நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 04, 2016

என்றும் நன்றியுடன்

நாற்பது ஆண்டு கால சிறைத் தண்டனை!..

பாரதத் திருநாடு திகைத்து நின்றது..

இக்கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது!.. - என, ஆங்கிலேயரும் அதிர்ந்தனர்..

சரியான நேரத்திற்காகக் காத்திருந்த - 
திருநெல்வேலி கலெக்டர் R.W. எஸ்கார்ட் ஆஷ் - 

இவர்கள் இருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதந்திர வேட்கை கொள்ளும்படிக்கு பொதுமக்களைத் தூண்டி விட்டனர்!.. 

- என்ற குற்றம் சாட்டி சிறைப்படுத்தினான்..

5 செப்டம்பர் 1872 - 18 நவம்பர் 1936

அந்த இருவர் -

வ.உ.சிதம்பரம் பிள்ளை..
சுப்ரமண்ய சிவம்..

நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்!.. - என்ற மரபில் வந்த - நாம் இந்த வெள்ளைப் பரங்கியருக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதா!.. 

- என்று, விடுதலை வேட்கை கொண்டு பேசத்தான் செய்தார்கள்..

ஆனால், அதைக் குற்றமாகக் கொண்டது மாவட்ட நிர்வாகம்...

வ.உ.சி அவர்களின் பேரைக் கேட்டாலே - பேச்சைக் கேட்டாலே
வெள்ளைப் பரங்கியரின் அடி வயிறு கலங்கியது..

இனியும் வெளியே விட்டு வைத்தல் தகாது.. உள்ளே பிடித்துப் போட வேண்டும்!.. - என வக்ரம் கொண்டது மாவட்ட நிர்வாகம்.. 

அதற்குக் காரணங்களும் இருந்தன..

தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே இயங்கிக் கொண்டிருந்த
பிரிட்டீஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக -

சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற பெயரில் கப்பல்களை இயக்கியது...

சுதேசி நாவாய்ச் சங்கத்தினை ஒழிப்பதற்கு என,  பற்பல தகிடுதத்தங்கள் செய்தும் சற்றும் மனம் தளராமல் தனது அயராத முயற்சியால் ஆங்கிலேய நரிகளின் வஞ்சனைகளை முறியடித்தது..

அத்துடன் நில்லாமல் - 

தூத்துக்குடி பஞ்சாலைத் தொழிலாளருக்காகப் போராடி ஆங்கிலேய நிர்வாகத்தை முடக்கியது...

1908 பிப்ரவரி 27 அன்று தூத்துக்குடி பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்தியதே கிழக்கிந்திய வரலாற்றின் முதல் வேலை நிறுத்தம்... 

அடிமைகளாகக் கருதப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடி -
அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தந்தது...

பஞ்சாலை நிர்வாகம் கதவடைப்பு செய்த போதும் - 
தொழிலாளர்களுக்குத் தமது கைப்பொருளைக் கொண்டு 
உணவளித்துக் காப்பாற்றி மக்களிடத்தில் செல்வாக்கினைப் பெற்றது...

எல்லாவற்றுக்கும் மேலாக - சுதேசி நாவாய்ச் சங்கத்தின் அபார வளர்ச்சி..

இதையெல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

கொந்தளித்துக் கிடந்த குறுமதியுள் விளைந்த எண்ணமே - சிறை பிடிப்பு..

பேச்சு வார்த்தைக்கென நெல்லைக்கு அழைக்கப்பட்டனர் -
வ.உ.சி அவர்களும் சுப்ரமண்ய சிவா அவர்களும்..

அங்கே செல்வது ஆபத்து என்று யூகித்திருந்தாலும் - அஞ்சாமல் சென்றனர்..

1908 மார்ச் 8 அன்று பிபின் சந்த்ர பாலரின் விடுதலையைக் கொண்டாடக் கூடாது.. மேலும் எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது!.. 

- என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது..

அதற்குத் தலை வணங்காத்தால் - 1908 மார்ச் 12 அன்று
வ.உ.சி அவர்களும் சுப்ரமண்ய சிவா அவர்களும் கைது செய்யப்பட்டனர்..

நெல்லையில் மூண்டெழுந்தது கலவரம்..

மண்ணெண்ணெய்க் கிடங்கும் அஞ்சலகமும் தீக்கிரையாகின..

காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டன..

தூத்துக்குடியிலும் நெல்லையிலும் முழுக்கடையடைப்பு நடந்தது..
குதிரை வண்டிகள் கூட ஓட்டப்படவில்லை..

இந்திய வரலாற்றில் முதல் பொது வேலை நிறுத்தம் இதுதான்..

கலவரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்..

கலவரத்திற்கு வித்திட்டதாக காவல் துறை வழக்கு நடத்தியது..

வழக்கின் முடிவில் - வ.உ.சி அவர்களுக்கு
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக இருபது ஆண்டுகளும்
சுப்ரமண்ய சிவா அடைக்கலம் கொடுத்ததற்காக இருபது ஆண்டுகளும்
ஆகக் கூடி நாற்பதாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது..

சுப்ரமண்ய சிவா அவர்களுக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை..

இந்தத் தீர்ப்பிற்கு எதிராகப் போராடியதில் - சென்னை உயர்நீதி மன்றம் நாற்பதாண்டு காலத்தை பத்தாண்டுகளாகக் குறைத்தது..

மீண்டும் லண்டன் - பிரிவியூ கவுன்சிலில் முறையிட்டதில்
தண்டனைக் காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைந்தது..

சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணிபுரிந்த வ.உ.சி. அவர்கள் சிறையில் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளானார்...

கப்பலோட்டிய தமிழன்!.. என்று புகழப்பட்டவர்
காலக் கொடுமையால் செக்கிழுக்கும் நிலைக்கு ஆட்பட்டார்..

இதெல்லாம் மக்களுக்குத் தெரிய வந்தது..

நமக்கெதற்கு வம்பு.. இருந்த இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போய் விடுவோம்!.. - என்று சாதாரண மக்கள் நினைத்ததில் கூட தவறில்லை..

அரும்பாடுபட்டு உருவாக்கிய நாவாய்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் நினைத்தது தான் பெரிய வேதனை..

அதன் விளைவு -

S.S. காலியா, S.S. லாவோ - எனும் இரு கப்பல்களும் கடலில் மிதந்திருக்க -
சுதேசி நாவாய்ச் சங்கம் வங்கக் கடலுள் மூழ்கிக் கரைந்து போனது

ஆனாலும்,
கொதித்தெழுந்து புரட்சிப் பாதையில் பயணித்த இளைஞர்களுள் ஒருவரான

செங்கோட்டை வாஞ்சி -

1911 ஜூலை 11 அன்று - மணியாச்சி ஜங்ஷனில் வைத்து நெல்லை கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுத் தள்ளி விட்டுத் தானும் தன்னுயிரைத் துறந்தார்..

வ.உ.சி. அவர்கள் ஒருவழியாக 1912 டிசம்பர் 12 அன்று விடுதலையானார்..

காலம் யாரையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடியிருந்தது..

சிறைவாசம் - வ.உ.சி. அவர்களுக்கு ஏழ்மையைப் பரிசாகத் தந்திருக்க -
சுப்ரமண்ய சிவா அவர்களுக்கோ தொழுநோய் பரிசாகக் கிடைத்திருந்தது..

வ.உ.சி. சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி அவரைக் கண்டு கொள்ளவில்லை..

திலகர் பெருமானின் சீடரான வ.உ.சி. அவர்களால் காந்திஜியுடன் இணங்க முடியவில்லை..  1920ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்..

1921 செப்டம்பர் 11 அன்று - திருவல்லிக்கேணியில் ஒரு துயரம் நிகழ்ந்தது..

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?..

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?..

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் 
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?..

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போலக் கலங்குவதுங் காண்கிலையோ?..

- என்று கலங்கித் தவித்து,
வ.உ.சி. அவர்களின் நிலைமையைப் பதிந்து வைத்த
மகாகவி பாரதியார் இயற்கை எய்தினார்..

உற்ற நண்பரின் பிரிவு வ.உ.சி. அவர்களை மிகவும் பாதித்தது..


தேசத் துரோகம் என சிறைத் தண்டனைக்கு ஆட்பட்டதால் -
வ.உ.சி. அவர்களின் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்பட்டிருந்தது...

வ.உ.சி. அவர்களின் நிலையை உணர்ந்த திலகர் மாதம் ரூ 50 அனுப்பி வைத்து உதவியதாக விக்கி பீடியா கூறுகின்றது..

சென்னையிலும் கோவையிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் அரசுக்கு விண்ணப்பித்தார்..

வ.உ.சி. அவர்களின்  கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி  E.H. Wallace - மீண்டும்
வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதி வழங்கினார்..

அவருக்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாகவே தனது இளைய மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்..

கோவில்பட்டியில் பணியைத் தொடர்ந்த வ.உ.சி. அவர்கள்
1932ல் தூத்துக்குடிக்கே மீண்டும் வந்தார்...

மீண்டும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழக்காடினார்..

தமிழ்ப் புலமை மிக்க வ.உ.சி. அவர்கள் - தமிழார்வத்துடன்
திருக்குறளுக்கு உரை எழுதியதோடு பல்வேறு நூல்களையும் 
தனது வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்..

உரையாசிரியர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர் - 
என்ற சிறப்புறு நிலைகளில் விளங்கினார்..

நாட்கள் நகர்ந்தன.. விதி வழியே வாழ்க்கை சென்றது..

1936 நவம்பர் 18 அன்று பொன்னுடம்பு நீத்து புகழுடம்பு எய்தினார்..


நாட்டுக்காகப் போராடி நமக்காக 
துன்பங்களையும் துயரங்களையும் 
இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட.. 

வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள் 
செப்டம்பர் 05

ஊருக்கு உழைத்த உத்தமர்களுக்கு 
எவ்விதத்தில் கைமாறு செய்யப் போகின்றோம்!..

நன்றி என்ற ஒரு சொல் மட்டும் போதுமோ?..
***

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களையும்
பாரத ரத்னா Dr.ராதாகிருஷ்ணன் அவர்களையும்
என்றென்றும் நினைவு கொள்வோம்..
***

செப்டம்பர் 05
ஆசிரியர் தினம்


இந்திய குடியரசின் முதல் துணைத் தலைவரான 
பாரத ரத்னா Dr.S.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்..


குரு ப்ரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர:
குரு சாட்க்ஷாத் பர ப்ரம்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:




இருதுருவம் எனும் திரைப்படத்தில்
இடம் பெற்ற பாடல் காட்சி..


குரு வாழ்க..
குருவே துணை.. 
***

11 கருத்துகள்:

  1. வ.உ.சி குறித்து மிக அருமையான பகிர்வு...

    வ.உ.சி மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணனை நினைவில் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையான பகிர்வு. ஒரு நாள் முன்னரே பதிவு... ஓ நாளைக்கு பிள்ளையார் பற்றி பகிர்வு வரும் என நினைக்கிறேன்.

    பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்களின் கணிப்பு சரியே..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. போற்றுதலுக்கு உரிய பெருமக்கள் பற்றிய அருமையான பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வ.உ.சி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பற்றி ஒரு சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நாட்டுக்காக வாழ்ந்த மக்களைப் பற்றிய நல்ல பதிவு. இவற்றையெல்லாம் திரும்பத் திரும்ப எழுத வேண்டும், பகிர வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இதுதான் தேவை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நமக்காக தங்களது நல்வாழ்வினைத் துறந்த நல்லவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..