நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 12, 2014

ஸ்ரீ கபாலீச்சரம் - 1

தருமமிகு சென்னை!.. 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று நெகிழ்ந்துரைத்த வள்ளலார் சுவாமிகளின் திருவாக்கு. இத்தகைய சென்னை மாநகரில் புகழ் பெற்று இலங்கும் திருத்தலங்களுள் ஒன்று -   மயிலாப்பூர்.

திருமயிலை என விளங்கும் மயிலாப்பூரில் கம்பீரமாக விளங்குவது அருள்மிகு கற்பகவல்லி உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில்.


அம்பாள் - மயில் உருவாகி புன்னை வனத்தில் - 
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்

கபாலீச்சரம் என தேவாரத்தில் சிறப்பிக்கப் பெறும் இத்திருத்தலம் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்திரண்டில் - இருபத்து நான்காவது தலமாகும்.

தொண்டை நாடு -

வேழம் உடைத்து மலை நாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர்வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.

- என ஔவையாரால் புகழப் பெற்ற திருநாடு.

''..தூய மாதவஞ் செய்தது தொண்டை நன்னாடு..'' - என்பது சேக்கிழாரின் திரு வாக்கு.

இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. எனினும் ஒரு குறிப்பு மட்டும் -

ஐயன் திருவள்ளுவர் திருமயிலையில் பிறந்தது வாழ்ந்ததாக வரலாறு. 

இத்தகைய சிறப்புடைய  -  மயிலையம்பதியில், அக்காலத்தில் -

கடல் வணிகம் செய்து பெரும் தனவந்தராக விளங்கிய சிவநேசன் செட்டியார் சிவநெறி வழுவாதவராக அறநெறிகளின் வழி வாழ்ந்து வந்தார்.

அடியார்க்கும் எளியார்க்கும் வறியார்க்கும் அமுது செய்வித்து அவர்தம் வாட்டம் தணிவித்த நல்லறம் அவருடையது.

அனைவரிடமும் அன்பு கொண்டு விளங்கிய சிவநேசருடைய அருந்தவப் புதல்வி - பூம்பாவை எனும் நல்லாள்.

ஒருநாள் - சிவபூஜைக்கென நந்தவனத்தில் தோழியரோடு மலர் கொய்த வேளையில் - முன்னை விதி வந்து மூண்டெழுந்ததால் - நாகம் தீண்டி மயங்கி விழுந்தாள். தோழியர் ஓடோடிச் சென்று உற்றாரிடமும் மற்றோரிடமும் செய்தி அறிவித்து அழைத்து வருவதற்குள் - அந்த நந்தவனத்திலேயே மாண்டாள்.

தளிராய்த் தழைத்து - மலராய் மலர்ந்தவள் - மலர் வனத்தினுள் மாண்டு கிடப்பதைக் கண்டு - கதறிக் கண்ணீர் வடித்து அழுதார் சிவநேசர்.

''..பூம்பாவை! உன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்ததெல்லாம் பாழும் பாம்புக்கு  பலி கொடுக்கவா?..''

தாய் - தகப்பனின்  கதறலைக் கேட்டு அங்கே கூடியிருந்தோர் கண்களில் நீர் ததும்பியது.

''..ஞானச்செல்வராகிய சம்பந்தப்பெருமானுக்கு உன்னை கன்யாதானம் செய்ய அல்லவா சிந்தை கொண்டிருந்தேன்!.. என் சிந்தை சிதறுண்டு போனதே!..''

செட்டியாரின் ஆற்றாமையைக் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டனர்.

இவர் மனதிற்குள் - இப்படியும் ஒரு எண்ணம் இருந்ததா!..

கைதர வல்ல - கற்பகமும் கபாலியும்  - கருநாகம் உன்னைத் தீண்டுங்கால் - காணாது  இருந்தனரோ!.. காலனைக் கடியாது விடுத்தனரோ?..

செட்டியாரின் கதறல் - மயிலையில் மட்டுமின்றி கயிலையிலும் கேட்டது.

''ஆனது ஆயிற்று. உலகியல் இது என உணர்க!..''

ஆன்றோரும் சான்றோரும் அமைதிப்படுத்தினர். ஒருவாறு செட்டியார் மனந் தெளிய - மற்ற காரியங்கள் நடக்கலாயின.

அன்று விடியற்காலை. அனைவரும் ஆயத்தமாக இருந்தனர். தனது அறைக்குள்ளிருந்து சிவநேசர் வெளியில் வந்தார் - கையில் ஒரு பொற் கலசத்துடன்!..

அனைவருக்கும் ஆச்சர்யம். பார்வையினாலேயே வினவினர். செட்டியார் சொன்னார்.

''..பூம்பாவையைத் தான் பெருமானின் கரங்களில் ஒப்படைக்க இயலவில்லை. இந்தப் பொற்குடத்தையாவது ஒப்படைக்கின்றேன்!.''

''..ஒன்றும் புரியவில்லையே!?..''

''..பூம்பாவை சம்பந்தப் பெருமானுக்கென குறிக்கப்பட்டவள். காலக் கொடுமையால் ஆருயிர் நீத்தாள். அங்கம் அஸ்தியாகி விட்டது. என்றேனும் ஒருநாள் சம்பந்தப் பெருமான்  திருமயிலைக்கு  வருவார். அப்போது அவரிடம் அதனை ஒப்படைப்பது ஒன்றே எனது நோக்கம்!..''

''..செட்டியாரின் சித்தம் பேதலித்து விட்டதா!.. இதென்ன முறையற்ற வழக்கம்!..''

ஆங்காங்கே சிலர் முணுமுணுத்தனர். ஆயினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

சிவநேசரின் எண்ணப்படியே - பொற்குடத்தில் சேகரிக்கப்பட்ட அஸ்தி- கன்னி மாடத்தில் வைக்கப்பட்டது. பட்டு அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டது. அருகில் தூங்காமணி விளக்குகள் ஏற்றப்பட்டன.

காலம் நகர்ந்தது. ஆனாலும் சிவநேசரின் கண்ணீர் வற்றவில்லை. ஒருநாள் -

ஊழியன் ஒருவன் ஓடோடி வந்தான்..

''.ஞானசம்பந்தப் பெருமான் இன்னும் சில தினங்களில் மயிலைக்கு விஜயம் செய்கின்றார்கள்!.. தற்சமயம் ஐயன் திருவேற்காட்டில்  திருமடம் இருப்பு!..''

அமுத மழை பெய்த மாதிரி இருந்தது - சிவநேசன் செட்டியாருக்கு!..


மயிலைக்கு முதன்முறையாக எழுந்தருளும் பெருமானுக்கு மகத்தான வரவேற்பு வழங்க ஆயத்தமாயினார்.

அன்றையப் பொழுதும் இனிதே புலர்ந்தது. ஊர் திரண்டு கூடியிருந்தது.  திருக்கோயில் வாசலில் மாவிலைத் தோரணங்கள். மங்கல இசை முழக்கங்கள்.

வங்கக் கடலில் அலைகள்  ஆனந்தமாகப் புரள - கடற்துறையில் நங்கூரம் இடப்பட்டிருந்த நாவாய்களும் - நாங்களும் ஐயனைப் பார்க்க வேண்டும் என்பது போல அலைகளினூடே அசைந்து கொண்டிருந்தன.

சற்று தொலைவில்  - மெலிதாகக் கேட்ட சிவகோஷங்கள் - இதோ ஐயன் எழுந்தருள்வதாக அருகிலேயே - தெளிவாகக் கேட்டன.

''..ஆகா!.. புண்ணியம் செய்தனை மனமே!..'' - நெஞ்சம் ஆனந்தத்தினாலும் ஆற்றாமையினாலும் பொங்கியது.

இதோ.. இதோ!.. பெருமானின் முத்துப்பல்லக்கு!. முன்னே வந்த தோரணங்களும் பதாகைகளும் திருக்கொடியும் சற்றே விலகி நிற்க -

பாதந்தாங்கிகள் - தோளிலிருந்து - பல்லக்கினை மெல்ல  இறக்கி வைத்தனர்.

''..ஹர ஹர சங்கர!.. ஜய ஜய சங்கர!..'' - அடியார் திருக்கூட்டத்தினோடு அலைகளும் ஆர்ப்பரித்தன.

முத்துப் பல்லக்கில் - ஞான சம்பந்தப்பெருமான் புன்னகையுடன் விளங்கினார்.

முகில் கிழித்த நிலவென  -  முகங்காட்டியபடி - ஞானசூரியன் - பொற்பாதக் கமலங்களைப் பூமியில் வைத்தது.

காழியர் கோன் கழல்களில் - வீழ்ந்து வணங்கினர்.

''..திருச்சிற்றம்பலம்!.. திருச்சிற்றம்பலம்!..''

ஞானசம்பந்தப் பெருமானின்  திருப்பாதங்களிலிருந்து,  எழ மனமில்லாமல் எழுந்து -  ஆனந்தக் கண்ணீருடன் நின்றிருந்தனர் - அனைவரும்.

அதற்குள் - ஐயனுடன் வந்திருந்த அடியார் ஒருவர் - பணிவுடன் ஐயனை நெருங்கி - சிவநேசன் செட்டியாரைச் சுட்டிக் காட்டினார்.

பெருமான் - முகம் கொண்டு நோக்க - திருக்குறிப்பு அறிந்து, மேனி சிலிர்க்க மெல்ல முன் நடந்தார் - சிவநேசர். அழுகையும் ஆத்திரமும் அவருக்குள் பொங்கிப் பெருகின. அவையடக்கம் கருதி -  தொண்டைக் குழியினுள்ளேயே அழுகையை அழுத்தினார்.

''..திருச்சிற்றம்பலம்!.. தேவரீர்.. எளியேனுக்கு இடும் பணி யாது!..''

திருஞான சம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தார்.

''..கை தர வல்ல - கற்பகமும் கபாலியும்  -  பூம்பாவையைக் கருநாகம் தீண்டுங்கால் - காணாது  இருப்பரோ!.. காலனைக் கடியாது விடுப்பரோ?..''

அதிர்ந்தார் - செட்டியார். மேனியில் - மின்னல்  பாய்ந்தது போலிருந்தது.

''..அந்த அஸ்தி கலசத்தினைக்  கொணர்க!..''

அடுத்த சில விநாடிகளில் - ஞான சம்பந்தப் பெருமானின் முன்பாக பூம்பாவை அஸ்தி அடங்கிய பொற்குடம்.

அலைகடலும் அதிராமல் அடங்கியது - அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற ஆவலுடன்!..

ஒருகணம் ஞான சம்பந்தப் பெருமான் திருவிழி கொண்டு நோக்கினார்.

ஐயனின் திருக்கரங்களில் - ஈசன் திருக்கோலக்காவில் அளித்த பொற்றாளம்!..

அதன் உள்ளிருந்து சீகாமரப் பண் எனப் புறப்பட்டாள் - ஓசை கொடுத்த நாயகி!..

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!..

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமான் திருப்பாடல்களைத் தொடர்ந்தனர்.

கைதர வல்ல - கற்பகமும் கபாலியும் கண் கொண்டு நோக்கினர்.

திருப்பதிகம் என பத்தாவது பாடலைப் பாடுங்கால் - பொற்குடம் உடைந்து சிதற, அதனுள்ளிருந்து அன்றலர்ந்த தாமரை என - பூம்பாவை வெளிப்பட்டாள்.


உள்ளுணர்வால் அனைத்தையும் உணர்ந்தவளாகி - ஐயனை வலஞ்செய்து வணங்கி நின்றாள்.

ஆ!.. ஆ!.. - என உலகோர் வியந்தனர். விண்ணோர் வாழ்த்தினர்.

ஞானசம்பந்தப் பெருமான் - பலன் கூறி திருப்பதிகத்தினை நிறைவு செய்தார்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருக, அனைவரும் ஐயனின் மலரடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

வாராது வந்த மாமணி என  - மீண்டும் பிறந்த பூம்பாவை - உச்சி முகர்ந்த சிவநேசர் , தன் திருமகளைத் திருமணம் கொண்டருள  வேண்டுமென ஞான சம்பந்தப் பெருமானை வேண்டினார்.

சம்பந்தப் பெருமான் வாழ்வியல் நெறியை அவருக்கு உணர்த்தினார்.  

''..பூம்பாவையை யாம் மீண்டும் உயிர்ப்பித்தோம். ஆதலின் அவள் எமக்கு மகளாவாள்!..'' - எனக் கூறி அனைவருக்கும் திருநீறு அளித்து ஆசி கூறினார். 

அனைவருக்கும்  - கற்பகவல்லியுடன் உடனாகிய கபாலீச்சரத்தானைத் தரிசனம் செய்வித்தார்.

பூ என மலர்ந்த பூம்பாவையும் இல்லறத்தில் நாட்டமின்றி - இறைபணியில் நின்றாள். சிவனடியே சிந்தித்திருந்து - சாயுஜ்யம் பெற்றாள். 

இத்தகைய அருஞ்செயல் நிகழ்ந்த திருத்தலம் - திருமயிலை.

திருநாவுக்கரசர் இத்தலத்தினை - மயிலாப்பு எனப் புகழ்கின்றார்.  



அம்பாள் - மயில் உருவாகி புன்னை வனத்தில் - சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் எனும் பழந்திருக்கோயில் கடற்கரையில் இருந்தது.

வணிகம் என்ற போர்வையுடன் நுழைந்த வந்தேறிகள் - நம் தாயக மண்ணின் மீது வெறிகொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். பாரம்பர்ய கலைச் சின்னங்களையும் திருக்கோயில்களையும் பாழாக்கினர். மேலும் சமய காழ்ப்புணர்வும் சேர்ந்து கொண்டதால், 1672ல் - திருக்கோயிலை இடித்தனர்.

பித்துப் பிடித்த மந்தி ஊமத்தங்காயைத் தின்றதைப் போலானது. அதன் கொடுங் கரங்களிலிருந்து -   மந்த்ர பீட யந்த்ரங்கள்,  மூல விக்ரகங்கள் ஆகிய இவற்றை மட்டுமே நல்லோர்களால் மீட்க முடிந்தது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் - எஞ்சிக் கிடந்த நவாப் படைகளுடன் - பிரஞ்சு, போர்ச்சுக்கீசிய, பிரிட்டிஷ் படைகள் முட்டி மோதிக் கொண்ட விவரம் சென்னையின் சரித்திரத்தில்  இடம் பெற்றுள்ளது.

கடற்கரையில் இருந்த  திருக்கோயிலை  இடித்துத் தரை மட்டமாக்கி விட்டு அடித்தளத்தின் மீது வெள்ளையர்கள் அவர்களுக்கென கட்டிக் கொண்ட வழிபாட்டு இடமே,  இப்போதுள்ள - ''சாந்தோம் கதீட்ரல்''.

மயிலைக் கபாலீச்சரத்தில்
பங்குனிப் பெருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கும்
இவ்வேளையில் - இன்னும்  செய்திகள் அடுத்த பதிவில்!..

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான்.. போற்றி!.. போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

  1. சாந்தோம் கதீட்ரலின் அஸ்திவாரத்தில் இப்படி ஒரு வரலாறு உறங்குகிறதா
    எதைத்தான் நாம் காப்பாற்றினோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்னியரின் ஆதிக்கத்தால் இழந்த - உயிர் உடைமைகளை உணர்ந்து கொண்டாலே - நம்முடைய கலாச்சாரத்தின் மீது நமக்கு மதிப்பு வரும்..
      தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  2. வந்தேறிகளின் வன்முறையை உங்களின் பகிர்வு மூலம் தான் தெரியும்... கோயிலி சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    சென்னையில் 20 வருடம் இருக்கும் போது தவறாமல் செல்வோம்... எங்களைப் பார்க்க வருபவர்களையும் கூட்டிச் செல்லும் முக்கியமான கோயிலும் கூட...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. மயிலையைச் சார்ந்த கதை புதிதாய்க் கேட்பது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரை -
      வழங்கியமைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  4. மயிலை - பூம்பாவை கதை இது தான் முதல் தடவையாக படிக்கிறேன்.....

    சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. மயிலை பற்றிய பழைய செய்திகள், பூம்பாவை கதை எல்லாம் இப்போதைய சில இளைய தலைமுறைகளுக்கு தெரியாது. அநத குறையைப் போக்கியது உங்கள் பதிவு. இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரிய தந்து இருப்பது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இந்தப் பதிவு - வெளியான பின் - என் நண்பர் ஒருவரும் இப்படித்தான் கூறினார். இத்தனைக்கும் அவர் இருப்பது - சென்னையில்!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..