நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 15, 2013

சிவகாமியின் செல்வன்

கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர் - திருக்குறள்.

தமிழர் தம் முகத்தில் புண்கள் இருக்கக்கூடாது என  - எல்லோருக்கும் கல்வி - அதுவும் இலவசக் கல்வி வழங்கிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று.


வாழ்நாள் முழுதும் மக்கள் நலனைக் குறித்த சிந்தனையிலும் செயலிலும் ஈடுபட்ட பெருந்தகை.

ஒன்பது ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக் காலத்தைத் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்கின்றார்கள் - அரசியல் வல்லுநர்கள். 

எளிய குடும்பத்தில் பிறந்த அவர் சாதித்தவை ஏராளம். ஏராளம்.

1903 ஜுலை 15ஆம் நாள்  விருதுநகரில் திரு. குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மையார் தம்பதியர்க்கு - தமிழகம் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர். குல தெய்வமான காமாட்சியம்மனின் பெயர் - காமாட்சி என சூட்டப்பட்டது. அன்புக்கும் பாசத்துக்கும் - ஒரு தங்கை - நாகம்மாள் என்று பெயர்.

குமாரசாமி நாடார் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். எளிய குடும்பம். 

அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கைப் பயணத்தில் பேரிடர் வந்துற்றது. குமாரசாமி நாடார் காலமானார். தந்தையை இழந்ததனால் - பள்ளிப் படிப்பை மேற்கொண்டு தொடர இயலவில்லை.  

தன் தாய்மாமன் கடையில் வேலை கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பாரத தேசமெங்கும் கனன்று கொண்டிருந்த விடுதலைப் போராட்ட வேள்வியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது பதினாறு.

தீரர் சத்தியமூர்த்தி அவர்களைத் தம் அரசியல் குருவாகக் கொண்ட காமராஜர்  - கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்காரம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு  என - போராட்டங்களில் ஈடுபட்டு  - கல்கத்தா அலிப்பூர் சிறையிலும் வேலூர் சிறையிலும் அமராவதி சிறையிலும் கழித்த காலத்தில் தான் - புத்தகங்களை வாசித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். 


காமராஜர் - பொறுமை,  தியாகம்,  சலியாத உழைப்பு,  தன்னலமற்ற தொண்டு  - ஆகிய நல்ல குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். அதனாலேயே உயர்ந்த நிலையை அடைந்தார்.

1952-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டு காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டில்  காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.


1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 

படிக்காத மேதையாகிய பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.   எல்லோருக்கும் இலவசக் கல்வி. பட்டி, தொட்டிகள் எங்கும் பள்ளிகள்.  மாணவர்க்கு மதியஉணவு மற்றும்  சீருடைகள்.


இவையெல்லாம் - தான் பெறமுடியாத கல்வியை -  எல்லோரும் பெற வேண்டுமெனக் கருதிய  காமராஜர் -  தமிழகத்தில் நடைமுறைப்படுத்திய நற்செயல்கள்.

கல்வி கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது என்று துமா? நாட்டில் பஞ்சம், பசி,  வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கிட  காமராஜர். திட்டங்கள் தீட்டி -  நாட்டில் பற்பல தொழிற்சாலைகளை ஏற்படுத்தியதோடு தொழிற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.


காமராஜர் செயல்படுத்திய சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு - இந்தியாவில் முன்னணியில் நின்றது. 
 
1957 – பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று  காமராஜர்  மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.


ஒன்பது ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த திட்டத்தின் மூலம்  - தானே முதல்வர் பதவியைத் துறந்தார்.

காமராஜர் - கல்விக்கும், தொழிலுக்கும் - செய்த சாதனைகள் சொல்லில் அடங்காதவை. அத்தனையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

ராஜாஜி - தமிழக முதல்வராக இருந்தபோது - நிதிநிலையைக் காரணம் காட்டி -

இழுத்துமூடிய 6000 பள்ளிகளையும் - புதியதாக 12000 பள்ளிகளையும், தனது ஆட்சிக்காலத்தில் திறந்தார் என்றால் - காமராஜர் பாதம் தொட்டு வணங்க வேண்டாமா!.. 

மாத்தூர் தொட்டிப் பாலம்
காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1962ல் தொடங்கப் பெற்று 1969ல் முடிக்கப்பட்ட தொட்டிப் பாலம். 104 அடி உயரம் 1204  நீளமுடைய இந்தப் பாலம் தெற்கு ஆசியாவின் மிகப் பெரியதாகும். நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

தமிழகத்தில் - சாத்தனூர், மேட்டூர், காவிரி டெல்டா, வைகை, பவானி, அமராவதி உள்ளடக்கிய ஒன்பது நீர்பாசனத் திட்டங்கள் அவருடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை.


திருச்சி - பாரதமிகு மின் நிறுவனம், நெய்வேலி - பழுப்பு நிலக்கரி,  அனல் மின் நிலையம்,  குந்தா நீர் மின் திட்டம், சென்னை - மணலி எண்ணெய் சுத்திகரிப்பு, பெரம்பூர் - ரயில் பெட்டித் தொழிற்சாலை, சேலம் - உருக்காலை மற்றும்
கிண்டி, அம்பத்தூர், விருதுநகர், ராணிப்பேட்டை, காட்பாடி, மதுரை, தஞ்சாவூர் - என இருபது இடங்களில் தொழிற்பேட்டைகள். இவையெல்லாம் அவர் பெயரினைச் சொல்பவை.

( தகவல் தொகுப்பில் உதவி- தமிழ் விக்கிபீடியா)

காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார்

''..தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதாகாலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள  உள்ளத்தைப் பெற்றவரே, சகல தர்மங்களையும் நீதிகளையும் நன்குணர்ந்தவரே  - காமராஜர். காமராஜர் மகாபுருஷர்!.. ''

தந்தை பெரியார் 

''..சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர் தான். ஊர்கள் தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில் கூட நிகழாத - இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா!..''

கவியரசர் கண்ணதாசன் 

சொத்து சுகம் நாடார்  சொந்தம் தனை நாடார் 
பொன்னென்றும் நாடார்  பொருளென்றும் நாடார் 
அன்னையையும் நாடார்  ஆசைதனையும் நாடார் 
நாடொன்றே நாடித் -  தன் நலம் ஒன்றும் நாடாத 
நாடாரை நாடென்றார்!..

வாழ்க காமராஜர் திருப்பெயர்!...

14 கருத்துகள்:

  1. காமராசர் பிறந்த நன்நாளில் ஓர் சிறப்புமிகு பதிவு அய்யா. காமராசர் போற்றப் பட வேண்டியவர். பின்பற்றப் பட வேண்டியவர். காமராசர் இல்லையேல் இன்று நாம் ஏது? நமது பள்ளிகள்தான் ஏது?
    காமராசரின் நினைவினைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெருந்தலைவரின் நினைவினைப் போற்றுவோம்!...

      நீக்கு
  2. பெருமைமிகு தலைவரைப் (குரு) பற்றிய சிறப்புக்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப் போல் மீண்டும் நமக்குக் கிடைப்பாரா?...

      நீக்கு
  3. இன்றைய பகிர்வும் குருவைப் பற்றியதே...

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மனதில் நிலைத்துள்ள பெருந்தலைவரின் புகழ் - இலைய தலைமுறைக்கும் சென்று சேர உழைப்போம்!..

      நீக்கு
  4. பெயரில்லா15 ஜூலை, 2013 16:53

    பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிய பதிவின் மூலமாக நல்ல விசயங்களை அறிந்து கொண்டேன். நன்றி...செந்தில் சிவகுருநாதன்///

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மனதில் என்றும் வாழ்பவர் பெருந்தலைவர்!..நன்றி .. செந்தில்!..

      நீக்கு
  5. பெருந் தலைவரின் இத்துணை சாதனைகள் நான் இதுவரை அறியாதது.
    மிக அருமையான பதிவு. நன்றி
    ந.பரமசிவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்காத மேதை அவர்.. எளிமையின் சின்னம் பெருந்தலைவர்..தான் செய்தவற்றை விளம்பரம் செய்து அதன் மூலம் ஆதாயம் தேடிக் கொள்ள விரும்பாதவர். உண்மையான மக்கள் தலைவர்.

      நீக்கு
  6. அன்பின் துரை செல்வராஜ் - கர்ம வீரர் காமராஜின் பிறந்த நாளன்று அவரைப் பற்றிய பதிவிட்டுமை நன்று. பலருக்கும் கல்விக்கண் திறந்தவர். கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பலப்பல சாதனைகள் செய்தவர். அவரால் திறக்கப் பட்ட பள்ளீகளுக்கு கணக்கே இல்லை. பலப்பல தகவலகள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதருள் மாணிக்கம் அவர்தான்!.. அவரைப் பற்றி சிந்திக்க மறந்தார்க்கு ந்ல்ல கதி என்பது ஏது!... நட்புடன் நல்வாழ்த்துகளைப் பசிர்ந்து கொண்ட தங்களுக்கு என் நன்றிகள்!..

      நீக்கு
  7. இவரை போல இனி ஒரு தலைவர் வர போவது இல்லை உங்கள் தளம் அருமையாக உள்ளது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக.. சக்கரக்கட்டி!.. தங்கள் வரவு நல்வரவாகுக!.. தங்களின் அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி!...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..