நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தை அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தை அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 30, 2014

சேர்மன் ஸ்வாமிகள்

 தை அமாவாசை

சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. 

இதனால் - தை மாதத்தின்  அமாவாசை மிகவும் விசேஷமானது.


இறந்த பின்னும் - வாழ்வு தொடர்கிறது என்பது நமது சமய நம்பிக்கை. 

எனவே - முன்னோர்கள் நற்கதி அடையவும், அவர்களின் நல்லாசி வேண்டியும் சந்ததியினர் தர்ப்பணம் செய்கின்றனர்.

திதி நாட்களில்  செய்யும் வழிபாட்டை - அவர்கள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

அமாவாசையில்  - கடற்கரை, ஆறு, திருக்குளங்கள்  இவற்றால் புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.


இறப்புக்கு பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் - பிதுர் கடனை முறையாக சிரத்தையுடன் - அக்கறையுடன் செய்ய வேண்டும் என்பர். 

இதனை வைதீக முறைப்படி என்றில்லாமல் அவரவர் குல வழக்கப்படி  செய்யலாம்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாட்டினை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்களிடம்  வழங்குபவன் சூரியன். அதனால் தான் சூரியனுக்கு பிதுர்காரகன் என்று பெயர்.

பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த குணமுடைய காகத்திற்கு ஒருபிடி உணவிடுவதன் மூலம் தேவதைகளின் நல்லாசியைப் பெற முடியும். 

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீரை அள்ளி விடுவது) மிகுந்த நன்மை தரும்.


புண்ணிய தீர்த்தங்களில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பரிபூரணமாக பெறமுடியும்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது.

மணிகர்ணிகை தீர்த்தம்
இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் - கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி - புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். 

இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர். 

தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். 

வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரையும் சிறப்புடையது.

கன்னியாகுமரி, உவரி, ராமேஸ்வரம், தாமிரபரணிக் கரையில் பாபநாசம் மற்றும் காவிரியின் கரையில் - பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம், திருவையாறு  - இத்தலங்களில் எல்லாம் பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும்.


தை அமாவாசை தினத்தன்று - ராமேஸ்வரத்தில்  ஸ்ரீதர்மசம்வர்த்தனி அம்பாள் சமேதரராக  ஸ்ரீ ராமநாத ஸ்வாமி,  அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரைக்கு எழுந்தருளி  புனித நீராடல் நடைபெறும். 

திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அன்னை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் திருக்கோயில்  ஜோதி மயமாக விளங்கும்.

ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள்

திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் ராமசாமி நாடார் அவர்களுக்கும் சிவனணைந்தாள் அம்மாளுக்கும் இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம். 

வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம்  - இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.

அது முதற்கொண்டு ஏழை எளியோர் தம் துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின்  நாட்டம் சென்றது.

அவரால் நலம் பெற்றவர்கள் அவரை அன்புடன் அருணாசலம் ஸ்வாமிகள் என்றழைத்தனர்.


அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி - அன்றைய ஆங்கிலேய அரசு,

1906  செப்டம்பர் ஐந்தாம் நாள் - ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமகவே முன் வந்து வழங்கியது. 

அது முதற்கொண்டு -  ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார். 

மக்கள் பணியினை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள். தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார். 

தனது வாழ்வு பூரணமாகும் நாளையும் அதன்பிறகு செய்ய வேண்டியதையும் தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார். 

சேர்மன் பதவியினை   1908  ஜூலை  27 அன்று திரும்ப ஒப்படைத்தார். தான் முன்பே கூறியிருந்தபடி -  ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு பூரணம் எய்தினார்.


ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின்  தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது.

ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை - நம்பிவரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார். 

ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. 

எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு தை அமாவாசை தினத்தை ஒட்டி - ஜனவரி 21 அன்று திருக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பத்தாம் நாளாகிய இன்று - மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் மாலை விலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலமும் இரவு சிவப்பு சாத்தி - கற்பகப் பொன் சப்பரத்தில் தரிசனம்.

பதினோராம் திருவிழா நாளை - வெள்ளிக்கிழமை (ஜன. 31)

அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம். காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் பிற்பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம்.

மாலையில் ஏரல் முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி. இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேர்தல்.


பன்னிரண்டாம் நாள் திருவிழாவாக  சனிக்கிழமை (பிப்.1) காலையில் தாமிர வருணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறை நீராடலும்,

பிற்பகல் 12.30 மணிக்கு மகாஅன்னதானமும் நிகழும்.

இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.

திருவிழாவினை முன்னிட்டு தென் மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. 

திருவிழா ஏற்பாடுகளை  பரம்பரை அறங்காவலர் அ.ரா.க.கருத்தப்பாண்டியன் நாடார் அவர்கள் செய்து வருகின்றார்.

குருவே சரணம்.
சிவாய திருச்சிற்றம்பலம்

திங்கள், பிப்ரவரி 04, 2013

தை அமாவாசை

தை மாதம்  27ஆம் நாள் (09.02.2013) சனிக்கிழமை அமாவாசை.

(சனிக்கிழமை மதியம் 3.17ல் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.42 வரை அமாவாசை திதி குறிக்கப்பட்டுள்ளது )

இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில் தான் - மறைந்த முன்னோர்கள் தமது சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்கிறார்கள் என்பது நம்பிக்கை.

எல்லா அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான் என்றாலும் ஆடி அமாவாசை , புரட்டாசி மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் பூமியை -  சந்திரன் வலமாகச் சுற்றி வருவதையும், பூமியும் சந்திரனும் சேர்ந்து சூரியனை வலமாகச் சுற்றி வருவதையும் - நாம் அறிவோம். 

பூமியைச் சுற்றி வரும் சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும்  இடையில் வருகின்ற நாள் அமாவாசை.

பூமியைச் சுற்றி வரும் சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் எதிரில் வருகின்ற நாள் பெளர்ணமி. 

சூரியன் ஆண்மை, ஆற்றல், வீரம் - இவற்றுக்கு அதிபதி. சந்திரன் அழகு, தெளிந்த அறிவு, மகிழ்ச்சி - இவற்றுக்கு அதிபதி.

சூரியனை -  "பித்ரு காரகன்" என்றும், சந்திரனை "மாத்ருகாரகன்" என்றும் ஜோதிடம் கூறுகின்றது. எனவே சூரியனும் சந்திரனும் நமது தந்தை தாய் - என  இந்துக்கள் கருதுகின்றனர்.

எனவே தான், பற்பல நன்மைகளையும் பெருமைகளையும் தருகின்ற சூரிய, சந்திரனை - தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பெளர்ணமி தினங்களில் அவர்களையும்,  குடும்பத்தின் மூதாதையர்களையும் நினைத்தும் வணங்கி வழிபடுகின்றனர்.
புராதன காலம் தொட்டு நம் மக்கள், அமாவாசை அன்று விரதம் மேற்கொண்டு  புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்து இறைவனை வழிபட்டு அந்தணர்களுக்குத் தானம் அளிப்பர். 

விருந்தினர், சுற்றத்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தும் அவர்களுடன்  உடனிருந்து உணவு  அருந்தியும் விரதத்தினை நிறைவு செய்வர். மனமும் வசதியும் உள்ளோர் தம் முன்னோர் நினைவாக - ஏழைகள், ஆதரவற்றோருக்கு வேட்டி, துண்டுகள் வழங்கியும் மகிழ்வர்.
மண்ணுலகினை நீத்த தந்தை, தாயார் நற்கதி அடைதற்பொருட்டும், அவர்  தம் ஆன்மாவினை மகிழ்வித்து ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டித்தால் - பிதுர்கள் மகிழ்வர். அவர் தம் நல்லாசிகளினால் தோஷங்கள் நீங்கி இல்லம் சிறக்கும் என்பது ஐதீகம்.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் தொடர்ந்து திதி கொடுக்க இயலாதவர்கள் , புரட்டாசி மஹாளய அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.

இராமேஸ்வரம் திருக்கோயில்
காசி - கங்கை, இராமேஸ்வரம், வேதாரண்யம் , கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், பாபநாசம் - தாமிரபரணி அகத்திய அருவி தீர்த்தம்,  திருவையாறு , திருவரங்கம் - என வசதியிருந்தால் அத்தலங்களுக்குச் சென்று அங்கே பிதுர்க்கடன்களை நிறைவேற்றலாம். இல்லாவிட்டால், அருகிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் செய்தாலே நலங்கள் நம்மைத் தேடி வரும். 

சில குடும்பத்தில் - மகப்பேறு இன்மை, தீராத  நோய்,   பொருளாதாரச் சரிவு  கடுமையான பிரச்னைகள் என - நிம்மதி இருக்காது. அதற்கு முற்பிறவியின் வினை, முன்னோர் சாபம் - இவைதான் காரணம். இவர்கள் ஒருமுறையாவது வேதாரண்யம் அல்லது இராமேஸ்வரம் சென்று, தர்ப்பணம் செய்து சிவபெருமானை வணங்கி வந்தால், சாபம் தீரும். பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது ஐதீகம்.

தட்சிணாயணம் - தேவர்களுக்கு இரவுப் பொழுது. அந்த நேரத்தில் தம் சந்ததிகளைக் காக்க பிதுர்லோகத்தில் இருந்து வரும் முன்னோர்களை வரவேற்று ஆடி அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச அமாவாசையில் முன்னோர்களுக்கு சிறப்பான தர்ப்பணமும் அன்னதானமும் தரப்படுகின்றது.

உத்தராயணம் - தேவர்களுக்கு பகற்பொழுது.  பிதுர்லோகத்திற்குத் திரும்பும் முன்னோர்களை வழியனுப்பும் விதமாக, தை அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

விண்ணுலகு எய்திய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் -  வடை, பாயசத்துடன் அறுசுவையாக சமைத்துப் படைத்தால் தான், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பதில்லை.

நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து எள்ளும், நீரும் அர்க்யம் கொடுத்து வழிபட்டு வணங்கினாலே அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

(அர்க்யம் - தண்ணீருள் மூழ்கி எழுந்து இரு கைகளாலும் நீரை அள்ளி சூரியனை நோக்கி வணங்கி நீரை மீண்டும் நீரில் விடுதல்.)

என்னதான் வரைந்து  வரைந்து எழுதி - வார்த்தைகளை வார்த்தெடுத்தாலும் ,

நாம் - நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் நம்முடன் வாழுங் காலத்தில் -

அவர்களை அன்புடன் அரவணைத்து ஆதரித்து நாளும் நல்லவிதமாகப் பேசி மகிழ்வித்தாலே போதும். அவர்கள் மனங்குளிர்ந்து விரல்களால் வருடி - விழிகளால் நோக்கினாலே போதும்.

பாவங்களும் பழிகளும் நம்மை விட்டு நீங்கினாற்போல ஆகும். ஆனால் -

அந்த பெரும் பாக்கியம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.

திருச்சிற்றம்பலம்.