நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 31, 2016

மாமன்னன் ராஜேந்திரன்

கடல் கடந்தும் களங்கண்ட வெற்றி வேங்கை!..

பிற்காலச் சோழர் தம் பெரு வரலாற்றில் -
மும்முடிச்சோழன் என்றும் சிவபாத சேகரன் என்றும் சிறப்பிக்கப்பட்ட
மாமன்னன் ராஜராஜ சோழனின் அருந்தவப் புதல்வன்..

ராஜேந்திர சோழன்!..

ராஜேந்திரனின் தாய் - வானவன் மாதேவி எனப்பட்ட திரிபுவன மாதேவி..

ராஜேந்திரனின் இயற்பெயர் - மதுராந்தகன் - என்பதாகும்.. 

தந்தையின் திருக்கரங்களினால் - இளவரசு பட்டம் சூட்டப் பெற்றபோது - ராஜேந்திரன் என புதிய பெயரினைக் கொண்டான்..

தந்தையின் அருகிருந்து ஆட்சியின் நுணுக்கங்களைப் பயின்றதோடு -
தந்தையைப் போலவே ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய - பேரரசின் மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தவன் - ராஜேந்திர சோழன். 

அகண்ட பாரதத்தில் - மிகச்சிறந்த கப்பல் படையினை கொண்டு. 
கடல் வழியே படை நடத்தி - மகத்தான வெற்றிகளைக் கண்ட பேரரசன்.

பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன் -  என்று ராஜேந்திர சோழனின்  கல்வெட்டுகள் புகழ்கின்றன. 


ராஜராஜ சோழன் சிவனடி சேர்ந்த பின், சோழ பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு - கி.பி.1014. 

இளவரசனாக இருந்த பொழுதே மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 

தந்தையின் கையால் - இளவரசனாக முடிசூட்டப்பட்ட பின், 
1012-ல் சத்யாஸ்ரயனை எதிர்த்து துங்கபத்ரை நதியை
முதன் முறையாகக் கடந்து படை நடத்தினான் - ராஜேந்திர சோழன்!.. 

தன் மகன் பதினாறடி பாய்வதற்குத் தயாராகி விட்டதை அறிந்த மாமன்னன் ராஜராஜன் மகனை வாரி அணைத்து மகிழ்ந்தான்.

ராஜேந்திரன் தலைமையேற்று நடத்திய படை மேற்குப் பகுதியை நோக்கி நகர்ந்தது..

வேங்கி, கலிங்கம், கொங்கணம், துளுவம் முதலான நாடுகள் ராஜேந்திரனின் காலடியில் வீழ்ந்தன..

தெலுங்கரையும் இராஷ்டிரகூடரையும் - ராஜேந்திரன் வென்று முடித்தான்...


கி.பி. 1018ல் ஈழ மண்டலத்தின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது.

ராஜேந்திரனை எதிர்த்து நிற்க இயலாமல் சிங்களத்தின் ஐந்தாம் மகிந்தன் வீழ்ந்தான்..

இந்தப் போரில் தான் - பெரும் பாட்டனார் ஆன பராந்தக சோழரின் காலம் தொட்டு - கனவாக இருந்த பாண்டியரின் இரத்ன வாளும் முத்து மாலையும் கைப்பற்றப்பட்டன.

இதை சிங்களரின் மஹாவம்சம் எனும் வரலாறும் ஒத்துக் கொள்கின்றது.

அதே ஆண்டில் - தமது ஆட்சிக்கு உட்பட்ட  பாண்டிய, சேர பகுதிகளில் - சோழர்க்கு எதிராக நடத்தப்பட்ட கலகங்கள் அடக்கப்பட்டன.


1019-ல் சோழர்தம் பெரும்படை ராஜேந்திரனின்  தலைமையில் வடக்கை நோக்கிப் பயணித்தது..

கோதாவரி நதியைக் கடந்து கலிங்கத்தின் வழியாக கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது.

வங்கத்தின் மன்னன் மகிபாலனை வென்று கங்கையிலிருந்து நீர் எடுத்தது - இந்த போரில் தான்!..

இந்தப் பயணம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதன் பின் -

மேலைச் சாளுக்கியரை நோக்கிக் கவனத்தைத் திருப்பிய ஆண்டு - 1021.

பங்காளிச் சண்டை தொடங்கியது மேலைச் சாளுக்கியருக்கும் கீழைச் சாளுக்கியருக்கும்!..

மாமன்னர் ராஜராஜ சோழனின் மருமகன் விமலாதித்தன்.

தன் சகோதரியின் (விமலாதித்தன் - குந்தவை) மகனான ராஜராஜ நரேந்திரனுக்குத் தன் மகள் அம்மங்கா தேவியை மணமுடித்துக் கொடுத்தான்.

மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலைசாளுக்கியன் ஜெயசிம்மனையும் விஜயாதித்தனையும் முற்றாகத் தொலைத்தது - 1035ல்.

இரட்டபாடி நாடு எனப்பட்ட மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது.

மேலை சாளுக்கியர்களையும் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பின் மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான்.

விஜயாலய சோழன் கி.பி.848-ல் புலிக்கொடியைத் தஞ்சையில் ஏற்றி வைத்தான்... 

அதன்பின் பராந்தக சோழன், ஆதித்த சோழன் ஆகியோர் படை நடத்தினர்..

மாமன்னன் ராஜராஜனைத் தொடர்ந்து -

வங்காளம் (பங்களாதேஷ்), பர்மா (மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, 
கடாரம் (மலேஷியாவின் கெடா) , மலேஷியா (சிங்கப்பூர்), 
ஸ்ரீவிஜய ராஜ்யங்களான ஜாவா, சுமத்ரா, பாலி (இந்தோனேஷியா) 
அந்தமான் நிக்கோபார்  லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் - 

என, ராஜேந்திர சோழனின் திருவடிகள் பதியாத நிலம் என்று ஏதுமில்லை..

சோழர் தம் புலிக் கொடி கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்தது - ராஜேந்திர சோழனின் காலத்தில்!..

(நன்றி - விக்கிபீடியா. வரலாற்றுத் தொகுப்பில் உதவி)

கங்கை கொண்ட சோழீசர்
வங்கத்தை சோழ பேரரசுடன் இணைத்த ராஜேந்திர சோழன் கங்கையில் நீரெடுத்த வெற்றியை சிறப்பிக்க, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கினான்.. 

தனது ஆட்சியினை புதிய தலைநகரத்திலிருந்து நடாத்தினான்.


தந்தை எழுப்பிய ராஜராஜேஸ்வரத்தின்  வடிவமைப்புடன் கங்கை கொண்ட சோழீஸ்வரம் எனும் கோயில் ஒன்றையும் எழுப்பினான் ராஜேந்திர சோழன்.

கங்கை கொண்ட சோழீஸ்வரரைப்  போற்றி - கருவூர்த் தேவர் பாடியுள்ளார்.

தலைநகரில் தான் உருவாக்கிய சோழ கங்கம் எனும் ஏரியில் கங்கை நீரை வார்த்தான்..

ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் தான் மனித முயற்சியில் உருவான மிகப் பெரிய ஏரி என்கின்றனர் ஆய்வியலாளர்கள்..

கருங்கற்களைக் கொண்ட நிலையான பெருங்கோயிலை இறைவனுக்கு என எழுப்பினாலும், தந்தையைப் போலவே -  அரண்மனையை  செங்கற்களால் கட்டிக் கொண்டான்!..

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் ஐந்து கி.மீ தூரத்தில்- அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் காணப்படுகின்றன.

அந்த இடம் இன்றைக்கு மாளிகை மேடு எனப்படுகின்றது.


பல தேசங்களை தனக்கு கீழாகக் கொண்டு அதிக ஆண்டுகள் தலைநகராக இருந்த பெருமையை உடையது கங்கை கொண்ட சோழபுரம்..

ஆனால் - 
இன்றைக்கு அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிறுகிராமம் என்றாகி விட்டது..

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 
தலைநகர் எனத் திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் 
இன்றைக்கு அங்கே காணக் கிடைப்பவை - 
இடிந்த சுவர்களும், மண் மேடுகளும் புதர்களும்!..

மாடமாளிகைகளுடனும் கூடகோபுரங்களுடனும் - 
அற்புதமான தலைநகராக விளங்கிய - கங்கை கொண்ட சோழபுரம் -
மூன்றாம் குலோத்துங்கன் (1218) காலம் வரை சிறப்புற்றிருந்தது 

அதன் பின்னாட்களில் நலிவுற்று 1279-ல் பெருத்த அழிவிற்கு ஆளானது. 

சோழ நாட்டின் மீது படையெடுத்த முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான்..

மாடமாளிகைகளை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கினான்.. 
சோழநாட்டை பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். 

ஆனாலும், அங்கே இன்னும் கம்பீரத்துடன் விளங்குவது - 
ராஜேந்திர சோழன் எழுப்பிய பெரிய கோயில்!.. 


விவசாயமும் வணிகமும் கணிதமும் மருத்துவமும் சித்திரமும் சிற்பமும் இசையும் நாட்டியமும்  கலையும் கட்டுமானமும் உச்சத்தை தொட்டிருந்தது சோழர்களின் காலத்தில் தான்!..

சோழர்களுடைய சாதனைகளுக்கும் கடல்கடந்து பெற்ற வெற்றிகளுக்கும்  தஞ்சை - கரந்தைச் செப்பேடுகளும் திருவாலங்காட்டு செப்பேடுகளும் ஆனை மங்கலச் செப்பேடுகளும் ஆதாரமாகத் திகழ்கின்றன..

தன் மீது பாசம் கொண்டிருந்த சிற்றன்னை பஞ்சவன் மாதேவிக்கு பட்டீஸ்வரத்தில் பள்ளிப்படைக்கோயில் எழுப்பினான்..

தனது தாய் திரிபுவன மாதேவி இறைவனடி சேர்ந்ததும் - 

சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி ஆதிவராக நத்தம் எனும் கிராமத்தில் -
திரிபுவனமாதேவி ஈஸ்வரம் எனும் திருக்கோயிலை எடுப்பித்து - தாயின் நினைவினைச் சிறப்பித்தான்.. 

பரவை நங்கையுடன் ராஜேந்திர சோழன்
இன்று (31/ஜூலை) ஆடித் திருவாதிரை..

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்.. 

மாமன்னனின் பிறந்த நாள் கங்கை கொண்ட சோழபுரத்தில் வெகு சிறப்பாக நிகழ்கின்றது..

இவ்வேளையில் - தமிழராய்ப் பிறந்தோர் யாவரும் தத்தமது இல்லங்களில்
மாமன்னன் ராஜேந்திரனைக் கொண்டாடி மகிழ வேண்டும்..


மாமன்னன் ராஜேந்திர சோழனின் இணையிலா வீரத்தினால்
கடல் கடந்தும் தமிழர் தம் பெருமை பட்டொளி வீசிப் பறந்தது..

மாமன்னன் ராஜேந்திர சோழனை -
ஒரு கணம் சிந்தையில் வைத்துப் போற்றுவோம்.

மாமன்னன் ராஜேந்திர சோழனின் 
புகழ் வாழ்க!.. வளர்க!..
* * *

18 கருத்துகள்:

  1. மாமன்னன் இராஜேந்திர சோழனின் வீர வரலாறு அறியத்தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான பல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சில அறிந்த தகவல்கள். சில புதியன. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மிக விளக்கமான வரலாற்றுத் தகவல்கள்.சுவாரஸ்யமாக இருக்கிறது .
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மாமன்னின் வீர வரலாறு தங்கள் பார்வையில் அற்புதம், அதனினும் சிற்பங்கள் தேர்வு அருமை அருமை, நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பாரதத்திலிருந்து வெளிநாட்டிற்கு படையெடுத்துச் சென்ற முதல் பேரரசன் கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழர்.

    சோழம்! சோழம்! சோழம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..

      தங்களது முதல் வருகைக்கு மகிழ்ச்சி..

      உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழர் என்னும் போது மனம் பூரித்து பொங்கித் ததும்புகின்றது..

      அன்பின் இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. தங்களின் வரவேற்பை வரவேற்கிறேன். தனித்துவமான தமிழ் தங்களுடையது. அதனைப் படித்துக் கிடைக்கும் ஆனந்தம் எங்களுடையது.

      நீக்கு
    3. அன்பின் ஹரிஹரன்..

      தனித்துவமான தமிழ்!..

      பெரிய வார்த்தையெல்லாம் சொல்கின்றீர்கள்.. என்னிடம் ஏதுமில்லை. எல்லாம் முன்னோர் தம் நல்லாசிகள்..

      இன்றொரு பதிவு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது..
      இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்..

      தங்களது மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.. புன்னகையுடன் நன்றி..

      நீக்கு
  7. ஐயா வணக்கம் நாம் இத்தனை விவரமாகத் தமிழ் அரசர்களைப் பற்றி தெரிந்து கொள்கிறோமே. ஏன் அயல் மொழி பேசி அண்டையில் கொடிகட்டிப் பறந்த சாளுக்கிய . ராஷ்ட்ரகூட அரசர்கள் பற்றி நினைப்பதில்லை. அவர்களும் மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோவில்கள் நிர்மாணித்திருக்கிறார்களே . பள்ளிகளிலும் இவர்கள் பற்றி கற்பிக்கப் படுகிறதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வணக்கம்.. தாங்கள் கூறுவது சரியே..

      பள்ளியில் படித்தவரை சரித்திரப் பாடத்தில் சாளுக்கிய மன்னர்களைப் பற்றி சிறிதளவு மட்டுமே சொல்லப்பட்டிருக்கும்.. கிராமிய நூலகங்களில் தேடினாலும் அவ்வளவாக விவரங்கள் கிடைக்காது..

      இணையத்தில் நுழைந்த பிறகு தான் நிறைய தெரிந்து கொண்டேன்..

      சில விஷயங்களை என்னளவில் தொகுத்து வைத்துள்ளேன்..
      சில தினங்களில் வெளியிடுகின்றேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான தகவல்கள் படங்கள் ஐயா சிறப்பான பகிர்விற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. பரவை நங்கையுடன் இராஜேந்திர சோழன் உள்ள இச்சிற்பம் எங்கே உள்ளது நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..