நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

தானமும் தவமும்

இன்று அக்ஷய திரிதியை..


வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரிய வேண்டாம் - என்றொரு சொல் வழக்கு உண்டு..

மழையினைப் பற்றிக் கூறும் போது -

தானமும் தவமும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.. (019)

- என்று சிறப்பித்தருள்கின்றார் - வள்ளுவப்பெருமான்.

வானம் பொழியாவிட்டால் தொலைந்து போகக்கூடிய - பெருஞ்சிறப்பினை உடையவை - தானமும் தவமும்!..

அதனால் தான் -

தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!..

- என்றார் ஔவையார்..

தானம் என்பது பிறர் பொருட்டு. தவம் என்பது தம் பொருட்டு. வானவர் நாட்டின் வழிக் கதவுகள் இரண்டு. தானத்தினால் ஒரு கதவும் தவத்தினால் மற்றொரு கதவும் திறக்கும்!..

- என்று விரிவுரை வழங்குவார் - அருள் மொழியரசு வாரியார் ஸ்வாமிகள்!..

அத்தகைய பெருஞ்சிறப்பினை உடைய தானத்தையும் தவத்தையும் இயற்றுவதற்கு உரிய நன்னாள் -

அக்ஷய திரிதியை!..

க்ஷய என்றால் - தேய்வது.

அக்ஷய என்றால் - வளர்வது.

சித்திரை மாதத்தின் வளர்பிறை மூன்றாம் நாளுக்கே இத்தனை பெருமை.

இந்த நன்னாளில் பலப்பல அற்புதங்கள் நிகழ்ந்திருப்பதாக அறிய முடிகின்றது.

அவற்றுள் சில..


தட்சனின் சாபத்திலிருந்து சந்திரன் மீண்ட நாள்..

பிரம்ம கபாலம் - சிவபெருமானின் திருக்கரத்திலிருந்து நழுவி விழுந்த நாள்..

வஞ்சத்தால் நாடிழந்த பஞ்ச பாண்டவர்க்காக - திரௌபதியின் கையில் - அக்ஷய பாத்திரத்தை - சூரியன் வழங்கிய நாள்.

ஸ்ரீகிருஷ்ணன் - தான் உண்ட அவலுக்காக குசேலனை குபேரனாக்கிய நாள்..

தானும் நல்லவை செய்து - பிறரையும் நல்லவை செய்யத் தூண்டும் நாளே -

அக்ஷய திரிதியை!..

ஆனால் - பொய்யும் புரட்டுமாகிப் போனது - இன்றைய தினத்தில்!..

எங்களிடம் நகை வாங்கினால் தான் சுபிட்சம்!..
- என்றெல்லாம் கொடூரமான விளம்பரங்கள்..

குண்டுமணி அளவாவது தங்கம் வாங்குங்கள்!.. - என கதறுகின்றார்கள்.

அந்த நகைக் கடைக்காரர்கள் - அக்ஷய திரிதியை நாளில் - 
அவர்கள் விற்கும் விலைக்கு - அதே குண்டுமணி அளவு தங்கத்தை - 
நம்மிடம் இருந்து வாங்கிக் கொள்வார்களா?..

ஏன் அவர்களுக்கு சுபிட்சமும் சுபயோகமும் வேண்டாமா?..

எப்படியிருக்கின்றது - இந்த தக்காளிச் சட்னி?..

நல்ல மனங்கள் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அக்ஷய திரிதியை அன்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கினால் இல்லத்தில் வளமும் நலமும் குறையாது இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை..

எத்தகைய உயர்ந்த பிறப்பாக இருந்தாலும் - சஞ்சிதம், பிராரப்தம் வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.

அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்குவதனால் -  அவற்றிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.


அக்ஷய திரிதியை அன்று வாங்கிய தங்கம் அப்படியே பெட்டிக்குள் பத்திரமாக - இருப்பதாக யாரும் கூற முடியுமா!..

அப்படியே இருப்பதாயின் - அடகுக் கடைகள் பெருத்து விட்டனவே!..

அது ஏன்?..

மாய விளம்பரங்களைச் செய்யும் வியாபாரிகளுக்கும் - இன்றைய தினம் நகை வாங்கியே தீர்வது என்ற கங்கணதாரிகளுக்கும் அப்பாற்பட்டது -

அக்ஷய திரிதியையின் மகத்துவம்!..

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வண்கணவர்.. (228)

- என்பது வள்ளுவப் பெருந்தகையின் திருவாக்கு!..

ஈதலினால் உண்டாகும் இன்பத்தினை - தமக்கென பொருளைச் சேர்த்து வைப்பவர்கள் அறியமாட்டார்கள்..

நமக்கு என்று சேர்த்து வைக்குமிடம் வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட தங்க நகைக் குவியல்களால் நிறைந்த பெட்டகம் அல்ல!..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.. (226)

அற்றார்க்கும் அலந்தாருக்கும் நலம் புரிவதனால் உண்டாகும் புண்ணியமே - நம்முடைய பொக்கிஷம்..

தர்மம் எனும் வார்த்தை - வழி எனவும் பொருள் தரும் என்பார் ஆன்றோர்.

நல்லறம் நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வழி.

மனிதருக்குத் தான் உபகாரங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை.

சிற்றுயிர்களின் மீது இரக்கம் கொள்வதும் நல்லறம் தான்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி - என்பது திருமந்திரம்.

ஒரு கைப்பிடி சோறு.

பறவையோ விலங்கோ - தின்று விட்டுப் போகட்டுமே!..

ஒரு சொம்பு நீரை ஏதாவதொரு மரத்தின் வேரில் ஊற்றித்தான் பாருங்களேன்..

நாம் போகும் வழிக்கு இல்லாவிட்டாலும் -
நம்முடைய சந்ததியினருக்கு குளிர் நிழல் கண்டிப்பாகக் கிடைக்கும்.

இதனை - அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான்!..


பசித் துயர் உற்றவர்களுக்கு அன்னம் வழங்க இயலவில்லையே - என வருந்திய மெய்யடியார்களின் வரலாறுகள் சைவத்திலும் வைணவத்திலும் காணக் கிடைக்கின்றன. 

அவ்வாறு - மதுரையம்பதியில் வருந்திய அடியார் ஒருவருக்கு - சொக்கநாதப் பெருமான் உலவாக்கோட்டை அருளியதாக (38) திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.

ஆவணி மூலத் திருநாளில் - இந்த வைபவம் கொண்டாடப்படுகின்றது.

உலவாக்கோட்டை அருளியது மாமதுரையில் என்றால் - 

அட்சய பாத்திரம் வழங்கி அருள் புரிந்தது - திருச்சோற்றுத்துறையில்!..

தஞ்சையிலிருந்து 15 கி.மீ தொலைவில் திருஐயாற்றுக்கு அருகில் உள்ள திருத்தலம் - திருச்சோற்றுத்துறை.

மக்கள் பசி தீர்க்க இயலவில்லையே - என வருந்திய அடியவர் தம் மனம் மகிழுமாறு - அட்சயபாத்திரம் வழங்கி அருள் புரிந்ததாக தலவரலாறு.


இறைவன் - தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்
அம்பிகை - அன்னபூரணி, ஒப்பிலா அம்பிகை
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - பன்னீர் மரம்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் , சுந்தரர் - என மூவரும் திருப்பதிகம் பாடி வழிபட்ட திருத்தலம்.

திருஐயாற்றில் நிகழும் சப்த ஸ்தானத்தின் போது திருப்பழனத்தை அடுத்து ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் - மணமக்களாகிய நந்திகேசன் சுயசாம்பிகையுடன் எழுந்தருளும் திருத்தலம்.


அன்றைய மதியப் பொழுதில் - ஐயாறப்பர் எழுந்தருளும் வேளையில் - 
சப்த ஸ்தான ஊர்வலத்தில் உடன் வரும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு வீட்டுக்கு வீடு திருமண விருந்தளித்து மகிழ்வர்.

காலகாலமாக திருச்சோற்றுத்துறையில் சப்த ஸ்தானத்தின் போது நிகழும் மகத்தான விருந்து உபசரிப்பு இது!..

திருச்சோற்றுத்துறையில் வாழும் பெருமக்கள் - இவ்வாறு விருந்து உபசரிப்பு செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

திருவீழிமிழலை

பஞ்சம் வந்துற்ற காலத்தில் பிற உயிர்களின் துயரத்தை கண்டு மனம் பொறுக்காமல் - திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று -

திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் பஞ்சம் தீர்த்ததாக வரலாறு.

தான் உண்ணா விட்டாலும் தாழ்வில்லை. பசி என்று வந்திருப்பவன் உண்டு மகிழட்டும் !.. 

- என்ற எண்ணத்துடன் கொடுத்த கொடையின் போது உதிர்ந்த உணவுத் துணுக்குகள் - தன் மேல் பட்டதால் தன் மேனியின் பாதி முடிகள்- பொன் மயமானதாக - 


துரியோதனாதிகளை வீழ்த்திய பின் - தர்மபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தின் போது ஒரு கீரி சொல்லும்.


மேலும் -

கொடுத்துச் சிவந்த கர்ணனின் கரங்களுக்குக் கீழாக - 
ஸ்ரீகிருஷ்ணனின் திருக்கரங்கள் விளங்கியதாக - 
மகாபாரதம் கூறுகின்றது.

தங்கத்தின் மீதான மோகத்தினைக் குறைத்துக் கொள்வோம்!..
தான தர்மங்களை இயன்றவரைக்கும் செய்வோம்!..

புண்ணிய பலன்கள் பெருகிட வையகத்தில்
நல்ல எண்ணங்களை விதைப்போம்!..

அக்ஷய திரிதியை நாளில்
அன்பும் அருளும் பொங்கிப் பெருகுவதாக!..

திருச்சிற்றம்பலம் 
* * * 

22 கருத்துகள்:

  1. அக்ஷய திரிதியை முன்னிட்ட தங்களின் பதிவு நல்ல சரித்திர நிகழ்வுகளையும், நிகழ்கால பொய், பிராடு நிறைந்த சமூகத்தையும் தோலுரித்துக்காட்டியது.

    அருமை நண்பரே தக்காளி சட்னி சரியான சவுக்கடி.
    தான தர்மங்களை முடிந்த அளவு செய்வோம் அருமையான சிந்தனை
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    அட்சய திரிதியை பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அறியாத தகவல் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  3. திருச்சோற்றுத்துறை, திருவீழிமிழலை உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றுள்ளேன். தங்கள் பதிவால்இன்று மறுபடியும் சென்றேன்.அட்சய திரிதியைப் பற்றிய விளக்கம் அருமை. தற்போது இறை நிலையில் இதை யார் புரிந்துகொண்டுள்ளார்கள். அட்சய திரிதியை என்றால் நகைக்கடை என்றாகிவிட்டது நாடு. வியாபாரிகள் பணம் பண்ணுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நல்ல நாள் ஒன்றின் அர்த்தம் நகை வியாபாரிகளால் மாறிவிட்டது.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. சிறப்பான விளக்கம்...

    நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தது எங்களுக்கு பாடம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. இந்த பதிவினை நேற்று காலையில் நான் படித்து இருக்கனும். என்ன செய்ய, முடியல,
    அதனால் மாலை சுமார் ஒரு நான்கு மணிநேரம் வரிசையில் நின்று(கூட்டம்) ஒரு கிராம் நகையாவது வாங்கனும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கினேன்.
    ஆசை யாரைவிட்டது,
    எமக்கு அட்சயதிரிதி ஒரு சாக்கு நகை வாங்க அவ்வளவே,
    பெண்ணாயிற்றே, பொன்னை விரும்பாமல்,
    திருச்சோற்றுத்துறை, திருவீழிமிழலை உள்ளிட்ட கோயில்களின் சிறப்புகள் அறிந்தேன்.
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நம்பிக்கை தான் வாழ்க்கை.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  6. கொடுத்து சிவந்த கரங்கள் கர்ணனுக்கு,
    அதன் கீழ் கண்னன்,
    அருமை, ஏனோ எனக்கு மகிவும் பிடித்த ஒருவர் கர்ணன்,
    எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட ஓர் ஆத்மா,,,,,,,,,,,,
    ஆனால் பிறரை வஞ்சிக்காத ஆத்மா,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ணன் வஞ்சிக்கப்பட்ட ஆத்மா!..
      சரியாகச் சொன்னீர்கள்..
      எனக்கும் கர்ணனை மிகவும் பிடிக்கும்..
      தங்கள் மீள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. கரடியாய்க் கத்தி என்ன விளக்கம்சொன்னாலும் அக்ஷயதிருதியை நாளில் பொன் வாங்குவதே சிறந்தது என்னும் எண்ணம் நமக்குக் குறையப்போவதில்லை த்னம் தானத்தைவிட பொன் வாங்குவதை ஒரு சேமிப்பாக நல்ல துவக்கமாகக் கருதும் எண்ணம் மாறுமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      காலப்போக்கில் எல்லாமும் மாறும் என்றே நம்புவோம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. தவம் தானத்தைவிட என்றிருந்திருக்க வேண்டும் தவறு நேரும்போது கூட தவத்துக்குப் பதில் தனமே முன் நிற்கிறது

    பதிலளிநீக்கு
  9. அட்சய திருதியைப்பற்றி பல விபரங்கள் தெரிந்து கொள்ள‌ முடிந்ததற்கு தங்களுக்கு என் நன்றி! அட்சய திரிதியைக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  10. வித்தியாசமான விளக்கம் அஷயதிரிதியை பற்றி. பல தகவல்கள் அறிந்து கொண்டோம். தங்கள் அனுபவம் உட்பட....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  11. சிறப்பான விளக்கங்கள்....

    நம் மக்கள் என்று திருந்தப் போகிறார்கள்... விளம்பரங்கள் கண்டு தங்க மோகம் கொண்டு அலையும் இவர்கள் திருந்துவது கடினம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      உண்மைதான்.. மக்கள் திருந்துவது கடினம் தான்!..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..