நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 30, 2017

ஸ்ரீ பரிதியப்பர் கோயில்

சூரியன் வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..

ஊரின் பெயரும் திருக்கோயிலின் பெயரும் பருத்தியப்பர் கோயில் என்று மருவி வழங்கப்படுகின்றது..

தஞ்சையிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள உளூர் கிராமத்திற்கு அருகில் உள்ளது - ஸ்ரீ பரிதியப்பர் கோயில்..

இத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - பரிதிநியமம். 


தன் மகள் தாட்சாயணியை கவர்ந்து சென்ற சிவபெருமானை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் மற்ற தேவர்களுடன் சூரியனும் கலந்து கொண்டு , அவிர் பாகம் பெற்றான். 

இதனால் சிவ நிந்தை  செய்த தோஷம் ஏற்பட்டது.  

சிவபெருமானின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ வீரபத்ரமூர்த்தி -
தட்ச யாகத்திற்குச் சென்றவர்களையெல்லாம் வெளுத்துக் கட்டினார்..

அவர்களுள் சூரியனும் ஒருவன்.. தண்டத்தால் அடிபட்டதில் முன்பற்கள் உதிர்ந்து போயின.. அவனது பேரொளியும் குன்றிப் போனது..

தட்சனைப் பெரியவன் என்று எண்ணியதற்காக சூரியன் வருந்தினான்.. குற்றம் நீங்க வேண்டி சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபாடு செய்தான். 

அப்படி வழிபாடு செய்த தலங்களுள் இந்தத் திருத்தலமும் ஒன்று...

சூரியனின் வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட - எம்பெருமான் அவனை மன்னித்தருளினன்..

சூரியனும் தன் முக அழகையும் பேரொளியையும் திரும்பப் பெற்றான்..


இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியன் நன்றிக்கடனாக -
இன்றளவும் சந்நிதியிலேயே நேருக்கு நேர் நின்று  
சிவ பெருமானை - வழிபட்டுக் கொண்டிருக்கின்றான்.

மேலும் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 18,19,20  
ஆகிய மூன்று நாட்களில் உதிக்கும் வேளையில் 
செங்கதிர்களால் எம்பெருமானைத் தழுவி வணங்குகின்றான். 

இன்றும் நந்தி, பலிபீடம் - அடுத்து மூலவருக்கு எதிரில் நின்று வழிபடும்  சூரியனின் திருமேனியினைக் காணலாம்.

இந்தத் திருத்தலத்தில் சூரியனுக்கு தோஷ நிவர்த்தி ஆனதால், 
இத்தலம் பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. 


திருத்தலம் - திருப்பரிதிநியமம்

இறைவன் - அருள்மிகு பரிதியப்பர்
அம்பிகை - அருள்தரு மங்கல நாயகி

தலவிருட்சம் - அரச மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், வேத தீர்த்தம்..

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி.  சூரியன் சிவபெருமானை வழிபட்டு பழி நீங்கப்பெற்றதால், சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரே நாளடைவில் பருத்தியப்பர் என மருவி விட்டது. 


அழகின் வடிவாகிய மங்கலநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

நூற்றுக்கணக்கான பால் குடங்கள் பால் காவடிகள் - என, 
பங்குனி உத்திரத்தன்று பெருந்திருவிழா நிகழ்கின்றது..

அன்றைய தினம் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு, குளிரக் குளிர அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகின்றது..

ஸ்வாமி, அம்பாள், முருகன் என மூவரும் சிறப்புற்று விளங்குவதனால் இத்திருத்தலம் சோமாஸ்கந்த ஷேத்திரம் என்றும் புகழப்படுகின்றது.


தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய புஷ்கரணியில் நீராடி - பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப்பெருமான், சூரியன் ஆகியோரை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்குகின்றது. 

திருஞானசம்பந்தப் பெருமானால் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம். 

திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையுள் போற்றிப்பாடுகின்றனர். 


மிக பழைமையான கிழக்கு நோக்கிய கோயில். ஐந்து நிலைகளையுடையது முதல் ராஜகோபுரம்.

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.

பிரகாரத்தில் சண்டிகேசருக்கு மூன்று திருமேனிகள் உள்ளன.

மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலைக் கடந்தால் சந்நிதிகளில் விநாயகர், முருகன், கஜலட்சுமி திருமேனிகளைத் தரிசிக்கலாம்.

சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது. அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..

நவக்கிரக மண்டலமும் உண்டு.

துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..

நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..

திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனும், கோயிலருகில் இடும்பனும் குடிகொண்டுள்ளனர்...

திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம்,  பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தினுள் சிவலிங்கத்தின் மீது சூரிய உதயத்தில் இளங்கதிர்கள் படர்கின்றன..

பங்குனி 18,19,20 (மார்ச்-31, ஏப்ரல்-1,2) தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..

இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..

வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க.. 

சிவலிங்கத்திற்கு எதிரில் சூரியன்
சிவபெருமானின் எதிரில் - சூரியன் நின்ற வண்ணம் வணங்கும் திருக்கோலத்தினை வேறு எங்கும் காண இயலாது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும்  பரிகார தலமாகவும்  
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும்  சிறந்து விளங்குகிறது. 

எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர, இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்..

இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள  உளூர் கிராமத்திலிருந்து கிழக்காக 2 கி.மீ தூரத்தில் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே!.. (3/104) 
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி பருத்தியப்பர் ஸ்ரீ பரிதியப்பர் கோவில் வரலாறு அறிய வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இது சூரியனார் கோவில் அல்லவா

    பதிலளிநீக்கு
  3. படங்களும், பதிவும், விஷயங்களும் மிகவும் அருமையாக உள்ளன. தகுந்த நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள பதிவு. பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    ஓம் நம சிவாய .. சிவாய நம ஓம் !

    பதிலளிநீக்கு
  4. எனது நண்பரோடு மூன்று வருடங்கள் இக்கோயிலுக்குச் சென்றுவந்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. என் ஜாதகத்தில் சூரியன் எட்டில் இருப்பதால் பலவகையில் எனக்கு இழப்புகள் ஏற்படும் என்று ஒரு ஜோதிடர் சொல்லியிருந்தார். அந்த சூரியனுக்கே இழப்பு ஏற்பட்டதா? சபாஷ்! அந்தக் கோயிலைப் பார்த்துவிட வேண்டியதுதான்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. அரிய பல செய்திகளுடன் ஸ்ரீ பருத்தியப்பர் கோவிலை பற்றி அறிந்துக் கொண்டேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. சூரியன் வழிபட்டதால் பரிதியப்பர் கோயில் ஆஹா! அங்கு அப்பைனின் மேல் சூரிய ஒளிக்கதிர் வீழும் என்று அதனால் பெயரோ என்றும் நினைத்தோம்.அறியாத கதை. சூரியனுக்குமே பாதிப்பு ஏற்பட்டது என்பதை வாசிக்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. இறைவனின் திருவிளையால் அல்லவா!! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு ஐயா...
    அறிய தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  9. சுதா 28.01.201828 ஜனவரி, 2018 22:33

    திருமணம் தள்ளி போகிறது ..இந்த கோவிலிற்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்குமா ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      ஒருமுறை இங்கு வந்து தரிசனம் செய்யுங்கள்..
      பித்ரு தோஷங்கள் இருப்பின் விலகக் கூடும்...

      திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமான் வரப்ரசாதி.. கேட்கும் வரம் கண்டிப்பாக கிடைக்கும்..

      தேவையேற்பட்டால் திருமணஞ்சேரி சென்று வழிபடலாம்..

      தங்களுக்காக நானும் வேண்டிக் கொள்கின்றேன்..

      நலமே விளைக..

      நீக்கு
  10. பெயரில்லா17 ஜூலை, 2022 12:59

    சுபகிருது ஆண்டு ஆடி மாதப்பிறப்பு அன்று தரிசனம் கிடைத்தது, மேலும் (சிவபெருமான், சூரிய பகவான்) எந்த சுவாமிக்கு அர்ச்சனை செய்து தேங்காய் உடைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..