நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 31, 2014

மார்கழிக் கோலம் 16

குறளமுதம்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (039)

அறவழியில் வாழ்வதனால் அதன் பயனாக வருவதுதான் இன்பம்.
அதை விடுத்த மற்றெல்லாம் எந்தஒரு புகழும் இல்லாதவை.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 16



நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே நீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
தேரழுந்தூர்


மூலவர் - ஸ்ரீதேவாதிராஜன்
உற்சவர் - ஆமருவியப்பன்
தாயார் - செங்கமலவல்லி
தீர்த்தம் - தர்சன புஷ்கரணி, காவிரி
ஸ்ரீ விமானம் - கருட விமானம்

ப்ரத்யட்க்ஷம் - அகத்தியர், காவிரி, கருடன்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்

உபரிசரவஸ் என்பவன் - தனது தேர் வானில் வரும் போது - அதன் நிழல் எதன் மீதெல்லாம் படுகின்றதோ அதெல்லாம் கருகிச் சாம்பலாகிப் போகும்படியான வரத்தைப் பெற்றிருந்தான்.

இப்படி ஒரு வரத்தை எங்கிருந்து பெற்றான் எனத் தெரியவில்லை..

மற்ற உயிர்களின் துன்பத்தை ரசித்து மகிழ வேண்டும் என கொடூர எண்ணம் அவனுக்கு!..

தான் பெற்ற வரத்தை சோதித்துப் பார்க்க முனைந்த அவன் விமானத்தில் ஏறி பறந்தான்.

இவன் மேலே பறந்த போது - பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களின் மேல் விமானத்தின் நிழல் பட்டது. வரத்தின் தன்மையால் - பசுக்கள் கதறித் துடித்தன.

பசுக்களின் கதறலைக் கேட்ட ஹரிபரந்தாமன் - சினங்கொண்டு - தேரின் நிழலில் தன் கால் விரலை வைத்து அழுத்தினான்.

அந்த அளவில் - வானில் பறந்து கொண்டிருந்த தேர் பூமிக்கு இறங்கி மண்ணுள் அழுந்தி - புதையுண்டு போனது. அந்தக் கொடூரனின் அகந்தையும் அத்துடன் அழிந்தது.

தேர் அழுந்தியதால் - தேரழுந்தூர் என்பது பெயராயிற்று.

ஒரு முறை பெருமாளும் சிவபெருமானும் பொழுது போகவில்லை என்று சொக்கட்டான் ஆடினர்.

இந்த விளையாட்டுக்கு பார்வதி நடுவராக இருந்தாள். சொக்கட்டான் காய் உருட்டும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் - பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறினாள் - அம்பிகை.

அதனால் சினம் கொண்ட சிவபெருமான் - அம்பிகையை பசுவாகக் கடவது !.. - என்று சபித்து விட்டார்.

பசுவாக பூமிக்கு வந்த அம்பிகைக்குத் துணையாக - லக்ஷ்மியும் சரஸ்வதியும் வந்தனர்.

இவர்களை மேய்ப்பவராக -  பெருமாளும் பூமிக்கு வந்தார்.

ஆமருவியப்பன் என திருப்பெயர் கொண்டு இத்தலத்தில் அருளாட்சி செய்கின்றார்.

அம்பிகைக்கும் சாப விமோசனம் ஆகும்போது - இடையனாகிய பெருமாளும் பசுவாகிய அம்பிகையும் காவிரியில் நீராடியதாக ஐதீகம்.

எனவே -  மூலஸ்தானத்தில் ஸ்வாமியை வணங்கியவாறே காவிரியும் உடன் இருக்கின்றாள்.


மூலவர் தேவாதிராஜன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக சேவை சாதிக்கின்றார். வலது புறம் பிரகலாதனும் இடது புறம் கருடனும் இருக்கின்றார்கள்.

நரசிங்கமாக நின்ற ஹரிபரந்தாமன் - பிரகலாதனுக்கு சாந்த ரூபத்தினைக் காட்டியும் அவனுக்கு அச்சம் குறைந்தபாடில்லை.

எனவே - ஆமருவியப்பனாக காட்சி நல்கி தன்னருகில் இருத்திக் கொண்டதாக ஐதீகம்.

இந்திரன் கொடுத்த விமானத்தை - கருடன் பெருமாளுக்கு சமர்ப்பித்ததால் - கருடனும் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியம் பெற்றான்.

ஆநிரை மேய்க்க வந்த அமரர் கோனுடன் உபய நாச்சியார்கள்..  ஆமருவியப்பனின் முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் கொள்ளை அழகு.

ஆமருவியப்பன் திருச்சந்நிதியில் மார்கழி பகல் பத்து உற்சவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மங்கல வைபவத்தின் திருக்காட்சிகளைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்..










படங்களை வழங்கிய ஸ்ரீமதி ராதா வாசன் அவர்களுக்கு அன்பின் வணக்கமும் நன்றியும் உரியன.

மேலும், தரிசனம் கண்டு களிக்க - தேரழந்தூர் பகல் பத்து உற்சவம்.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்கள்.

திருவாழ்மார்வந்தன்னைத் திசைமண்ணீரெரிமுதலா
உருவாய் நின்றவனை ஒலிசேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென்அழுந்தையில் மன்னிநின்ற
கருவார்கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே!..(1604)

நிலையாளாக என்னை உகந்தானை நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்
அலையாரும் கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே!.. (1605)
பெரிய திருமொழி/ஏழாம் பத்து/ஆறாம் திருமொழி.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 15



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!.. 
* * *

திருக்கோயில்
அழுந்தூர்

இறைவன் -  வேதபுரீஸ்வரர்
அம்பிகை - சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் - வேத தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம், சந்தனம்

தலப்பெருமை

வேதங்களும் தேவர்களும் வணங்கி நின்ற திருத்தலம்.

ஸ்வாமி சுயம்பு மூர்த்தி. ஆதியில் இத்தலம் சந்தன வனம் எனப்பட்டது.

ஒருமுறை ஐயனும் அம்பிகையும் சொக்கட்டான் விளையாடினர்.

இப்படியும் அப்படியுமாக காய் நகர்த்துவதில் வாக்குவாதம் மூண்டது.

அதற்கப்புறம் கேட்கவும் வேண்டுமோ!..

ஈசனின் கோபத்தினால் - அம்பிகை பசுவாகப் பிறந்தாள்..

இதையறிந்த ஹரிபரந்தாமன் - தன் தங்கையின் மீது இரக்கம் கொண்டு இடையனாகத் தோன்றியருளினார்.


இப்படி அம்பிகை பசுவாகவும் பெருமாள் இடையனாகவும் தோன்றிய திருத்தலமே - சந்தன வனம்!..

தன் நினைவை மறந்து அம்பிகை பசுவாக விளங்கினாள்.. அன்புடன் அதனை அங்கும் மேய்த்து பராமரித்து பாதுகாத்துக் கொண்டிருந்தான் பரந்தாமன்.

மஹாலக்ஷ்மியும் சரஸ்வதியும் தேவ கன்னியரும் கூட பசுக்களாக உருமாறி அம்பிகையுடன் துணைக்கு இருந்தனர்.

சாப விமோசனம் ஆகுங்காலம் வந்தது.

பசு மேய்ந்து கொண்டிருந்த போது குளம்பு பதிந்த இடத்தில் - பசுவின் பதி - பூமியைப் பிளந்து கொண்டு லிங்க வடிவாக வெளிப்பட்டார்.

வெருண்ட பசுவை - வேதநாயகன் சாந்தப்படுத்தி - மீண்டும் பழைய நினைவுகளைத் தந்தருளினார்.

பசுவுடன் நின்று கொண்டிருந்த பரந்தாமன் -
தன் சகோதரிக்கு சாப விமோசனம் அருளுமாறு வேண்டினார்.

ஈசனும் காவிரியில் நீராடும்படி - பணித்தார்.

அதன்படி - பரந்தாமன் பசுவைக் காவிரியில் நீராட்டி - தானும் நீராடினார்.

அம்பிகை தன் வடிவம் பெற்று சௌந்தர்யநாயகியாகப் பொலிந்தாள்.

காவிரிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை..

கன்னிகையாக வெளிப்பட்டு பரந்தாமனையும் சௌந்தர்ய நாயகியையும் வலம் வந்து வணங்கினாள்..

உத்தால விருட்சத்தின் கீழ் பரதமுனி தவம் இருக்கின்றார். அம்பிகை தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று. அவரது தவத்தினை நிறைவு செய்து மகளாக வளர்க!..  யாம் வந்து ஆட்கொள்வோம்!.. - என்று பரமன் அருளினார்.

அதன்படியே - அனைத்தும் நிகழ - உரிய காலத்தில் பெருமான் அம்பிகையை ஆட்கொள்ளும் பொருட்டு எழுந்தருளினார்.

அம்பிகையோ - முறைப்படி பெண்கேட்டு வந்து என்னை ஏற்றுக் கொள்க!.. - என மொழிந்தாள்..

உலகோருக்கு உணர்த்திய நீதியாக நந்தியம்பெருமானின் தலைமையில் மகரிஷிகளும் தேவகணங்களும் வந்திருந்து பெண்கேட்டு - மங்கலகரமாக தேவியின் திருமணம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

அம்பிகை பசுவாக வந்தபோது இடையனாக வந்த பரந்தாமன் ஆமருவியப்பன் என இங்கேயே கோலங்கொண்டார்.

தேரழுந்தூர் பெருமாள் கோயிலில் ஆமருவியப்பனுடன் பசுவும் எழுந்தருளி இருப்பது சிறப்புக்குரியதாகும்.

பெருமாள் நீராடியதால் மகிழ்ச்சியடைந்த காவிரி - சந்நிதியில் பெருமாளை வணங்கிவளாக விளங்குகின்றாள்.


பின்னொரு சமயம் -  வேதபுரீசருக்கு - அகத்திய முனிவர் வழிபாடு செய்து கொண்டிருந்த வேளையில் - அதை மதிக்காமல் ஊர்த்துவ ரதன் எனும் அரசன் ஒருவன் வானில் விமானத்தில் சென்றான்.

பிழையான அந்தச் செயலால் - விண்ணில் பறந்து கொண்டிருந்த விமானம் மண்ணில் இறங்கியதோடல்லாமல் - தேர்ச் சக்கரங்கள் மண்ணுக்குள் அழுந்தி நின்றன.

தேர் அழுந்தி நின்றதால் - தேரழுந்தூர் என்று வழங்கப்படுகின்றது.

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம். மிகப்பழைமையான திருத்தலம்..

அகத்திய மகரிஷியுடன் காவிரி வணங்கிய திருத்தலம்.
அகத்திய மாமுனிவருக்கும் காவிரிக்கும் சந்நிதிகள் உள்ளன.

தேரழுந்தூரில் தான் கவிச்சக்ரவர்த்தி கம்பர் அவதரித்தார்.

சித்திரையின் நிறைநிலவு நாளைப் பத்தாம் நாளாகக் கொண்டு தேரோட்டத்துடன் பெருந்திருவிழா நடைபெறுகின்றது. தவிர சிவாலயங்களில் நிகழும் அனைத்து விசேஷங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.

மாசி மாதத்தின் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களும் மாலையில் சூரிய பூஜை நிகழ்கின்றது. மாலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் ஈசனடியைத் தழுவி வழிபடுகின்றான்.

மேற்கு நோக்கி விளங்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு நேரெதிரில் ஆமருவியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறையிலிருந்து தேரழுந்தூருக்கு பேருந்துகள் இயங்குகின்றன. 

திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம். திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையில் அழுந்தூரைக் குறித்தருள்கின்றார்.

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் இவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கென நீ நினையே!.. (2/20)
திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்.
* * *

16 கருத்துகள்:

  1. தேரழுந்தூர் பற்றிய சிறப்புகளை அறிந்தேன் ஐயா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான படங்களுடன் தொகுப்பு அழகுசேர்க்கின்றதுமார்கழிக் கோலத்தில்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. அய்யாவிற்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. வணக்கம் ஐயா!

    எங்கும் மங்கலம் பொங்கப் புத்தாண்டு பொலிய வேண்டி
    உளமார வாழ்த்துகிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. அருமையான படங்கள். கோவில்கள் பற்றிய விளக்கங்களும் நன்று.....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. தேரழுந்தூர் பெருமாள், சிவன் கோவில்கள் இரண்டும் முன்பு தரிசனம் செய்து பலவருடங்கள் ஆகி விட்டது. உங்கள் பதிவில் தரிசனம் கிடைத்து விட்டது, மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..