நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 19, 2016

ஸ்ரீ நரஸிம்ஹ ஜயந்தி

இன்று பிரதோஷம்..

வைகாசி மாதத்தின் வளர்பிறை திரயோதசி..

சகல சிவாலயங்களிலும் நந்தியம்பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் ஏக காலத்தில் மகா தீபாரதனை நிகழும் நாள்..

 பிரதோஷத்தின் பெருமை அனைவருமே அறிந்தது தான்!..

அதில் கூடுதலாக இன்றைய பிரதோஷ வேளை சிறப்புடையதாகின்றது..

எப்படியெனில் -

வைகாசி மாதத்தின் பிரதோஷ வேளையில்
சுவாதி நட்சத்திரம் ஒளிர்கின்றது...

இந்த நேரத்தில் தான் -

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியின் திரு அவதாரம் நிகழ்ந்தது..

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியின் திரு நட்சத்திரம் சுவாதி..


மகனென்றும் பாராமல் - எத்தனை கொடுமைகளைச் செய்தாலும் துளி கூட பயமில்லாதவனாக இருக்கின்றான்.. அதை விட அந்தக் கொடுமைகளில் இருந்தும் உயிரோடு தப்பித்து வருகின்றான்!.. அது எப்படி?..

கோபத்தால் கொதித்துப் போயிருந்த - ஹிரண்யன் இடியென முழங்கினான் ..

எங்கேயடா உன் ஹரி?.. 

கொந்தளித்திருந்த ஹிரண்யனுக்கு -
இனிமையுடன் பதில் கூறினான் ப்ரஹலாதன்.

அவன் தான் எங்கேயும் இருக்கின்றானே!.. சாணிலும் உளன். ஓர் தண்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினும் உளன். மாமேருக் குன்றிலும் உளன்!..

ஏய்!.. அதையெல்லாம் விடு!.. இங்கே இருக்கின்றானா?.. இல்லையா?..

இங்கே அங்கே என்று எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கின்றவன் - அவன்!..

இங்கே - இந்தத் தூணில் அந்த ஹரி இருக்கின்றானா?.. இல்லையா?... 

- கடுங்கோபத்துடன் கர்ஜித்தான்.

இந்நின்ற தூணிலும் உளன். நீங்கள் சொன்ன சொல்லிலும் உளன்!.. 
தந்தையே!.. உங்களுக்கு ஏன் இப்படி மனக்குழப்பம்!.. 
மேரு எனும் மாமலையில் திகழ்ந்திருப்பவனாகிய ஸ்ரீ ஹரி பரந்தாமன் - 
நீங்கள் காட்டும் இந்தத் தூணில் நிறைந்திருக்க மாட்டானா!..  
உங்கள் மனதிலிருந்து நீங்கள் சொல்லிய சொல்லில் கூட - 
ஸ்ரீமந்நாராயணன் மறைந்திருக்கின்றானே!..

அன்புடன் விளக்கினான் - ப்ரகலாதன்..

மகனின் கூற்றினை விளங்கிக் கொண்ட ஹிரண்யன் - கோபங்கொண்டு
அங்கிருந்த பெருந்தூணைக் கதாயுதம் கொண்டு பிளந்தான்...

விளைவு!.. 

பெருந்தூணின் உள்ளிருந்து - ஹிரண்யனுக்குக் கூற்றாக 
சிங்க உருக் கொண்டு வெளிவந்தான் - ஸ்ரீ ஹரிபரந்தாமன்!..


தூணின் உள்ளிருந்து - ஸ்ரீ நரசிங்கமாக வெளிவந்த - ஸ்ரீஹரி பரந்தாமன் - ஹிரண்யனின் தேகத்தைப் பிளந்து அவனை மாய்த்தான்...

இப்படியாக - பிரதோஷ வேளையில் தான்
ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியின் திரு அவதாரம் நிகழ்ந்தது

இன்று நரஸிம்ஹ ஜயந்தி..

சுவாதி நட்சத்திரம் பிரதோஷ வேளையில் பொருந்தி வந்தாலும்

நாளை வெள்ளிக் கிழமை வைகாசி ஏழாம் நாள் (மே/20) திவ்ய தேசங்களில் ஸ்வாமியின் ஜயந்தி வைபவம் அனுசரிக்கப்படுகின்றது...


கீழ்வரும் ஸ்லோகம் Facebook வழியாகக் கிடைத்தது..

அஹோபில மடத்தின் நாற்பத்து நான்காம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் அருளிச் செய்தது..

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ : த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!..

இதன் பொருள் :
நரஸிம்ஹனே தாய்,தந்தையாகவும் சகோதரனாகவும் தோழனாகவும் அறிவாகம், செல்வமாகவும் எஜமானனாகவும் நமக்கு எல்லாமாகவும் இருப்பவன்.. அப்படிப்பட்ட நரஸிம்மனை சரணடைகிறேன்.
அனைவருக்கும் ந்ருஸிம்ஹ கடாக்ஷம் உண்டாக திருவடி பற்றிப் ப்ரார்த்திக்கிறேன்..

இந்த ஸ்லோகத்தினை 48 நாட்கள் பக்தியுடன் சொல்பவர் தம்முடைய நல்ல நோக்கங்கள் நிறைவேறும் - என, குறிக்கப்பட்டிருந்தது..

பொதுவாக பிரதோஷ வேளைகளில் பெருமாள் திருக்கோயில்களில் -
சந்நிதியில் திரையிட்டு மறைத்திருப்பார்கள்.

ஏனெனில், அவ்வேளையில் -

ஸ்ரீ ஹரி பரந்தாமன் திருக்கயிலாய மாமலையில் சிவபெருமானின் திருத்தாண்டவத்தினைத் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்...

ஆயினும், விசேஷமாக சில திருக்கோயில்களில்,
பிரதோஷ வேளையில் பெருமாள் உள் திருச்சுற்றில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம்..

ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் - தஞ்சை
அந்த வகையில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள -
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலில் - ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் ஸ்வாமி உள் திருச்சுற்றில் எழுந்தருள்வார்...

தஞ்சையம்பதியில் இரண்டு இடங்களில் ஸ்ரீ நரஸிம்ம ஸ்வாமி திருக்கோயில் கொண்டுள்ளார்..

முதலாவது -
தஞ்சை வெண்ணாற்றங்கரை ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயில்..

திருமங்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருக்கோயில்..

ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருச்சுற்றில் எழுந்தருளிய பின்னரே -
எதிர்புறமுள்ள ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ பூஜைகள் தொடங்கப்பெறும்..

இரண்டாவது -
தஞ்சை கீழவாசல் ஸ்ரீ யோக நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்..

இந்தத் திருக்கோயிலில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்
பட்டபந்தனத்துடன் யோக நிலையில் எழுந்தருளியிருக்கின்றார்..

மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று உள் திருச்சுற்றில் ஸ்வாமி புறப்பாடு கண்டருள்கின்றார்...

ஸ்ரீ உக்ர நரசிம்மர் - கர்நாடகா
நரஸிங்க வழிபாடு மிகத் தொன்மையானதாகும்..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் - திருப்பாவையின் முதலாவதான திருப்பாசுரத்திலேயே -

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்!..

- என்று பரவுகின்றாள்..


மன்னிக் கிடந்து உறங்கிய சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு!..

என்று, மீண்டும் - கண்ணன் - சீரிய சிங்காதனத்து இருந்து வந்த காரியத்தை ஆராயும் திருக்கோலத்தைப் பிரமிப்புடன் வர்ணித்து மகிழ்கின்றாள்..


ஆழ்வார்களும் இவ்வண்ணமே - ஸ்ரீ நரசிம்மனின் திருக்கோலத்தைப் பற்பல விதமாகப் பாடிக் களிக்கின்றார்கள்..

எனில் -


தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நகநுதி கொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி 

பூவுலகில் பெருங்கோட்டையினை அமைத்துக் கொண்டு முரண்பட்டு வாழ்ந்தவனாகிய இரணியனின் உடலை நகங்களின் கூரிய நுனியினால் கிழித்து அழிப்பதற்கென பெரும் மலை போல நரசிங்க அவதாரத்தை எடுத்தவளாகிய பயங்கரி (பைரவி) சாம்பவி தந்தருளிய திருக்குமரன் -முருகன்!..

இரணியனை அழிக்க அம்பிகையே நரசிங்கத் திருக்கோலம் தாங்கினாள்!.. 

- என, வைணவத்தையும் சாக்தத்தையும் கௌமாரத்தையும் ஒன்றிணைத்து  

திருப்புகழில் (தேவேந்திர சங்கம திருவகுப்பு) அருணகிரிநாதர் பாடுகின்ற அழகே அழகு!..

இங்கே -

அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. 
- என்று அருளும் அப்பர் பெருமானின் திருவாக்கும் சிந்திக்கத் தக்கது..

ஸ்ரீ நரசிம்மர் - நாமக்கல்
பாரதத்தின் பல பகுதிகளிலும் ஸ்ரீ நரசிம்மரின் திருப்பெயரால் ஊர்கள் அமைந்துள்ளதே இதற்குச் சான்று..

நரசிம்மன் எனப் பெரும்பேர் கொண்ட பல்லவ மாமன்னனை நாமறிவோம்..

தஞ்சைக்கு அருகில் வீரநரசிங்கன் பேட்டை என்றும்
குடந்தைக்கு அருகில் நரசிங்கம்பேட்டை என்றும் - இன்றளவும் ஊர்கள் விளங்கி வருகின்றன..

ஸ்ரீ நரசிம்ம வழிபாடு பற்றி இன்னும் நிறைய தகவல்கள் உள்ளன..

எம்பெருமானின் திருவருளால் தொடரும் பதிவுகளில் சிந்திப்போம்..


ஸ்ரீ ஹரி பரந்தாமன் சிங்க வடிவம் கொண்டு
அரசு கட்டிலில் அமர்ந்ததாலேயே -
அரச ஆசனம் சிங்காசனம் - சிங்காதனம் - சிம்மாசனம்
என்றெல்லாம் பெயர் பெற்றது..

ஆசனத்தின் இருபுறமும் சிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டதும்
அந்தப் பெருமையை நினைவு கூர்வதற்காகவே!..

அசோக சக்ரவர்த்தி நிறுவிய வெற்றித் தூணின் உச்சியில் விளங்குபவை -
நான்கு சிங்கங்கள்...

நீதி நெறிமுறை தவறாக ஆட்சிக்கு அடையாளம் - சிங்கம்..
கடமை தவறாத சத்தியத்திற்கு அடையாளம் - சிங்கம்..

சிங்கம்!.. 
நமது தேசத்தின் அடையாளம்..

சிங்காசனத்திலிருந்து கொண்டு 
அறநெறி பிறழ்வோர்க்கு -
தூணைப் பிளந்து கொண்டு வர வேண்டிய 
அவசியம் எல்லாம் இப்போது இல்லை..

சிறு துரும்பிலிருந்து கூட அல்ல..
அணுத் துகளிலிருந்தும் - 
தெய்வ உருக்கொண்டு சிங்கம் வந்தே தீரும்!..

ஓம் மஹாலக்ஷ்மி சமேத
ஸ்ரீ நரஸிம்ஹப் பரப்ரம்ஹணே நம:

ஓம் ஹரி ஓம் 
* * *

9 கருத்துகள்:

  1. ஸ்ரீ நரஸிம்ஹ ஜயந்தி விடயம் அறிந்தேன் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளுக்கு ஏற்ற மிகவும் அருமையான பதிவு. படித்து மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி, பிரதர்.

    மாதா ந்ருஸிம்ஹ: ...... ஸ்லோகத்துடன் நானும் ஒரு பதிவு ஏற்கனவே 2011 டிஸம்பர் மாதம் வெளியிட்டிருந்தது என் நினைவுக்கு வந்தது.

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

    தலைப்பு:

    ”காவேரிக்கரை இருக்கு
    கரைமேலே _____ இருக்கு” :)

    பதிலளிநீக்கு
  3. நரசிம்ம ஜெயந்தியைப் பற்றி பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அறயாச் செய்திகள் அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. அறியாத செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டம் இடுவதில் சிக்கல் வருகிறது

    பதிலளிநீக்கு
  7. இரண்யன், பக்த பிரகலாதன், நரசிம்மர் புராணக்கதை தெரியும். இந்த நரசிம்ம அவதாரம் செய்த தினம், நரசிம்ம ஜெயந்தி எனப்படுகிறது என்பதனை இந்த பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன். கூடவே, நரசிம்மரின் வெவ்வேறு அழகிய படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பல தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தகவல்கள் பல. நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..