நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 05, 2018

திருவீதியுலா 1

தஞ்சை மாநகரின் பாரம்பர்யமிக்க
முத்துப்பல்லக்குத் திருவிழாவும்
கருடசேவைத் திருவிழாவும்
அடுத்தடுத்து வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளன...

திருஞானசம்பந்தப் பெருமானின்
குருபூஜை நாளான வைகாசி மூலத்தன்று (வியாழன் 31/5)
இரவு முத்துப் பல்லக்கு வைபவம் நடைபெற்றது...


மேலராஜவீதியில் உள்ள 
திருஞானசம்பந்தர் மடாலயத்திலிருந்து
ஞானசம்பந்த மூர்த்தியின் திருச்சித்திரம் 
அலங்கார ரதத்தில் எழுந்தருள
திருவீதியுலா நடைபெற்றது...


மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் நம சிவாயவே..(3/22) 
-: திருஞானசம்பந்தர் :- 

ஸ்ரீ ஞானசம்பந்தர் ரதம்
அச்சமயம் மாநகரில் உள்ள
விநாயகர் திருக்கோயில்களில் இருந்தும்
முருகன் திருக்கோயில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகள்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் எழுந்தருளி
நான்கு வீதிகளிலும் திருவுலா நிகழ்ந்தது...

விடியவிடிய நகரின் பலபகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன...

முத்துப் பல்லக்கு வைபவத்தின் ஒரு சில படங்களை
கீழே தரிசிக்கலாம்...


ஸ்ரீ வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில்
ஸ்ரீ சித்தி விநாயகர், கீழராஜவீதி

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்புநாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெல்லாம்
நம்பன் நாமம் நம சிவாயவே.. (3/49)
-: திருஞானசம்பந்தர் :- 


ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி, மேல அலங்கம்
ஆழ்வார் பெருமக்களுள் ஒருவரான திருமங்கையாழ்வார்
யாளி நகர் எனப்பட்ட தஞ்சையம்பதிக்கு வந்தபோது 
கருட வாகனத்தில் ஆரோகணித்து
எம்பெருமான் திருக்காட்சி நல்கினார் என்பது ஐதீகம்...

அந்த வைபவம் நிகழ்ந்த நாள் 
வைகாசி மாதத்தின் திருவோணம்...

அதனால் - வருடந்தோறும் 
வைகாசி மாதத்தின் திருவோண நாளில்
தஞ்சையின் ராஜவீதிகளில் 
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் தேவியருடன் 
கருட வாகனராக எழுந்தருள்கின்றார்...


நேற்றைய தினம் (திங்கள் 4/5) வைகாசி திருவோணம்...

தஞ்சை மாமணிக்கோயில்கள் எனப்படும்
ஸ்ரீ நீலமேகப் பெருமாள்,
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்,
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் - திருக்கோயில்களிலிருந்தும்

மாகரிலுள்ள - ஏனைய பெருமாள் திருக்கோயில்களிலிருந்தும்
கருட சேவை வைபவம் கோலாகலமாக நடைபெற்றது...


இவ்விழாவினை 23 கருடசேவை என்று குறிப்பது வழக்கம்...

இவ்வருடம் மேலும் ஒரு திருக்கோயிலிலிருந்து கருட சேவை புறப்பட 
இந்த ஆண்டு 24 கருடசேவை என்று சிறப்பிக்கப்படுகின்றது... 

இதோ அந்த வைபவம் தங்களுக்காக...

நிகழ்வுகளை வழங்கிய - 
திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

ஸ்ரீ திருமங்கையாழ்வார்



வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்..(0948)
-: திருமங்கையாழ்வார் :- 



திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருள
பெருமான் கருட வாகனத்தில் பின்தொடர்ந்தது கண்கொள்ளாக் காட்சி...


மேலும் சில படங்களை -
தொடரும் பதிவுகளில் காணலாம்...


எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்..(0953)
-: திருமங்கையாழ்வார் :- 

ஓம் 
நமோ நாராயணாய..
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. தஞ்சை கருடசேவை பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் கூட்டத்தை நினைத்துப் போக முடியறதில்லை. இங்கே ஶ்ரீரங்கத்திலும் அப்படித் தான். கூட்டம் என்பதால் சித்திரைத் தேருக்குப் போகலை. மூணாம் வருஷம் போயிட்டு கூட்டத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வரது கஷ்டமாப் போச்சு! இனி எல்லாம் மனசுக்குள்ளே கண்டு திருப்தி அடையணும்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் படப்பகிர்வின் மூலம் அருமையான தரிசனம் கிட்டியது!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    இன்றைய தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் தளத்தில் உள்ள படங்கள் மூலம் அந்த திருவிழாவில் நேரில் கலந்து கொண்ட நிறைவை தருகிறது.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக இனிய தரிசனம்...

    பதிலளிநீக்கு
  6. அந்தியுள் மந்திரம் நமசிவாயவே - முதலில் 'அந்திமக் காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம்' என்று பொருள் கொண்டேன். பிறகு, சந்தியா காலங்களில் ஓதவேண்டிய மந்திரம் நமசிவாய என்று புரிந்துகொண்டேன்.

    இறைவழிபாட்டில் மனம் ஈடுபடுவதற்கும், மறுபிறப்பின்மைக்கும், வீண் செலவுகள் ஏற்படாமல் இருக்கவும், இதற்கு உடனடிப் பலனாகச் சொல்லிய பதிகத்திலிருந்து நீங்கள் போட்டுள்ள, "நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்' பாடல் அருமை.

    கருடசேவை தரிசனம் கண்டுகொண்டேன். அதற்குப் பொருத்தமான, 'பெரிய திருமொழி'யிலிருந்து முதல் பத்தான, 'வாடினேன் வாடி' யிலிருந்து இரண்டு பாடல்களைப் பகிர்ந்தவிதம் மகிழ்ச்சிக்குரியது.

    திருவீதியுலா பதிவு எப்போதும்போல் அருமை.

    பதிலளிநீக்கு
  7. துளசி: படங்கள் அனைத்தும் அருமை. அழகு தமிழ்ப் பாடல்களுடன் திவ்யமான தரிசனம்! வீதியுலா அருமை!

    கீதா: தளம் திறக்க இத்தனை நேரம் ஆயிற்று அண்ணா...

    அந்தியுள் மந்திரம் நமசிவாயவே என்பதை வாசித்ததும் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பாடலான நம்பிக் கெட்டவர் எவரைய்யா உமை நம்பிக் கெட்டவர் உமை நாயகனை பாடல் இதில் பாடும் போது நம்பிக்கெட்டவர் எவரய்யா உமை என்று இறைவனைச் சொல்லுவதாகவும் பின்னர் அடுத்த வரி பாடும் போது உமை நாயகனை திரு மயிலையின் இறைவனை என்று வரும் போது உமை நாயகன் என்று அர்த்தம் படும் படி எழுதியிருப்பதை ரசித்ததுண்டு. இப்பாடலை நான் டிகேஜே பாடிய கேசட்டில் கற்றுக் கொண்டது. இதில் சரணத்தில்....இதே அர்த்தமுள்ள வரிகள்...

    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்ந்தபின் பலனுண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தால்
    அன்று செயலழின் தலம் வரும் பொழுது
    சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்)

    இந்த வரிகளை நான் மிகவும் லயித்துப் பாடுவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அந்தி என்று வந்திருக்க வேண்டும் அன்று என்று வந்துவிட்டது...

    அந்தி செயலழின் தலம் வரும் பொழுது

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அதே போன்று வாடினேன் பாசுரமும் கற்றதுண்டு.

    அருமையான வீதி உலா. கருட தரிசனம் இறை தரிசனம் கண்டோம் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தரிசனம் கண்டேன். இந்தவார ஞாயிறு தஞ்சையில் கருடசேவை என்று எங்கள் உறவினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். தஞ்சை செல்வதாகச் சொன்னார்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..