நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 27, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 2

திருக்கயிலை மாமலையின் பொன் முகடு.

அம்மையும்  அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.


அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.  

சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க - 

முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.


எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என  படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான். 

அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.

''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''

அவன் இறுமாப்பு எய்திய  அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.

ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து  பின் வாங்கி நின்றது. 

'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன  ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.

கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான்  நாகராஜன்.

''... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''

பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...

அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.  

நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று -

'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.

'' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான். 


பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான். 

பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -

சிவராத்திரியின் நான்கு காலத்திலும்  வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான். 

மண்டையில் வைத்துக் கொண்டால் தான் -  கனமாகி விடுகிறதே!...

தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில்  மாநாடு கூட்டினான் - நாகராஜன்.

அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.

''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர். 

ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....  

தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் -  காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.

மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.  

அவனை நல்ல காலம் நெருங்கியது.

சிவராத்திரியின் முதல் காலம்
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)


விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான். 

தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.

கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.

இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் இரண்டாம் காலம்
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.

அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி  நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.

பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...

இரண்டாங்காலத்தில்  இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.

''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!... 
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''

- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.

மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் மூன்றாம் காலம்
(நள்ளிரவு  12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)

நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.

இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.


ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -

 ''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.

கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.

சிவராத்திரியின் நான்காம் காலம்
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)

பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!.. 

பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன. 

சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.

ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.

புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.


அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.  

நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.

கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.

கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில்  தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.

''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''

குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.

அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,


கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.

அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.

அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.

பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்.

*  *  *

நாகராஜன் தவமாய்த் தவமிருந்து - வழிபட்ட திருத்தலங்கள்

முதல் காலம் 
நலம் தரும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரன் திருக்கோயில்.

ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்

சித்திரை மாதம் 13,14,15 - ஆகிய நாட்களில் சூரிய  பூஜை நிகழும் திருத்தலம்.

இரண்டாம் காலம் 
தனம் தரும் திருநாகேஸ்வரம் 
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்.

ஸ்ரீ நாகநாதஸ்வாமி திருக்கோயில்

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை  அரவின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே!..(5/52)
                                                                        
திருநாவுக்கரசு சுவாமிகள், நாகராஜனை - ஐந்தலை அரவு - எனக் குறிப்பிட்டு  பாடுகின்றார்.

காலப்போக்கில் திருக்கோயிலின் வெளித்திருச்சுற்றில் நாகராஜனுக்கு - நாககன்னி, நாகவல்லி - எனும் தேவியருடன் சந்நிதி  எழுப்பப் பட்டது.

இந்தத் திருக்கோலத்தைத் தான், ராகு பகவான் என - பிழையாகக் கொண்டு தவறான வழிகாட்டுதல்களுடன் - வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மூன்றாம் காலம்  
அருள் தரும் திருப்பாம்புரம் 
ஸ்ரீ வண்டார்குழலி சமேத ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்

திருப்பாம்புரம் திருக்கோயிலினுள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாதபடி - நாகங்கள் உரிமையுடன் உலாவுவதை நாம் காணலாம்.

நான்காம் காலம்  
வளம் தரும் திருநாகப்பட்டினம்  
ஸ்ரீ நீலாயதாட்சி சமேத ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்து அமைத்த விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் - சுந்தர விடங்கத் தலம்.

நாகராஜனுக்கு அருளிய நாகாபரண விநாயகர் திருக்கோயிலின் முதலில் வீற்றிருக்கின்றார்.

நாகம் என்பது யோக நூல்களில் குண்டலினியாக உருவகப்படுத்தப்படுவது. குண்டலினி நமது ஜீவசக்தி. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் உயிர் சக்தி.

இப்போது இவற்றை ஒன்றுபடுத்திப் பாருங்கள்!...

அகங்காரத்தினால் சிதறிப் போகின்றது ஜீவசக்தி. 
நாம் ஒன்றிய மனத்துடன் சிவபூஜை செய்து - 
இதை ஒருங்கிணைத்தால் பெறுதற்கு 
அரிய பெருவாழ்வினை மீண்டும்  பெறலாம் .

இதுவே - சிவராத்திரியன்று நிகழ்த்தும் சிவவழிபாட்டின் தத்துவம்!..


இந்த புனிதமான பொழுதில், உங்களோடு என்னையும் திருத்தலங்களைத் தரிசிக்கும்படித்  தண்ணருள் செய்த - எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்குகின்றேன்!..

''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்''
''திருச்சிற்றம்பலம்''

12 கருத்துகள்:

  1. ஒவ்வொரு காலத்திற்கு அருள் தரும் கோயில்களின் தகவல்களும் சிறப்பு ஐயா...

    ஓம் நம சிவாய...
    சிவாய நம ஓம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  2. கோயில்களும் சிறப்புகளும் அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி

    பதிலளிநீக்கு
  4. தெரிந்த விழா. தெரியாத கதை . அறிய வைத்தமைக்கு நன்றி துரைசார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. அன்பின் தனபாலன்..
    தகவல் அன்புடன் அளித்த தங்களுக்கும்
    தளத்தினை அறிமுகம் செய்த சகோதரி ராஜி அவர்களுக்கும் -
    மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும்!..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரா !
    சிவராத்திரி பற்றி இவ்வளவு விடயங்கள் தெரியப் படுத்தியது உண்மையில் சிறப்பே
    அதுவும் சிவராத்திரி தருணத்தில் நன்றி ! வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கோவில்.....

    சிறப்பான தகவல்கள் தந்து எங்களையும் மகிழ்வித்தமைக்கு நன்றி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..