நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 25, 2016

எது விலங்கு?..

கடந்த வாரத்தின் திங்கட்கிழமை இரவு..


ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்திலுள்ள சேப்கபூர் எனும் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம்..

நன்றியுள்ள ஜீவன் ஒன்று..

அந்த ஜீவன் திவாகர் ரய்தா என்பவருக்குச் சொந்தமானது..

என்ன காரணத்தினாலோ - சில மாதங்களுக்கு முன்பாகத் தான் அந்த ஜீவனை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றார்..

பாசமுள்ள அந்த ஜீவன் - நாய் தான்!..

என்றாலும் அப்படி சொல்லுவதற்கு மனம் வரவில்லை...

நாமாக ஒரு பெயர் வைத்துக் கொள்வோம் - ஜீவன்.. - என்று!..

திவாகர் ரய்தா - மனமுவந்து அளித்த உணவு?.. நீர்?..
அல்லது அவர் காட்டிய அன்பு?..

இவற்றுள் எது அந்த ஜீவனைக் கவர்ந்தது?..

விடை தெரியாத கேள்வி...

அன்றைய இரவுப் பொழுதில் - வீட்டைச் சுற்றியிருந்த புதர்களுக்குள்ளிருந்து ஊர்ந்து வந்த நாகங்களைக் கண்டு கொண்டான் ஜீவன்..

ஓரமாக ஒதுங்கிச் செல்லாமல் - வீட்டுக்குள் நாகங்கள் நுழைவதைக் கண்டு ஆக்ரோஷமாகி - அவற்றைத் தடுத்து விரட்டியடிக்க முற்பட்டான்...

அப்புறம் என்ன!..

ஒரே அமளி தான்!.. ரகளை தான்!..

வீரங்கொண்டு போராடி வெற்றி கண்டான் ஜீவன்..

அந்த நான்கு நச்சரவங்களையும் கடித்துக் குதறி கொன்றே விட்டான்...

தனது வெற்றியைக் குறித்து ஜீவனுக்கு மிகுந்த சந்தோஷம்..

பொழுது விடிந்ததும் வாலைக் குழைத்தபடி -
அன்பினைச் சொல்ல வேண்டும்!.. - என, எண்ணிய நேரத்தில் தான் -

தலை சுற்றியபடி மயக்கம் வருவதை உணர்ந்தான்...

திடங்கொண்ட ஜீவனுக்குத் தெரிந்து விட்டது...

நான்கு நாகங்களுடன் போராடியபோது ஒன்றுடன் ஒன்றாக நாகங்கள் தமது கூரிய பற்களால் தன்னைக் கடித்தது நினைவுக்கு வந்தது...

நினைவு தப்புகின்ற வேளையில் அதெல்லாம் நினைவுக்கு வந்து என்ன பயன்?..

நான் எனது எஜமான் வீட்டைக் காப்பாற்றி விட்டேன்.. அந்த நிம்மதி ஒன்றே போதும்!.. என்ற மனநிறைவுடன் மண்ணில் சாய்ந்தான்..

ஜீவன் தன் ஜீவனைத் துறந்தான்...

நன்றியுள்ள ஜீவன்
விடிந்த வேளையில் வீட்டை விட்டு வெளியே வந்த திவாகர் -
வாசலில் அலங்கோலமாகக் கிடந்த நாகங்களையும் -
தனது அன்புக்குரிய ஜீவனையும் கண்டு அதிர்ந்தார்..

ஒரு நொடியில் விஷயம் விளங்கியது அவருக்கு..

ஆத்திரமும் ஆவேசமும் பொங்கிப் பெருகியது..

அவருடைய கதறலைக் கேட்ட ஊர் திரண்டது..

ஆனாலும், என்ன செய்வது..

வாயில்லா ஜீவனின் வீரத்தையும் தியாகத்தையும் புகழ்ந்தபடி -
ஜீவனுக்கு சகல மரியாதைகளையும் செலுத்தியிருக்கின்றனர்..

இது இப்படியிருக்க,

மிக சமீபத்தில் -

சென்னை குன்றத்தூரில் மருத்துவக் கல்லூரி மாணவர் இருவர் மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசி -

அதைக் காணொளியாக்கி வெளியிட்ட கொடூரத்தின் சுவடுகள் மாறுவதற்குள் மறுபடியும் வேறொன்று!..

சென்ற வாரத்தில் மீண்டும் -
நாய்க்குட்டிகளைத் துன்புறுத்திக் கொன்ற சம்பவம்..

அரக்கர்கள் மீண்டும் வந்து பிறந்து விட்டனர் என்றே தோன்றுகின்றது..

இது நடந்த இடம் - ஹைதராபாத்..

ஹைதராபாத் நகரில் முஷீராபாத் பகுதியில் ஏக் மினார் மசூதி அருகிலுள்ள மயானத்தில் -

ஐந்து விடலைகள் ஒன்றாகக் கூடி -

தீ மூட்டி அதில் மூன்று நாய்க் குட்டிகளை உயிரோடு போட்டு கொளுத்தி கொன்றிருக்கின்றார்கள்..

நெருப்பிபைத் தாங்க இயலாத நாய்க்குட்டிகள் துடித்துத் துவண்டு தீயிலிருந்து தப்பித்து வெளியே வருகின்ற நிலையிலும்

நீண்ட குச்சியால் அவற்றை மீண்டும் நெருப்பில் தள்ளி -
காரியத்தை முடித்திருக்கின்றார்கள்..

நாய்க்குட்டிகளைக் கொன்ற கொடூரன்
தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்திருந்தும் -
அதை காணொளியாக்கி Facebook - ல் பரப்பி விட்டு
தங்களது வீர (!?..) பராக்கிரமத்தைப் பறைசாற்றியிருக்கின்றனர்..

இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் பதினேழு அல்லது பதினெட்டு வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

அந்தக் காணொளியினைக் காணும் முன்னே -
கண்கள் கலங்கி நெஞ்சு தடுமாறியது..

தமிழகத்தின் - தருமபுரியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற நாகத்தைத் தடுத்துப் போராடி - கொன்று போட்ட நாயின் தைரியத்தைச் சொல்லவேண்டும்...

இதோ காணொளி!..


இயல்பாகவே மனிதனுடன் மட்டுமல்லாமல் ஏனைய விலங்குகளுடனும் தோழமை கொள்ளும் உணர்வுடையவை நாய்கள்..






மேலை நாடுகளில் -  பார்வையற்றோருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் உற்ற துணைவனாக நாய்கள் விளங்குவதை மறக்க இயலாது..




அந்த அளவிற்கு அவை பழக்கப்பட்டாலும் -
தன்னை வளர்ப்பவர்களிடம் பாசத்தைப் பொழிபவை நாய்கள்..


சிவாலயங்களில் ஸ்ரீ வைரவமூர்த்தியுடன் நாயும் இணைந்ததாக விளங்கும்..


மேலும் - தமிழகத்தின் கிராமங்களில் திகழும் காவல் தெய்வங்களின் அருகில் நாய்களின் பதுமைகள் விளங்குவதையும் நம்மில் பலர் அறிந்திருப்போம்...

வெண்ணாற்றங்கரை - தஞ்சாவூர்

மனிதனின் ஆதி தோழன் நாய் தான்..

மகாபாரதப் பெருங்கதையை முடித்து வைப்பது நாய் தான்!..

பஞ்ச பாண்டவரைப் பின்தொடர்ந்து சென்று - கடைசி நிமிடத்திலும்
தரும புத்திரனின் மனோநிலையை உலகறியச் செய்விப்பதற்கு
தரும தேவன் மேற்கொள்ளும் வடிவம் - நாய்!..

வழியறியாத தடத்தில் - சிக்கலான சூழ்நிலைகளில் -
வழிகாட்டும் துணைவனாக வருவது - நாய்!..

தெய்வ பக்தியுள்ள பலருக்கும் இந்த மாதிரி வாய்த்திருக்கும்..

இப்படியொரு நிகழ்வினை -

கோவை2தில்லி எனும் தனது வலைத்தளத்தில் கூறியிருக்கின்றார் - அன்புக்குரிய வெங்கட் நாகராஜ் அவர்களின் துணைவியார் திருமதி ஆதி வெங்கட்..


இன்றைக்கு இருப்பதைப் போலவே - அந்தக் காலத்திலும்
காவல் மற்றும் துப்பறியும் பணியில் நாய்கள் சிறப்புற்று விளங்கின..

அதனால் தான் அவை காவல் தெய்வங்களுடன் வைக்கப்பட்டன..

Police Dog - US
Police Dogs - Nepal
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்...

யாரும் ஒத்துக் கொண்டாலும் சரி.. மறுத்தாலும் சரி..

நாய்களை உயரிய இடத்தில் வைக்காவிட்டாலும் பரவாயில்லை..
அவற்றின் உயிருக்கு உலை வைக்காதிருக்க வேண்டும்..

நாய்களால் மனிதன் அடையும் பலன்கள் மிக அதிகம்!..


அனைத்து வகையான உயிரினங்களுக்கும் 
பொது எதிரியாக மனிதன் மாறாதிருக்க வேண்டும்..

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதனுக்குத் தோழனடி பாப்பா!..
-: மகாகவி பாரதியார் :-

வையகம் வாழ்க..  
***

13 கருத்துகள்:

  1. வணக்கம். நலம் தானே. இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியா சூழல். ஆம் பாசம் மிகு நல்ல தோழன். அருமையான பகிர்வு,, சில ஜடங்கள் இப்படித்தான்,, படங்கள் அழகு,,தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பின் - தங்கள் அன்பின் வருகைக்கு நல்வரவு..
      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பார்த்தீர்களா நாய் நல்ல பாம்பைக் கொன்றதைச் சொல்லிச் செல்வதும் காணொளிதான் நாயைக் கொடுமைப் படுத்துவதைச் சொல்வதும் காணொளிதான் நாய வளர்த்த அனுபவம் உண்டு. அவ்வப்போது அதன் நினைவில் நெகிழ்வதும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வீட்டில் நாய் வளர்த்தால் மன நெகிழ்ச்சி தான் மிச்சம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி மனிதநேயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது இது எதில் கொண்டு போய் விடுமோ... நாளைய நமது சந்ததிகள் எப்படி வாழப்போகின்றார்களோ.. என்பதை நினைத்தால் வேதனையாகவே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இயற்கைச் சூழலுக்கு மனிதனே எதிரியாகி விட்டான்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நல்ல பகிர்வு. நான்கு பாம்புகளைக் கொன்று தானும் இறந்த ஜீவனைப் பற்றி நானும் படித்தேன். இவை இப்படி இருக்க, மனிதர்கள் தான் மாக்களாக இருக்கிறார்கள்..... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      இனிமேல் மாறுதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உங்கள் பதிவினைக் கண்டதும் நாயிற்கடையேனாய் என்று நாயன்மார்கள் கூறும் பாடல்கள் நினைவிற்கு வந்துவிட்டன. சுந்தரர் தேவாரத்திலும் நாயிற்கடையேன் என்ற சொல்லாட்சியைக் காணமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தேவாரத்திலும் திருவாசகத்திலும் - காணப்படுவது மெய்யடியார்களின் தன்னடக்கத்திற்கு சாட்சியாகத் திகழ்வது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதைத் தொட்ட பதிவு. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களும் பொருத்தமானவை. அன்பிற்கு கட்டுப்பட்ட அவைகளை, இங்குள்ள சில மனிதமிருகங்கள், பொய்யான அன்பை காட்டி, அவற்றை ஏமாற்றி உள்ளனர்.

      நீக்கு
    2. அன்பின் அண்ணா..

      வீட்டின் வளர்ப்புகள் நம்மிடம் காட்டும் அன்பு மாசற்றது..
      தாங்கள் சொல்வதைப் போல் - பொய்யான அன்பைக் காட்டி அவற்றை ஏமாற்றி விட்டன - மனித விலங்குகள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..