நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

உவரியில்..

அழகன் முருகனின் ஆனந்த தரிசனம்...

திருச்செந்தூரில் இருந்து உவரிக்குச் செல்ல வேண்டும்..
புறப்படும் முன்பாக மறக்காமல்
பனங்கருப்பட்டி வாங்கிக் கொண்டோம்...

அதிலும் குறிப்பாக உடன்குடி கருப்பட்டி விசேஷம்...

மிளகு இஞ்சி சேர்க்கப்பட்ட சிறு சிறு வில்லைகளாகவும்
சாதாரணமாகவும் கிடைக்கின்றன...

இப்போதெல்லாம் நடமாடும் கருப்பட்டிக் கடையாக
சிறு வேன்களில் பலரகமான கருப்பட்டிகளை வைத்துக் கொண்டு
தஞ்சாவூரில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்..

விலை சற்று முன்பின்னாக இருக்கின்றது...
இருந்தாலும் திருச்செந்தூரில் வாங்குவது தனி சந்தோஷம் தான்...

முற்பகலில் உவரியை நோக்கிப் புறப்பட்டோம்...


திருச்செந்தூரிலிருந்து  கன்னியாகுமரி செல்லும்
கடற்கரைச் சாலையில் 40 கி.மீ தொலைவில் உள்ளது உவரி...

இந்த சாலை தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி (SH/176)
கடற்கரைச் சாலையாகும்..

இந்தச் சாலையில் செல்லும்போது
15 கி.மீ தொலைவில் குலசேகரன் பட்டினம்..
புகழ்பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் இங்கே தான் உள்ளது...

ஸ்ரீ முத்தாரம்மன் சந்நிதி
குலசேகரன் பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் மணப்பாடு..

நெடுஞ்சாலையில் போகும் வழியிலேயே -
கடற்கரையோரத்தில் உள்ள மணல் மாதா ஆலயத்தைத் தரிசிக்கலாம்..

அடுத்த 23 கி.மீ தொலைவில் உவரி..
உவரிக்கு சற்று முன்னதாக கூட்டப் பனை எனும் சிற்றூர்...

இங்கிருந்து தான் -
உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலின்
தலபுராணம் தொடங்குகின்றது..

கூட்டப் பனையைச் சேர்ந்த கோனார் வீட்டுப் பெண்
விற்பனைக்குப் பால் கொண்டு சென்ற போது
வழியில் பல தடவை இடறி விழுந்ததனால் -

வழியில் மண்டிக் கிடந்த கடம்பங்கொடிகளை வெட்டி
அப்புறப்படுத்த முனைந்தனர் அவ்வூர் மக்கள்...

அவ்வேளையில்,  சிரசில் வெட்டுக் காயத்துடன்
ஈசன் எம்பெருமான் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்..

அது கண்டு அஞ்சி நடுங்கிய மக்கள்
சந்தனத்தை அரைத்து அப்பி வணங்கி நின்றனர்..

கோனார் வீட்டுப் பெண்ணால் வெளிப்பட்ட ஈசனுக்கு
நாடார் ஒருவர் பனை ஓலைகளால்
குடில் அமைத்து விளக்கேற்றி வைத்தார்...

அந்த அளவில் -
கோனர் மற்றும் நாடார் சமுதாய மக்கள்
நாளும் நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர்...

எனினும், திருக்கோயில் எல்லாருக்கும்
பொதுவானதாகத் திகழ்கின்றது...


ஆதியில் ஈசனுக்கு சந்தனம் பூசப்பட்டதால்
இன்றளவும் முதற் பிரசாதம் சந்தனம் தான்...

ஓலைக் குடிலாய் இருந்த கோயில்
நாளடைவில் கற்கோயிலாக மாறியது...

இங்கே உக்ரமாகத் திகழ்ந்த
ஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ பேச்சியம்மன்,
ஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ முன்னோடியார்
ஆகிய திருக்கூட்டத்தினரைச் சாந்தப் படுத்துவதற்காகவே

ஈசன் சுயம்புவாகத் தோன்றிய திருக்குறிப்பினால்
திருக்கோயிலில் ஈசன் சந்நிதியைத் தவிர
வேறெந்த சந்நிதியும் கிடையாது...

துவார விநாயகர் - கர்ப்ப கிரக வாசலில் பிரதிஷ்டை..

மற்றபடிக்கு அம்பிகை, சண்டீசர், பைரவர்..
- என, எந்த சந்நிதியும் கிடையாது..

திருக்கோயிலுக்கு அருகில் தனிக் கோயிலாக
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகை என ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி..

அருகில் தனிக் கோயிலாக
ஸ்ரீ முன்னோடியார் - பரிவாரங்களுடன்..

இதனையடுத்து தனி மண்டபத்தில்
ஸ்ரீ பேச்சியம்மன்.
வலப்புறம் ஸ்ரீ மாடசாமி..
இடப்புறம் ஸ்ரீ இசக்கியம்மன்...

தற்காலத்தில் எழுப்பட்ட கோயில்களாக -
சிவாலயத்திற்குப் பின்புறம் ஸ்ரீ கன்னிமூலை கணபதி..

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா கோயில்
குதிரை வாகனத்தில் ஸ்ரீ ஐயனார்
பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா உடனாகிய
ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்...

திருக்கோயிலின் நேரெதிரே
சற்று தணிவான தெப்பக்குளம்..

கோயில் வாசலில் சிறப்பான மூன்று கிணறுகள்..

கடற்கரை அருகிருக்க இவை மூன்றும்
உப்புச் சுவையற்ற நல்ல தண்ணீர் கிணறுகள்...

அன்றைக்கு ஓலைக்குடிலில் ஏற்றப்பட்ட
திருவிளக்கு இன்றைக்கு பல்லாயிரம் மக்களுக்கு
ஆறுதலையும் தேறுதலையும் அளித்து
நம்பிக்கை நட்சத்திரமாக சுடர் விட்டுத் திகழ்கின்றது...

சில ஆண்டுகளுக்கு முன் -
புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டதைத் தொடர்ந்து
தற்போது புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்படுகின்றது..

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன...

அந்தக் காட்சிகள் - இன்றைய பதிவில்!..









உவரி சிறிய கிராமம் தான்... ஆனாலும்,

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக
உவரியின் கோயிலும் கடற்கரையும் அறிவிக்கப்பட்டுள்ளது...

திருச்செந்தூரில் இருந்து செல்லும் போது
உவரிக்கு முன்பாக உள்ள கூட்டப்பனை எனும் ஊரைக் கடந்ததும்

கிழக்காக புதிதாக புறவழிச்சாலை அமையப்பெற்று
சுயம்புலிங்க ஸ்வாமி கோயிலைக் கடந்து
நெடுஞ்சாலையில் சேர்ந்து கொள்கின்றது...

உவரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்
இவ்வூர் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது..

சுயம்புலிங்க ஸ்வாமி கோயிலின் அருகாக
இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதி
நாடார் உவரி எனப்படுகின்றது...

ஒரு கி.மீ தொலைவிலுள்ள தெற்குப் பகுதி மக்கள்
அன்றைய கொடுமைகளால் மனம் மாறிப் போனார்கள்... 

கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்து விட்டாலும், 
இன்றைய நாட்களில் அவர்களும் - வந்து
சுயம்புலிங்க ஸ்வாமியின் திருக்கோயிலில்
நேர்ந்து கொண்டு வணங்கி நிற்கின்றனர்...

தங்கள் இல்லங்களின் மங்கல நிகழ்வுகளை
இங்கே சிவாலயத்தில் வைத்துக் கொள்கின்றனர்...

உவரி கடற்கரையிலிருந்து தெற்காக நோக்கினால்
கப்பல் மாதா கோயில் தெரியும்...

இந்தக் கடற்கரையில் சமீபகாலமாக மணல் அரிப்பு நிகழ்கின்றது..
பெருங்கற்களைப் போட்டு தடுத்து வைத்திருக்கின்றனர்...


திருக்கோயிலின் வாசலில் அமர்ந்தபடி
அலையாடும் கடலைக் கண்டு மகிழலாம்...

அலையாடும் கரையில் அமர்ந்தபடி
அருளோங்கும் திருக்கோயிலைத் தரிசிக்கலாம்...


இத்திருக்கோயிலுக்கு
எத்தனை எத்தனை பெருமைகளோ!...

அத்தனையையும் உணர்ந்து கொள்ள
இன்னும் எத்தனை எத்தனை பிறவிகளோ!...

அத்தனை பிறவிகளிலும் 
ஐயனும் அம்பிகையும்
உடன் வரவேண்டும்!..

அதுவே ஆவல்.. பேராவல்!...


அந்த ஆவலுடனேயே 
எங்கள் பயணம் தொடர்கின்றது...
***
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***  

18 கருத்துகள்:

  1. மிளகு இஞ்சி சேர்த்த கருப்பட்டியா? நினைவில் வைத்துக் கொள்கிறேன். வாங்கிடுவோம் (ஒருவாட்டியாவது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இங்கு கிடைக்கிறது...பெரும்பாலான தின்னவேலி மக்கள் நடத்தும் கடைகளில். ஓலைப்பெட்டியில் சில்லுக் கருப்பட்டி என்று...மிளகு இஞ்சி சேர்த்து..கூம்பு கூம்பாக இருக்கும்..இல்லை என்றால் சில்லுச் சில்லாக....உடன்குடி கருப்பட்டி என்றும் கிடைக்கும்...நான் அதுதான் வாங்குகிறேன்.

      கீதா

      நீக்கு
  2. உவரி.... பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை (வழக்கம்போல!)

    பதிலளிநீக்கு
  3. விவரங்கள் அறிந்து கொண்டேன். உங்கள் தயவில் சுக தரிசனமும் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. சில்லுகருப்பட்டி , புட்டுக்கருப்பட்டி என்றும் சொல்வார்கள்.
    , என்று பெயர் சின்ன சின்னதாக இஞ்சி சேர்த்து சுவையாக இருக்கும் முன்பு மாதிரி இல்லாமல் இனிப்பாய் கிடைத்தது எங்களுக்கு.

    பனங்கருப்பட்டி இப்போது நீங்கள் சொல்வது போல் வழி எங்கும் கிடைக்கிறது.

    அழகான பிரசாதம் வைத்து தர ஓலை கூடை எனக்கு பிடித்தது. வெகு நாடகள் பத்திரபடுத்தி வைத்து இருந்தேன்.

    சிவகாசியில் இருக்கும் போது பத்திரகாளி அம்மன் திருவிழாவிற்கு ஆமண்க்கு முத்து அந்த ஓலை பெட்டி நிறைய வாங்கி போடுவார்கள். கூடைகளும், முத்துக்களும் மலை போல் குவிந்து விடும்.

    உவரி பார்க்க ஆவல் வந்து விட்டது உங்கள் பதிவைப் படித்து .
    அம்மன் கோவில், ஐய்யனார், கோவில், ஸ்ரீசுயம்புலிங்க கோவில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உவரி பலமுறை சென்று இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  6. சுக்கு சேர்ந்தது. இஞ்சி இல்லைனு நினைக்கறேன். அம்பிகா ஸ்டோர்ல கிடைக்கிறது. இப்போ ஓலைப்பெட்டி தவிர பிளாஸ்டிக் பாக்கெட்டிலும வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. அண்ணா காலையில் இது ஓபன் ஆகலை....அப்புறம் நெட் போயிருச்சு..இதோ இப்ப எபில போகாத கமென்டை போட்டுட்டு பார்த்தா உங்க பதிவு வந்திருக்குனு ...அமாலா பாட்டை கேட்டுட்டு இதோ இங்கே ஆஜர்..உவரி கோயிலுக்குள் போய்ட்டு வரோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. துளசி: உவரி சென்றதில்லை. சுயம்புலிங்கம்!! அதுவும் இறைவன் மட்டுமே!. குறித்து வைத்துக் கொண்டேன். நல்ல தகவல்கள் செல்லும் வழி உட்பட...படங்களும் அழகாக இருக்கின்றன.

    கீதா: அண்ணா அருமையான தரிசனம். உவரி வழி சென்றிருக்கிறேன் ஆனால் கோயில் சென்றதில்லை. நல்ல விவரங்கள்...படங்கள் எல்லாம் அழகு. கடல் ஆஹா! போட வைக்கிறது. விவரங்களையும் குறித்துக் கொண்டேன்...

    உடன்குடியில் என் அப்பாவின் சொந்தச் சித்தி, மகள் எல்லோரும் இருந்தனர். சித்தியின் மகள் அங்கு ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருந்தவரை, அப்பா திருனெல்வேலி போகும்போதெல்லாம் அங்கு செல்வார். அப்படியே கருப்பட்டியும் வந்துவிடும். இப்போது களக்காடுபக்கம் குடியேறிவிட்டார்கள்.அதனால் நான் இங்கு சென்னையில் வாங்கிக் கொள்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. உவரிக்குச் செல்ல வேண்டும் போல் உள்ளது...எப்போது வாய்ப்பு கிடைக்குமோ...
    கீதா

    பதிலளிநீக்கு
  10. அண்மையில்கூட குடும்பத்துடன் சென்றுவந்தோம். உங்கள் ஆவல் ஈடேறும்.

    பதிலளிநீக்கு
  11. அழகிய இடம் ..

    சிறப்பான தரிசனம்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா!

    உவரித் திருத்தலமும் அங்குள்ள கோவில்கள் பற்றியும் அதன் வரலாறுகளும் பெருமையும் உங்கள் தயவால் இன்று அறிந்துகொண்டேன். எத்தனை எத்தனை பெருமைமிக்க ஊர்களும் அதன் சிறப்புக்களும்!.. அருமை ஐயா!

    கருப்பட்டி பற்றிச் சொன்னீர்கள். எங்கள் யாழ்ப்பாணத்தில் கருப்பட்டிக்குட்டான் என்று வாங்கியிருக்கிறேன்.
    பனையோலையில் குட்டிக் குட்டிக் குட்டானாகப் பின்னி அதற்குள் கருப்பட்டி காய்ச்சி ஊற்றி உலரவிட்டு விற்பார்கள்.
    மருத்துவ தேவைகளுக்கு இவ்வகைக் கருப்பட்டியையே மக்கள் தேடி வாங்குவதுண்டு.

    உங்கள் பதிவால் பல தகவல்களை அறிந்துகொண்டேன். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  13. கிராமப்புறச் சூழலில் மிக அழகிய கோயில்.. ஐயனார் எப்பவும் அழகுதான், நான் எங்கும் நேரில் பார்த்ததில்லை.

    வெள்ளிக்கிழமை நாகதம்பிரான் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    சக்கரை பிடிக்கும் கருப்பட்டி பிடிக்காது எனக்கு.. அது கைப்பதுபோல ஒரு ரேஸ்ட் ஆனா அதுதான் நல்லது என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. உவரி கேள்வி தான். போனதில்லை. சில்லுக் கருப்பட்டி நிறையச் சாப்பிட்டிருக்கேன். இப்போவும் மருந்து கிளறினால் கருப்பட்டி தான் போடுவோம். முன்னால் எல்லாம் மளிகைக்கடைகளில் சாமான் வாங்கினால் வாங்கி முடித்ததும், "அண்ணாச்சி!" என்று கையை நீட்டினால் இரண்டு டீஸ்பூன் பொரிகடலையும் ஒரு துண்டு கருப்பட்டியும் இனாமாகக் கொடுப்பார்கள். அதை வாயில் போட்டுக் கொண்டு வருவது ஒரு சுகம். வீட்டுக்கு வந்து அண்ணன், தம்பியோடு பகிர்ந்து சாப்பிடுவதும் இன்னொரு சுகம்.

    பதிலளிநீக்கு
  15. இந்த ஓசிக்கருப்பட்டிக்கும் பொரிகடலைக்குமாகவே போட்டி போட்டுக் கொண்டு கடைக்கு சாமான் வாங்கப் போவோம். :)

    பதிலளிநீக்கு
  16. உவரி மாதா கோவில் திருவிழா கூட மிகவும் பிரசித்தி இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..