நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 16, 2015

சிவ தரிசனம் - 04

கண் கண்ட கயிலாயம்!..

அன்றைய பகல் பொழுது - மயங்கிக் கொண்டிருக்கின்றது.

திருக்கயிலை மாமலையின் அடிவாரத்தில் பொற்பிரம்புடன் - அதிகார நந்தி!..


சைவத்தின் முதற்குரு நந்தியம்பெருமான்.

மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் -
சிவதரிசனம் செய்து வைப்பவர் - இவரே!..

நந்தியம்பெருமானின் சாபத்தினால் தான் -
இராவணன் நாடு நகரத்துடன் அழிந்தான்.

ஈசன் தனது அன்பின் அடையாளமாக - நெற்றிக் கண்ணையும் சந்த்ர கலையையும் மானையும் மழுவையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றார் எனில் - இவரது பெருமையைப் பற்றி பிறிதொன்றும் கூற வேண்டுவதில்லை.

நாவினிக்க சிவ நாமம் நவின்றவராக - நாலாபுறமும் காவல் கொண்டிருந்த போது - தொலைவினில் காற்று சுழன்று மேலெழுந்தது.

அந்தச் சுழலும் திருக்கயிலை மாமலையினை நோக்கி வருவதைக் கண்டு அதிசயித்து நின்ற வேளையில் -

சுழன்று வரும் புழுதிப் படலத்தின் ஊடாக, தேவாசுரர்களின் ஓலம் தெளிவாகக் கேட்டது.

என்ன ஆயிற்று இவர்களுக்கு!..

அலை புரண்டு வருவதைப் போல அலறி அடித்துக் கொண்டு வந்த தேவர்களும் அசுரர்களும் - நந்தியம்பெருமானைக் கடந்து செல்ல இயலாமல் அப்படியும் இப்படியுமாக சுற்றிச் சுழன்று தத்தளித்துத் தவித்தார்கள்.

நில்லுங்கள்!.. - அதிகார நந்திக்குக் கட்டுண்டு அனைவரும் நின்றனர்.

ஆயினும் அவர்களது நடுக்கம் நிற்கவில்லை.


ஏன் இப்படி ஓடி வருகின்றீர்கள்?.. மாமலையை வலஞ்செய்து வணங்காமல் இடமும் வலமுமாக ஏன் ஓடித் திரிகின்றீர்கள்!..

அது எங்களை விரட்டிக் கொண்டு வருகின்றது!. - தேவேந்திரன் சொன்னான்..

வழக்கமாக நீங்கள் தானே எல்லாரையும் விரட்டிக் கொண்டு வருவீர்கள்!..

நந்தியம்பெருமானே!.. நகைச்சுவைக்கு நேரமா இது?.. ஏதும் அறியாதவரா தாங்கள்!. ஆபத்தான நிலையில் ஐயனின் தரிசனம் காண வந்திருக்கின்றோம்!.

இது சந்தியா வேளை!. ஐயனைத் தரிசனம் செய்வதென்றால் சற்று நேரமாகும்!.

எண்ணித் துணிக கருமம் என்றார்கள்!.. ஒழுங்காகப் பாடம் படிக்காததன் விளைவு - இப்போது அனுபவிக்கின்றோம்!.. - தேவேந்திரன் தவித்தான்.

நந்தியம்பெருமானின் குரலில் கோபம் கொந்தளித்தது.

மூத்தோர் சொல் அமிர்தம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்களே!.. அதை எல்லாம் சிந்திக்காமல் - உங்கள் இஷ்டத்திற்குக் கடலைக் கடைகின்றேன் - என்று கலக்கி அடித்து பற்பல உயிர்களின் நிம்மதியைக் கெடுத்து விட்டீர்கள்.. உங்களால் சுற்றுச் சூழல் கெட்டு விட்டது தெரியுமா!..

அதற்காகத் தாங்கள் தரும் எவ்விதத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கின்றோம்.. தற்போது எம்மைத் துரத்தி வரும் அந்த கொடிய விஷத்திடமிருந்து காத்தருள வேண்டும்!..

தேவேந்திரனும் மற்றவர்களும் கண்ணீருடன் கதறினர்.

சற்று தூரத்தில் கன்னங்கரேலென்று ஆலகாலம்!..

அதுவும் திருக்கயிலாயத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

தாங்கள் கருணை கூர்ந்து எம்மை கயிலாயத்துள் அனுமதிக்க வேண்டும்!.. - தேவேந்திரனின் கண்களில் நீர் வழிந்தது.

அதிகார நந்திகேஸ்வரனின் முகத்தில் மெல்லிய புன்னகை.

ஒரு நொடி - ஈஸ்வரனைத் தியானித்தார்.

ஐயன் அருள் உண்டு.. அஞ்ச வேண்டாம்!.. மேலே செல்லுங்கள்!..

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..

- என்று - நந்தியம்பெருமானை வணங்கி வழிபட்டவர்களாக - தேவர்களும் அசுரர்களும் திருக்கயிலாயத்தினுள் நுழைந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து -  ஊர்ந்து வந்த வாசுகி - நந்தியம்பெருமானக் கண்டு தொழுது வணங்கியது.

வளம் பெறுவாய்!.. வருந்தாதே வாசுகி!.. - என்று மனம் இரங்கினார் - நந்தி..

திருக்கயிலையினுள் - வாசுகி பிரவேசித்த நிலையில் -

கருங்கனல் என உருத்திரண்டு - தேவாசுரர்களைத் துரத்திக் கொண்டு வந்த ஆலகாலம் - நந்திகேஸ்வரனின் முன் நின்று சுற்றிச் சுழன்றது

பொற்பிரம்பினை ஓங்கியவாறு - ஹூம்!.. - என அதட்டினார்.

பேச்சு மூச்சற்று - அடங்கி நின்றது ஆலகாலம்.


காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி!..

திருமாமணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்த அம்மையப்பனைக் கண்டதும் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது - தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்!.

வலம் வந்து வணங்கித் தொழுதனர் அனைவரும்!..

பேசுதற்கு மொழியின்றி கதறி அழுதான் தேவேந்திரன்..

அம்மையும் அப்பனும் - அஞ்சேல்!.. - எனப் புன்னகைத்தனர்.

எனினும் தமது ஆற்றாமையை முறையிட வேண்டி - கைகட்டி வாய் பொத்தி நின்றான்.

எல்லாவற்றையும் அறிந்திருந்த எம்பெருமான்-

சுந்தரா!.. - என்று திருவாய் மலர்ந்தார் .

வெள்ளிப் பளிங்கு என விளங்கிய பனிப் பாறைகளுக்குள்ளிருந்து ஈசனின் பிரதி பிம்பமாக - சுந்தரர் வெளிப்பட்டார்.

அவரது திருக்கரத்தினில் திருநீற்று மடல்!..

சிவதரிசனம் செய்த அனைவருக்கும் திருநீறு வழங்கினார்.

தேவேந்திரனுக்கு சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது.

ஒருக்கால் அமிர்தம் கிடைத்து அதனை உண்டாலும் - அதற்கு அடுத்த நிலை இப்படித்தானே!.. அதை ஏன் நாம் சிந்திக்க மறந்தோம்!..

சொல்லாமல் சொல்லுரைத்த சுந்தரேசா!.. சொக்கநாதா!.. - என மருகினான்.

மந்திரமாவதும் தந்திரமாவதும் நீறல்லவா..
வேதத்தில் உள்ளதும் வெந்துயர் தீர்ப்பதும் நீறல்லவா!..

முத்தி தருவதும் முனிவர் அணிவதும் நீறல்லவா..
ஓதத் தகுவதும் உண்மையில் உள்ளதும் நீறல்லவா!..

பூச இனியதும் புன்மை தவிர்ப்பதும் நீறல்லவா..
வருத்தம் தணிப்பதும் வானம் அளிப்பதும் நீறல்லவா!..

பயிலப் படுவதும் பாக்கியமாவதும் நீறல்லவா..
ஏல உடம்பிடர் தீர்ப்பதும் இன்பம் தருவதும் நீறல்லவா!..

மெய்ப்பொருளைக் கண்டு கொண்ட தேவேந்திரன் உணர்விழந்தவனாக அம்மையப்பனின் திருவடித் தாமரைகளின் வீழ்ந்தான்.

சுந்தரா!.. அவ்விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக!.. - ஈசன் பணித்தார்.

உத்தரவு!.. - வெண் பளிங்கிலிருந்து வெளிப்பட்ட சுந்தரர் விரைந்தார்.

மறு விநாடி - அவரது கைக்குள் -  ஆலகாலம்!..

கருநாவற் பழத்தைப் போல ஆலகாலத்தை தமது கையினில் ஏந்தி வந்தார்!..

அங்கே திரண்டிருந்த அனைவரும் அச்சத்துடன் நின்றிருந்தனர்.

அன்னை சிவகாமசுந்தரியின் மடியில் செவ்வேள் குமரன் மழலை மொழிந்து கொண்டிருந்தான்..


சுந்தரர் கொணர்ந்த ஆலகாலம் - இப்போது எம்பெருமானின் திருக்கரத்தில்!..

இதனை என்ன செய்யலாம்!.. - எம்பெருமான் திருமுகத்தில் புன்னகை!...

அம்பிகை பார்த்துக் கொண்டிருந்த போதே - ஆலகாலமாகிய கொடுவிடத்தை
பெருங்கருணையோடு - ஐயன் தானுண்டார்..

அதிர்ச்சியைத் தாங்க மாட்டாதவராக துள்ளிக் குதித்தார் - நந்தி!..

அண்ட பகிரண்டங்களும் அதிர்ந்தன. கோள்கள் தடம் மாறித் தவித்தன.

ஆ.. ஆ!.. - என பெருத்த ஆரவாரம் எழுந்தது.

ஐயன் - விஷம் உண்டதைக் கண்ட வாசுகி மயங்கி வீழ்ந்தது.

அருகிருந்த அம்பிகை - அபிராமவல்லி - அங்கயற்கண்ணி -
கருந்தடங்கண்ணி - செவ்வரியோடிய சிவகாமசுந்தரி -
தனது செவ்விழிகள் மேலும் சிவக்க பதற்றத்துடன் எழுந்தாள்!..

நிசப்தம்!.. எங்கும் நிசப்தம்!..

அடுத்து என்ன நிகழும்?.. 
-: வாய் பேச்சற்றுக் கிடந்தன வானகமும் வையகமும் :-

திருச்சிற்றம்பலம் 
* * *

15 கருத்துகள்:

  1. ஒவ்வொரு நிகழ்வும் சொன்ன விதம் பரவசம் + திகிலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. அன்பின் செந்தில் குமார்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எத்துனை அருமையான நடை. எனக்கு வேறு எதும் சொல்ல தெரியவில்லை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மகி பாலசந்திரன்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிவராத்திரி நாளை! கைலாய தரிசனம் இன்று கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! நிகழ்வுகள் அணைத்தும் அருமை! ந்டை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிவ பெருமான் ஆலகால விஷம் உண்ட கதைப் பகிர்ந்தவிதம் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஒவ்வொன்றும் அடுத்து என்ன நிகழும் அடுத்து என்ன நிகழும்ன்னு படிக்க காத்திருக்க வைக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  6. அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிடுகிறது.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..