நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 27, 2017

சப்தமங்கை 3


சப்த மங்கையர் வழிபட்ட தலங்களைப் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன..

இதன் தொடர்புடைய பதிவுகளைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்..

சப்த மங்கை தரிசனம் - 5
 பசுமங்கை...

ஸ்ரீ வராஹி வழிபட்ட திருத்தலம்..


- பசுபதிகோயில் -

எம்பெருமான் உரை செய்தருளிய தலங்கள் ஏழினுள்
நான்கு திருத்தலங்களைத் தரிசனம் செய்தாகி விட்டது - என்ற மகிழ்ச்சியுடன்
ஐந்தாவது திருத்தலத்தினை நோக்கி நடந்தாள் அம்பிகை..

மகிஷாசுர வதத்திற்கு முன்பாக -
வராஹி எனத் திருக்கோலங்கொண்டு
இத்தலத்தில் ஈசனை வழிபட்டு நின்றதை நினைவில் கொண்டாள்..

மெல்லிய புன்னகை அன்னையின் திருமுகத்தில்...


இறைவன் - ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பால்வளநாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காமதேனு தீர்த்தம்

காமதேனு பூஜித்ததாலேயே பசு மங்கை என்னும் திருப்பெயர்..

அத்துடன் ஐராவதமும் சிலந்தியும்
ஈசன் எம்பெருமானைப் பூஜித்து நின்ற
நாட்கள் நினைவுக்கு வந்தன..

எம்பெருமானின் திருமுன் நெக்குருகி அமர்ந்தாள் - அம்பிகை..

சிவ தியானத்தில் ஆழ்ந்தாள்..
அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ஐயன் உடுக்கையினை
ஏந்திய வண்ணம் திருக்காட்சி நல்கியருளினன்..

ஐயனின் அன்பினில் கரைந்தாள் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி..

இந்நாளில் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகின்றது - இத்தலம்..


காமதேனு பூஜித்து தனது சந்ததிக்காக வேண்டி நின்றதால்
கால்நடைகளுக்கு எவ்வித குறையும் வராதவாறு
எம்பெருமானும் அம்பிகையும் காத்தருள்வதாக நம்பிக்கை..

சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியருக்கு
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
அரிவை எனும் திருக்கோலத்தில் தரிசனம் தந்தாள் - அம்பிகை..

சப்த மங்கைத் திருத்தலங்களுள் -
இத்திருக்கோயிலே மாடக்கோயில் ஆகும்..

கோச்செங்கட்சோழருடைய திருப்பணி..

சோழர்களால் கட்டப்பட்டு - பின் வந்த மன்னர்களால் பராமரிக்கப்பெற்ற இத்திருக்கோயிலை மாலிக்காபூரும் அவனுக்குப் பின் வந்தவர்களும் தாக்கிக் கொள்ளையிட்டு அழித்ததாக சொல்லப்படுகின்றது..

நல்லிச்சேரியிலிருந்து கிராம சாலை வழியாக சற்றே வடக்காக
மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது பசுபதிகோயில்..

பசுபதிகோயில் எனப்படும்
ஸ்ரீ பசுபதீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு அருகிலேயே
ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளது..

பசுபதிகோயில் சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஐந்தாவது கோயிலாகும்..

தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் பசுபதி கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்காகச் செல்லும் பிரிவு சாலையில் இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ளது திருக்கோயில்..

தொலை தூர பேருந்துகள் தவிர்த்து -
அனைத்து புறநகர் பேருந்துகளும் பசுபதிகோயிலில் நின்று செல்கின்றன..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசத்திற்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பசுபதிகோயில் வழியாகவே செல்கின்றன..

பசுபதிகோயில் நிறுத்தத்திலிருந்து ஆட்டோக்களில் செல்லலாம்...

கோயில் வழிபாட்டுக்குரிய பொருள்களை
பசுபதிகோயில் கடைத்தெருவில் வாங்கிக் கொள்ளலாம்..

இனி -
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஆறாவது தலமாகிய
தாழமங்கையை நோக்கிச் செல்வோம்...

சப்த மங்கை தரிசனம் - 6
 தாழமங்கை...


ஸ்ரீ மாகேந்திரி வழிபட்ட திருத்தலம்..


சப்த மங்கைத் தலங்களுள் இதுவரை ஐந்தினைத் தரிசித்து விட்டோம்!..
- என்ற சந்தோஷம் அம்பிகையின் மனதில் பொங்கி வழிந்தது..

இனி ஆறாவது திருத்தலம்..

மகிஷாசுர சம்ஹார காலத்தில் மகேந்த்ரியாக தான் வழிபட்டு நின்றது அந்தத் திருத்தலத்தில் என்பதும் நினைவுக்கு வந்தது...

இதோ - அந்தத் திருத்தலம்..

அம்பிகை அந்தத் திருத்தலத்தை நெருங்கியபோது
பூரண நிலவின் பொற்கிரணங்கள் அந்தத் தடாகத்தில் பட்டு
அங்கே தாழை வனத்தில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தின் மீது
பிரதிபலித்துக் கொண்டிருந்தன..

கூடவே தாழை வனத்தின் ஊடாக நாகங்களும்
மனம் போன போக்கில் இழைந்து கொண்டிருந்தன..

அவை அத்தனையும் அம்பிகையைக் கண்ட மாத்திரத்தில்
அஞ்சி நடுங்கி விலகி ஓடிப் போயின..

அம்பிகை மனம் குளிர்ந்தவளாக - சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து
உற்று நோக்கினாள்.. உள்ளக்கிழியில் ஐயனின் உரு எழுதினாள்..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்!..
- என்று பஞ்சாட்சர மந்திரத்தினை மனமார தியானித்தாள்..

அம்பிகையின் தியானத்தில் லயித்த
சகல ஆன்மாக்களும் நற்கதியடைந்து நின்றன..

அம்பிகையின் தியானத்திற்கு வசப்பட்ட எம்பெருமான்
பிறை அணிந்த பேரருளாளனாக திருக்காட்சி நல்கினான்..

கண்ணார் அமுதக் கடலே போற்றி..
கயிலை மலையானே போற்றி.. போற்றி!.

என்று கசிந்துருகி நின்றாள் - அம்பிகை...


இறைவன் - ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீராஜராஜேஸ்வரி
தல விருட்சம் - தாழை
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்..

தட்சனின் சாபத்தால் தனது ஒளியை இழந்து மனம் கலங்கிய சந்திரன்
ஈசன் எம்பெருமானை சதய நட்சத்திர நாளில் சந்தனக் குழம்பினால் திருமுழுக்கு செய்து வழிபாடு செய்து நலம் பெற்றதாக ஐதீகம்..

இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட மாமன்னன் ராஜராஜசோழன் இத்திருக்கோயிலில் ஆத்மார்த்தமாக வழிபாடுகள் இயற்றியதாக சொல்லப்படுகின்றது..

மாதந்தோறும் சதய நட்சத்திரம் மற்றும் பௌர்ணமியின் போது - எம்பெருமானுக்கு சந்தனக்காப்பு செய்வித்தும் 
அம்பிகைக்கு தாழை மடல் சாத்தியும் வழிபடுவோர் 
தாம் விரும்பிய நற்பேறுகளை எய்துவர் என்பது ஐதீகம்.. 

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகை
சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
தெரிவை எனும் திருக்கோலத்தில் தரிசனம் கண்டனர்..

ஐந்தாவது திருக்கோயிலாகிய பசுபதி கோயிலுக்கு நேர் மேற்கே 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது - தாழமங்கை ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் திருக்கோயில்..

இன்றைக்கு தாழ மங்கை எனும் திருக்கோயில் மட்டுமே உள்ளது..

திருக்கோயிலைச் சுற்றிலும் வயற்காடு தான்.. எந்தவொரு வீடும் கிடையாது..

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல
சாலையின் மேற்குப் புறமாக திருக்கோயில் அமைந்துள்ளது..

நெடுஞ்சாலைக்குக் கிழக்காக சந்திர தீர்த்தம் எனும் குளம்..

கோயிலின் வழியாக நகரப் பேருந்துகள் சென்றாலும் 
கோயிலின் அருகில் நிறுத்தப்படுவதில்லை..

ஒன்றரை கி.மீ தொலைவிலுள்ள பசுபதி கோயில் நிறுத்தத்தில் தான் 
நிறுத்தப்படுகின்றன..

அங்கிருந்து திரும்ப நடந்து வரவேண்டும்...

தாழமங்கை திருக்கோயில் எப்போதும் திறந்திருக்காது..

முற்பகலுக்குள் ஒரு காலம் பூஜை நடைபெறுகின்றது..
சாயரட்சையின் போது சற்று அதிக நேரம் திறக்கப்பட்டிருக்கின்றது..

பிரதோஷம், வெள்ளிக்கிழமை, மற்றும் பௌர்ணமி நாட்களில்
மாலை வேளையில் கோயிலுக்குச் செல்வது நலம்..

கோயிலின் அருகில் வீடுகளோ கடைகளோ இல்லாததால்
பூஜைக்கான பொருட்களை பசுபதிகோயிலில் வாங்கிக் கொள்வது உத்தமம்..

அம்பிகையின் துணையுடன் -
நாமும் ஆறு திருத்தலங்களைத் தரிசித்து விட்டோம்...

அடுத்தது ஏழாவது திருத்தலமாகிய - புள்ளமங்கை..
* * *


நலந்தரும் நவராத்திரி வைபவத்தில் - தற்போது
ஸ்ரீ மஹாசரஸ்வதிக்கு உரிய நாட்கள்..

எங்கெங்கும் சிறப்பாக ஆராதனைகள் நடைபெறுகின்றன..


நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்!.. 
- என, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...

ஓம்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அன்னை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என்உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
- கம்பர் -

ஓம் சக்தி ஓம் 
* * * 

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    வாழ்க நலம் வியப்பான செய்தி சேகரிப்புகள்.

    பதிலளிநீக்கு
  2. படித்துத் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. நிறைய இதுவரை அறியாத பல தகவல்களை, நல்ல விஷயங்களை அறிந்துகொண்டோம். 6 தலங்களின் சிறப்பையும் அறிந்து கொண்டோம். ஸப்த மங்கை அடுத்து 7 வது தலமாகிய புள்ளமங்கை பற்றி அறியக் காத்திருக்கிறோம். அருமையாகத் தொடுத்திருக்கினறீர்கள். எவ்வளவு உழைப்பு!!! வாழ்த்துகள். அம்பிகையின் அருள் எல்லோருக்கும் கிடைத்திடட்டும்! வாழ்க நலம்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  4. மேற்கண்ட அனைத்துக் கோயில்களுக்கும் பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. என்னவென்று எழுதுவது நன்றி என்று சொல்வதைவிட

    பதிலளிநீக்கு
  6. அருமை. படங்களோடு படிக்கும்போது சிறப்பாக இருந்தது. முயற்சி எடுத்து ஒவ்வொரு இடுகைக்கும் பொருத்தமான படங்களைச் சேர்க்கிறீர்கள். நல்ல உழைப்பு. வாழ்க.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..