நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 11, 2019

ஓணத் திருநாள்

இன்று மகாகவியின் நினைவு நாள்...


தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தின் இனியதடி பாப்பா.. நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா...

உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்
வயிரமுடைய நெஞ்சு வேண்டும் இது வாழும் முறைமையடி பாப்பா!..
-: மகாகவி :-
***

இன்று திருஓணத் திருநாள்..
ஓணத்தின் அடிப்படையே வயிரமுடைய நெஞ்சு தான்!..


வந்திருப்பவன் இறை என்று அறிந்திருந்தும், அவனால் - தன் வாழ்வு முடிய இருக்கின்றது என்பதை அறிந்திருந்தும் மாவலி மன்னன் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தானத்தை நிறைவேற்றினான். 

யாகத்திற்கு வழிகாட்டிய குரு சுக்ராச்சார்யார் - கொடை கொடுக்காதே!.. - எனத் தடுத்தும் மாவலி மன்னன் கேட்கவில்லை.

தன் சொல்லை மீறி - தாரை வார்க்கும் மாவலியின் தானத்தைத் தடுப்பதற்காக சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி கிண்டியின் நீர்த்தாரையினுள் புகுந்து நீர் வழியை அடைத்தார். 

விளைவு!?..

ஸ்ரீவாமனனின் தர்ப்பையினால் குத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்தார்.

பரம்பொருளுக்கே தானம் வழங்கி பாதாள லோகத்திற்கு அதிபதியானான் மாகாபலி சக்ரவர்த்தி!..

மகாபலிக்கு இந்த வாழ்வும் வரமும் சிவபெருமானால் அருளப்பட்டது.

இரவு நேரம். அருள் வடிவான சிவலிங்கத்தின் அருகில் நெய் நிறைந்த அகல் விளக்கு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது. அதனுள் நெய் இருக்கும் நெய்யினை சுவைப்பதற்காக - ஆவலுடன் ஓடி வந்த எலி அவசரத்தில் சுடரின் பக்கத்தில் தன் நாவினை நீட்டிவிட  - சுருக் என சுட்டு விட்டது. எலி, பதறித் துள்ளியதில் விளக்கின் திரி தூண்டப்பட்டு முன்னை விட அதிகமாக ப்ரகாசித்தது.

இது போதாதா - எம்பெருமானுக்கு!.. கருணையுடன் காட்சி தந்தார். வரமும் தந்தார் - மாவலி எனும் மன்னனாகப் பிறக்க - என்று!..

இப்புண்ணியம் வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டில் நிகழ்ந்தது. இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - திருப்பதிகத்தில் பதிவு செய்து - போற்றிப் பாடி மகிழ்கின்றார்.

அசுர வேந்தனாக - ஸ்ரீ பிரகலாதனின் பேரனாகப் பிறந்த மகாபலி - தான தர்மத்தில் தலை சிறந்து விளங்கினான்.

அசுர குருவாகிய சுக்ராச்சார்யரின் தூண்டுதலால் - தேவர்களை வெற்றி கொண்டு இந்திர லோகத்தினைக் கைப் பற்றிக் கொண்டு மகாபலிச் சக்ரவர்த்தி எனப் புகழப்பட்டான்.

அமரலோகம் தன் கையிலேயே நிலைக்க வேண்டும் என்ற ஆவலினால் மகத்தான யாகம் செய்ய முற்பட்டான்.

அவ்வேளையில் -

ஆவணி சுக்ல பட்சம், திருவோண நட்சத்திரத்தில் - உச்சிப் பொழுதில் காசியபர் - அதிதி தம்பதியர்க்கு, அருந்தவ புத்ரனாக - கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சங்கு சக்ரதாரியாக அவதரித்தான் பரந்தாமன்.


அதிதியின் பாலனாகத் தவழ்ந்த பெருமான் வாமனன் எனும் திருப்பெயர் கொண்டு நிகரற்ற பேரும் புகழும் பெற்று பெருமான் வளர்ந்து  வந்த வேளையில் - தேவர்கள் அடைக்கலம் கேட்டு நின்றனர்.

அமராவதி கையில் இருந்து நழுவாமல் இருக்கும்படிக்கு - நூறு அஸ்வமேத யாகங்களைச்  செய்யத் தொடங்கினான்.

மூவுலகையும் கவர்ந்து கொண்டதன்றி வேறு குற்றம் ஒன்றும் காணப்பட வில்லை.  ஆயினும்  -  வையம் உள்ளளவும் புகழுடன் இருக்கும்படி  - பலிக்கு அருள் புரியத் திரு உளங்கொண்டார் பெருமான்.

பலி அஸ்வமேத யாகம் நடத்தும் யாக சாலைக்குச் சென்றார். ஸ்வாமியின் தேஜஸைக் கண்டு பிரமித்து மயங்கினர் அங்கிருந்த அனைவரும். வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த பலி, வேண்டுவது யாதெனக் கேட்க -


''..நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!. அதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை!..'' - என்று திருவாய் மலர்ந்தார்.

பலி உளம் மகிழ்ந்து  - ''..ஸ்வாமி!.. தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!..'' - என்றான்.

பெருமானோ - ''.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..''  - என்றார்.

விருப்புடன், தானம் வழங்கப்படும் வேளையில் சுக்ராச்சார்யார் -  அசுர வேந்தனிடம்- ''..வந்திருப்பவன் மாயவன். அவன் கேட்டபடி வழங்காதே!..'' - என்றார். அசுர வேந்தனோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..

- என்று மறுமொழி கூறி நின்றான்.

தன் யாகத்தைக் காப்பதற்காக வந்திருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கு வாமன அவதாரத்தை விவரிக்கும் போது - விஸ்வாமித்ர மகரிஷி - கூறுவதாக  - கம்பர்  இராமாயணத்தில் காட்டுகின்றார்.


தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, அதைக் கேளாமல் , தன் வாக்கு தவறாமல் வையத்தையும் வானத்தையும் இரண்டடிகளால் அளந்த பரந்தாமனின் மூன்றாவது அடிக்குத் தன்னையே தானமாக வழங்கினான்.

தானத்தில் சிறந்த மகாபலிக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு..

யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த பலி சக்ரவர்த்தியே அடுத்த மன்வந்த்ரத்தின் இந்திரன்!.. - என பரந்தாமன் வாழ்த்தி வரமளித்தான்.

திருமயிலையில் - திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவை உயிர் பெற்று எழுவதற்குத் திருப்பதிகம் பாடும் போது -

ஐப்பசி ஓணத் திருவிழாவினைக் குறிப்பிடுகின்றார். 

தமிழகத்தில் ஓணப்பெருவிழா ஐப்பசியில் நடைபெற்றதை - திருஞான சம்பந்தப் பெருமான் திருவாக்கினால் அறியலாம்.

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!..

- என கந்தர் அலங்காரத்தில் முருகப்பெருமானைப் புகழும் போது - வாமன அவதார நிகழ்வினை வர்ணிக்கின்றார் - அருணகிரிநாதர்..


ஓணத் திருநாளை கேரளம் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது... சகல திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

எல்லாம் சரிதான்!..

மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
(கம்பராமாயணம்)

தான் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு - திருமகள் பாதசேவை செய்ய -  மீண்டும் பள்ளி கொண்டாராம் எம்பெருமாள்!..
* * *

இந்த வாமன மூர்த்தியைத் தான் 
ஓங்கி உலகளந்த உத்தமன்!.. 
என்று - கோதை ஆண்டாள் - கொஞ்சும் தமிழில் கூறினாள்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!..

ஹரி ஓம் நமோ நாராயணாய.. 
* * *

21 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.  ஓணத்திருநாள் வாழ்த்துகள்.  பாரதி நினைவைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  2. இன்று பாரதியின் நினைவு நாள்.    பிறந்த நாள் டிசம்பர் பதினோராம் தேதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனக்கும் குழப்பம் வந்தது.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஜி அவர்களுக்கும் நல்வரவு...

      நீக்கு
    3. டிசம்பர் பதினோராம் தேதியன்று வேறே முக்கியமான ஒருத்தரோட பிறந்த நாள் என்பதால் தமிழ் கூறும் நல்லுலகு அதைத் தான் நினைவு கூர்ந்து அமர்க்களப்படுத்தும். பாரதியாரை அன்று நினைப்பவர்கள் எவரும் இல்லை!

      நீக்கு
  3. மாவலி வாமன நிகழ்வுகளை சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பதை படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய ஓணம் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தெரிந்த கதை இருந்தாலும் நீங்கள் அதை அழகாய் சொல்லும் போது படித்துக் கொண்டே இருக்கலாம். இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      தங்களுக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம்.

    ஓணத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      தங்களுக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்...

      நீக்கு
  7. ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      தங்களுக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்...

      நீக்கு
  8. அன்பு துரை காலந்தாழ்த்தி வந்திருக்கிறேன்.
    வாமன அவதாரத்தின் அழகு கண்ணன் அவதாரத்துக்கு மேல் உயர்ந்ததாகச்
    சொல்வார்கள். நொடிபொழுதில் இரணியனை வீழ்த்தி
    அவதாரம் பூர்த்தி செய்த நரசிம்மப் பெருமானின்
    அருள் பெற்றபிரகலாதச் சக்கரவர்த்தியின் பேரன் மாவலிக்குத்
    தண்டனை தர மனம் வருமா. தன் திருவடியை அவன் தலைமேல் வைத்து
    பேருலகம் அளித்தான்.
    மூவுலகம் ஈரடியால் அளந்த பெருமான்.
    அவன் திருவடிப் பெருமையை நீங்கள் சொல்லிச் சென்ற அழகு மிகவும் உன்னதம்

    மஹாகவி மறைந்த தினத்தில் திரு ஓணம் வந்து விட்டது.
    அனைவரும் நன்மையுற வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      காலம் தாழ்த்தி வருதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...
      அன்பு நெஞ்சங்களின் நல்வருகைக்காகக் காத்துக் கிடப்பவன்...

      தஞ்சையம்பதியை நினைவில் வைத்துக் கொண்டு தாங்கள் வருவதே எனக்கு மகிழ்ச்சி...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  9. கதை தெரிந்தது ஆனாலும், ஓணம் பண்டிகையுடன் இணைத்து நீங்கள் சொல்லிச் சென்றவிதம் முழுவதுமாக வாசிக்கச் செய்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு...

      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. கேரளத்தைச் சார்ந்த மேற்குக் கடற்கரைப்பகுதிகள் மஹாபலியால் ஆளப்பட்டதாகச் சொல்வதுண்டு. அதோடு ஒவ்வொரு வருடமும் திருவோணத்தினன்று மஹாபலி தன் மக்களைச் சந்திக்கப் பாதாள உலகில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதிகம்.

      நீக்கு
  10. தாமதமாய் வந்தாலும் நல்லதொரு பதிவு. மஹாபலி சிரஞ்சீவிகளில் ஒருவனாக ஆக்கப்பட்டான். அவனுக்கு மோக்ஷம் தான் கிட்டியது. மற்றபடி அவன் தன்னால் தான் எல்லாம் நடந்தது என உள்ளூரக் கொண்டிருந்த தற்பெருமை இப்படி வாமன அவதாரத்தால் அடக்கப்பட்டது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது நிரூபிக்கப்பட்டது, இந்தச் சிறுவனால் என்ன ஆகும்னு மஹாபலி நினைத்தது நடக்காமல் இந்தச் சிறுவனால் தான் உலகமே இயக்கம் பெறுகிறது என்பதை அவன் அறிந்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..