நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 23, 2018

திருமலை தரிசனம் 1

பொழுது புலர்வதற்கு முன் தஞ்சையிலிருந்து புறப்பட்டு
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்...

விடியற்காலை ஆறு மணியளவில் - 
அந்த விரைவு வண்டி மன்னார்குடியிலிருந்து வந்து நின்றது..

அதில் பயணித்து அன்று மாலை ஐந்து மணியளவில்
நாங்கள் சென்று சேர்ந்த இடம் -

திருப்பதி!...


தாயேதந்தை என்றும்தாரமே கிளைமக்களே என்றும்
நோயேபட்டு ஒழிந்தேன்உனைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய்பூம் பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென் னைக்கொண்டருளே!..(1028)
-: திருமங்கையாழ்வார் :-

எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை
திருமலை தரிசனம் வாய்த்திருக்கலாம்!..

ஆனால், எனக்கு இரண்டாவது முறை இது...

எங்கும் நிற்க நேரமின்றி
அந்தப் பக்கத்து சாலைக்கு மாறி
அலர்மேல்மங்கையைக் காண விரைந்தோம்...

உடைமைகளைப் பத்திரமாக வைக்க இடம் தேடினோம்..

பக்கத்து மாநிலத்தின் பெயருடன் இயங்கும்
அறக்கட்டளை ஒன்றில் இருந்த பாதுகாப்புப் பெட்டியினுள்
உடைமைகளை வைத்துப் பூட்டினோம்....

மேலே உள்ள தளங்களில் தங்கும் விடுதிகள்..
கீழே, பொருள் பாதுகாப்பு..

இந்த சேவை இலவசம் என்றிருந்தது...
ஆனாலும், கட்டணம் வாங்கிக் கொண்டார்கள்..
ரசீது கொடுத்தார்கள்...

திருக்கோயிலுக்குள் போக முடியாதபடிக்கு
நெரிசல்.. காரணம் - நடைபாதை வியாபாரம்...

கோயிலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்
அஷ்ட திக்குப் பலிபீடங்களில் இந்தப் பக்கம் உள்ளவை
சேவார்த்திகளிடம் மாட்டிக் கொண்டன...

கொண்டு வந்திருக்கும் தேங்காய்களை மடேர்.. மடேர்.. என,
பலிபீடத்தின் மீது அடித்து உடைத்துக் கொண்டிருந்தார்கள்...

நுண்ணலைத் தொலைபேசிகள்
புகைப்படக் கருவிகள் அனைத்திற்கும் தடை..
அங்கேயே வாங்கிக் கொண்டார்கள்..

வழக்கமான பாதுகாப்புப் பரிசோதனைகள்...
வரிசைக் கூண்டுக்குள் அதிகம் கூட்டமில்லை..

விரைவாக நடந்து திருக்கோயிலினுள் நுழைந்தோம்...

தங்கக் கொடிமரத்தைக் கடந்ததும் -
ஸ்ரீ பத்மாவதித் தாயாரின் திவ்ய தரிசனம்...

என்ன ஒரு ஆனந்தம்!...


காணக் கிடையா கதியானவளே..
கருதக் கிடையா கலையானவளே!..
பூணக் கிடையா பொலிவானவளே..
புனையக் கிடையா புதுமைத்தவளே!..

- என்பன ஸ்ரீ லலிதா நவரத்ன மாலையின் வரிகள்..

நவரத்னங்களையும் மிஞ்சியதாக பேரழகு
திருமூலத்தானத்தினுள் ஒளி வீசிக் கொண்டிருந்தது...


நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

வணக்கத்திற்கு உரியவள் நீ.. மகா மாயை ஆனவள் நீ..
ஸ்ரீ பீடத்தில் வசிப்பவள்.. தேவர்களால் வழிபட்டவள்..
சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளே..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

கருட வாகனத்தில் அமர்ந்தவள்..
கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவள்..
சகல பாபங்களையும் போக்குபவள்..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்.

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். 
அனைத்து வரங்களையும் அளிப்பவள். 
எல்லா தீமைகளுக்கும் பயங்கரி ஆனவள்..
எல்லா துக்கங்களையும் அழிப்பவள்...
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்.

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவள் நீ..
மந்த்ர வடிவானவள்.. எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவள்.. 
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்..


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக சம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

தொடக்கமும், முடிவும் அற்றவள் நீ..
ஆதிசக்தியும் மஹேஸ்வரியும் நீயே..
யோகத்தினால் தோன்றியவள்.. யோகத்துக்கும் பலமானவள்..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்..

ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரே
மகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே..

கண்களுக்குத் தெரிபவளும் நீ.. எவருக்கும் புலப்படாதவளும் நீ..
மிகுந்த ஆற்றல் உடையவள்.. மகா பாவங்களைப் போக்குகிறவள்..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவள்.. பரம் பொருள் ஆனவள்.. 
பரமேஸ்வரியும் நீ.. அகில உலகங்களுக்கும் அன்னை நீ..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்..

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே 
ஜகஸ்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

வெண்ணிற ஆடை தரித்தவள் நீ...
பலவித அலங்காரங்களுடன் திகழ்பவள் நீ...
உலகம் முழுதும் பரவியிருப்பவள் நீ..
உலகங்களுக்கெல்லாம் தாயுமானவள் நீயே..
ஸ்ரீமஹாலக்ஷ்மியே.. உன்னை வணங்குகிறேன்..



அன்னையை மனதார வேண்டிக் கொண்டு
திருச்சுற்றில் வலம் வந்தோம்...

குங்குமமும் மலர்களும் வழங்கினார்கள்..
அத்துடன் அருமையான மிளகுப் பொங்கல்!..

மறுபடியும் வணங்கிய வண்ணம்
திருக்கோயிலிலிருந்து வெளியே வந்தோம்..

அங்கிருந்து புறப்பட்டு
திருமலையின் அடிவாரமாகிய
அலிபிரியை அடைந்தபோது இரவு மணி எட்டு!..


நுண்ணலைபேசியையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டு
மற்றவற்றை அங்கேயுள்ள பொருள் பாதுகாப்பு மையத்தில்
ஒப்படைத்தோம்.. ரசீது கொடுத்தார்கள்...

கடைசி படிக்கட்டுக்கு அருகிலுள்ள மையத்தில்
வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்...

அந்த வளாகத்திலேயே தண்ணீர் வசதி..
கைகால் முகங் கழுவிக்கொண்டு புறப்பட்டோம்...


இன்றைய பதிவின் படங்கள்
இணையத்திலிருந்து பெறப்பட்டவை...




திருமலைப் படிக்கட்டுகள் 
காத்திருக்கின்றன...

நீங்களும் வாருங்கள்..
எங்களுடன்!..

ஓம் நமோ வேங்கடேசாய..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. காலை வணக்கம். குடும்பத்துடன் நாங்கள் திருப்பதி சென்றது 1997 இல். நான் மட்டும் தனியாக (நண்பருடன்) சென்று வந்தது 2002 இல். அதற்குப் பிறகு இன்னும் செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  2. ​​அடடே... உங்களுக்கே இரண்டாவது முறைதானா?
    இலவசம் என்றிருந்தாலும் கட்டணம் வாங்கினார்கள். அதே சமயம் ரசீதும் கொடுத்தார்கள்! ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
  3. சனிக்கிழமை காலை பெருமாள் தரிசனத்துக்கு நன்றி. இதோ, இதைப் படித்து விட்டு நங்கநல்லூர் ஆஞ்சி தரிசனத்துக்கு கிளம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நாங்கப் பலமுறை திருப்பதி/திருமலை போயிருக்கோம். இம்முறை சென்றது மூத்த குடிமக்களுக்கான இலவச தரிசனத்தில். கீழேயும் பத்மாவதித் தாயார், சீனிவாசமங்காபுரம் ஆகிய இடங்களும் சென்றோம். கோவிந்தராஜரைத் தான் பார்க்க முடியலை!

    பதிலளிநீக்கு
  5. நாங்கள் மூன்று முறைதான் பார்த்து இருக்கிறோம்.
    நான் வெள்ளிக்கிழமை தோறும் பாடல் மஹாலக்ஷ்மி தோத்திர பாடலுடன் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி
    நானும் திருப்பதி வந்தது போன்ற உணர்வு.

    பதிலளிநீக்கு
  7. இனிய தரிசனம் ...ஆஹா..

    ஸ்ரீ மஹா லக்ஸ்மியே உன்னை வணங்கிறேன்...


    அட படி வழியாக வா அருமை...கடந்த மார்ச் மாதம் நாங்களும் நடந்து சென்றோம் ..பல படங்களும் எடுத்தேன்...எனது பதிவுகளிலும் அவை விரைவில் வரும்...

    அதற்கு முன் தங்கள் வழி காண காத்திருக்கிறேன்...


    ஓம் நமோ நாராயணா நமக..

    பதிலளிநீக்கு
  8. உடன் பயணித்த உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  9. அலர்மேல்மங்காபுர தரிசனம் அருமை. ஆமாம், லட்டு, வடை பிரசாதம் வாங்கவில்லையா?

    எத்தனை மணிக்கு தரிசனம் ஆச்சு. எப்போ அலிப்பிரைக்கு வந்தீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. மிக ஆவலுடன் அடுத்த இடுகைக்குக் காத்திருக்கிறேன். நான் நடந்து தரிசனம் செய்து சில வருடங்களாகிவிட்டது. இப்போது முடியுமா என்பது சந்தேகமாக இருப்பதால், அதற்கு அப்புறம் சென்ற மூன்று முறையும் பேருந்தில்தான் பயணித்தேன். இரு வாரங்களுக்கு முன்பும் தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
  10. திருமலைப்பயணம் உங்களுடன் வந்ததைப்போன்றிருந்தது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. அலர்மேல் மங்கை தரிசனம் சிறப்பாகக் கிடைத்தது. வேங்கடவனைக் காணக் காத்திருக்கிறேன்.

    நான் திருப்பதி சென்று கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன.....

    பதிலளிநீக்கு
  12. பலமுறை திருப்பதி திருமலை என்று பயணித்திருக்கிறோம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் இனி செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறி

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இனிய பயணம். கலியுக கடவுளை தரிசிப்பது மகா இன்பத்தை அல்லவா தரும்... பத்மாவதி தாயாரின் அற்புத தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நாங்கள் திருமலைக்குச் சென்று நான்கு வருடங்கள் ஆகி விட்டன. இந்த வருட இறுதிக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எல்லாம் அவன் செயல். இப்போது தங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம். அடுத்து வேங்கடவனை தரிசிக்கும் ஆவலில்.. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான தரிசனம். நான் ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன் - துளசி

    நான் ஒரு ஆறேழு முறை சென்றிருப்பேன். ஆனால் கூட்டம் என்பதுதான் கொஞ்சம் அலர்ஜி எனக்கு. அதுவும் தள்ளு முள்ளு...எனக்குக் கோயிலுக்குள் செல்வதையும் விட மலையில் பேருந்தில் செல்வதை விட ஏறுவதும் மலையில் சுற்றி நடப்பது மிகவும் பிடித்திருந்தது. - கீதா

    பதிலளிநீக்கு
  15. ஹான் அண்ணா சொல்ல விட்டுப் போச்சு திங்க வை மறக்கலாமோ...அலர்மேல்மங்கை மற்றும் மேலே திருப்பதி கோயில் இரு பிரசாதங்களும் ஆஹா ஆஹா சுவையோ சுவை!! ரொம்பப் பிடிக்கும். என்ன பிரசாதமாக இருக்கும் என்பதுதான் என் மனதில் ஓடும் ஹா ஹா ஹா ஹா... அதே போல நங்கநல்லூர் ஆஞ்சு கோயில் பிரசாதம் என்ன சுவை....

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..