக்குக் கூட நெடுங்காலம் நடந்து, இவர்கள் பக்கம் தீர்ப்பானதாகப் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஆம்.. நானும் இந்த செய்தியை படித்திருக்கின்றேன்..
      பிறருடைய உழைப்பினைக் கவர்வதற்கு எப்படித்தான் மனம் வருகின்றதோ..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நீங்கள் கூறியுள்ள இக்கோயில்களுக்குச் சென்றுள்ளேன். அருகருகே மிகக் குறைந்த தூரத்தில் இக்கோயில்களைக் காணமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள் அருகருகாகத் தான் அமைந்துள்ளன..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கேட்க கேட்க ஆதங்கமே மிஞ்சுகிறது எத்தனை தலங்கள் காணாமலேயே இருந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. படங்களும் பதிவும் அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிக ரசித்த பதிவு. நல்ல efforts போட்டு எழுதியிருக்கீங்க (உங்க பெரும்பாலான பக்தி இடுகைகள் எல்லாமே இதுமாதிரிதான்). ஒன்றைப் படித்தால், புதிய செய்தி, நல்லதைத் தெரிந்துகொண்டோம் என்ற திருப்தி வருகிறது.

    'அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே' அவர்கள் பாடியதுதானே.

    நான் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய 'கந்த சஷ்டி' கவசமும் கேட்டிருக்கிறேன். என்னவோ எனக்கு சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ராகத்தில் பாடும்போதுதான் நிறைவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..