நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 30, 2016

படைத்தானே.. படைத்தானே..

தனக்கு முன்னிருந்த ஜீவராசிகளை -
பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டான் - இறைவன்...

ஏற்கனவே -

மண்ணைப் படைத்து அதற்குள் நீர் நெருப்பு காற்று
என்பனவற்றை வைத்து வெட்ட வெளிக்குள் சுழல விட்டாயிற்று..

அப்படி சுற்றுகின்ற மண் உருண்டைக்குள் புழு பூச்சிகளையும் அனுப்பியாயிற்று..


அதன் தொடர்ச்சியாக செடி கொடி மரங்களையும் விதைத்தாயிற்று... அவற்றினூடாக சுற்றித் திரிவதற்கு பறவைகளையும் பறக்க விட்டாயிற்று..


நில வாழ்வன, நீர் வாழ்வன என்று படைத்த பின்னும் -

நீரிலும் நிலத்திலும் வாழ்வன என்றும் படைத்தாயிற்று..




பச்சைப் பசேலெனத் தழைத்திடும் மரங்கள்
அவற்றில் கூடிக் களித்திடும் பறவைகள்
குளத்து நீரில் நீந்திக் குளித்திடும் மீன்கள்
ஊர்ந்து நெளிந்து நிமிர்ந்து எழுந்திடும் பாம்புகள் -

இவற்றையெல்லாம் கண்டு மிகவும் திருப்தி..

இன்னும் பூமியை அழகு செய்வதற்கென்று -
அடுத்த தயாரிப்புகளில் ஆர்வமானான் - இறைவன்..

அந்த பழைய தயாரிப்புகளில் வைக்காத ஒன்றை -

இந்த புதிய தயாரிப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்தான்..

அது தான் - அறிவு..


அறிவுடன் உருவாக்கப் பெற்ற உயிரினங்கள் எல்லாம் பேசும் திறன் பெற்றிருந்தன..


ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரமான குணங்களைக் கொடுத்து - அவைகள் பூமியில் வாழ வேண்டிய விதத்தையும் சொல்லிக் கொண்டிருந்தான்..


ஒவ்வொன்றும் - தம்மில் சில மாற்றங்களையும் விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டன.. அத்துடன் தமக்கு வேண்டாம் என்ற குணங்களை அங்கேயே உதறித் தள்ளி விட்டன..


இப்படியாக ஒரு உயிரைப் படைத்த பின் அதனிடம் சொன்னான் -




நீதான் காளை.. காலையில் இருந்து சாயுங்காலம் வரை வயற்காட்டில் உழைக்கும்படி இருக்கும்.. பெரும் சுமைகளை இழுக்க வேண்டியிருக்கும் சமயத்தில் உலர்ந்த புல்லுக்கும் உயிரை விட வேண்டியிருக்கும்.. பொறுமை என்ற உணர்வுடன் திகழ்வாய்... ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்.. உனக்கு ஆயுள் ஐம்பது வருடம்!..

வேணாம் சாமி வேணாம்!.. அவ்வளவு ஆயுள் வேணாம்.. இருபது வருஷம் போதும்!...

அப்படியா!.. உனக்கென்று ஒதுக்கிய ஆயுளை யாரிடம் தருவது?..

வேற ஜீவராசிகளுக்கு கொடுங்க.. சாமி!..

என்றபடி - காளை விடை பெற்றுக்கொண்டது..


அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்...

நீதான் நாய்.. எந்த ஒரு இலக்கும் இல்லாமல் அங்குமிங்கும் அலைந்து திரிவதில் உனக்கு நிகர் நீயே... உன் இனத்துக்குள்ளேயே அடித்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பாய்.. உனக்கும் ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்..  நன்றி எனும் உணர்வுடன் இருப்பாய்... உனக்கு ஆயுள் முப்பது வருடம்!..

அவ்வளவெல்லாம் வேணாம் சாமி!... அதில் பாதி போதும்!..

என்றபடி - நாய் விடை பெற்றுக்கொண்டது..

அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்...



நீதான் குரங்கு.. மண் தரையில் நடப்பதை விட மரக் கிளைகளில் தாவித் திரிவதிலேயே நாட்டமாக இருப்பாய்... தின்பதற்கு ஏதும் பிரச்னை இருக்காது.. நீ தின்பதை விட அழிப்பதே அதிகமாக இருக்கும்.. நிலையற்ற புத்தி என்பதே உனது அம்சம்.. உனக்கும் ஓரளவுக்கு அறிவைத் தருகின்றேன்.. உனக்கு ஆயுள் இருபது வருடம்!..

அத்தனை வருஷமெல்லாம் வேணாம் சாமி!... பத்து வருஷம் போதும்!..


என்றபடி - குரங்கு விடை பெற்றுக்கொண்டது..

அடுத்ததாக ஒன்றைப் படைத்தான்... அதற்கான அறிவையும் கொடுத்தான்... 

கொடுத்தது போக அருகிலிருந்த கிண்ணத்தில் கொஞ்சம் மீதம் இருந்தது..

நீதான் மனிதன்!...

அப்படியா?.. ஒரு வேண்டுகோள்!..

என்ன!..

எனக்கு மேல் வேறொன்றைப் படைக்கக்கூடாது!...

ஆமாம் .. எனக்கும் களைப்பாக இருக்கின்றது.. நல்லவேளை நினைவு படுத்தினாய்.. அதற்காக இதோ என்னுடைய பரிசு!..

கிண்ணம் இப்போது வெறுமையானது... 

என்ன பரிசு அது!..

அறிவு... எல்லாவற்றிற்கும் கொடுத்ததைப் போல உனக்கும் ஐந்து பங்கு தான்.. ஆனால் - உன்னுடைய கேள்வி நன்றாக இருந்தது.. அதனால் இது கொசுறு... ஆக இனிமேல் உனக்கு ஆறறிவு!..

இதனால் என்ன பயன்?..

என்ன பயனா?... என்ன இப்படிக் கேட்டு விட்டாய்!.. இதுவரைக்கும் நான் படைத்த எல்லாவற்றின் மீதும் ஆட்சி செய்வாய்!..

ஓஹோ!..

இவையெல்லாம் குறுக்காக வளர - நீ மட்டும் நெடுக்காக வளர்வாய்!.. உனக்கு ஆயுள் பதினாறு வருடங்கள்!.. 

அப்படியா!.. சிங்கம் புலி கரடி இதற்கெல்லாம் அதிகமாகக் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் பதினாறு வருஷம் தானா?...

அப்படியில்லை!.. பதினாறும் எவ்விதத் துன்பமும் இல்லாத சுதந்திரமான வருஷங்கள்!.. நீ கொண்ட அறிவு அனைத்து உயிர்க்கும் ஆதரவாக இருக்கட்டும்...

இறைவன் தனது கடைசி படைப்பினை வாழ்த்தினான்..


அது சரி!.. எனக்கு ஒன்றும் துணை இல்லையா?..

துணையா?.. இதோ மரங்கள்.. கொடிகள்.. பறவைகள்.. பட்டாம்பூச்சிகள்.. மீன்கள்..  விலங்குகள்.. இதெல்லாம் துணையாகத் தெரியவில்லையா?....

இல்லை.. ஒன்றின் வண்ணம் மற்றொன்றாய் - ஆடிக் களித்திட கூடிக் களித்திட!..

இதைத் தான்.. இதைத் தான் எதிர்பார்த்தேன்!.. இதோ நீ கேட்டபடி!.. 

அந்த விநாடியில் - இறைவனிடம் இருந்து மற்றொன்று வெளிப்பட்டது..

என்ன இது?..

நீதான் வேறொன்றைப் படைக்கக் கூடாது என்றாயே!..
அதனால் என்னிலிருந்து எடுத்தேன்!..

ஆனாலும் எனக்கும் அதற்கும் வித்தியாசம் தெரியவில்லையே!...

வித்தியாசமா!.. இதோ!..

அதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் வெளிப்பட்டன..

அந்த நொடியில் - ஏற்பட்ட ஆர்வக் கோளாறினால் - 
ஒன்றையொன்று உற்றுப் பார்த்துக் கொண்டன...

இறைவன் சிரித்தான்...

இப்போது முதல் நீ ஆண்.. நீ பெண்!..

அப்படியென்றால்!..

விதி ஆரம்பமாவது கண்ணுக்குள்ளே - அது
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே!..

ஒன்றும் புரியவில்லை!..

இனி நீங்களே எல்லாமும்!. நீங்களே ஒளியும் இருளும்!.. வெயிலும் மழையும்!.. நட்பும் பகையும்!..  வாழ்வும் தாழ்வும்!.. ஆக்கமும் ஊக்கமும்!.. ஏற்றமும் இறக்கமும்!.. இன்பமும் துன்பமும்!.. பிறப்பும் இறப்பும்!..

இவ்வளவு தானா?..

இன்னும் இருக்கின்றன.. அவை எல்லாம் போகப் போகப் புரியும்!..
சரி.. பூமிக்குப் புறப்படுங்கள்!..

புறப்படுவதற்கு முன்னதாக தங்களிடம் ஒரு கேள்வி!..

என்ன கேள்வி?..

இங்கே கிடப்பவையெல்லாம் என்ன?...


இவையெல்லாம் மற்ற உயிரினங்கள் வேண்டாம் என்று கழித்துப் போட்ட குணாதிசயங்கள்!... 

உங்களுக்குத் தேவைப்படுமா?..

நீதான் - இனிமேல் தான் வேறொன்றைப் படைக்கக்கூடாது - என்றாயே!..

அப்படியானால் - அவற்றையெல்லாம் நான் எடுத்துக் கொள்ளட்டுமா!... உங்களுக்கு ஒன்றும் இழப்பு இல்லையே?..

இல்லை தான்!.. ஆனாலும் அவை குப்பையாய்க் கிடக்கின்றன.. உனக்குத் தான் சிரமம்!...

குப்பையானால் என்ன!.. நான் எடுத்துக் கொள்கிறேன்!..

சொன்னால் கேள்.. அவையெல்லாம் உனக்கு வேண்டாம்!..

அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கின்றேன்!.. 



என் பேச்சை மீறி அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டாய்!..
இனி உனக்கு என்னவெல்லாம் நேரும் என்று கேட்டுக் கொள்!..

பதினாறு வயது வரைக்கும் சுதந்திரப் பறவை தான்.. அதற்குப் பின் -

யானையைப் போல் மதம் கொண்டு திரிவாய்..
சிங்கத்தைப் போல குரூரம் கொண்டு அலைவாய்!..
வேங்கையைப் போல வெறி கொண்டு கிடப்பாய்!..
நாகத்தைப் போல நஞ்சு கொண்டு இழைவாய்!..


பறவையா விலங்கா - எனத் தடுமாறும் வௌவாலைப் போல்
நல்லவனா கெட்டவனா என்று புரியாமல் திகைப்பாய்!..
நரியைப் போல் தந்திரம் தனைக்கொண்டு பிழைப்பாய்!..
நண்டு போல் பிறருக்குக் குழி தோண்டிக் கெடுப்பாய்!..

காளையைப் போல் கஷ்டப்பட்டு உழைப்பாய்!..
கழுதையைப் போல் சுமைதாங்கிக் களைப்பாய்!..
நாயைப் போல் அலைந்து அவதியில் இளைப்பாய்!..
குரங்கைப் போல் திரிந்து வீதியில் பிழைப்பாய்!..

முடிவொன்று தெரியாமல் அந்தரத்தில் தவிப்பாய்!..

அடடா!.. இவ்வளவு துன்பமா?.. இதெல்லாம் வேண்டாம் எனக்கு!..

மானிடனே!.. உனக்கு வேண்டாதவற்றை நீயே எடுத்துக் கொண்டாய்.. சொல்லியும் கேட்கவில்லை... இனி நீ அவைகளை விட்டாலும் அவைகள் உன்னை விடப்போவதில்லை!...

இல்லை.. இல்லை.. என்னை மன்னித்து விடுங்கள்!..

உன்னிலிருந்து தோன்றக்கூடிய தொல்லைகளைக் கூறுகின்றேன்.. கேள்!..

நல்லவர் குடி கெடும்!.. மது என்ற ஒன்றைக் கண்டு பிடிப்பதால் குடும்பம் குடும்பமாக மடியும்!..

ஆற்றை, குளத்தை, ஏரியை அழித்து உனக்கென்று ஆக்கிக் கொள்வாய்!..
உன்னால் மலையும் மடுவும் காணாமல் போகும்!.. உனது செல்வாக்கு வலு அதிகரித்திருக்கும்...  உயிர் பயத்தால் எதிர்த்துக் கேட்க நாதியிருக்காது!..

ஊராள்வதற்கு என்று - நீ நடத்தும் நாடகங்களுக்கு குறைவே இருக்காது...
ஊழல் என்ற கழிவு நீர் ஊரெல்லாம் ஓடி தேங்கிக் கிடக்கும்!..

கையில் காசு இல்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி!.. - என்று
புதிய கொள்கை உருவாகும்..

அதன்படி எங்கெங்கும் லஞ்சம் என்ற ஒன்று தலைவிரித்தாடும்...



காசை எடுத்து நீட்டினால் தான் வேலையே நடக்கும்...

கல்விக் கூடம் முதல் மயானக் கூடம் வரைக்கும் லஞ்சம்..

மருத்துவமனைகளில் பிள்ளை பெறுவதற்கும் லஞ்சம்!..
பிணத்தைப் பெறுவதற்கும் கூட லஞ்சம்...

உயிரைக் கொடுப்பதற்கும் காசு.. உயிரை எடுப்பதற்கும் காசு.. இடையில் உயிரைக் காப்பதற்கும் காசு!..




பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் லஞ்சத்தின் பிடியில் வந்து விடும்..

ஆடு மாடாகி விடும்.. கழுதை குதிரையாகி விடும்!..
அவ்வளவு ஏன்!.. கட்டெறும்பு கூட கர்ஜிக்கும் சிங்கமாகி விடும்!..

பணம்.. பணம் என்று அலையும் வாழ்க்கையில் எவ்வளவு வந்தாலும் அடங்காது!..
கிரியா ஊக்கி போல லஞ்சம் அனைத்திலும் ஊடாகச் செயல்படும்...

இருப்பதை இல்லை என்று சொல்லி இல்லாததை இருப்பதாகக் காட்டும்...

கடமையைச் செய்வதற்கும் காசு கேட்கப்படும்!.. - என்றால் அதன் தன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்!..

வெட்கமில்லாமல் கை நீட்டப்படுவது காசுக்கு மட்டும்தான்!..


நீ உருவாக்கும் காசு தான் உனக்கு எல்லா சுகங்களையும் அளிக்கும்...
ஆயினும் அதுவே - உனது பண்புகள் அனைத்தையும் அடியோடு அழிக்கும்!..

இந்த காசு பணம் எல்லாமும் உன் கூடவே வரும் என்றா நினைக்கிறாய்?..

உழைத்துச் சேர்த்த காசு கூட உழைத்தவனோடு வராது எனும்போது
ஊரை ஏய்த்துச் சேர்த்த காசு எப்படி வரும்!..


அதை நேருக்கு நேராகப் பார்த்த பின்னும் 
அதன் பின்னால் தான் - மனம் ஓடி ஓடி இளைக்கும்!..

இன்னும் இன்னும் என்று தேடித் தவிக்கும்!..

இத்தனை துன்பமும் எதனால் நேரிட்டது?..

விலங்குகள் கழித்துப் போட்ட குணங்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டாய் அல்லவா!...  அந்த பேராசையினால் விளைந்தவை!.. இன்று முதல் மனித உருவத்துள் விலங்கின் குணங்களே நிரம்பிக் கிடக்கும்!...

நூறு நாய்கள் கூடிக் குரைத்தாலும்
ஆயிரம் காக்கைகள் கூடிக் கரைந்தாலும்
ஒற்றைக் கல்லில் அவை தலை தப்பினால் போதும் என்று ஓடி விடும்...

அவற்றைப் போல் நீயும் ஆகி விடுவாய்!..

விலங்குகளிடம் பாலியல் கொடுமை என்ற ஒன்றே இருக்காது..
ஆனால் நீ வாய்ப்புக்காகக் காத்துக் கிடப்பாய்!..

திருடுவாய்.. பொய் சொல்வாய்.. காட்டிக் கொடுப்பாய் - உனது இலக்கு நிறைவேறுவதற்காக!..

அது நிறைவேறவில்லை எனில் - யாரானாலும் அழிக்க முற்படுவாய்!..

பெற்றவர்கள் தலையில் கல்லைப் போடுவாய்.. உடன்பிறந்தோரை உருத் தெரியாமல் சிதைப்பாய்... நம்பி வந்த மனைவியை நட்டாற்றில் விடுவாய்.. பெற்றெடுத்த செல்வங்களை நடுத் தெருவில் விடுவாய்!..

கேட்கவே கொடுமையாக இருக்கிறதே!...

ஒருதலையாய் உன் பேச்சைக் கேட்காத பெண் பிள்ளைகளை ஆள் வைத்து அழிப்பாய்!... அமிலத்தால் முகத்தைச் சிதைப்பாய்!.. மாய வரைகலையால் மங்கையர் தம் மனதை வதைப்பாய்!..

எதிர்த்துப் போராடினால் அவள் இப்படி.. இவள் அப்படி.. என்று பொய்யாய்ப் புனைந்துரைத்து பூவையரின் வாழ்வை முடிப்பாய்!..

எனக்கே எல்லாமும் விதித்தாயே?... இவளுக்கு என்று ஏதும் இல்லையா?...

அவள் என்னுள்ளிருந்து தோன்றியவள்.. நல்லவள்.. வல்லவள்.. ஆனால் அது உனக்குப் பிடிக்காது.. அவளை அடக்கி ஆள்வதற்கே முற்படுவாய்!.. ஆனாலும் அது உன்னால் முடியாது!.. அந்தத் தோல்வியினாலேயே அவளுக்குத் தொல்லைகள் பல கொடுப்பாய்!..

நல்ல எண்ணங்களால் உயர்ந்த சந்ததிகள் விளைந்தாலும்
கெட்ட அழுக்குகளால் விஷப் பூச்சிகளே பெருகக் காத்திருக்கின்றன..

கெட்ட அழுக்குகளால் பெருகிய விஷப் பூச்சிகளே -
உலக அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகின்றன..


இன்னொரு விஷயம்!.. கேட்பதற்கும் கவனிப்பதற்கும் என்று உனது மூளையின் ஒரு பக்கம் மட்டுமே பயன்படும்!.. ஆனால் பெண்ணுக்கு...

பெண்ணுக்கு?... 



கேட்பதற்கும் கவனிப்பதற்கும் என - பெண்ணின் மூளை இருபக்கமும் செயல்படும்!..

அவளுக்கு மட்டும் ஏன் இப்படி!.. எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?..

ஓர வஞ்சனையெல்லாம் இல்லை!.. அது வேண்டும்.. இது வேண்டும்.. என்று இதுவரையிலும் எதுவும் கேட்காமல் பொறுமையின் சிகரமாக திகழ்கின்றாளே - அதற்காக!..

இனிமேல் அதுவேண்டும்.. இது வேண்டும் என்று என்னிடம் கேட்பாள்.. நல்லவேளை நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்... நான் சிக்கிக் கொண்டேன்...

உன்னிடம் அவள் சிக்கிக் கொண்டாள்.. அவளிடம் நீ சிக்கிக் கொண்டாய்!.. உங்கள் இருவரிடமும் நான் சிக்கிக் கொண்டேன்!..

சரி.. இதற்கெல்லாம் முடிவு!?...

மூட எருமையின் அறிவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு - முடிவைக் கேட்கின்றாயா!...


கோபங்கொண்ட குரூர சிங்கத்தின் மீது கோலக் குமரியாய் அவள் வருவாள்!.. உன்னை உருட்டி உதைத்து உன் தலையின் மீது நின்று நல்ல புத்தியைத் தருவாள்!..


அது எப்போது நடக்கும்?..

அது அவளுக்குத் தான் தெரியும்!..

அது வரைக்கும்?..

ஆடு.. ஆடிக் கொண்டிரு..
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக் கொண்டிரு!..  
***
மூளையின் செயல்பாடு பற்றி 
திரு. தில்லையகத்து துளசிதரன் அவர்களின் 
பதிவிலிருந்து சில வரிகளை வழங்கியுள்ளேன்..
அவர் தமக்கு நன்றி..
***

தீயோரின் வன்கொடுமையினால்
இன்னுயிர் துறந்த விநோதினி, ஜோதிசிங், 
ஸ்வாதி, வினுப்பிரியா மற்றும்
எண்ணற்ற கண்மணிகளுக்கு
இந்தப் பதிவு சமர்ப்பணம்..

அன்னை பராசக்தி
அவர்க்கெல்லாம்
நற்கதியருள்வாளாக!..

ஓம் சக்தி ஓம்!..
***

19 கருத்துகள்:

  1. அன்னை பராசக்தி நற்கதி அருளும் நாள் எப்போதோ?

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. ஆம்
    மனித இனம் ஆடாத ஆட்டத்தை எல்லாம் ஆடிக்கொண்டுதானிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. நாட்டில் அமைதி, ஆனந்தம்நிலவ ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அமைதிநிலவ அந்த அன்னை வரட்டும் அருள்தரட்டும்.
    பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மற்ற ஜீவ ராசிகள் வேண்டாம் என்று கழித்த வாழப்போகும் ஆண்டுகளை கேட்டு வாங்கிப் பெற்றான் மனிதன் என்னும் கதை கேட்டிருக்கிறேன்அவை கழித்த ஆண்டுகளைஅவன் அவற்றின் குணாதிசயங்களுடன் வாழ்வான் என்று கேட்டிருக்கிறேன் அந்தக் கதையினை வித்தியாசமாகப் புனைந்து எழுதி இருக்கிறீர்கள் ஆனால் அதென்ன பெண்ணுக்குமட்டும் எல்லா சக்தியும் ? வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இறைவனின் உள்ளிருந்து பெண் வெளிப்பட்டாள் - எனக் கொண்டு பதிவினைப் புனைந்தேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி
    அருமை ஒவ்வொரு விடயங்களும் பிரமிப்பாக இருக்கின்றது இன்றைய மானிடனின் குணநலனுடன் ஒத்து வருகின்றது ஏதோ நாடகம் பார்த்த பிரமை ஏற்பட்டது தங்களது பாணியில் சொன்ன விதம் அழகு.

    தலைப்பு மிகவும் பொருத்தமானதே...

    மூளையைக் குறித்து எல்லோரும் எழுதுகின்றார்கள் எனது மூளையில் ஒன்றும் உதிக்கவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஆனாலும் தங்களின் தன்னடக்கம் பிரமிக்கச் செய்கின்றது..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அருமையான பதிவு

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. ஆஹா! பரிணாம வளர்ச்சியை அதுவும் இப்போதைய மனித வளர்ச்சியும், மனித வாழ்வும் சேர்த்து அழகுற, இனிமையான தமிழில் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

    எங்களையும் சொல்லியதற்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மூளையின் செயல்பாடுகளைப் பற்றிய செய்திகள் எனக்கு உதவின..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. ஆரம்பம் தொடங்கி சைவ சித்தாந்தம் உள்ளிட்ட பல கருத்துகளை விவாதித்து தீர்க்கமான முடிவினை பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பழைய நீதிக் கதை ஒன்றை சற்றே மாற்றி பதிவில் வழங்கியுள்ளேன்..

      இதற்குள் சைவ சித்தாந்தக் கருத்துக்களா!.. ஆச்சர்யம்...
      தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..