நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

திங்களூர்

இன்று பங்குனி உத்திரம்..

மிகச் சிறப்பான நன்னாள்..

அம்பிகையின் திருமண நாள் என்று புகழப்படும் நாள்..

ஸ்ரீ தர்மசாஸ்தா- மணிகண்டனாக பம்பைநதிக் கரையில் அவதரித்த நாள்..

சிவ - விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் வெகு சிறப்பாக அபிஷேக அலங்கார தரிசனங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன...

பழனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ரங்கம் திருமயிலை முதலான திருத்தலங்களில் பெருந் திருவிழாக்கள் தேரோட்டம் என கோலாகலம்...

இந்த நன்னாளில் சிறப்பானதொரு சிவாலயத்தைத் தரிசனம் செய்வோம்..

திருத்தலம் - திங்களூர்

இறைவன் - ஸ்ரீ கயிலாய நாதர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹன்நாயகி, பெரியநாயகி


தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்..

திருவாக்கு அருளியோர்
திருநாவுக்கரசர், சுந்தரர்

- திருத்தலச் சிறப்புகள் -

சந்திரன் தன் குறை தீர தொழுது வணங்கிய திருத்தலம்..

விடம் தீண்டி இறந்த சிறுவனை திருநாவுக்கரசர் 
மீண்டும் எழுப்பிய திருத்தலம்..

ஸ்ரீ கயிலாய நாதர் 
ஸ்ரீ பெரியநாயகி அம்மன்
முகம் கண்டு அறியாமலேயே அப்பர் ஸ்வாமிகளின் மீது வாஞ்சை கொண்டு தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டு அப்பர் ஸ்வாமிகளின் பெயராலேயே பற்பல அறங்களைச் செய்து வந்த உத்தமர் அப்பூதி அடிகள் வாழ்ந்த திருத்தலம்...

நாளும் கோளும் கூடி வந்த வேளையில்- அப்பூதி அடிகளைத் தேடி வந்து சந்தித்தார் - அப்பர் ஸ்வாமிகள்..

அகமகிழ்ந்த அப்பூதி அடிகள் அன்புடன் அவருக்கு விருந்தளிக்க விழைந்தார்..
அவ்வேளையில் வாழியிலை அரிவதற்குச் சென்ற அவரது மகனை நாகம் தீண்டியது... கடும் விஷத்தால் மகனின் உயிர் பறிபோனது..

அந்த துயரத்தை மறைத்து - அப்பர் ஸ்வாமிகளுக்கு விருந்தளிக்க முற்படும்போது -

உண்மையை அறிந்த ஸ்வாமிகள் மனம் பதறியவராக -

திருப்பதிகம் பாடி - இறந்த மகன் மீண்டும் உயிர் பெற்று எழுமாறு செய்தார்..

அந்த அருஞ்செயல் நிகழ்ந்தது - திங்களூர் திருத்தலத்தில்...

அப்பர் ஸ்வாமிகள் அருளிய திருப்பதிகம் - விடந்தீர்த்த திருப்பதிகம் எனப் புகழப்படுகின்றது...

இத்திருப்பதிகம் எண் அலங்காரமாக அமைந்துள்ளது..

திருப்பதிகத்தின் பத்து பாடல்களிலும் -
ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பயின்று வருகின்றன..

இத்திருப்பதிகத்தினை முறையாகப் பாராயணம் செய்வோரை விஷப் பூச்சிகள் அணுகா.. - என்பது நம்பிக்கை...

இத்திருத்தலம் சூரியனும் சந்திரனும் வழிபடுகின்ற பெருஞ்சிறப்பினை உடையது..

பங்குனி உத்திரமாகிய இந்நாளின் உதயாதி நாழிகையில்
சூரியன் தனது இளங்கதிர்களால் மூலத்தானத்தினுள்ளிருக்கும்
சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

இன்று காலையில் உதயத்தின் போது சூரிய பூஜை நிகழ்ந்திருக்கின்றது..

நாளை பங்குனி மாதத்தின் நிறைநிலா நாள்..
சந்திரன் கீழ் வானில் உதித்தெழும் வேளையில் -
தனது பழி தீர்த்த பரமனின் திருப்பாதங்களைத் தொழுது மகிழ்கின்றான்...

பூரண சந்திரன் தனது பொற்கதிர்களால் - மூலத்தானத்தினுள்ளிருக்கும் சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

முதல் நாள் காலையில் சூரியனும் மறுநாள் இரவில் சந்திரனும்
மூலத்தானத்தினுள் கதிர் பரப்பி வணங்குவதான நிகழ்வு
வேறெங்கும் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

கிழக்கு நோக்கிய திருக்கோயில்.. 
ஆனாலும், கிழக்கு வாசலின் வழியாக திருக்கோயிலினுள் நுழைய முடியாது..

இத் திருக்கோயிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் கிடையாது..

ஏனெனில் - திருக்கோயிலின் வாசலிலேயே சந்திர புஷ்கரணி...

திருக்கோயிலுக்கு தெற்கு வாசலில் தான் ராஜகோபுரம்..

திருச்சுற்றில் விஷம் தீர்த்த விநாயர் சந்நிதி...

தென்திசை நோக்கியவாறு 
பெரிய நாயகி எனப் பேரருள் வழங்கும் பிரஹந்நாயகி...

அருள் பொழியும் ஐயன் ஸ்ரீ கயிலாய நாதன்...

இத் திருச்சந்நிதியில் தான் -
அப்பூதி அடிகளின் மகன் மீண்டெழுவதற்காகத் 
திருப்பதிகம் பாடியருளினார் - அப்பர் ஸ்வாமிகள்...

விஷம் தீர்ந்த மகன் விளையாட்டுப் பிள்ளையாகத் துள்ளி எழுந்தது
இந்தச் சந்நிதியில் தான்..

மேலும் - திருச்சுற்றில் அழகே உருவாக
வள்ளி தேவசேனா சமேதரனாக திருக்குமரன்...

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் சண்டிகேஸ்வரியும்
ஸ்ரீ துர்கையும் எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீ வயிரவரும் விளங்குகின்றனர்...

மேலும் சிறப்புக்குரியதாக உள் மண்டபத்தில்
அப்பூதி அடிகளும் அவரது இல்லத்தரசி அருள்மொழி அம்மையார்.. 

இவர்களுடன் அவர்தம் மகன்களாகிய பெரிய திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு கூப்பிய கரங்களுடன் விளங்குகின்றனர்..

அப்பர் ஸ்வாமிகள்
உச்சிக் குடுமியுடன் உழவாரப் படை ஏந்திய 
திருக்கோலத்தினராக அப்பர் ஸ்வாமிகள்..

கருணை ததும்பும் திருமுகம்..
நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..

ஸ்ரீ சந்திரன்
திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் 
சற்றே தெற்காக மேற்கு நோக்கிய வண்ணமாக
தனிச் சந்நிதியில் சந்திரன்...

பங்குனி நிறை நாளன்று சந்திரனின் கதிர்கள் மூலத்தானத்தில் படர்கின்ற வேளையில் சிவ சந்நிதியிலும் அம்பிகையின் சந்ந்தியிலும் பெருந்தீப தரிசனம் நிகழ்கின்றது..

அதையடுத்து சந்திரனுக்கு அபிஷேக அலங்கார தீப தரிசனமும்
தொடர்ந்து லட்சார்ச்சனையும்...

குழந்தைகளுக்கு முதன்முதலாக சோறூட்டும் சடங்கினை 
இத்தலத்தில் செய்கின்றனர்..

சந்திர தோஷம் உடையோர் - இங்கே வந்து வணங்கி நலம் பெறுகின்றனர்..

நவக்கிரக திருத்தலங்களுள் சந்திரனுக்கு உரிய தலம் எனும் புகழுடையது...

திருநாவுக்கரர் இத்தலத்திற்கு அருளிய திருப்பதிகங்கள் கிடைத்தில..
திருஆரூரில் வன்மீக நாதனைப் போற்றிப் பாடும்போது -

தேரூரார் மாவூரார் திங்களூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள்சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்னார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்..(6/25)

- என்று, திங்களூரைக் குறித்துத் துதிக்கின்றார் அப்பர் பெருமான்..

திங்க ளூர்திருஆதிரை யான்பட் டினமூர்
நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர்
தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல
எங்க ளூர்எய்த மான்இடை யாறிடை மருதே..(7/31)

- என்று, திருஇடையாறு திருப்பதிகத்தில் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும் திங்களூரைக் குறித்துப் போற்றுகின்றார்...

திருநாவுக்கரசர் அருளிய விடந்தீர்த்த திருப்பதிகத்தில்
திருத்தலம் நேராகக் குறிக்கப்படாமையால்
அத்திருப்பதிகம் பொது எனும் சிறப்புக்குரியதாகின்றது...

மற்ற திருப்பதிகங்களின் ஊடாக இத்தலம் குறிக்கப்படுவதால்
திங்களூர் வைப்புத்தலம் எனப்படுகின்றது...

திருவையாற்றில் இருந்து கிழக்காக
கும்பகோணம் செல்லும் சாலையில் திருப்பழனத்தை அடுத்து
4 கி.மீ. தொலைவில் உள்ளது - திங்களூர்..

பிரதான சாலையில் இருந்து வயல்வெளிகளின் ஊடாக ஒரு கி.மீ. தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்...

திருக்கோயில் வரை நல்ல சாலை வசதி உண்டு..

திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில்
ஆட்டோக்கள் இயங்குகின்றன..

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவு..

பழைய பேருந்து நிலையத்திலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் பேருந்துகள் திங்களூர் வழியாகச் செல்கின்றன..

பங்குனி உத்திரமாகிய இன்று காலை
திங்களூரில் சூரிய பூஜை நிகழ்ந்திருக்கின்றது...

நாளை மாலை பூரண சந்திரன் - 
திருமூலஸ்தானத்தில் கதிர் பரப்பி வணங்குகின்றான்...

நாமும் வணங்குவோம்..
நாதன் அருளால் நலம் பல எய்துவோம்.. 

ஒன்று கொலாம்அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர்ஊர்வது தானே.. (4/18)
- திருநாவுக்கரசர் -

ஓம் நம சிவாய நம ஓம் 
*** 

9 கருத்துகள்:

  1. திங்களூர் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
    அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. திங்களூர் கைலாய நாதனைத் தரிசித்த புண்ணியம் பெற்றேன் தங்கள் பதிவினைப் பார்த்து. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. திங்களூரை நவக்கிரக வழிபாட்டுத்தலமாகவே சுற்றுலாப் பயணிகள் நினைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. பல முறை சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்களுள் ஒன்று.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் மூலமாக திங்களூர் தரிசனம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. அறிந்துகொண்டேன்.

    "ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெறுவோமே.. அந்த ஆதிசக்தி நாயகனின் துணை பெறுவோமே..."

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஐயா
    திங்களூர் சென்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள்....மிக்க நன்றி ஐயா. திங்களூர் சென்றதில்லை. தங்கள் வழி கண்டோம் ஐயனை!!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..