நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

மங்கலக் குங்குமம்

குங்குமம்..

அம்பிகையின் சந்நிதியில் வழங்கப் பெறும் மிக உயர்ந்த பிரசாதம் இதுவே!..

காலகாலமாக பாரதத்தின் மங்கல மங்கையர் - கனவிலும் நினைவிலும் போற்றி வணங்குகின்ற புனிதம்...


நெற்றிக் குங்குமத்தால் என்ன விசேஷம்!?..

நெற்றியில் - புருவ மத்தில் - மூளயின் பின்புறமாகத் தான் பீனியல் எனும் சுரப்பி (Pineal Gland) அமைந்துள்ளது..

யோக நிலைகளில் ஆக்ஞா எனக் குறிப்பிடப்படுவது - இதுவே..

ஞானக் கண் என்றும் மூன்றாவது கண் என சிறப்பிக்கப்படுவதும் இதுவே!..

பீனியல் சுரப்பி நமது உடல் செயல்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது.


இது மெலட்டோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

மெலட்டோனின் தான் - உறக்கத்தையும் விழிப்பையும் கட்டுப்படுத்துகின்றது.

நல்ல தூக்கமும் விழிப்பும் தான் மனிதனை நிலைப்படுத்துவன..

மெலட்டோனின் இரவில் தான் சுரக்கின்றது..

அதிலும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கும் போது தான் சுரக்கின்றது.

பகல்பொழுதில் - கதவுகளை அடைத்து இருட்டாக்கிக் கொண்டு உறங்கினாலும் சுரப்பதில்லை..

மெலட்டோனின் சரிவர சுரந்தால் தான் - மற்ற ஹார்மோன்களும் சரிவர சுரந்து உடல் நலமுடன் திகழும்.

இரவில் நன்றாக உறங்காதவர்களின் மனோநிலையை - மறுநாள் காலையில் நாம் நிதர்சனமாகக் காணலாம்..

இளமை, ஆரோக்கியம் (நோய் எதிர்ப்பு சக்தி), பொறுமை, மன அமைதி - ஆகியவற்றுக்கு மெலட்டோனின் தான் காரணம்..

நெற்றி நடுவில் - புருவ மத்தியில் - நினைவுகளைக் குவியச் செய்வதன் மூலம் இந்த சுரப்பியை நிலைப்படுத்தலாம்..

அதனால் நமக்குக் கிடைப்பது - ஆன்மீக முன்னேற்றம்.


பீனியல் சுரப்பி செம்மையாக இருந்தால் - அமானுஷ்யத்தை உணரமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு..

தொலைவில் இருப்பதையும் உணர முடியும்.

எனவே தான் - மூன்றாவது கண் என சிறப்பிக்கப்பட்டது.

மனோவசியம் பழகியவர்கள் தங்கள் பார்வையை எதிராளியின் புருவ மத்தியில் குவிய வைத்து அவர்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்..

நெற்றியின் மத்தியில் திருநீறு குங்குமம் திருமண் - இவை இருந்தால் - பிறரால் வசியம் செய்ய முடிவதில்லை..

தீய எண்ணங்கள் நம்மை அணுகமுடியாது..

நம்மைக் காப்பவை சமயச் சின்னங்கள் என்றாகின்றன..

அந்த சிறப்பினைப் பேணுவதற்காகவே - குங்குமம் இட்டுக் கொள்வது..

அனைவருடைய உடலிலிருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன..

எனினும் - மின் காந்த அலைகள் புருவ மத்தியில் இருந்து தான் அதிகமாக வெளிப்படுகின்றன..

அவற்றைக் கட்டுப்படுத்தவே - நெற்றியில் குங்குமம் சந்தனம் தரிப்பது..


புருவ மத்தியில் குங்குமம் சந்தனம் தரிப்பதால் - மனதின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.

முகத்திற்குத் தனியாக அழகு கிடைக்கின்றது. இதுதான் தேஜஸ் எனப்படுவது.

நெற்றியில் திலகம் வைப்பது அழகு அலங்காரம் - என்றாலும்,
ஆரோக்கியத்திற்காகவும் என்பர் பெரியோர்..

ஆண்களும் பெண்களும் குங்குமம் தரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

என்றாலும் - தற்காலத்துப் பெண்கள் ஒட்டும் பொட்டிலேயே அதிக நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

உடலின் சக்தி நிலைகளாகக் கருதப்படும் ஏழு சக்கரங்களுள் ஆறாவதாக விளங்குவது ஆக்ஞா சக்கரம்..

நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரம் தான் - மூளை, நரம்பு மண்டலம், நாசி , காதுகள் மற்றும் கண்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுவர்.

மனம் இங்கே நிலைப்பட்டால் - புத்தி கூர்மையும் ஆன்ம சக்தியும் விளையும் என்பது குறிப்பு..

எனவே நலம் பல நிகழ்த்தும் நெற்றியின் மத்தியில் குங்குமம் வைத்து சிறப்பு சேர்க்கின்றோம்..


குங்குமம் என்றாலே மங்கலம்..

ஆனால் -
இன்றைக்கு களங்கமில்லாத குங்குமம் கிடைக்கின்றதா எனில் - இல்லை!..

பெரும்பாலான கடைகளில் குங்குமம் என்ற பெயரில் கிடைப்பவை - சாயப் பொடிகளே!..

அவைகளில் இரசாயனக் கலப்பு உள்ளதால் - நெற்றியில் அரிப்பும் புண்களும் உண்டாகின்றன..

இது இப்படி என்றால் - நாகரிகமாக ஒட்டிக் கொள்ளும் பொட்டில் கூட விஷத் தன்மை இருப்பதால் அவைகளும் பாதுகாப்பு அற்றவைகளாகின்றன..

அப்படியானால் நல்ல குங்குமம் கிடைப்பதேயில்லையா?..

கிடைக்கின்றது..

ஸ்ரீ காஞ்சி காமாட்சி - உற்சவ திருமேனி

மதுரை மீனாட்சி அம்மனின் சந்நிதியில் தரமான குங்குமம் கிடைக்கின்றது..

காஞ்சி காமாட்சி அம்மனின் சந்நிதியிலும் உயர் ரக குங்குமமே!..

காஞ்சியில் உயர்தரமான குங்குமம் தயாரிக்கப்படுகின்றது..

சற்றே விழிப்புணர்வு கொண்ட பக்தர்கள் - உயர் தரமான குங்குமத்தை விலை கொடுத்து வாங்கி - உபயமாக வழங்குகின்றனர்...

குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன்படுத்தக் கூடாது. 

குங்குமத்தை இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. 

ஆலயங்களில் வலது கையில் பெறும் குங்குமத்தை, வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும் என்பது மரபு.

இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆனால் - இளம் பெண்கள் மட்டும் நாகரிகம் என்ற பெயரில் தவிர்க்கின்றனர்.

மஞ்சள் பூசிக் கொள்வதிலும் மலர் சூடிக் கொள்வதிலும் கூட விருப்பம் கொள்வதில்லை..

ஆனாலும் - மங்கலம் மட்டும் வேண்டும் என்கின்றார்கள்..  


குங்குமம் - அழகு.. மங்கலம்.. தெய்வீகம்!..

குங்குமத்தை எளிய முறையில் நாமே தயாரிக்கலாம்..

தேவையான பொருள்கள் :-

கிழங்கு மஞ்சள் - 100 கிராம்
வெண்காரம் - 10 கிராம்
படிகாரம் - 10 கிராம்
எலுமிச்சம் பழங்கள் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - சிறிதளவு

வெண்காரம் படிகாரம் நறுமணத் திரவியங்கள் - ஆகியன நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.


எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்..  

கிழங்கு மஞ்சளை ஒன்றிரண்டாக உடைத்து - அவை எலுமிச்சம் பழச்சாற்றில் மூழ்கும்படியாகக் கலந்து கொள்ளவும்..


இதனுடன் - வெண்காரம் படிகாரம் இரண்டையும் மிருதுவாக பொடி செய்து கலந்து கொள்ளவும்..


இந்தக் கலவையை அப்படியே - சில தினங்களுக்கு ஊறவிடவும்.


அவ்வப்போது இந்தக் கலவையை மரக்கரண்டியால் கலக்கி விடவும். 

மஞ்சளில் - எலுமிச்சம் பழச்சாறு முழுமையாக சேர்வதற்குச் சில நாட்கள் ஆகும். 

மஞ்சள் துண்டுகள் குங்கும நிறத்துக்கு மாறியதும் - பெரிய தாம்பாளத்தில் இந்தக் கலவையைக் கொட்டி நிழலில் உலர வைத்து கல்லுரலில் இட்டு மெதுவாக இடித்து - சலித்துக் கொள்ளவும்..

இதனுடன் - சில துளிகள் நல்லெண்ணெய்யை நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்போது - குங்குமம் அரக்கு நிறமாக இயற்கையான மஞ்சள் வாசத்துடன் இருக்கும்.

மிகுந்த வாசம் வேண்டுமெனில் - தாழம்பூ மல்லிகை ரோஜா - இவற்றில் ஏதாவதொரு வாசனைத் திரவியத்தின் சில துளிகளைக் கலந்து கொண்டால் போதும்..

நறுமணம் இல்லமெங்கும் கமழும்.. 

காற்று புகாத பாட்டில்களில் இறுக அடைத்துக் கொண்டால் நல்லது.. 

நாமும் பயன்படுத்திக் கொண்டு - கோயில்களுக்கும் வழங்கலாம்..

மதுரை மீனாட்சியின் குங்குமம் தாழம்பூ வாசத்துடன் திகழும்.

பக்குவத்தை மீறி வெண்காரம் படிகாரம் அதிகமாகி விட்டால் - நெற்றியில் அரிப்பு ஏற்படும்.. கவனமும் பொறுமையும் மிக அவசியம்..


குங்குமம் தரிப்பதால் சகல நன்மைகளும் விளையும் என்பர் பெரியோர்.

எங்கள் வீரமாகாளியம்மனுக்கு - உபயமாக காஞ்சியிலிருந்து குங்குமம் வருகின்றது.. தேவை அதிகம் எனில் தஞ்சாவூர் கும்பகோணத்திலுள்ள நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்கின்றோம்..

அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு..

நாமே வீட்டில் - குங்குமத்தால் - அம்பிகைக்கு நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்து - அந்தக் குங்குமத்தைப் பயன்படுத்தலாம்..

நம் கையால் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் மிகுந்த வீர்யமுள்ளது..

இந்த ஆடி மாதத்தின் ஏதாவதொரு நல்ல நாளில் செய்து பாருங்கள்.. உண்மையை உணர்வீர்கள்..


சியாமளா தண்டகம்..

ஸ்ரீ பத்ரகாளியின் அருள் பெற்ற மகாகவி காளிதாசன் பாடிய பனுவல்..

எடுத்த எடுப்பிலேயே -  அம்பிகையின் அலங்காரங்களைக் கூறும்போது குங்குமக் கோலத்தினைக் குறிப்பிடுகின்றார்.


மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

சதுர்புஜே சந்த்ரகலா வதம்ஸே குசோன்னதே 
குங்கும ராகசோனே புண்ட்ரேஷூ 
பாஸாங்குச புஷ்பபாண ஹஸ்தே
நமஸ்தே ஜகத் ஏக மாதா:

ஸ்ரீ குங்குமவல்லி - என, அம்பிகை திருப்பெயர் கொண்டு -
ஸ்ரீ தான்தோன்றீஸ்வரருடன் உறைவது உறையூரில்!..

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!..

அபிராமவல்லியின் நெற்றித் திலகம் உதிக்கின்ற செங்கதிர்!.. -  என, முதற் பாட்டிலேயே சிறப்பிக்கின்றார் அபிராமிபட்டர்.. 

மாணிக்கம், மாதுளம் பூ எனக் குறிப்பிட்டு செந்தாமரையில் விளங்கும் சிவந்த நிறமுடைய மஹாலக்ஷ்மி துதிக்கும் - அபிராமவல்லி குங்குமக் குழம்புடன் திகழ்கின்றாள்!.. -  என உருகிப் பாடுகின்றார்...



குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மணநீர்
அங்கவனோடும் உடன்சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..
என, தான் கண்ட நலம் உரைப்பவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம்!..
என்றுரைப்பார் கவியரசர் கண்ணதாசன்.

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி..
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி!..
என்றுரைத்தார் கவிஞர் வாலி..

நீராரும் கடலுடுத்த நிலமகளின் - திருமுகத்தில் 
திலகமாகத் திகழ்வது தமிழ்!..

தமிழே அன்னை மொழி.. அன்னையின் மொழி..
எனவே - செந்தமிழும் செழுந்தமிழானது..

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்..
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்!..
* * *

24 கருத்துகள்:

  1. குங்குமத்தின் பெருமையையும் அதை இட்டுக்கொள்ளுவதால்
    வரும் சிறப்பையும் மிக அருமையான பதிவினாற் கூறினீர்கள்.

    நல்ல விஞ்ஞான விளக்கமுடன் நம் இளையோர்களுக்குக்
    குறிப்பாக இளம் பெண்களுக்குப் புரியும்படி கூறியது சிறப்பு!
    மங்கல குங்குமம் தரிப்பதே வாழ்வில் ஒரு கொடுப்பனவு ஐயா.

    சென்ற வருடம் என் தாயார் அதிகாலை நேரம் 4.00 மணியிருக்கும்
    தூக்கத்திலேயே நிறைந்த சுமங்கலியாக இட்ட நெற்றிப் பொட்டுடனே
    மண்ணுலக வாழ்வை நீத்தார். ஒரு போதும் நெற்றித் திலகம்
    இல்லாது இருந்ததில்லை. இவ்வுலக வாழ்வை நீங்கும் போதும்
    மங்கல குங்குமத்துடனே வாழ்ந்திருந்தார்.
    பெண்ணானவள் மனைவியாகி குங்கும திலகத்தைத் தன் ஆயுள் முடியும் வரை
    தரிக்கும் பாக்கியம் பெற்றால் அதைவிட வேறுவரம் இல்லை.

    நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய கருத்துரை மிகவும் சிந்திக்க வைத்தது.. தங்கள் தாயாரைப் பற்றிக் கூறியிருக்கின்றீர்கள்.. சில விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.. இப்படியும் கூடுமோ என்று அதிர்ச்சியைக் கொடுக்கும்..

      மேலதிகமாக என்ன கூறுவது என்று தெரியவில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. குங்குமத்தின் சிறப்புகளை அழகாய்ச் சொன்னீர்கள்......

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கட்டுரையைப் படித்ததும் குங்கும அர்ச்சனை செய்ததுபோன்ற மன நிறைவு. அறிவியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக ஆழமாக குங்குமம் வைப்பதின் பயனை விவாதித்துளள விதம் அருமை. வீட்டை விட்டுக்கிளம்பும் முன்பாகவும், வீட்டிற்கு வந்தபின்னரும், ஏதாவது பணியாக வெளியாக வெளியே செல்லும்போதும் திருநீறு அணிந்தே செல்கிறேன். நீங்கள் சொல்லும் பல விஷயங்களை என்னால் உணரமுடிகிறது. தற்போது குங்குமம் வைப்பதைவிடுத்து பிளாஸ்டிக் பொட்டு என்று (அதுவும் புள்ளி போல, வைத்திருப்பதே தெரியாது) வைத்துக்கொள்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் நல்குணத்தைவிடுத்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள். சற்றே வேதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது உண்மையே.. சில நியதிகளை நமக்கென்று வகுத்தளித்தார்கள் - முன்னோர்கள்.. ஒத்துக் கொள்வதும் ஒதுக்கி வைப்பதும் அவரவர் விருப்பம்.. ஆனால் -- ஏளனம்!.. அதுதான் இன்றைய நடப்பு.. பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது என்றார்கள்.. ஆனால் - இன்றைக்கு பாருங்கள் -- நம்முடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் பயனளிக்க வல்லவை.. கோகோ கோலா குடித்து உயிர் வளர்க்க முடியுமா!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. குங்குமத்தின் மகத்துவத்தை உணர வைக்கும் பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. மங்கல குங்குமத்தின் செய்முறை, அதை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள், நல்ல குங்குமம் கிடைக்கும் இடங்கள் என்று பதிவு மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்,
    அருமையான பதிவு, குங்குமம் மங்கலத்தின் அடையாளம், அதன் விஞ்ஞானம் என்ன என்று தெரிந்துக்கொண்டேன், ஆனால் அரிப்பு வரும் என்று சொன்னீர்கள் பாருங்கள் அது உண்மை தான், நிறைய பேர் சொல்லியுள்ளார்கள், பார்த்திருக்கிறேன், அந்த இடமே கருத்து,,,,,,,,,,,,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      குங்குமத்தில் கலப்படத்தை நம்மவர்களே செய்தார்கள்.. ஒட்டும் பொட்டுகள் பெருகியதற்கும் நாமே முதற்காரணம்..

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. என்னதான் விளக்கங்கள் கூறினாலும் அது இக்காலத்தில் எடுபடுவதில்லை. ஒன்று காலத்தின் கோலம் அல்லது இத்தகைய வாதங்கள் எடுபடுவதில்லை. உலக மக்கட் தொகையில்குங்குமம் இடுவோரின் பங்கு எண்ணிக்கை எத்தனை சதவீதம் இருக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      உலக மக்கள் தொகையில் குங்குமம் இடுவோர் ஒரு சதவீதம் இருந்தாலும் சரி..

      ஓராயிரம் விளக்குகளையும் ஒரு விளக்கினால் தான் ஏற்றுகின்றோம்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் இனியவை.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. குங்குமத்தைப்பற்றி இவ்வளவு விடயங்களா அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இன்னும் கூட சொல்லலாம்.. பதிவின் நீளம்!?..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  9. குங்குமத்தின் செய்முறை விளக்கம், குங்குமம் வைப்பதால் ஏற்படும் பயன்கள் எல்லாம் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. நல்ல குங்குமம் கிடைக்கும் இடங்கள், அணிவதால் உண்டாகும் பலன்கள், செய்முறை விளக்கம் எனக் குங்குமம் பற்றித் தெரியாத செய்திகள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. குங்குமத்திற்குப் பின் இத்தனை அறிவியல் விளக்கங்களா..அருமை! அழகிய கட்டுரைப் பகிர்வு....வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஐயா, வணக்கம். பட்டீஸ்வரத்தில் குங்குமம் தயாரிப்பதை பார்த்துள்ளேன். திருமணம் ஆன முதல் நான் குங்குமப் பொட்டு வைத்து வருகிறேன். ஒரே நிறுவனத்தின் குங்குமத்தை பயன்படுத்தும்போது நெற்றியில் அரிப்போ, தழும்போ வருவதில்லை. வீட்டிற்கு வரும் பெண்களுக்கு குங்குமம் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த பழக்கத்தை நான் கும்பகோணத்தில் எனது மாமியார் வீட்டின் மூலமாக அறிந்தேன். தற்போது தொடர்ந்து செய்துவருகிறேன். நன்றி. பாக்கியவதி. (க/பெ முனைவர் பா.ஜம்புலிங்கம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வணக்கம்.. தங்களை அறிவேன்..

      ஐயாவின் பதிவுகளில் - தங்களது பதிவுகள் தினமணி நாளிதழில் வெளியானதை படித்தும் இருக்கின்றேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..