நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 16, 2018

ஸ்ரீவைகுண்ட தரிசனம்

அம்பாசமுத்திரத்தில் -
ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனத்துக்குப் பின்
வந்து சேர்ந்த திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வழியில்
30 கி.மீ., தொலைவில் உள்ள திருத்தலம் - ஸ்ரீ வைகுண்டம்....

திருச்செந்தூர் செந்தில்நாதனின் திருவருளால்
பேச்சு வரப்பெற்ற புண்ணியராகிய
ஸ்ரீ குமரகுருபரர் திருத்தோற்றமுற்ற திருநகர் - ஸ்ரீ வைகுண்டம்...

இவ்வூரில் தான்
நவ கயிலாயத் திருத்தலங்களுள் முதலாவதான
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயிலும்

நவ திருப்பதிகளுள் முதலாவதான
ஸ்ரீ வைகுண்டநாதன் திருக்கோயிலும் சிறப்புடன் திகழ்கின்றன...

இவ்விரண்டு திருக்கோயில்களும்
தென்பாண்டி நாட்டின் நவக்ரஹ தலங்களின் வரிசையில்
பித்ரு தோஷம் நீக்கும் சூரியனுக்குரிய தலங்களாக விளங்குகின்றன...

அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்படும்போதே மாலை மயங்கி விட்டது..

அங்கிருந்து அவசர அவசரமாக 
திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து 
திருச்செந்தூர் பாசஞ்சரில் பயணித்து -
ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்தபோது முன்னிரவு 7.30..

அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் ஸ்ரீ கள்ளர்பிரான் திருக்கோயில்..
ஆட்டோ ஒன்றில் பயணித்து திருக்கோயிலை அடைந்தோம்...

ஸ்ரீவைகுண்டம்


மூலவர் - ஸ்ரீவைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீவைகுந்தவல்லி
உற்சவர் - ஸ்ரீகள்ளர்பிரான்
ஸ்ரீதேவி, பூதேவி
மூலஸ்தானம் - சந்திர விமானம்
தீர்த்தம் - தாமிரபரணி, கலச தீர்த்தம்
தலவிருட்சம் - பவளமல்லி

இத்திருத்தலத்தை
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்..


ஒன்பது நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம்...
அளவில் பெரியதான திருக்கோயில்...

ஐப்பசி மாத பௌர்ணமியன்று காலையில் 
சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதங்களில் படிகின்றன...


திருமூலஸ்தானமாகிய சந்திர விமானத்தின் கீழ் 
ஆதிசேஷன் குடை பிடிக்க மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி திகழ - 
நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம். 

வாழ்வதற்கு வேறு வழியின்றி களவு செய்தவன் காலதூஷகன்.  
இவன் தன் பிழைக்கு வருந்தியவனாக - அற்றார்க்கும் அலந்தார்க்கும் - 
தான் திருடிய பொருள்களைப் பகிர்ந்து அளித்ததோடு 
இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்கும் ஒரு பங்கு அளித்தான். 

களவு கை கொடுத்தது - அவனுக்கு...
யாரிடமும் பிடிபடாத தைரியத்தில் - ஒருநாள் 
தன் கூட்டத்தாருடன் அரண்மனைக்குள் நுழைந்தான். 

அங்கே விரிக்கப்பட்டிருந்த வலையில் 
உடன் சென்றோர் சிக்கிக் கொள்ள இவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். 

சிக்கிக் கொண்ட கள்வர்களை நல்லபடியாகக் கவனித்தனர் - காவலர்கள். 

அதன் விளைவு!.. 

காலதூஷகனின் இருப்பிடம் தேடி விரைந்தனர் - வீரர்கள். 
பீதியடைந்த காலதூஷகன் பெருமாளை வணங்கி விட்டு 
சரணடைய முனைந்தான். 

அவனிடமிருந்து தானும் ஒரு பங்கினைப் பெற்றதால் - 
ஸ்ரீவைகுந்தநாதன் - தானே காலதூஷகன் போல உருமாறி 
அரண்மனைக்குச் சென்றான். 

அரசன் குடிமக்களைப் பரிபாலிக்கத் தவறிய பிழைதனை எடுத்துரைத்தான். 

அரசவையில் தைரியமாக வாதாடிய கள்வனின் பேரெழிலில் மனம் தடுமாறினான் அரசன்.   

அரசனின் மயக்கத்தைப் போக்கி தன்னுரு காட்டியருளினான் - தயாபரன்.
அரசனும் கள்வனும் மற்றோரும் பெருமானைப் பணிந்து நின்றனர். 

பெருமாள் தனக்காக - 
வாதாடிய வாஞ்சையைக் கண்டு மனம் திருந்திய கள்வன் - 
அரச தண்டனையை ஏற்க முனைந்தான்.

அரசன் அவனை மன்னித்து விடுவித்தான். 

அரசன் மீண்டும் நல்லாட்சி தர முனைந்தான்..
கள்வனும் மனம் திருந்தி நல்வழியில் நடந்தான்..

இருவருமே பெருமாளின் திருவடிகளில் நற்கதியடைந்தனர்.

கள்வனுக்காக வந்ததனால் பெருமாளுக்கு - 
கள்ளர்பிரான் எனத் திருப்பெயர்.


ஆங்காங்கே விளக்கு வசதிகள் இருந்தாலும்
இரவு நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை..

திருச்சுற்றில் 
ஸ்ரீ வைகுந்தநாயகியின் சந்நிதியும்
ஸ்ரீ சோரநாயகி சந்நிதியும்
தனித்தனியாக விளங்குகின்றன...


மனம் நிறைவான தரிசனம்...
ஆனாலும் மீண்டும் மீண்டும் தரிசிக்க மனம் விரும்புகின்றது...

தீர்த்தமும் திருத்துழாயும் 
சித்ரான்னமும் வழங்கினான் - கள்ளர்பிரான்...
கலையழகு மிக்க எழிலார் சிற்பங்களுடன்
நிறைந்து விளங்குகின்றது திருக்கோயில்....

இத்தகைய திருக்கோயில் வெள்ளையர்களின்
ஆக்ரமிப்பில் சிலகாலம் சிக்கியிருந்திருக்கின்றது..

இத்திருக்கோயிலை முழுமையாகத் தரிசிக்க
ஒரு நாள் போதாது என்பது உண்மை...

இன்றைய பதிவில் -
திருவேங்கடத்தான் மண்டபத்தில் எடுக்கப்பட்ட
ஒருசில படங்கள் - இதோ தங்களுக்காக!...








புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தஎன் சிந்தையகங் கழியாதே என்னைஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்தசீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்குநீர் முகிலின்பவளம் போல்கனிவாய் சிவப்ப நீகாணவாராயே!..
(3795)
-: நம்மாழ்வார் :-

கள்ளர்பிரான் திருவடிகள் போற்றி...
ஓம் ஹரி ஓம்.. 
***

22 கருத்துகள்:

  1. காலையில் வைகுண்ட தரிசனம் .. ஓம் நமோ நாராயணாய

    பதிலளிநீக்கு
  2. வைகுண்ட தரிசனம் கண்டேன் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. இதுவரை நாங்கள் செல்லாத கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்றைய காலை சிறப்பான தரிசனத்துடன் துவங்கியிருக்கிறது.

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. திருவைகுண்டம் கள்ளர்பிரான் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். தல வரலாறும் அறிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பு, நெல்லை ஜங்ஷனில் 1:30 மணி பகலில் புறப்பட்டு இரவு 9 மணிக்குள் நவதிருப்பதிகளையும் தரிசனம் செய்தது நினைவுக்கு வந்தது. அரை நாளுக்குப்பதில் 3-4 நாள் தரிசனம் ஒருவேளை திருப்தி தரலாம்.

    கூத்தாடியார்ப்ப- கூத்தாடி நின்று ஆர்ப்ப
    புளிங்குநீர்- பளிங்கு நீர்
    ரிகாணவாராயே- நீ காண வாராயே

    இதை நான் சந்தை சொல்வதால் எழுத்துப்பிழைகளைக் குறிப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      பிழை நேர்ந்தமைக்கு மனமார வருந்துகிறேன்...

      சில வருடங்களுக்கு முன் எடுத்து வைத்திருந்த குறிப்பினை
      அப்படியே இட்டதால் நேர்ந்த தவறு இது..

      மீண்டும் சரி பார்க்க இயலவில்லை...

      இணையம் இடறுவதற்குள் பதிவை இட்டுவிடவேண்டும் என்ற ஆவல்.. அதனால் பிழை நேர்ந்து விட்டது..

      சரியானபடிக்குத் திருத்தி விட்டேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      பிழையினைக் காட்டியமைக்கு நன்றி..

      நீக்கு
  6. பத்து வருஷங்கள் ஆகிவிட்டன இங்கெல்லாம் போய்! திருநெல்வேலியில் ஜானகிராமன் ஹோட்டலில் தங்கிக் கொண்டு இரண்டு, மூன்று நாட்கள் எல்லா ஊர்களும் சுற்றிப் பார்த்தோம். பார்க்காமல் விட்டவற்றில் கிருஷ்ணாபுரமும், பிரமதேசமும் உண்டு! பார்க்க நேரம் இல்லை. ஏனெனில் திரும்பிச் செல்ல பயணச் சீட்டு வாங்கிட்டோம். நவ திருப்பதிகளும் டிவிஎஸ் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்போது எப்படியோ தெரியலை. அதே போல் கும்பகோணத்தில் இன்னம்பூர், ஹிந்து பத்திரிகைக் குடும்பத்தால் பராமரிக்கப்படுவதாய்ச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      கடந்த சில வருடங்களில்
      நெல்லைப் பகுதியில் ஒரு சில கோயில்கள் மட்டுமே தரிசனம்..

      பட்டியலில் நிறையவே உள்ளன...

      மேலதிக தகவல்களுக்கு நன்றி..

      நீக்கு
  7. திருச்செந்தூர் தவிர்த்துத் தென் மாவட்டக் கோயில்கள் பராமரிப்பு நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென் மாவட்டங்களில் திருச்செந்தூர் மட்டுமே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்...

      இருந்தாலும் பல கோயில்களில் பராமரிப்பு மிகவும் சிறப்பு...

      நீக்கு
  8. நாங்கள் பார்த்த நினைவுகளை கொண்டு வந்த பதிவு.
    கள்ளபிரான் பேர் நிறைய குழந்தைகளுக்கு முன்பு வைத்தார்கள்.

    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல பக்தி கதையுடன் சிறப்பான பதிவு. அழகான கோவில். அதை அழகாக வர்ணித்து கோவில் தரிசனம் பெற வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. ஸ்ரீ வைகுண்டம் செல்ல இதுவரை வாய்ப்பு வரவில்லை. இனி திருசெந்தூர் செல்லும் போது கண்டிப்பாக சென்று வர வேண்டுமென தங்களின் பதிவை படித்ததும் தோன்றியது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. விவரங்கள் அறிந்து படங்களையும் ரசித்தேன். நா(ங்கள்)ன் என் இப்போதைய பயணம் தொடங்கும்போது "நவகிரஹ சுற்றா?" என்று கேட்டார் ஓட்டுநர். "இல்லை, இது வேற மாதிரி" என்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      குடந்தையில் ஒருநாள் நவக்கிரக டூர் என்பதெல்லாம் டுபாக்கூர்...

      அதெல்லாம் அபசாரம்...

      நீக்கு
  11. ஸ்ரீவைகுண்டம் பார்த்ததில்லை. இனி ஒவ்வொரு இடமாகப் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. விவரங்கள் அருமை. ஓடி ஓடிப் போய் தரிசித்திருக்கிறீர்கள் போலும். அம்பையிலிருந்து ஸ்ரீவைகுண்டம்!!!

    சிற்பங்கள் உள்ள படம் கோபுரத்தின் நிலைகள் அழகு உங்கள் புகைப்படமும் மிக மிக அழகாக வந்திருக்கிறது ஐயா/துரை அண்ணா...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..