நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 14, 2014

அறுபத்து மூவர் திருவிழா

மயிலையே கயிலை!.. கயிலையே மயிலை!..

கபாலி!..
எனும்போது - கம்பீரம், கண்டிப்பு. பொறுப்பு மிக்க தந்தையின் முழுவடிவம். தன் பிள்ளை உருப்பட்டு முன்னுக்கு வரவேண்டுமே - என்று எண்ணும் தந்தையின் நேர் வடிவம் - விளங்குவதை உணரலாம்.. 

இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகன் ஐந்து தலைகளுடன் செருக்குற்று நின்ற போது -  ஆணவம் அடங்கட்டும் என்று ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்த பின்னரே - கபாலி எனும் திருப்பெயர் விளங்கிற்று.


கற்பகாம்பாள்!..
அப்படியே - திருவாளர் கபாலி அவர்களுக்கு இணையான கம்பீரம். கண்டிப்பு. இவனுங்களை எப்படி ஈடேற்றுவது!.. என்று இருவித இயல்பினில் இருக்கும் மாணவர்களை - - ஊடுருவிப் பார்க்கும் பார்வையை உடைய - உயர் நிலைக் கல்வியாளர் எனும் பாவனை!..

இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகனின் ஐந்தாவது தலையை ஐயன் கிள்ளி எடுத்தபோது , கலைச்செல்வி அருகிருந்தும் கலங்கி நின்ற நான் முகன் இப்படியாவது ஈடேறட்டும் என்று எண்ணியவாறு, திருமதி கபாலி அருகிருந்ததாக ஐதீகம்.

கற்பகாம்பிகை!..
''..ஏண்டா.. இப்படிப் பண்றே!..'' - என்று கேட்டுக் கொண்டே, ஏதாவது ஒரு வழியில் , எப்படியும் உதவுபவள்!.. புரிந்திருக்குமே! - அன்பான அன்னை!..

கற்பகம்!.. 
எங்கெங்கிருந்தெல்லாமோ பாசப்பிணைப்புகளுடன் வந்து அமையும் அரிய உறவுகள் -  பெரியம்மா, அத்தை, அண்ணி - எனும் பாவனை!..

கற்பகா!..
''..எனக்காக செய்யமாட்டாயா!..'' - என்று கேட்டால், அப்படியே இளகும் மனம் உடைய இனிய தங்கை எனும் பாவனை!..


கற்பகவல்லி!..
''..இந்த நேரத்தில் எங்கேடா ஊர் சுற்றி  விட்டு வருகிறாய்!..'' - என்று கேட்டபடி தலையில் குட்டுவதற்கு என கை வரும் . ஆனால் மனம் வராது. 

ஆதுரத்துடன் தலையைக் கோதி விடும். 
துயரங்களைத் தூசாக ஊதி விடும். 
சோகங்களைக் கெடுக்க தோள் கொடுக்கும். 
அல்லல்களை அழிக்க வாள் கொடுக்கும்!..

கற்பகவல்லி எனும்போது - ஆதரவில் அரவணைப்பில் இன்னொரு தாய் என  அன்பு நிறைந்த அக்கா - அவள் அருகில் இருப்பதைப் போன்றதோர் உணர்வு!..

அதனால் தானே  -
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!.. - என்றொரு பாடல் பிறந்தது.

வல்லி என்ற பதம் -  வாத்ஸல்யம், வாஞ்சை மிக்கது!..

தஞ்சையில் - ஆனந்தவல்லி!..
திருவாடானையில் - சிநேகவல்லி!..
திருக்கடவூரில் - அபிராமவல்லி!..
மதுரையில் - மரகதவல்லி!..
மயிலையில் - கற்பகவல்லி!..

இத்தகைய வாஞ்சைமிக்க கற்பகவல்லி - கபாலீச்சரத்தானுடன் கூடிக் குளிர்ந்து -  அடியவர்க்கு அருள் பொழிவதைக் கேட்கவா வேண்டும்!..

நேற்று நடந்த தேரோட்டம்
 
இன்று வெள்ளிக்கிழமை. காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள்கின்றார்.

பூம்பாவையின் அஸ்தி கலசத்துடன் சிவநேசர் செட்டியார் எழுந்தருள ஓதுவாமூர்த்திகள் - மட்டிட்ட புன்னையங் கானல் - திருப்பதிகத்தினை மனமுருகப் பாடுகின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் தீபாராதனை நிகழும்.

பத்தாம் திருப்பாடலின் போது அஸ்தி கலசமாகப் பாவிக்கப்பட்ட மலர் குவியலில் இருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுகின்றாள்.  எங்கும் ஆனந்த கோஷம்.

மாலையில் அறுபத்து மூவர்க்கு தரிசனம் தரும் ஆனந்தப் பெருவிழா.

விநாயகர் முன் செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்கள்.

அருள்மிகு கபாலீஸ்வரனும் கற்பகவல்லியும். அடுத்து ஷண்முகர், சண்டிகேசர் - மாடவீதிகளில் வலம் வருகின்றனர்.

அவர்களுடன் - திருவள்ளுவர் வாசுகி, முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் - என இணைந்து வர -

ஆனந்த கோலாகலமாக திருவிழா நிகழ இருக்கின்றது.

எது எப்படி இருந்தாலும் வள்ளுவப் பெருந்தகை வாசுகி அம்மையாருடன் - தாமும் மக்களுக்காக வலம் வருகின்றார்.

அவரும் மக்களுக்கு நல்லனவற்றை அறிவுறுத்திய திருத்தொண்டர் தானே!..

சைவம் எனினும் வைணவம் எனினும் - ஒரு முக்கிய விஷயம்!..

எம்பெருமான் எப்போதும் அடியார் மத்தியில் திகழ்கின்றான் என்பதே!..



தன்னைக் காணவில்லை என - பரிதவித்து அங்கும் இங்கும் அலைந்த கோபிகைகளின் மத்தியில் அல்லவா கோகுலக் கிருஷ்ணன்  குதுகலத்துடன் இருந்தான்!..

நன்னெறியில் நிற்பவர்களை, தானிருக்கும் அடியார் குழாத்தோடு இணைத்துக் கொள்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லி என விளங்குவது!..

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி -  என்பது விநாயகர் அகவலில் ஔவையார் குறிப்பது.

தொங்கலும் கமழ்சாந்து அகிற்புகையுந் தொண்டர் கொண்டு
அங்கையால் தொழுதேத்த
அருச்சனைக்கு அன்றருள் செய்தான் (1/61)
- என்பது ஞான சம்பந்தர்  அருள்வாக்கு.

தொண்டர்கள் தம் தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் - (6/89) என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு.

சேரும் புகழ்த் தொண்டர் செய்கை யறாத் திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதியாய் இருந்தானை - (7/19) என்பது சுந்தரர் தம் திருக்குறிப்பு.

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!..

- அடியவர் இல்லங்களில் பரமன் பராபரையுடன் எழுந்தருள்கின்றான் என்பது மாணிக்க வாசகர் திருவாசகம். 

அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவர் (33)

ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனின் உருவங்கண்டு (பந்த பாசத்தில் சிக்கி ) தூங்கார். பிறர்க்குத் தீங்கு செய்யார் (55)

- என்று கந்தர் அலங்காரத்தில் - கந்தனின் அடியார்களை அடையாளங்காட்டி, வாழ்க சீர் அடியார் எல்லாம்!.. - என்று வாழ்த்துகின்றார் அருணகிரி நாதர். 

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் -

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்: பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து: நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. (12)


என்று வியப்பதும்,

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.(41)


- என்று பூரிப்பதும், அடியார் திருக்கூட்டத்தைக் குறித்தே!..


ஔவையார் - அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கரத்தில் நிலையறிவிக்கும் எம்பெருமானின் பெருமையைக் கூறும் போது,

உமையோ இறைவர் தம் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் 
தொண்டர் தம் பெருமையைச் 
சொல்லவும் பெரிதே!.. 

- என்று கூறி நமக்கெல்லாம் விளங்க வைக்கின்றார். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமக்கு முன்னேயும்  தம்காலத்திலும் செயற்கரிய செய்த சிறந்த அடியார்களின்  திருப்பெயர்களைக் கூறி,  

''..இவர்களுக்கு, நான் அடியனாக மாட்டேனா!..'' - என்று ஏங்குகின்றார். 

திரு ஆரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில்  இத் திருப்பதிகத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளினார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமது திருப்பதிகத்தில் அறுபது அடியார்களை நேரடியாகப் பெயர் குறித்துப் பாடுகின்றார். அத்துடன் -

எட்டு வகையான சீரிய  குணங்களைக் கொண்டு இலங்கும் அன்பர்களையும், திருஆரூரில் பிறந்தார்களையும் - பொதுவாகக் குறிக்கின்றார். 

பின்னாளில் மூவர் தேவாரம்  -  மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையிலிருந்து மீட்கப்பட்டது.  ,

அதனைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பி -  சுந்தர மூர்த்தி சுவாமிகளையும் அவருடைய தாய் தந்தையரான சடையனார், இசைஞானியார் ஆகியோரையும் அடியார் வரிசையில் இருத்தினார்.

மயிலை பங்குனிப் பெருவிழா - சிறப்பு மிக்க அடியார்களைச் சிறப்பிக்கும் அறுபத்து மூவர்  திருவிழா - எனப் போற்றி மகிழும் பெருமையுடையது. 

இன்று (14/3) மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா!..

இந்த மகத்தான நாளில்    
சுந்தரமூர்த்தி சுவாமிகள்  அருளிய திருப்பதிகம்.
ஏழாம் திருமுறை . திருப்பதிக எண்  - 39. 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்ப
ர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாய
ர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 3


திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்க
ர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 4


வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 5


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்ட
ர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவா
ர்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6


பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழ
ர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரைய
ர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்த
ர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7


கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவா
ர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணா
ர்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 11


 
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. பரவசமூட்டும் அழகான அருமையான படைப்பு ஐயா...

    சிறப்பான திருப்பதிகம் + விளக்கங்கள்...

    நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. சிறப்பான பதிவு.....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அழகுத்தமிழில் அருமையான விளக்கங்கள்...!
    கற்பகமாய் மனம் நிறைந்தது..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
      பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. நேற்று தமிழகத்தில் நடந்தது,
    இன்றே குவைத்தில் இருந்து
    மறு ஒளிபரப்பாகிறது.
    தங்களின் வேகமமும், செயலும் சிந்தனையும்
    வியக்க வைக்கின்றது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அது தொண்டர்களைச் சிறப்பிக்கும் திருவிழா..
      அதைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தங்கள் தளத்தில் நுழைந்தாலே விபூதி வாசனை வருகிறது ,அத்தனை தெய்வீகப்பதிவுகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீ !..
      நேற்று பதிவினை தட்டச்சு செய்யும் போதே எனக்கு சந்தேகம்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. கற்பகவிருட்சம் போல் எல்லோருக்கும் கருணையை அள்ளித்தரும் கற்பகவல்லியைப்பற்றிய விளக்கம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கற்பகவல்லி - அன்பினில் விளைந்த ஆரமுது!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..