நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 06, 2017

மதுரைக்கு வாங்க.. 5

வாத்யாரே...

வாங்க.. வாங்க.. பசங்களா!..

வாத்யாரே.. நேத்து நீங்க தேரோட்டம் பார்க்கப் போனீங்களா!.. நாங்க காலையில இருந்து தேர் கூடவே சுத்தி வந்தோம்... போலீஸ்காரங்க தான் சின்ன பசங்க..ன்னு தேர் இழுக்க விடலை!...

நானும் அக்காவும் போயிருந்தோம்.. கொடிமரத்து மூலை மாரியம்மன் கோயில்...ல இருந்து தேரடி வரைக்கும் சாமி கூடவே வந்தோம்...

தஞ்சை பெரியகோயில் தேர்
எங்க தெருகாரங்க - கீழவீதியில நீர் மோர் பானகம் எல்லாம் கொடுத்தாங்க.. நாங்க அதுக்கு நன்கொடையா ஆயிரம் ரூபா கொடுத்தோம்...

வெயில் நேரத்தில நீர் மோர் கொடுக்குறது ரொம்பப் புண்ணியம்...

நீங்க போட்டோ எடுத்தீங்களா வாத்யாரே!..

நண்பர்கள் எடுத்தது இதெல்லாம்... இதோ பாருங்க!...

ஸ்ரீ அல்லியங்கோதை உடனாகிய ஸ்ரீ தியாகராஜர் - தஞ்சை..
ஸ்ரீ திருநிலைநாயகி
வடக்கு ராஜவீதி - ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் அருகில்
கீழ ராஜவீதி
ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் அருகில்

நல்ல அழகா இருக்கு இல்லே!...

அப்புறம் என்ன.. கதைக்குள்ள போகலாமா!..

ஓ... போகலாமே!...

ராஜாவுக்கு முன்னாலே கம்பீரமா போய் நின்னதும் - எல்லாருக்கும் சந்தேகம்.. இவரைப் பார்த்தால் புலவர் மாதிரி தெரியலையே... இவரும் ஏதோ ராஜா மாதிரியே இருக்காரே..ன்னு!..

அவரு தான் மதுரைக்கே மகாராஜா... ன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்!..

நக்கீரர் கேட்டார் - ஏன் ஐயா!.. சொல்லும் கருத்து சரியோ தவறோ!.. ஒரு அப்பாவியிடம் கொடுத்து விட்டு ஆள் மாறாட்டம் செய்யலாமா?.. அது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?..

குற்றம் குறையெல்லாம் நான் பார்ப்பதே இல்லை...  அதெல்லாம் உங்கள் வழக்கம்...

குற்றத்தைக் குற்றம் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது?..

சொல்லப்பட்ட கருத்தை மட்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. உமக்கு தெரிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு எடை போடக்கூடாது!.. நீர் அறியாத விஷயங்கள் இந்த அவனி முழுதும் பரவிக் கிடக்கின்றன..

நீர் மட்டும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றீரோ!..

எனக்குத் தெரிந்தவற்றுள் ஒன்றைச் சொன்னால் கூட
அதை உணர்ந்து கொள்ளும் சக்தி இங்கே எவரிடத்தும் கிடையாது!...

அவ்வளவு ஆணவமா?... நீர் என்ன எல்லாம் அறிந்த இறைவனோ!..

அப்படியே வைத்துக் கொள்ளுமே!.. கூந்தலுக்கு மணம் என்பதே கிடையாது என்று நீர் எப்படிச் சொல்லலாம்!..

வண்டார்குழலி என்றும் மருவார் குழலி என்றும் 
ஏலவார் குழலி என்றும் மட்டுவார் குழலி என்றும் 
அடியார்கள் பிதற்றிக் கிடக்கின்றனரே!.. அதெல்லாம் பொய்யோ?..

பூவுலக மங்கையர் ஆனாலும் சரி.. 
தேவலோக கன்னியர் ஆனாலும் சரி..
கூந்தலுக்கு மணம் என்பதே கிடையாது!..

கருங்குவளைப் பூச்சூடும் கார்மேகவல்லி 
கயற்கண்ணியின் கருங்கூந்தலுக்கும் மணம் என்பது இல்லையோ?..

கிடையாது.. கிடையாது.. கூந்தலுக்கு மணம் என்பதே கிடையாது!..

இறைவியின் கூந்தலுக்கு மணம் கிடையாது என்பதை நீர் எப்படி அறிவீர்?... குற்றம் ஒன்றும் கூறவேண்டாம்!.. கொடும்பழியில் வீழவேண்டாம்!...

இறைவியின் கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை நீர் மட்டும் எப்படி அறிவீர்!..
நீர் என்ன எல்லாம் அறிந்த ஏகாம்பரனோ?..

ஆம்!.. நானே ஏகாம்பரன்!.. 
ஆனந்த அம்பலத்தில் சிற்சபேசன்!.. 
அக்கினியுள் ஒளியான அண்ணாமலையன்!... 
ஆரூர் பதிகொண்ட தியாகராஜன்!.. 
ஆடக மாமதுரையில் ஆலவாயன்!..

உமது பேச்சிலிருந்தே நீர் யாரென்று தெரிகின்றது!..
பிச்சிப் பூவைக் குழலில் முடித்தவள் அந்தப் பிச்சி!..
அந்தப் பிச்சியைத் தன் பாகமாகக் கொண்டவன் பித்தன்!..
அந்தப் பித்தனைப் போற்றித் துதிக்கும் நீரும் பித்தன்!..
அதனால்தான் இவ்வாறாகப் பிதற்றி நிற்கின்றீர்!..

இந்த மாதிரி நக்கீரன் சொன்னதும் ஈஸ்வரனுக்கு கோபம் ஆகிவிட்டது...

நெஞ்சு புடைத்தது.. முகம் சிவந்தது.. நெற்றியில் கண் திறந்தது.. 

நக்கீரர் திடுக்கிட்டார்.. 
என்ன இது?.. எதிரே வழக்காடுவது மனிதனா.. இறைவனா?..

நீர் யாராக இருந்தாலும் சரி.. குற்றம் குற்றம் தான்... நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றம் தான்!... குற்றம் குற்றம் தான்!...

வந்திருப்பவன் இறைவன் தான்... ன்னு தெரிஞ்சாலும்
தன் கொள்கைய விடாம உறுதியா நின்றார் நக்கீரர்..

அங்கம் புழுதிபட அரிவாளின் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி சங்கதனைக்
கீர்கீர் என்றறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்!..

- ந்னு இறைவன் கர்ஜனை செய்தார்...

அதுக்கு நக்கீரன் -

சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனார்க்கு ஏது குலம் சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உன்போல்
இரந்துண்டு வாழ்வதில்லை!..

- ந்னு ஏளனம் செய்தார்...

அவ்வளவு தான்.. ஈஸ்வரனோட நெற்றிக் கண்ணுல இருந்து தீப்பொறி பறந்தது...

தீப்பொறி வெப்பத்தில நக்கீரன் சாம்பலாகிப் போனார்..

அங்கேயிருந்தவங்கள்.... லாம் அரண்டு போனாங்க.. அலறித் துடிச்சாங்க..

பாவம்.. தானே நக்கீரர்!..

சொல்றவங்க சொல்லும்போது ஒத்துக்கணும்.. எல்லா உண்மைகளும் நமக்குத் தெரியுமா?... நல்லாத் தமிழ் படிச்சாலே போதும்.  ரகசியங்கள் எல்லாம் விளங்கும்... மனசார சாமி கும்பிட்டாலே போதும்... வரப் போற கஷ்டங்கள் எல்லாம் புரியும்...

நக்கீரர் தனது முடிவில் உறுதியா இருந்தார்.. 
ரகசியம் விளங்கவில்லை!.. அதுதான் விஷயம்!..

அப்புறம் என்ன ஆச்சு!...

டேய்.. அதை நாளைக்குக் கேக்கலாம்...
வாத்யாரே.. திருவிழா படங்களைக் காட்டுங்க!..

இதெல்லாம் குணா அமுதன் ஸ்டாலின் அனுப்பியிருக்காங்க..
அவங்களுக்கு மனமார்ந்த நன்றி..

4/5 வியாழக்கிழமை
ஏழாம் திருநாள்
-: பகல் :-
ஸ்ரீ கங்காளர் திருவீதியுலா
ஸ்வாமி அம்பாள் திருக்கோயில்
மண்டகப்படியில் எழுந்தருளினர்..
***

4/5 வியாழக்கிழமை
ஏழாம் திருநாள்
-: இரவு :-

சுந்தரேசர் அதிகார நந்தி வாகனத்திலும்
மரகதவல்லி யாளி வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..





5/5 வெள்ளிக்கிழமை
எட்டாம் திருநாள்
-: பகல் :-
தங்கச் சப்பரத்தில்
திருவீதி எழுந்தருளல்..

5/5 வெள்ளிக்கிழமை
எட்டாம் திருநாள்..
-: இரவு :-

மாலை ஏழு மணியளவில்
அன்னை மீனாக்ஷிக்கு பட்டாபிஷேகம் நிகழ்ந்தது..
இரவில் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதியுலா..






மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
மூவனை மூர்த்தியை மூவா மேனி
உடையானை மூவுலகுந் தானே எங்கும்
பாவனைப் பாவம் அறுப்பான் தன்னைப் 
படியெழுத லாகாத மங்கை யோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண்டு அமுதம் ஈந்த
தேவனைத் தென்கூடல் திருஆ லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!..(6/19)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம..
* * * 

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி வழக்கம்போல அருமையான உரையாடல் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. 'திருவிளையாட'லை மீண்டும் ஒருமுறை காண்கிறேன்! தரமான அழகான படங்களுக்கு நன்றி.

    -இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  3. அருமையான உரையாடல்கள் ஐயா
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. படமும் தங்கள் உரையாடலும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  5. படங்கள் வெகு அழகு. கதையும் ஸ்வாரஸ்யம்....

    பதிலளிநீக்கு
  6. உரையாடலும், உலாவும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மனசார சாமி கும்பிட்டாலே போதும் //

    உண்மை .

    படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  8. நக்கீரனும் இறைவனும் வாதம் புரிந்த பாடல்கள் வெகு அருமை. படத்தில் கேட்டதுண்டு..

    மனசார சாமி கும்பிட்டாலே போதும் என்ற தங்களது வரியை வழி மொழிகிறோம் ஐயா...ஆம் அதுவே போதும் தான்...

    படங்கள் வழக்கம் போல் அருமை...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..