நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 20, 2017

கோலக் குருவி..

வாசலில் ஸ்கூட்டியின் சப்தம்..

விரைந்து வருவதற்குள்ளாக -


அக்கா.. அக்கா..வ்!..

கை நிறைந்த காய்கறிகளுடன் தாமரை.. சந்தையிலிருந்து வருகின்றாள்..

ஆனாலும், வீட்டிற்குள் வராமல் -  

வாசலிலிருந்த வண்ணக் கோலத்தில் லயித்திருந்தாள்...

வாம்மா.. தாமரை!..

அக்கா.. இன்றைக்கு என்ன விசேஷம்?... வாசலில் குருவிக் கோலம் எல்லாம்!..

என்ன விசேஷம் என்று நீதான் சொல்லேன்!..

அக்கா!.. அந்த அளவுக்கு நான் எங்கே?... இருந்தாலும் தலை இருக்க வால் ஆடக் கூடாது இல்லையா!.. அதனால்.. நீங்களே சொல்லி விடுங்களேன்!..



நல்ல பொண்ணு நீ!.. இன்னைக்கு சிட்டுக்குருவிகள் தினம்!.. உலகம் முழுதும் கொண்டாடுகின்றார்கள்!..

ஆகா!.. பல்பு வாங்கிட்டேன்!.. இருந்தாலும் அக்கா கிட்ட தானே!..

வா.. தாமரை.. உள்ளே வா!..  காய்கறி விலையெல்லாம் எப்படியிருக்கு?..

ஓரளவுக்கு மலிவு தான்!.. அக்கா.. நான் ஒன்று கேட்பேன்... தப்பாக நினைக்கக் கூடாது!..

என்னம்மா?..

சிட்டுக் குருவிக்கென்ன அவ்வளவு மகத்துவம்!.. அதுக்காக ஒரு நாளா?..

சிட்டுக்குருவி.. இயற்கையில அதுவும் ஒரு அங்கம்.. மனிதர்களோடு வாழ விரும்பும் உயிரினங்களுள் அதுவும் ஒன்று.. பழைய காலத்து வீடுகள்..ல சர்வ சாதாரணமா மக்களோட பழகித் திரியும்.. 

ஓ!..

வீட்டுத் தாழ்வாரங்கள் கூரை முடுக்குகள்... இங்கெல்லாம் ரொம்ப உரிமையா கூடு கட்டிக் கொள்ளும்.. யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாது...

ஓஹோ!.. 



வீட்டுக்குள்ள வந்து சிட்டுக் குருவி கூடு கட்டினாலே நல்ல அதிர்ஷ்டம் .. அப்படின்னு சொல்லுவாங்க..,

அது மட்டுமா!.. இளந்தம்பதிகள் இருக்கிற வீட்டுல குருவி கூடு கட்டினா.. குலம் விருத்தி.. ந்னு சந்தோஷப்படுவாங்க..

அக்கா!.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அக்கா?...

தாமரை!.. இதெல்லாம் உனக்கு தெரியாது.. குருவி மட்டுமல்ல.. குளவி வந்து கூடு கட்டினாலே பலப்பல அர்த்தம் இருக்கு.. குளவிக் கூட்டை கலைக்க மாட்டாங்க!.. குளவி கட்டுற கூட்டை வச்சி என்ன குழந்தை பிறக்கும்..ன்னு சொல்லிடுவாங்க!.. 

ஆச்சர்யமா இருக்கே!..

அந்த அளவுக்கு சிற்றுயிர்களோட இணைந்து வாழ்ந்த சமுதாயம் நம்முடையது.. தாமரை!..

கொஞ்சம் கொஞ்சமா நாகரிகம்..ங்கற பேர்..ல தன்னை இழந்துகிட்டு இருக்கிறதும் நம்முடைய சமுதாயம் தான்!...

ஊர் உலகம் எல்லாம் மாறி வருது தானே!..



ஊர் உலகம் போலவா நம்முடைய கலாச்சாரம்!..  தாத்தா காலத்தில எல்லாம் கறையானுக்கு மருந்து எறும்புக்கு மருந்து.. நெல்லுக்கு மருந்து தென்னைக்கு மருந்து.. இதெல்லாம் கிடையாது!... 

வீட்டு வாசல்ல சாணம் தெளித்து கோலம் போட்டால் கறையான் எறும்பு இதெல்லாம் வீட்டுக்குள்ளே வராது... நிலைப்படியில மஞ்சள் பூசி கூரையில நாலு வேப்பிலையும் மாவிலையும் தொங்க விட்டா கெட்ட கிருமிகளுக்கு வேலை இல்லை.. வீட்டைச் சுற்றி கோழி குருவி இதெல்லாம் இருந்தா விஷப் பூச்சிகள் ஒழிந்து போகும்...

கொல்லையில புழக்கடை தண்ணி ஓடுற இடத்தில நாலு வாழை வைச்சி வாழை இலையில சாப்பாடு..ன்னா உடம்புக்கு நல்லது... கிணற்றடியில துளசி மாடம்.. அப்படியே அந்தப் பக்கம் தும்பை தூதுவளை, செம்பருத்தி சோற்றுக் கற்றாழை..ன்னு இருந்துட்டா அந்த வீட்டுல நோய் நொடியே இருக்காது..

ஏ.. அம்மாடி!.. இவ்வளவு சேதிகளா!..

ஏழை.. ன்னாலும் பணக்காரன்.. ன்னாலும் காற்றோட்டமான வீடு... நல்ல தண்ணி.. நல்ல சாப்பாடு.. அவங்க அவங்க குணம் கொள்கை இதனால அப்படி இப்படி இருந்தாங்களே தவிர கிராமங்கள் யாரையும் கை விட்டதே இல்லை...

அக்கா!..


வாழையிலைக்குள் வாழும் குருவி
காத்து நின்ற கிராமங்களை நாம் தான் கை விட்டோம்!.. ஆற்றை குளத்தை அழித்தோம்.. மரம் மட்டைகளை ஒழித்தோம்.. நாம் வாழ இயற்கையைக் கெடுத்தோம்... வருங்கால சந்ததிக்கு வறட்சியைக் கொடுத்தோம்!..

... ... ...!..

எந்த நாட்டிலும் இல்லாதபடிக்கு எத்தனை எத்தனையோ ஞானிகள்!.. எத்தனை எத்தனையோ நீதி நூல்கள்!.. அத்தனையும் இருந்தும் அறிவழிந்து போனோம்!..

... ... ...!..

அடுத்த நாட்டுக்காரனைப் பற்றி பேச வேண்டாம்.. நம்மை நாமே கெடுத்துக் கொண்டோம்!.. உருப்படாத கல்வி முறையால் ஊர் அழிந்தது தான் மிச்சம்...

... ... ...!..

நம்முடைய பெருமையை திறமையை நமக்குச் சுட்டிக் காட்டணும்.. நல்லறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும்.. அதுதான் கல்வி.. ஆனால் இன்றைக்கு நடக்கிறது என்ன?.. கொடுக்க வேண்டிய இடத்தில் காசைக் கொடுத்துட்டால் என்ன வேணும்...னாலும் செய்து கொள்ளலாம்... கழனியை அழித்து விட்டு கல்லூரியே கட்டலாம்!..

... ... ...!..

ஆறு குளம் எல்லாம் அழியுதே... குன்று மலை எல்லாம் மடுவாகிப் போகுதே... மரம் மட்டை எல்லாம் விறகாகிப் போனதே.. கூக்குரல் இட்டாலும் கேட்பாரில்லை.. கைமேல் பலன் பூஜ்யம் தான்!..

... ... ...!..

மக்களுக்கான குளத்தை ஏரியை தூர்த்து விட்டு மக்கள் நலப்பணி..ங்கறான்... நல்ல தண்ணிக்கு ஜனங்க குடத்தோட அலையுறப்போ ஆழ்துளைக் குழாய்.. ங்கறான்.. இதுனால பூமி பொத்தலாகிப் போனது தான் மிச்சம்...

... ... ...!..

பூமிக்குள்ள நீர் போய்ச் சேர்ந்தாத் தானேடா மேலே பொங்கி வரும்.. நமக்குத் தான் மழைத் தண்ணியைத் தேக்கி வைக்கிற பழக்கம் எல்லாம் கிடையாதே!.. ஆயிரம் வருஷத்துக்கு முன்னால செஞ்சு காட்டுனாங்க... அப்படியெல்லாம் நல்லது செஞ்சாங்க..ங்கறதே - இன்றைக்கு படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியாது!.. அப்புறம் எப்படி உருப்படும் ஊரும் நாடும்?..

... ... ...!..

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.. அப்படி..ன்னு ஔவையார் சொன்னாங்க.. நாம கேட்டோமா?.. ஒரு ஆறு அழிஞ்சா எத்தனை எத்தனை மரங்கள் அழியுது.. ஒரு மரம் அழிஞ்சா எத்தனை எத்தனை ஜீவராசிகள் அழியுது.. இதெல்லாம் நல்லதுக்கா!..

... ... ...!..

இத்தனை மரமும் நீ வெச்சதா?.. நான் வெச்சதா?.. காற்றும் தண்ணியும் பறவைகளும் விலங்குகளும் வெச்சது!..

நீ படிச்சதில்லையா?.. காற்றினாலும் தண்ணீராலும் பறவைகளாலும் விலங்குகளாலும் விதைகள் இடம் விட்டு இடம் பரவுகின்றன.. அப்படின்னு!..

மேட்டுல இருந்து பள்ளத்துக்கு தண்ணீர் வர்றதில்லை... அடைத்தாயிற்று.. ஆறு அழிந்தது.. ஆற்றங்கரை அழிந்தது.. மரம் ஒழிந்தது.. மேலே பறவைகள் இல்லை.. கீழே விலங்குகள் இல்லை..

ஒன்றுக்கும் உதவாத மனிதன்.. இவனுக்கு மட்டும் பாதை வேண்டுமாம். ஆனை வழியை அழிக்கிறான்... பூனை வழியை ஒழிக்கிறான்... கேட்டால் நடுராத்திரியில உடுக்கை எடுத்துக்கிட்டு அடிக்கிறான்... அங்கே அரளிய வெச்சேன்.. இங்கே குறளிய வெச்சேன்..ங்கிறான்...

ஏன்டா.. தஞ்சாவூர் மண்ணும் தகரக்குடி மண்ணும் ஒன்றா?... மண்ணுக்கு மண் மரத்தைப் பார்த்து வைத்தானே இறைவன்!.. அவன் பெரியவனா?.. அவன் பேரைச் சொல்லி வயிறு வளர்க்கிற நீ பெரியவனா?..

மரம் மட்டையெல்லாம் அழித்து விட்டு - மழை வர்றதுக்காக ஆயிரத்து எட்டு குண்டத்துல ஹோமம்... ங்கிறான்!..

புழு பூச்சிய எல்லாம் கொன்னு போட்டுட்டு பூமிய வாழ வைப்பேன்... என்கிறான்!.. பறவை மிருகம்.. எல்லாம் அழியுது.. இவன் சொல்றான்.. இந்தியா வளருது.. ன்னு!..

ஊர் குடியைக் கெடுத்தவன் எல்லாம் பெரியபேர் வெச்சிக்கிட்டு அலைகிறான்!.. ஏதிலிகளாகிப் போனோம் தாமரை.. ஏதிலிகளாகிப் போனோம்!..

அக்கா.. அக்கா!.. என்னாச்சு!..



இயற்கையைப் பற்றி பேசினால் இளக்காரமா இருக்கு!..

நாலு சுவற்றுக்குள்ளே ஒற்றைப் பனை மரம் போல வாழ்க்கை... இவனுங்களுக்கெல்லாம் என்ன தெரியும் இயற்கையைப் பற்றி?..

சம்பளத்துக்காக வாழ்வதா வாழ்க்கை?.. சந்ததிகளுக்காக வாழவேணும்!.. எறும்பும் தான் வேணும்.. யானையும் தான் வேணும்!.. மண்ணுந்தான் வேணும்.. மரமும் தான் வேணும்..

அங்கே புதுச்சேரிக்குப் பக்கத்தில பார்.. தானியத்தில விஷம் வைச்சதில இருபத்திநாலு மயில்கள் செத்துப் போயிருக்கு.. ஆனா, இவனுங்க மட்டும் நல்லா இருக்கணும்!?..

ஆமா..ங்க்கா.. நானும் படிச்சேன்.. ரொம்ப வருத்தமா இருக்கு...

மயில்களோட வாழ்விடத்தை அழிச்சிட்டா அதுங்க வாழறதுக்கு வேறெங்கே போகும்?.. மயில்கள் சாபம் இடுதோ இல்லையோ.. அதைப் பார்க்கிறவங்களோட வயிறு பற்றி எரியுதே.. அந்தப் பாவம் சும்மா விடுமா?..

சே.. என்ன ஒரு ஈனத்தனமான வேலை!..

இப்படித் தான் சிட்டுக்குருவி லேகியம்.. ந்னு வேட்டு வைத்தார்கள்... முடிவு என்னவாயிற்று... குலம் விளங்கவில்லை.. குணம் விளங்கவில்லை...

அதென்னக்கா.. சிட்டுக்குருவி லேகியம்?..

அது ஒரு ஏமாற்று வேலை!.. உருப்படாதவனுங்க செஞ்சது!..

மறுபடியும் சிட்டுக்குருவிங்க.. எல்லாம் பெருகுமா.. அக்கா?...



இப்போ ஓரளவுக்கு சிட்டுக்குருவிகள் விருத்தியாகி இருக்கிறதா இயற்கை ஆர்வலர்கள் சொல்றாங்க!..

இருந்தாலும் அதுங்க நிம்மதியா வாழ்றதுக்கான வாய்ப்புகளை நாமதான் பெருக்கணும்!..

அந்த நேரத்தில் சட.. சட.. என்று சிறகடித்தபடி பத்துப் பதினைந்து சிட்டுக் குருவிகள் முன் கூடத்திற்குள் புகுந்து பறந்தன..

அக்கா.. அக்கா!.. இங்கே பாருங்களேன்!..

என்ன.. தாமரை.. இது!.. ஆச்சரியமா இருக்கு!..

அவ்வேளையில் ஒரு குருவி பேசிற்று!..

வாழ்க வளமுடன்!.. உங்களைப் பற்றி கேள்விப்பட்டு வந்தோம்!..

தாமரை.. அங்கே வரகரிசி இருக்கு எடுத்து வாம்மா!.. ஒரு காலத்தில் எங்கள் பழைய வீட்டில் நெல்மாலை கட்டியிருப்போம்.. இன்றைய சூழ்நிலையில் அதெல்லாம் இங்கே இல்லை... என்றாலும் எங்கள் வீட்டில் அமுது செய்தல் வேண்டும்!..

நல்லது.. ஆயினும், அங்கே தஞ்சையம்பதியார் இல்லத்தில் அவர்களுக்கு இன்று திருமண நாள் என்று விருந்துண்டோம்.. அவர்கள் தான் தங்களைச் சந்திக்கும்படி சொன்னார்கள்...

அப்படியா!.. - தமிழ்ச்செல்விக்கு மகிழ்ச்சி..

அக்கா... இந்தாங்க.. வரகரிசி!..

கூடத்தில் வரகரிசியை வாரி இறைத்து - வாஞ்சையுடன் தண்ணீரும் வைத்தார்கள்..

குருவிகள் கூடிக் குளிர்ந்து - தானியங்களை உண்டன.. நீரை அருந்தின..

அங்குமிங்கும் ஆனந்தமாகப் பறந்தன...

மகிழ்ச்சி.. விரைவில் தாமரையின் வீட்டில் கூடு கட்டுவோம்!.. 

வலமாகச் சுற்றி வாழ்த்திய வண்ணம் - வானில் பறந்து காற்றில் கலந்தன!..

தாமரை!.. நல்ல சேதிதான்!.. தம்பி ஊருக்கு வர்றாங்க..ன்னு நினைக்கிறேன்!..

போங்க..க்கா!.. எனக்கு வெக்கமா இருக்கு!.. - முகம் சிவந்தாள் தாமரை..




இறைவனே இயற்கை.. இயற்கையே இறைவன்..
இயற்கை இருக்கட்டும்.. இயற்கையாகவே இருக்கட்டும்!.
இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை!..

இன்று உலக சிட்டுக் குருவிகள் நாள்..


நாமும் வாழ்வோம்..
வையகத்தையும் வாழ வைப்போம்..

இயற்கை வாழ்க..
இயற்கையோடு இணைந்த இன்பமும் வாழ்க!..
***

19 கருத்துகள்:

  1. அருமையான நாளில் அழகான பதிவு. புகைப்படங்களைத் தெரிவு செய்த விதத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதிவு மனதை தொட்டது ..படங்களும் காணொளியும் அருமை ..இயற்கை குறித்த தங்களது ஆதங்கம் தான் எனதும் ..எங்க தோட்டத்தில் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதில்லை களை பூக்கள் கூட அழகென்று அப்படியே விடுகிறேன் ஒரு மஞ்சள் நிறப்பூ dandelion தான் தேனீக்களுக்கு முக்கிய உணவாம் .அவங்க சாப்பாட்டில் விஷமள்ளிகொட்டவிரும்பவில்லை . மனிதன் தனது சுயநலத்தால் இன்னும் எதையெல்லாம் இழக்கப்போகிறானோ தெரியலை :( ..நல்ல பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இயன்றவரைக்கும் சிற்றுயிர்களின் மீது இரக்கம் கொள்ளும் போது தான் மனிதம் புனிதமாகின்றது..

      தங்கள் இயல்பினை நானறிவேன்..

      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின்ஜி இனிய திருமணநாள் வாழ்த்துகள்
    விடயங்களை படித்து மனம் கனக்கின்றது என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களது வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விருதுநகர் போயிருந்தபோது தெரிந்தது: அந்தப் பகுதியில், வீடுகளிலும் வயல்களிலும் புகுந்து மயில்கள் புரியும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்பதால், ஒரு நாளைக்கு இருபத்தைந்து மயில்களாவது கொல்லப்படுகிறதாம்! தினத்தந்தியில் வந்த செய்தி இது. செந்திலாண்டவன் கோயில்கொண்டிருக்கும் திருச்செந்தூரிலும் இதுபோன்றே மயில்கள் தினந்தோறும் கொள்ளப்படுகின்றனவாம். செய்திகள் கூறுகின்றன. விரைவில், சிட்டுக்குருவிகளுக்கு ஏற்பட்ட கதி, மயில்களுக்கும் ஏற்படும் என்று தோன்றுகிறது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, தமிழை ஆங்கிலத்தில் அடிக்கும்போது உண்டாகும் விசித்திரம்தான் என்னே! 'கொல்ல' என்று அடித்தால் 'கொள்ள' என்று விழுந்துவிட்டதே!

      நீக்கு
    2. அன்புடையீர்..

      வருடந்தோறூம் திருச்செந்தூர் செல்கின்றோம்..
      அங்கே மயில்கள் பாதுகாப்புடன் இருப்பதாக அறியமுடிகின்றது..

      ஆயினும் மயிலுக்கு எதிரான வன்முறை மனதை நெருடுகின்றது..

      சமயத்தில் ஆண்ட்ராய்டுகளில் தமிழ் தட்டச்சு செய்யும் போது அனர்த்தமாகி விடுகின்றது..கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது.

      தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மனிதன் தான் வாழ ஒவ்வொன்றாய் அழித்துக் கொண்டிருக்கிறான்
    முடிவு என்னவாகுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மனிதன் செய்யும் கொடுமைகள் அவனுக்கு எதிராகத் தான் முடியும்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மிக அருமையான பதிவு. இயற்கையை எதிர்க்காமல், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அந்தக் கால மனிதன் ஆரோக்கியமாக இருந்தான். அதெல்லாவற்றுக்கும் சாதி, மதக் காரணங்கள் பேசி, விஞ்ஞானம் வளர்ந்தது இந்நாளில் அஞ்ஞானத்தில் வாழ்கிறான் இன்றைய சுயநல மனிதன். அவனின் சுயநலம் அவனுக்கே கேடு என்பதை உணர்ந்தானில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இயற்கையோடு இயைந்த வாழ்வு எம்முடையது..

      என் பிள்ளைகளுக்குக் கூட ஓரளவு.. இனிவரும் சந்ததிக்கு என்ன ஆகுமோ என்ற ஆதங்கம் தான் மேலோங்குகின்றது..

      தங்களது வருகையும் நிதர்சனமாக கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான பதிவு. நானும் நேற்று முகநூலில் பதிந்தேன், என் பழைய பதிவை.
    நமக்கு எல்லாம் வேண்டும். இயற்கையின் சுழற்சிக்கு ஒபவ்வொன்றும் தேவை.எதையும் அழிக்க நமக்கு உரிமை இல்லை.
    மயில்கள் அழிக்க படுவது கொடுமை. தேசிய பற்வையை அழித்தால் சட்டப்படி குற்றம் இல்லையா?
    //மனிதன் எல்லாம் புரிந்து கொண்டான் வாழும் வகை தெரிந்து கொண்டான், மனிதனாக வாழ மட்டும்// முடியவில்லை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது கருத்துரையில் குறித்துள்ள பாடல் 1960 ல் வெளியாகி இருக்கின்றது..

      மனிதனாக வாழ மட்டும்
      மனிதனுக்குத் தெரியவில்லை!.. - என்று உரைக்கின்றார் கவியரசர்..

      அன்றைக்கு எழுதியது இன்றைக்கும் எதிரொலிக்கின்றது..

      மனிதன் திருந்த வேண்டிய சூழ்நிலை என்பது மட்டும் நிச்சயம்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மிக மிக அட்டகாசமான பதிவு! இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்தானே னம் முன்னோர். இப்போதுமனிதனின் சுயநலத்தால் என்னவெல்லாம் அழிவு! இயற்கைக்கு முரணான வாழ்வு! நம்மைச் சுற்றியுள்ள இயற்கை நாசம்...என்று எங்கோ...

    கீதா: மேற் சொன்ன கருத்துடன், நான் காட்டுப் பூக்களைக் கூட ரசிப்பேன். ஏன் காட்டுச் செடிகளைக் கூட...எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அதுதானே இறைவனின், இயற்கையின் படைப்பு! ஒன்றைச் சார்ந்து ஒன்றுதானே வாழ்க்கை!..மயிலைக் கூட கொன்று உணவாகக் கொள்கிறார்களாமே தில்லி வெங்கட்ஜி தனது பதிவில் சொல்லியிருந்தார் என்ன கொடுமை...

    நானும் பால்கனி தோட்டம் சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். பூச்சி மருந்து அடிப்பதே இல்லை...விருதுநகர், திருநெல்வேலி அடுத்துள்ள கோடகநல்லூர் பகுதிகளில் மயில்கள் நிறைய உண்டு. ரயிலில் போகும் போதே விருது நகர் பகுதில் காணலாம். ஆனால் அவை எல்லாம் இப்போது கொல்லப்படுகிறதாம் வன இலாகா என்ன செய்கிறது என்று தெரியவில்லை. அந்த மயில்களைப் பிடித்து வனத்திலேலும் கொண்டுவிடலாமே! வனத்தில் பெரிய அளவில் வேலி வேலி கட்டி அங்கு அவைகளை விட்டு விடலாமே...என்றும் தோன்றுகிறது....

    இப்போது சிட்டுக் குருவிகள் எங்கள் வீட்டருகில் வருகின்றன. நான் வீட்டில் சட்டியில் அரிசி, தண்ணீர் எல்லாம் வைக்கிறேன். குரங்குகள் வரும், காக்கைகள் வரும்...நான் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் மான்கள் கூட வரும்...பார்க்க ரம்மியமாக இருக்கும்...

    இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மனித இனம் பிழைக்கும் இல்லையேல் தன் குழியைத் தானே பறித்துக் கொள்வதுதான் நடக்கும் அதுதான் நடந்தும் கொண்டிருக்கிறது.

    அருமையான கட்டுரை!! மிகவும் ரசித்தேன்...

    மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மயில்களின் வாழ்விடத்தை அழித்தார்கள்..
      வாழ்வதற்கு வழி தேடிய மயில்கள் மனித வடிவிலிருக்கும் அரக்கர்களால் வாழ்விழந்து போகின்றன..

      எல்லாவற்றையும் அழித்தொழித்து விட்டு என்னதான் செய்யப் போகின்றார்கள் - இந்த மூடர்கள்?..

      தங்கள் அன்பான வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..