நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 26, 2014

ஆனித் திருமஞ்சனம்

கோயில் என்று  வழங்கினாலே சைவத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலம் ஆகிய  நடராசப் பெருமானின் திருக்கோயிலைத்தான் குறிக்கும். 

திருஊரின் திருப்பெயர் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தபடியால் - தில்லை. 
திருக்கோயிலின் திருப்பெயர் திருச்சிற்றம்பலம். 

இன்று ஊர்ப்பெயராகிய தில்லை வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது.


திருக்கோயிலின் பெயராகிய  திருச்சிற்றம்பலம் - சிற்றம்பலம் - என உருமாறி சிதம்பரம் என்றாகி விட்டது. ஆனால் - 

மூல மூர்த்தியோ அன்று முதல் இன்று வரை என்றும் மாறாத பாங்கினனாக, 

''..என்று வந்தாய்!.. எப்படி இருக்கின்றாய்!..'' - என நலம் விசாரிக்கின்றான். 

இந்த நலம் விசாரிப்பினை அப்பர் பெருமான் - நமக்கு அறிவிக்கின்றார்.

ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்எனும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே!..(4/81/2)

இப்படி அன்புடன் நலம் கேட்டு அறியும் ஐயனின், திருமுகத்தைப் பார்த்துக் கொண்டியிருப்பதற்காக -

காலந்தோறும் மனிதப் பிறவியாக பிறந்து கொண்டேயிருக்கலாம் என்று அப்பர் ஸ்வாமிகள் ஆவலுடன் பாடுவதும் - அதனால் தானே!..

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே!..
(4/81/4)


புவி எங்கிலும் இருக்கும் சிவாலயங்கள் அனைத்திலும் அர்த்த ஜாம வழிபாடு முடிந்தபின் அங்குள்ள சிவகலைகள் அனைத்தும் திருச்சிற்றம்பலத்தின் மூலஸ்தான சிவலிங்கத்தில் ஒடுங்கி - பின் உஷத் காலத்தில் விரிந்து எழுந்து பரவுவதாக ஐதீகம். 

மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம் - எனவும், உருவம், அருவம், உருஅருவம் - எனவும் குறிக்கப்படும் தாவர ஜங்கம நிலை.  அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தும் இதற்குள் அடக்கம். 

அப்படி எனில் - எந்நேரமும் சிவகலைகள் ஒடுங்குவதும் விரிவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது - எனப் பொருள்!.. 

இதன் காரணமாகவே - சிதம்பரம் அநாகத சக்ரம் எனும் இருதய ஸ்தானமாகக் குறிக்கப்படுவது.

மூலாதாரம்  - திருவாரூர்
ஸ்வாதிஷ்டானம் - திருஆனைக்கா
மணிபூரகம் - திருஅண்ணாமலை 
அநாகதம் - சிதம்பரம் (இருதய ஸ்தானம்)
விசுக்தி - திருக்காளத்தி  
ஆக்ஞா - காசி
சஹஸ்ராரம் - திருக்கயிலை
துவாதச சாந்தப்பெருவெளி - மாமதுரை

நுரையீரலின் சுவாசமும் இதயத்தின் துடிப்பும் இரத்த ஓட்டமும்  எப்போதும் இயங்கிக் கொண்டேயிருப்பதன் திருக்குறிப்பு தான் - திருச்சிற்றம்பலம்!.. 

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஈசனின் ஆனந்த நடனம் ஓய்வதே இல்லை!.. என ஆன்றோர்கள் குறிப்பது இதைத்தான்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என நால்வரும் திருப்பதிகம் பாடியருளிய திருத்தலம் சிதம்பரம்.


ஸ்ரீ சிவகாமசுந்தரியுடன்  ஸ்ரீ நடராஜப் பெருமான் அருளும் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நேற்று (ஜூன்/25) காலை பத்து மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அம்பிகையும் ஐயனும் வீற்றிருக்கும்  சித்சபையின் எதிரில் அமைந்துள்ள கொடிமரத்தில் - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - மங்கள வாத்யங்கள் முழங்கிட, ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ கோஷத்துடன் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. 

பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவுடன் - ஆனித் திருமஞ்சனத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும். 

ஜூன்/26 இரவு வெள்ளி சந்திர பிரபையில் பவனி. 
ஜூன்/27 இரவு தங்க சூர்ய பிரபையில் பவனி. 

ஜூன்/28 இரவு வெள்ளி பூத வாகனத்தில் பவனி. 
ஜூன்/29 இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி. 

ஜூன்/30 இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. 
ஜூலை/01 இரவு தங்க கயிலாய வாகனத்தில் பவனி. 

ஜூலை/02 மாலை தங்க ரதத்தில் ஸ்ரீபிக்ஷாடனர் பவனி. 
ஜூலை/02 மகம் - மாணிக்க வாசகர் குருபூஜை

ஜூலை/03 அதிகாலை 4.15 மணிலிருந்து 4.45 மணிக்குள், ஸ்ரீநடராஜப் பெருமான் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் திரு உலா வந்தருளல்.


மாலை 5.30 மணியளவில் தேரிலிருந்து ராஜ சபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளல்.  இரவு ஏக கால லட்சார்ச்சனை நிகழும். 
 
ஜூலை/04 அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னை சிவகாமிக்கும், நடராஜப் பெருமானுக்கும் ஆனி திருமஞ்சனம் (மகா அபிஷேகம்). காலை பத்து மணிக்கு சித்சபையில் பூஜை. 

பஞ்ச மூர்த்தி உலா நிகழ்ந்த பின் - மதியம் 12 மணிக்கு மேல் ஆனந்தத் தாண்டவ தரிசனம். 

ஐயனும் அம்பிகையும் சித்சபை பிரவேசம். மகா தீபாராதனை.

ஜூலை/05 பஞ்ச மூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் மங்கலகரமாக உற்சவம் நிறைவடைகின்றது. 

ஆனி உத்திர நட்சத்திரத்தன்று சகல சிவாலயங்களிலும் சிவகாம சுந்தரிக்கும் நடராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.


செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் 
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற 
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே!..(1/80)
திருஞானசம்பந்தர்.

சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே!..(4/81) திருநாவுக்கரசர்.

தில்லைச் சிற்றம்பலத்துள் நடம் ஆடுதற்கு - ஐயன்  எடுத்திட்ட திருப்பாதம்  அன்றோ நம்மை ஆட்கொண்டது.

குஞ்சித பாதம் என்பது தூக்கிய திருவடி.  

ஐயன் ஆடுதற்கு எடுத்திட்ட திருப்பாதம் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவை அழுத்தும் பாதம் - என்பர் பெரியோர்.

தேவரொ டாடித் திருஅம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் 
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
திருமூலர்

சிவாய திருச்சிற்றம்பலம்
* * * 

10 கருத்துகள்:

  1. நல்ல விசயங்களை இவ்வளவு அழகாக, தெளிவாக, பதிவிடும் தங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களின் வருகையும் வேண்டுதலும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஒவ்வொரு விளக்கும் மிகவும் அருமை... அறிந்து கொள்ள வேண்டியது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உங்கள் விளக்கங்கள் அருமையாய் பதிவாகியுள்ளது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. கடந்த பல ஆண்டுகளாகச் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழாவின் ஏதாவது ஒரு நாளில் இருப்பது வழக்கம். இந்த ஆண்டும் திருமஞ்சனப் பத்திரிக்கை வந்தது. ஆனால் இம்முறை எங்கள் பயணம் திருவிழா முடிந்த பிறகே இருக்கும் இந்நேரத்தில் அங்கில்லாத குறை உங்கள் பதிவைப் படிக்கும்போது குறைகிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு நன்றி..
      இனிய கருத்துரை கண்டு மனம் நிறைவாகின்றது. மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. அன்புள்ள

    வணக்கம். தங்களின் வலைப்பதிவில் கருத்துரைக்கிறேன். காணாமல் போகிறது.(இது மூன்றாவது முறை).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. வணக்கம்..
      தாங்கள் எனது தளத்தினைப் பார்வையிடுகின்றீர்கள் என்பதே எனக்குப் பெருமை..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..