நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 22, 2016

நீர் வாழ்க..

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு. (0020)

பஞ்ச பூதங்களின் வரிசையில்
இரண்டாவதாகக் குறிக்கப்படுவது - நீர்..


அதனால் தான் -

நீரின் சிறப்பை வான் சிறப்பு - என, இரண்டாவதாக வைத்து
வள்ளுவப் பெருந்தகையும் நமக்கு அறிவுறுத்துகின்றார்..

ஆனால், நாம் தான் கேட்கவில்லை..

கேட்டிருந்தால் - 

கடந்த வருடக் கடைசியில் பெய்த மழையினால் -
ஏரி குளங்கள் நிறைந்து சென்னை மாநகர் செம்மையுற்றிருக்கும்..

சில பகுதிகள் சீரழிவுகளில் இருந்து தப்பித்திருக்கும்..

நீர் மேலாண்மை!..

மிகச் சிறப்பான சொல்லாட்சி..

அதனை வெறும் சொல்லாகக் கொள்ளாமல்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - 
செயலாற்றிக் காட்டியவர்கள் நம் முன்னோர்கள்..

ஏனடா.. இந்தப் பழம்பெருமை!.. - என்று ,
தருக்கிக் கொண்டவர்களால் தான்
நிலமும் நிலத்தடி நீரும் மாசடைந்தன...


காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வைகை பொருணை நதி - என 
மேவிய ஆறுகள் பலஓட திருமேனி
செழித்த தமிழ்நாடு!..

என்று இறும்பூதெய்துகின்றார் மகாகவி..

ஆனால் - இன்றைய நிலை?..

செம்மையாகப் பராமரிக்கப்படாத வடிகால்கள் கண்காட்சியாகின்றன!..

நீர் நிறைந்த ஆறுகளால் செம்மையுற்றிருந்த
தமிழகத்தைப் பாழாக்கியது - நாம் தானே!..

குளங்களும் ஏரிகளும் கண்மாய்களும் அழித்து ஒழித்த அவலத்தை 
நம் முன்னோர்கள் கண்டிருப்பார்களேயானால்
இதற்காகவா - இப்பாடு பட்டோம்!.. - என,
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு மாண்டிருப்பார்கள்...

கண்மாய்களின் நகர் எனப் புகழுடையது -  மாமதுரை..

எல்லாம் நிர்மூலமாகிப் போயின..

மிச்சம் மீதியுள்ள கண்மாய்களும் -
சீமைக் கருவேலமரங்களால் செம்மை இழந்தன..

நாம் என்னதான் செய்ய உத்தேசித்துள்ளோம்?..

நாற்பது எனும் நெடிய ஆண்டுகளைக் கடந்த நிலையில்
புதிது புதிதாகப் பலரும் கோடானுகோடிகளில் புரண்டு
புன்னகையும் பொன்னகையுமாய் குதுகலிக்கக் காணும்

இதே தமிழகத்தில் -

நீரோடித் திளைத்த ஆறுகளும் இல்லை..
நீராடிக் களித்த குளங்களும் இல்லை...

ஆளோடித்தாள் விளைத்த நிலங்களும் இல்லை..
ஆனைகட்டிப் போரடித்த களங்களும் இல்லை..

ஊர்க்காட்டுக் குளம் - குருவிக்குக் கூட
நீரின்றி வறண்டு கிடக்கும் அவலம்..

ஆனாலும் அதைப் பார்த்துக் கொண்டே
அடுத்த தேர்தலைப் பற்றிய பேச்சுகளில்
ஆவலாகிக் கிடக்கின்றோம்!..


அந்த நாட்டில் தண்ணீர் இல்லை..
இந்த நாட்டில் மழை இல்லை..

அதெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!..

நம் நாடு ஏன் இப்படி நாசமாகப் போனது?..

சிந்தித்ததுண்டா?..

நாம் ஏன் இதனை இதுவரையிலும் கேட்கவில்லை!..

சிந்தித்ததுண்டா?..

இல்லை.. இல்லை.. ஒரு நாளும் இல்லை!..

இறைவன் இருக்கின்றானா?.. இல்லையா?..

அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றது - மனம்..

அந்த வேளையில் - 


இறைவனாவது ஏது?.. இயற்கை தான்!..
- என்று நிலைநாட்டும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது..

அப்படி -

இயற்கைதான்!.. - என்று முன்னெடுத்துச் சொல்லும்போது,

அந்த இயற்கையைக் காத்து - பின் அடுத்த சந்ததிக்குக் கொடுக்க மட்டும்
ஏன் இந்தச் சமுதாயம் தடுமாறுகின்றது?..

கடவுளைக் கண்டதில்லை!..  

சரி...  ஆனால், இயற்கையைக் காண்கின்றோமே!..

கடவுளுக்கு யாதொன்றும் செய்ய வேண்டாம்..

ஏனெனில் - வேண்டுதல் வேண்டாமை அற்றவன் அவன்!..

ஆனால் இயற்கைக்குச் செய்யவேண்டுமே!.. 

நாம் இயற்கைக் காத்தால் தானே - இயற்கை நம்மைக் காக்கும்!..

அதனால் தான், நம்முன்னோர்கள் -
நல்லனவற்றைச் சொன்னார்கள்.. செய்தார்கள்..

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனிமனத்தால்!..

- என்பது ஞானசம்பந்தப்பெருமானின் திருவாக்கு..

நல்ல மனம் கொண்டு, கா - எனப்படும்
பூந்தோட்டங்களையும் மரக்கூட்டங்களையும் பேணிக்காத்து
குளம் முதலான நீர் நிலைகளை விளங்கச் செய்பவர் தம்மை -
எவ்விதத் தீவினைகளும் வந்து தீண்டாது..
இது திருநீலகண்டத்தின் மீது ஆணை!..

- என்று அறுதியிட்டுக் கூறியருள்கின்றார்..

மனித நேயம்
இன்னும் ஒருபடி மேலாக,

பரவப்படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவினை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றீரோ நாள் எஞ்சினீரே!..

- என்று கடிந்து கொள்பவர் திருமூலர்..

மக்களே..
நீங்கள் பரமனைப் போற்றி வணங்கினீரில்லை.. போகட்டும்..
யாதொரு தான தர்மங்களையும் செய்தீர்களில்லை.. அதுவும் போகட்டும்..

ஆனால், குடங்களில் நீர் எடுத்து ஊற்றி,
மரக்கூட்டங்களை வளர்க்காமல் போனீரே!..

நரகம் என்று தனியாக ஒன்று இல்லாவிடினும்
நீவிர் வாழும் எஞ்சிய நாட்களில்
நீவிர் வாழும் இடமே நரகமாகிப் போகுமே!..
என்ன செய்யப் போகின்றீர்கள்?..

- என்று கேட்கின்றார் திருமூலர்..

எப்பேர்ப்பட்ட விஷயம்!..

ஆற்றங்கரை மரம் எனில், அதுவாக -
மண்ணிலிருந்து நீரை உறிஞ்சிக் கொள்ளும்..

ஆனால் -

முகவை போன்றதொரு வறண்ட நிலத்தில்
வாழ முயற்சிக்கும் மரம் எனில்
நீருக்குப் பரிதவிக்குமே!..

அதற்கு நாம் தானே -
குடத்தில் நீரெடுத்துத் தோளில் சுமந்து
வேரில் ஊற்றி வளர்த்தெடுக்க வேண்டும்!..

அப்போதுதானே - அந்த மரம்
இலைகளும் கிளைகளுமாக
தழைத்துப் படர்ந்து கருமுகிலைப்
பிடித்து இழுத்து வரும்!..

தான் வளர்ந்த மண்ணை வளமாக
ஆக்கி அழகு பார்த்திருக்கும்!..

மரங்கள் நன்றியுடையவை..

தாளுண்ட நீரைத் தலையாலே தருதலால்!..
- என்று ஔவையார் புகழ்ந்துரைப்பார்..

அதுவன்றி -

வந்ததடா யோகம்!.. என்று  
வறண்ட நிலத்தில் 
வாழத் துடிக்கும் 
மரத்தை வன்கோடரி 
கொண்டு வெட்டிப் பிளந்து 
விறகாக்கி அடுப்பேற்றி
தணல் மூட்டிப் புகையாக்கினால்
நம் வாழ்வும் அதுபோலத்தானே ஆகும்!..

அதுமாதிரி ஆகக்கூடாது எனில் -
திருமூலர் அருளும் திருப்பாடலின் உட்பொருள்தான் என்ன?..

சலசல.. என்றோடும் ஆறொன்று அருகில் இல்லாவிடினும்
குடத்தில் முகந்து எடுக்கின்ற அளவுக்கு ஒரு குளத்தையாவது 
ஒரு ஊற்றையாவது பராமரிக்க வேண்டும் என்பதே!..

பெரியோர் வாய்ச்சொல் அமிர்தம் - என்றொரு சொல்வழக்கு உண்டு..

அதனை நன்றாக உணர்ந்திருந்ததால் தான்
அன்றைய நாட்களில் மன்னரும் மற்றோரும்
நீர் நிலைகளைப் பராமரித்து நீர் மேலாண்மை செய்தார்கள்...



மாமன்னன் கரிகாற் பெருவளத்தானின் 
அரண்மனைகள் இன்றில்லை..

ஆனால் - 
கரிகாற்சோழன் உருவாக்கிய 
கல்லணை காலங்களைக் கடந்து நிற்கின்றது..

மாமன்னன் ராஜராஜனின் 
மாடமாளிகைகள் காணக் கிடைக்கவில்லை..

ஆனால் - 
ராஜராஜசோழன் உருவாக்கிய 
நீர் சுழற்சி முறை பெருமையைப் புகழ்கின்றது..

மாமன்னன் ராஜேந்திரனின் 
கோட்டை கொத்தளங்கள் தூர்ந்து போயின..

ஆனால் - 
ராஜேந்திரன் உருவாக்கிய 
சோழகங்கம் நீரலைகளுடன் திகழ்கின்றது..

அந்த மன்னர்கள் அனைவரும் தமக்கென வாழாது 
தமிழ் மண்ணிற்கென வாழ்ந்த தகைமையாளர்கள்..

அத்தகைய மன்னர்களோடு 
மக்களும் செய்த அறப்பணிகள் பல நூறு!..



இன்று நாம் உண்பதும் உடுப்பதும் உறங்கிக் களிப்பதும்
அவர்கள் செய்த புண்ணியமே!..

அவர்களை நாம் நினைவு கூர்வது போல
நம்மை அடுத்து வரும் சந்ததி நினைவு கூர்தல் வேண்டும்!..

அதற்கானவற்றை நாம் செய்யவேண்டியது
அவசியம்.. அவசியம்!..


இன்று 
சர்வதேச தண்ணீர் தினம்!..

நீர் ஆதாரங்கள் எப்படியெல்லாம் நம்மால் சிதைவுற்றன -
என்ற விவரங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்கின்றன..


எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காக போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - அறிவியலார்.

இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..

ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.


நீர் காப்போம்!.. 
நிலம் காப்போம்!..

நீர் வாழ்க.. 
நீருடன் கூடி நிலமும் வாழ்க!.. 
***

14 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நல்ல கருத்து, வடவாற்றைக் கடக்கும் தோறும் மனம் வலிக்கிறது,,

    சிந்தனைகள் பரவட்டும்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    தங்களது விடயங்களைப் படித்து பிரமித்துப் போனதைவிட ஒவ்வொரு வரிகளிலும் இருக்கும் விடயம் படித்து மனம் வலிக்கின்றது அறியாமை மனிதன் தனக்கு ஆறறிவு என்று போட்டுக் கொன்றானே....
    இனி வரும் சந்ததிகளின் நிலை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இனி வரும் சந்ததிகளின் நிலை நம் கையில் தான் இருக்கின்றது..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அருமையான பதிவு ஐயா
    ஒவ்வொரு பதிவிலும் தங்களின் உழைப்பு
    பிரமிக்க வைக்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. நீர்வளம் பேணுவோம்
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. நல்லதோர் பதிவு.

    இனிமேலாவது திருந்தினால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சர்வதேச நீர் நாளை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை. நீரின் முக்கியத்துவத்தினையும் மாண்பினையும் தங்கள் பாணியில் எழுதி அசத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. நீர் நாளுக்கான கட்டுரை மிகச் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..