நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 26, 2014

அண்ணாமலை

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..


திரு அண்ணாமலையில் தீபக் கார்த்திகைத் திருவிழா..

நம்முடைய தொன்மையான திருவிழாக்களுள்  தீபத்திருவிழாவும் ஒன்று!..

இந்த கார்த்திகை தீபத் திருநாளே தமிழகத்தின் தீபாவளி!..

தீபாவளி எனில் - நரகாசுரனை வீழ்த்திய நாள் என்ற அர்த்தத்தில் அல்ல!..

தீபாவளி என்பது வடமொழிச் சொல் .

தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை எனப் பொருள்.

நாமாவளி எனும் போது இறைவனின் திருப்பெயர்களின் வரிசை எனப் பொருள் கொள்கின்றோம் அல்லவா!..

அதைப் போல -
தீபாவளி எனில் தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுதல் என்பதாகும்.

இந்த தீபாவளி எனும்  தீப வரிசைக்குள் -  காலத்தின் கோலத்தால் பின்னாளில் நரகாசுரன் வந்து புகுந்து கொண்டான்.  

ஆயினும் - விளக்கீடு எனும் இத் திருநாள் - 
சங்கத் தமிழ்ப்பாடல்களில் காணப்படும் தொன்மையினை உடையது.
 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
(2/47)

திருமயிலையில் - சிவநேசன் செட்டியாரின் மகள் பூம்பாவையை அஸ்திக் குடத்திலிருந்து எழுப்புதற்கு இசைத்த திருப்பதிகத்தில் கார்த்திகை விளக்கீடு எனக் குறிக்கின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்.

இந்த கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாள்.


கார்த்திகை நாளின் மாலைப் பொழுதில் -  
தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளை  அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக் கொள்வர்.  

அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள்.

இந்த நன்னாள், எதிர்வரும் 05-12-2014. வெள்ளிக்கிழமை கூடி வருகின்றது. 

திருக்கார்த்திகைத் திருநாள் -  பூவுலகில் அக்னி மலையாகத் திகழும் அண்ணாமலைக்கே உரித்தானது.

திருக்கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அருணாசலம் எனப்படும் அண்ணாமலையில் இன்று கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்கின்றது.


எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம்  - திரு அண்ணாமலை.

ஈசன் மலை வடிவாகத் திகழ்கின்றனன் என்பர் பெரியோர்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

மாணிக்கவாசகப் பெருமான்  போற்றித் துதித்த திருத்தலம்.

எத்தனை எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்த திருத்தலம்.

இன்னும்  - வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம்.

வாழ்வில் - தடம் மாறிச் சென்றதால் தடுமாறித் தவித்த அருணகிரி - தமிழ்க் குமரனின் திருவருளால் மீண்டும் தலை நிமிர்ந்து துலங்கி நின்ற திருத்தலம்.

அருணகிரி நாதர் என - அமுதத் தமிழில் திருப்புகழ் மொழிந்த திருத்தலம்.

இன்னும் அறியப்படாத எண்ணற்ற ரகசியங்களுடன்  - 2668 அடி உயரத்துடன் திகழும் அண்ணாமலையைச் சுற்றிலும் பல்வேறு தீர்த்தங்களும் சந்நிதிகளும் விளங்குகின்றன.

அவற்றுள் அஷ்ட லிங்க சந்நிதிகளும் அடி அண்ணாமலை திருக்கோயிலும் வெகு சிறப்பானவை.

அண்ணாமலையின் கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவினை உடையது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதை லட்சக் கணக்கான பக்தர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

திருஅண்ணாமலையை வலம் வருவது பெரும் புண்ணியம் எனப்படுகின்றது.


இத்திருத்தலத்தில் - திருக்கார்த்திகைத் திருவிழாவின் தொடக்கமாக -

23/11 அன்று அண்ணாமலையின் காவல் நாயகி ஆகிய ஸ்ரீதுர்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அன்றிரவு - ஸ்ரீ துர்காம்பிகை காமதேனு வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள். 

24/11 அன்று திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ வழிபாடுகள் நிகழ்ந்தன. அன்றிரவு ஸ்ரீபிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

அதன் பின் 25/11 அன்று விநாயகப்பெருமானுக்கு உற்சவ வழிபாடு நடத்தப் பெற்று ஸ்வாமி மூஷிக வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார். 

இன்று (26/11) கார்த்திகைத் திருவிழாவின் முதல் நாளாக காலை 6.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக் கொடியேற்றம். 

அண்ணாமலையாரின் திருக்கோயிலின் 72 அடி உயர கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்படுகின்றது. 


முதல் திருநாள் - 26/11 - புதன் கிழமை
காலை - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் - வெள்ளி விமானங்கள்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
ஸ்வாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனம். அம்பாள் - ஹம்ஸ வாகனம்.

இரண்டாம் திருநாள் - 27/11 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - சூர்ய பிரபை.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி இந்திர விமானங்கள்.

மூன்றாம் திருநாள் - 28/11 - வெள்ளிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - பூத வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி அன்ன வாகனம்.

நான்காம் திருநாள் - 29/11 - சனிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - நாக வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம்.

ஐந்தாம் திருநாள் - 30/11 - ஞாயிற்றுக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி ரிஷப வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரிஷப வாகனம்.

ஆறாம் திருநாள் - 01/12 - திங்கட்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி யானை வாகனம்.
அறுபத்து மூவர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரதம், வெள்ளி விமானம். 

ஏழாம் திருநாள் - 02/12 - செவ்வாய்க்கிழமை
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல்.
பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். மகா ரதம். திருத்தேரோட்டம்.

எட்டாம் திருநாள் - 03/12 - புதன் கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி விமானம்.
மாலை நான்கு மணிக்கு பிக்ஷாடனர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். குதிரை வாகனம்.

ஒன்பதாம் திருநாள் - 04/12 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி விமானம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். 
கையிலாய திருக்கோலம். காமதேனு வாகனம்.


பத்தாம் திருநாள் - 05/12 - வெள்ளிக்கிழமை
அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்.
மாலை அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி திருநடனம்.
மாலை ஆறு மணிக்கு திருக்கார்த்திகை - ஜோதி தரிசனம்.
இரவு - தங்க ரிஷப வாகனம்.

06/12 - சனிக்கிழமை
அதிகாலை சந்திரசேகரர் கிரிவலம் எழுந்தருளல்
இரவு - தெப்ப உற்சவம்.

07/12 - ஞாயிற்றுக்கிழமை
இரவு - அம்பாள் தெப்ப உற்சவம்.

08/12 - திங்கட்கிழமை
இரவு - சுப்ரமணியர் தெப்ப உற்சவம்.

09/12 - செவ்வாய்க்கிழமை
இரவு - விநாயகர் - வெள்ளி மூஷிகம். சண்டிகேஸ்வரர் -  வெள்ளி ரிஷபம்.  

தீபத் திருவிழாவினை முன்னிட்டு - நகர் முழுதும் விழாக் கோலம் கொண்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஒளிமயமாக விளங்குகின்றது. 

ஒன்பது திருக்கோபுரங்களும் தங்கக் கொடிமரமும் சந்நிதிகளும் தல விருட்சமான மகிழ மரமும் பல வண்ண மின் விளக்குகளால் ஒளிர்கின்றன. 


தேடி நின்ற நான்முகனும் திருமாலும் அறியும் வண்ணம்  - லிங்கோத்பவராக அடிமுடி அறிய இயலாதபடி ஜோதி வடிவாக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம். 

நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
பஞ்ச பூதத் திருத்தலங்களுள் அக்னி ஸ்வரூபம்.

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் சிற்றம்பலத்தில்  ஸ்ரீநடராஜர் விளங்குவது போல - 

திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவராக அண்ணாமலையார் விளங்குகின்றார்.

தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்து இரண்டனுள் தலையாயது  - திருஅண்ணாமலை.

ஐயன் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையான்
அம்பிகை - அபிதகுஜாம்பாள், உண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்.
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.
திருத்தலப் பெருமை - கணக்கற்றவை.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10)
ஞானசம்பந்தப் பெருமான்.

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ
ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே!.. (5/5)
அப்பர் ஸ்வாமிகள்.
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

17 கருத்துகள்:

  1. அமுதக்கடலாய் அண்ணாமலைப்பதிவுகள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கார்த்திகை தீபத் திருவிழாவுக்குக் கட்டியம் கூறும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      கட்டியம் கூறுதல்.. கிடைத்தற்கரிய பேறு!.. மிக்க மகிழ்ச்சி..
      தங்களின் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி - ஐயா!..

      நீக்கு
  3. திருக்கார்த்திகை திருவிழா விபரங்களும், தீபத்திருவிழா விளக்கமும் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  4. அண்ணாமலைக்கு அரோகரா...!!!
    திருவண்ணாலை தீபத்திருநாள் - 10 நாட்கள் பற்றி அழகா தொகுத்து தந்து இருக்கிறீர்கள்.

    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. விளக்கவுரையும், புகைப்படங்களும் அருமை நண்பரே,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அண்ணாமலையாருக்கு அரோகரா!!
    திருக் கார்ஹ்திகிப் பற்றிய விவரங்களும், திருவண்ணாமலை திருவிழா பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைத்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மிகவும் அருமையான தகவல்கள் கார்த்திகைத் தீபம், அண்ணாமலையாரைப் பற்றி. படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அசர வைக்கும் பட்டியலுடன் தொகுப்பு மிகவும் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. திருவண்ணாமலை தீப விழா பற்றி அழகாய் ஒரு பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..