நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 06, 2015

தைப்பூசத் திருவிழா - 3

சிறப்புமிகு பத்துமலையில் நடந்த தைப்பூசத் திருவிழா காட்சிகளை நேற்று கண்டு களித்தோம்.

இன்று மலேசியாவின் பினாங்கு நகரிலும் சிங்கப்பூரிலும் நடந்த தைப்பூசத் திருவிழா காட்சிகளை மகிழ்ச்சியுடன் பதிவிடுகின்றேன்.


தமிழகத்திற்கு வெளியே அமைந்துள்ள முருகன் கோயில்களுள் - பினாங்கு மாநகரில் அமைந்துள்ள தண்ணீர் மலை தண்டாயுதபாணி திருக்கோயில் மிகப் பெரியது.

இங்கே தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வெகுவிமரிசையாக தைப்பூச விழாவில் கலந்து கொள்கின்றனர்.

சீனர்களுள் முருக பக்தி கொண்டுள்ளோர் ஆயிரமாயிரம்.

இங்கு மூன்று தினங்கள் நடைபெறும் திருவிழாவில் - தைப்பூச நாளன்று பொது விடுமுறையாகும்.


தைப்பூசத்திற்கு முதல் நாள் முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் தண்ணீர் மலைக்கு எழுந்தருளுகின்றான்.




ஊர்வலம் செல்லும் வழி நெடுக - ஆடிப் பாடி மகிழும் தமிழர்களோடு சேர்ந்து சீனர்களும் ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்துகின்றனர்.





பினாங்கில் கோயில் வீட்டிலிருந்து அதிகாலையில் புறப்படும் ரத ஊர்வலம் - வழி நெடுக தமிழர் - சீனர் என அன்பர்களில் அர்ச்சனை மரியாதைகளை ஏற்றுக்கொண்டு கோயில் வந்து சேர்வதற்கு இரவுப் பொழுதாகின்றது




மறுநாள் தைப்பூசத்தன்று காவடிகளுடன் கரும்புத் தொட்டிலும் பிரசித்தம்.

தைப்பூசத்தன்று மதியம் நிகழும் மகேசுர பூஜையும் அன்னதானமும் பிரம்மாண்டமானது. நள்ளிரவு வரை காவடி சேவை நிகழும்.

மூன்றாம் நாள் ஸ்ரீமுனீஸ்வர பூஜையுடன் - முதல் நாள் கோயிலில் சேர்த்த காவடிகளை எடுத்து ஆடி - சந்நிதியில் சேர்த்து, தேங்காய் உடைத்து இல்லம் திரும்புவர்.

அன்றிரவு வெள்ளி ரதம் தண்ணீர் மலையிலிருந்து புறப்பட்டு - பினாங்கு வீதியிலுள்ள கோயில் வீட்டை அடைவதுடன் திருவிழா இனிதே நிறைவேறுகின்றது.

பினாங்கு தைப்பூச விழா மேலதிக குறிப்புகளை வழங்கிய விக்கிபீடியாவுக்கு நன்றி!..


இனி சிங்கப்பூரில் நிகழ்ந்த தைப்பூசத் திருவிழா காட்சிகள். 

என் வாழ்வின் - இனிமையான நான்கு வருடங்கள் - சிங்கப்பூரில்!.. 


Singapore Deputy Prime Minister Mr. Teo Chee Hean
Keppel Shipyard - எனும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடம் - பூன்லே - ஜூரோங்க் (Boon lay - Jurong)

வாராந்திர விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் - 
சிராங்கூன் சாலையிலும், மாரியம்மன் திருக்கோயிலிலும் தான்!..

கோலாகலமான தைப்பூசத் திருவிழாவின் நினைவுகள் நெஞ்சில் இன்றும் அலையெனப் புரள்கின்றன.

சிங்கப்பூரில் - தைப்பூசத் தினத்தன்று விடுமுறை நாள்!..



தமிழர்களின் பக்திக்கு இணையாக சீனர்களும் பால்குடம் காவடி என சுமந்து வருவதுடன் - அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.

ஸ்ரீ வீரமாகாளி அம்மன் சந்நிதியிலும் ஸ்ரீ மாரியம்மன் சந்நிதியிலும் -
டேங்க் ரோடு - ஸ்ரீ தண்டாயுதபாணி சந்நிதியிலும் - பிறந்த குழந்தையுடன் வந்து சீர் செய்யும் சீன குடும்பங்களை இன்றும் காணலாம்.

சிங்கப்பூர் ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயில் - இறையன்பு மிக்க நாட்டுக் கோட்டை செட்டியார்களால் - கட்டப்பட்ட ஆண்டு 1859..

இந்தத் திருக்கோயிலில் ஐம்பொன் வேல் தான் மூலவர்.

திருமுக கவசம் சாத்தப்பட்டு அலங்காரத்துடன் விளங்கும் - வேலுக்குத் தான் நித்ய அபிஷேகம் எல்லாம்!..

மேலும் - கருவறையில் உற்சவ விக்ரகமும் உள்ளது.
இந்த விக்ரகம் தான் திருவிழாவின் போது ரதத்தில் பவனி வருவது.

திருக்கோயிலிலுடன் இணைந்ததாக - மிக சமீபத்தில் ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாதர் சந்நிதிகள் எழுப்பப்பட்டன.



கலையழகு மிக்க சுதை சிற்பங்களுடன் விளங்கும் இந்த பழைமையான திருக்கோயில் சிங்கப்பூரின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் - தைப்பூச விழாவினை நேரில் தரிசித்து நான் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் ஊரில் இருக்கின்றன.

பதிவில் உள்ள படங்கள் வழக்கம் போல Facebook-ல் வந்தவை!..

1980ல் வெளியான திரைப்படம் - வருவான் வடிவேலன்.

அந்தத் திரைப்படத்தில் மலேசியா சிங்கப்பூரில் நடக்கும் தைப்பூசத் திருவிழா - மிக நீண்ட பாடலுடன் காட்டப்பட்டிருக்கும்.

அந்தத் திரைப்படத்தின் பாடல்களை கவியரசர் எழுத,  மெல்லிசை மன்னர் இசை அமைத்திருந்தார்.

பக்தி மயமான பாடல் ஒன்றில் கவியரசரின் வரிகள் - இவை!..

வாழவந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா - நல்ல
வடிவேலின் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!..


வடிவேல்!..
துணையாய் இருப்பதும் 
துணையாய் வருவதும்
வடிவேல்!..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..
வீரவேல் முருகனுக்கு அரோகரா!..
* * * 

15 கருத்துகள்:

  1. தேசிய சின்னம் தகவல் உட்பட அனைத்தும் சிறப்பு... நாங்களும் கலந்து கொண்ட திருப்தி...

    பதிலளிநீக்கு
  2. தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் கோவிலில்(மதுரை) நீங்கள் சொல்லும் கரும்பு தொட்டிலில் குழந்தையை போட்டு அப்பாவும், அம்மாவும் தூக்கிக் கொண்டு கோவிலை வலம் வந்தார்கள் பார்த்தேன்.
    தைப்பூசத்திருவிழா கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சிறு பிள்ளைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர்வதற்காக வேண்டிக் கொள்வதே - கரும்பு தொட்டில்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான தைப்பூச விழாவைக் காண கூட்டிச் சென்றமைக்கு நன்றி. வெளிநாட்டில் இத்தனை விமரிசையாக கொண்டாடுகிறார்களே....
    படங்கள் நன்றாக இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சிங்கப்பூர் மலேசியாவில் - தீபாவளி பொங்கல் பண்டிகைகளை விட மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது தைப்பூசம் தான்!..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. அருமை ஐயா! பரவாயில்லையே வெளிநாடுகளில் கூட இப்படிக் கொண்டாடுகின்றார்களே. தேங்காய் உடைக்க எல்லாம் அனுமதி அளிக்கப்பட்டு! முருகன் மயில் வாகனத்தில் உலகைச் சுற்றியதாக திறுவிளையாடற் புராணம் சொல்லுவது எத்தனை உண்மை! இதோ...அருமையான படங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தீபாவளி பொங்கல் பண்டிகைகளை விட தைப்பூசத்தை தான் - சிங்கப்பூர் மலேசியாவில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

      திருவிளையாடற் புராணத்தைச் சுட்டிக் காட்டியது நல்ல கருத்து.

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  5. புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      இனிய கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  6. கடல் கடந்து தைப்பூசம் விழாவில் கலந்துகொண்ட நிறைவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வருகை தந்து கருத்துரைத்த தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. நேரில் கண்ட மகிழ்ச்சி. அருமை நன்நிகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எங்கே வெகு நாட்களாகக் காணோம்!. - என நினைத்துக் கொண்டிருந்தேன்.. தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..