நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 02, 2015

மகாத்மா


சத்திய சோதனை
* * *

1893.

ஏப்ரல் மாதத்தில் பம்பாயில் இருந்து கடல் வழியாகப் புறப்பட்டு,
மே மாதத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தார் -

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!..

துறைமுகத்தில் வரவேற்றவர் அப்துல்லா சேத்..

இவருடைய வழக்கில் வாதாடுவதற்குத் தான் - காந்தி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு வந்திருக்கின்றார்..

ஏழு நாட்களுக்குப் பிறகு - டர்பனிலிருந்து பிரிட்டோரியா எனும் இடத்திற்குப் புகைவண்டியில் புறப்பட்டார் - கையில் முதல் வகுப்பு பயணச்சீட்டுடன்!..


பயணம் தொடர்ந்தது.. இரவு ஒன்பது மணி..

புகைவண்டி வந்து நின்ற இடம் - மாரிட்ஸ்பர்க்..

இந்த ஸ்டேஷனில் தான் காந்திஜி அவமானப்படுத்தப்பட்டார்..

நின்றிருந்த வண்டியில் பயணிக்க வந்தவன் - தான் பயணம் செய்ய இருக்கும் முதல் வகுப்புப் பெட்டியில் கறுப்பன் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டான்..

திரும்பிச் சென்று முறையீடு செய்தான்..

அதன்பேரில் ரயில் நிலைய அதிகாரிகள் வந்தனர்..

நீர் சாமான்கள் இருக்கும் வண்டிக்குச் செல்ல வேண்டும்!..

என்னிடம் தான் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கின்றதே!..

அதைப் பற்றி அக்கறை இல்லை.. நீர் சாமான்கள் இருக்கும் வண்டிக்குச் செல்ல வேண்டும்!..

நான் இந்த வண்டியில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றேன்.. எனவே, இதில் தான் பயணம் செய்வேன்!..

நீர் இதில் போகக்கூடாது.. வண்டியிலிருந்து நீர் இறங்கவில்லையானால் - உம்மைக் கீழே தள்ளுவதற்காகப் போலீஸைக் கூப்பிடவேண்டியிருக்கும்!..

அழைத்துக் கொள்ளும்!.. நானாக வண்டியிலிருந்து இறங்க மாட்டேன்!..

இந்த வார்த்தைகளுக்கு அப்புறம்,

உடனடியாக வந்த போலீஸ்காரரன் - காந்திஜியின் கையைப் பிடித்து இழுத்து வண்டியிலிருந்து வெளியே தள்ளினான்..

காந்திஜி வைத்திருந்த பொருட்கள் வெளியே வீசப்பட்டன..

நடைமேடையில் - தனது பொருட்களுடன் காந்திஜி கிடக்க -
அந்த ரயில் வண்டி புறப்பட்டுச் சென்று விட்டது..

இரவுப் பொழுதில் கடுங்குளிர். வெளிச்சம் அதிகமில்லாது இருக்கின்றது - பயணிகள் ஓய்வு அறை.. அங்கே சென்று அமர்கின்றார்..

நிறத் துவேஷம் எனும் கொடிய நோயின் வெளி அறிகுறியை மட்டுமே உணர்ந்த தருணம் - அது!.. - என்று காந்திஜி குறிக்கின்றார்..

மறுநாள் - பொழுது விடிகின்றது..

நடந்த சம்பவத்தை விவரித்து ரயில்வே ஜெனரல் மானேஜருக்கும் அப்துல்லா சேத்துக்கும் தந்தி கொடுக்கின்றார்..

நிலைய அதிகாரி செய்தது சரியென்று சொல்லி விட்டது - மேலிடம்..

போய்ச் சேரவேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச் சேரும் வழியைப் பாருங்கள்!.. - என்று அப்துல்லா சேத் மறு தந்தி கொடுக்கின்றார்..

அத்துடன் - மாரிட்ஸ்பர்க்கில் உள்ள தனது நண்பர்களுக்குத் தகவல் அளிக்கின்றார்கள்..

அவர்கள் வந்து ஓய்வறையில் உட்கார்ந்திருக்கும் காந்திஜியைச் சந்தித்து - இதைவிடக் கொடுமைகளை அனுபவித்திருப்பதாகக் கூறுகின்றனர்..

ஓரளவு சமாதானமடைந்த காந்திஜி - மாலை நேரத்தில் வந்த ரயிலில் மீண்டும் புறப்படுகின்றார்..

விடியற்காலையில் ரயில் வந்து சேர்ந்த இடம் - சார்லஸ் டவுன்..

அங்கிருந்து ஜோகன்ஸ்பர்கிற்கு ரயில் வசதி இல்லாததால் - கோச் வண்டியில் பயணம்.. ஆயினும் -

குதிரைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியின் உள்ளே அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை..

ஒருவழியாகக் கிடைத்தது - வண்டியோட்டுபவனின் அருகில் இருந்த இருக்கை..

சகித்துக் கொண்ட காந்திஜி - மீண்டும் தொல்லைக்கு ஆளானார்..

சில மணி நேரத்திற்குப் பின் -
வசதியாக அமர்ந்து கொண்டு சுருட்டு பிடிப்பதற்காக -
வண்டியின் உரிமையாளன் அந்த இடத்தை விரும்பினான்.. ஆகவே -

வண்டியின் படிக்கட்டில் அமர்ந்து கொள்ளுமாறு ஆணையிட்டான்..

இந்த அவமதிப்பை எதிர்த்து - காந்திஜி வாக்குவாதம் செய்தார்..

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த வண்டியின் உரிமையாளன் - காந்திஜியைக் கீழே தள்ள முயற்சித்தான்.. கோபத்துடன் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.. கடுமையாகத் திட்டினான்..

இதைக் கண்டு இரக்கப்பட்ட பயணிகள் சிலர் காந்திஜிக்கு ஆதரவாகப் பேசினர்.. ஆனாலும் வண்டிக்காரன் ஒத்துக் கொள்ளவில்லை..

ஒருவழியாக மறுபுற இருக்கையில் அமர்ந்து கொள்ள பயணம் தொடர்ந்தது..

வண்டி ஸ்டாண்டர்ட்டன் எனும் ஊரைச் சென்றடைந்தது. அங்கே சற்று ஓய்வு.

அப்துல்லா சேத்தின் நண்பர்கள் காந்திஜியைக் காண வந்திருந்தனர்..

அவர்களிடம் வண்டிக்காரனால் அவமதிக்கப்பட்டதைக் கூறினார்..

இதைவிடப் பெரிய கொடுமைகள் எல்லாம் நடந்திருப்பதாகக் கூறி - அவரைத் தேற்றினார்கள்..

மறுநாள் - காலையில், வேறொரு நல்ல வண்டி கிடைத்தது..
உள்ளே அமர்ந்தபடி பயணமும் நல்லவிதமாக அமைந்தது..

ஜோகன்ஸ்பர்க் சென்றடைந்தபோது நள்ளிரவு..

அங்கே, அப்துல்லா சேத் அவர்களின் வகையறாக்களில் ஒருவரான அப்துல்கனி சேத் எதிர் கொண்டார்.. அவர் மூலமாக அங்கே நிகழும் அவலங்களையும் அறிந்து கொண்டார்..


இந்தியர்கள் - ஹோட்டல்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதையும் இந்தியர்களுக்கு -  ரயிலில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்பதையும் தெரிந்து கொண்டார்..

பின் அங்கிருந்து பிரிட்டோரியாவுக்குப் புறப்படுகையில் -
அங்கிருந்த ரயில்வே நிலைய அதிகாரிக்கு தன் நிலையை விளக்கி கடிதம் அனுப்பி விட்டு - ஸ்டேஷனுக்குச் சென்றார்..

ஹாலந்து நாட்டுக்காரரான நிலைய அதிகாரி -
அங்குள்ள நிலைமைக் கூறி விட்டு முதல் வகுப்பு டிக்கெட் வழங்கினார்..

இதைக் கண்ட - அப்துல் கனி சேத்திற்கு மிகுந்த ஆச்சர்யத்துடன்,

உங்கள் பயணத்தை ரயில்வே கார்டு அனுமதிக்கமாட்டார்.. அப்படியே அனுமதித்தாலும் மற்ற பயணிகள் அனுமதிக்க மாட்டார்கள்!.. - என்றார்..

வழியில் மீண்டும் - அதே பிரச்னை!..

டிக்கெட் பரிசோதகர் வந்தார்.. காந்திஜியைக் கண்டு - விரல்களாலேயே குறிப்பு காட்டினார். எழுந்து சென்றுவிடுமாறு..

இதைக் கண்ட சக பயணி கோபித்துக் கொண்டார்..

அவரிடம் தான் முதல் வகுப்புக்கான டிக்கெட் இருக்கின்றதே.. ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?.. இங்கே பயணிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை!..

அத்துடன் - காந்திஜியிடம்,

நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டாம் .. இங்கேயே இருங்கள்!.. என்றார்..

பரிசோதனை செய்ய வந்த கார்டு -

ஒரு இந்தியக் கூலியுடன் பயணம் செய்வதை நீங்கள் விரும்பினால் - நான் என்ன செய்ய முடியும்!.. எனக்கென்ன கவலை!..

- என்று முணுமுணுத்தபடி சென்றுவிட்டார்..

இனிய பயணம் தொடர -
இரயில் இரவு எட்டு மணிக்கு பிரிட்டோரியாவைச் சென்றடைந்தது..


நிறவெறி மிகுந்திருந்த தென்னாப்பிரிக்காவில்
தனக்குள்ள உரிமையைப் போராடிப் பெற்று
பிறருக்கும் வழங்கிய
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று!..
* * *


மாமனிதர்
லால் பகதூர் சாஸ்திரி.. 
(02 -10 - 1904 . . . 11 - 01 - 1966)




பாரதத் திருநாட்டின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்த
லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்குச் சொந்தமாக வீடு கூடக் கிடையாது.. 
கடைசி காலத்தில் கார் ஒன்றினை வாங்கினார். 
அதன் கடனைத் தான் தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்..
* * *


பெருந்தலைவர்
காமராஜர்.. 
(15 - 07 - 1903 . . . 02 - 10 - 1975)







தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்
ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச்சேர்ந்தவர்..
* * * 


அப்பெருமக்களை
என்றென்றும் சிந்தையில் கொண்டு 
ஒரு திருவிளக்கினை ஏற்றி வைப்போம்!..
* * *

வாழ்க நலம் 
* * * 

12 கருத்துகள்:

  1. நல்ல மனிதர்கள் பற்றிய பகிர்வு,,,,
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் ஐயா! காணக்கிடைக்காத அரும்படங்களும் தேசத்தலைவர்களையும் .,.அருமை!

    தமிழ்போல் இனிதான மொழிகள் ஏதுமில்லை! அதனால்தான் அதை குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டேண்! ஆங்கிலத்தை தவிர்த்து தாய்மொழில் கற்பதே சிறந்தது -இப்படி கூறியவர் நம் மகாத்தமா -தான்!

    ஆனால் இன்று தமிழை மறந்து பிற மொழியில் அறிவையும் வரவையும் பெருக்கிவருகிறோம்!
    நன்றுஅய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறியது - சரியே!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி தக்களிடமிருந்து இன்று இப்படியொரு பதிவை எதிர் நோக்கி இருந்தேன் அரிய புகைப்படங்களும், விடயங்களும் காண தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காந்திஜியின் சுய சரிதையில் இருந்து சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்து இருக்கிறேன் மேன் மக்கள் மேன் மக்களே என்ன இடையூறு வந்தபோதும் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. அண்ணல் நினைவுடன் அருமையான படமும் தொடுத்து
    அழகிய பதிவுச் சமர்ப்பணம்!
    வாழ்த்துக்கள் ஐயா!

    காந்தியின் நினைவுகளுடன் நானும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. மிகவும் அருமையான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..